Reviews for மாபெரும் தமிழ்க் கனவு

23 reviews total

user_12839

★ 5/5 Feb 02, 2026

அண்ணாவின் பன்முகத்தன்மையை விரிவாகப் பேசும் அற்புதமான தொகுப்பு. இலக்கியத் தீண்டாமை குறித்த விவாதங்களையும் ஒரு சிறந்த தலைவரின் கனவுகளின் ஆழத்தையும் இந்நூலில் அழகாகப் பதிவு செய்துள்ளனர். தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

user_12838

★ 5/5 Feb 02, 2026

800 பக்கங்களுக்கு ஏன் புத்தகம் போடணும், சுருக்கமாகச் சொல்லக்கூடாதா என்றுதான் இந்தப் புத்தகத்தின் அறிவிப்பு வந்தபோது நினைத்தேன். ஆனால் 800 பக்கங்கள் என்பதே ஒரு சிறு துளிதான் என்று படிக்கும்போது தோன்றியது.

திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு அண்ணா ஒரு பெரும் சிக்கல். அவரது சமூக நீதிக் கருத்துகளை ஏற்க இயலாது. ஊழல், குடும்ப அரசியல் என்று ஒதுக்கவும் முடியாது. தமிழ்நாடு என்று பெயர் வைத்தவரை இந்தச் சமூகம் அவ்வளவு எளிதில் மறக்குமா?

அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் இன்றும் பொருத்தமானவை. ஒவ்வொரு வாதத்தையும் விரிவாக எடுத்துரைப்பதே அழகு. ஆதாரமின்றி அவதூறு பரப்பும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைவருக்கும் இந்த உரைகள் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.

யாரையோ ஏமாற்றி வந்ததல்ல திராவிட இயக்கம். அது சாமானியர்களின் கனவு. அந்தக் கனவை மெய்ப்பிக்கும் செயல் திட்டம் அண்ணாவுக்கு இருந்தது. ஒரு இயக்கத் தலைவர் எவ்வளவு பொறுமையுடனும் ஜனநாயகத் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அண்ணாவைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை. இன்றும் இந்துத்துவ எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என்று மையஅரசின் நீரோட்டத்துக்கு எதிர் திசையில் தமிழகம் நிற்க அண்ணா ஒரு தொடக்கப்புள்ளி.

இந்த மண்ணின் மைந்தர்கள் தன் சமூகத்தின் தலைவனைப் பற்றி அறிந்து கொள்ளச் சிறந்த புத்தகம் இது.

user_12837

★ 5/5 Feb 02, 2026

ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ்க் கனவு' புத்தகத்தைப் படித்து முடித்தேன். 800 பக்கங்கள் என்று ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும், படிக்கப் படிக்க நாட்கள் சென்றதே தெரியவில்லை. என்னை இப்படி நீண்ட நாட்கள் கட்டிப்போட்ட புத்தகம் நேருவின் 'உலக வரலாற்றின் காட்சிகள்' மட்டுமே.

நேரு உலகச் சரித்திரம் படித்தவர், வெளிநாட்டில் கல்வி கற்ற அறிவியல் ஆர்வலர். ஆனால் அண்ணாவோ உலகச் சரித்திரம், அரசியல், சமூகவியல், பொருளாதாரம், நாடகம், சிறுகதை, மேடைப்பேச்சு என எல்லாவற்றிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வைத்திருந்தார் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்த பின்புதான் தெரிந்தது.

சசி தரூர் தனது நூலில் அண்ணாவைப் பற்றி எழுதுகையில், "அண்ணா பல்திறன் படைத்தவர் — எளிமையானவர், படைப்பாற்றல் மிக்கவர், இரக்கமுள்ளவர். நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் என்பதோடு மிகச்சிறந்த கட்சித் தலைவராகவும் நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தமிழில் மயக்கும் பேச்சாளரான அண்ணா, கூட்டங்களை ஈர்க்கும் திறனில் நேருவுக்கு இணையானவர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், மாநிலச் சுயாட்சி, சனநாயக சமூகவாதம் போன்ற கருத்துகளை அன்றே முன்வைத்திருக்கிறார். எனக்கு அவரது அரசியல் ஆளுமையையும் எழுத்தாற்றலையும் விட அவரது 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற வாழ்வியல் தத்துவம் மிகவும் பிடித்தது.

அண்ணா தன் தம்பிகளுக்கு எழுதிய கடிதங்களில் 'ஆரியம் இருக்கும் இடம்' மற்றும் 'கொட்டடி எண்: 9' ஆகியவை இன்றைய தலைமுறைத் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டியவை. இந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கிக் குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து பக்கமாவது படிக்க வேண்டுமென விரும்புகிறேன்.