Reviews for மாபெரும் தமிழ்க் கனவு
23 reviews total
user_12849
★ 4/5 Feb 02, 2026ஊரடங்கு நாட்களில் 'மாபெரும் தமிழ்க் கனவு' புத்தகத்தைப் படித்து முடித்தேன். 800 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும், படிக்கப் படிக்க நேரம் சென்றதே தெரியவில்லை. பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக என்னை நீண்ட நாட்கள் கட்டிப்போட்ட புத்தகம் இது. அரசியல், சிறுகதை, மாநிலச் சுயாட்சி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் போன்ற பல விஷயங்களை அப்போதே அண்ணா முன்வைத்திருக்கிறார்.
user_12848
★ 5/5 Feb 02, 2026சமஸ்ஸின் தலைப்புக் கட்டுரை அண்ணாவின் பன்முகத்தன்மையை நன்கு விரிவாக விளக்கியது. அண்ணாவின் பொருளாதாரப் பார்வை பற்றி இந்தப் புத்தகத்தின் மூலமே அதிகம் அறிந்தேன். சிறப்புக் கட்டுரைகளில் ஆழி செந்தில்நாதன், ஜார்ஜ், நாராயணன் ஆகியோரின் பார்வைகள் குறிப்பிடத்தக்கவை. சட்டர்ஜீயின் கட்டுரை தமிழ் அல்லாத மொழி உணர்வாளர்களின் பார்வையாக அமைந்தது.
குறிப்பாக: மொழி ஒருங்கிணைக்கும் சக்தி என்பதற்கு இந்தோனேசியா நல்ல உதாரணம் என்று ஜார்ஜ் கூறுகிறார். 'திராவிட நாடு' முழக்கம் மற்ற தென் மாநிலங்களில் வரவேற்புப் பெறாததற்கான காரணங்களை கொடிக்கால் ஷேக் அப்துல்லாவின் நேர்காணல் விவரிக்கிறது. அரசு இயந்திரத்தின் கட்டமைப்பை மாற்றி தேவைகளும் கோரிக்கைகளும் கீழிருந்து மேல் செல்லும் வகையில் அமைத்த வளர்ச்சிகளை நாராயணின் கட்டுரை விவரிக்கிறது.
பிரிவினைவாதத் தடுப்பு மசோதாவை எதிர்த்த அண்ணாவின் உரை அபாரம். அவையில் அனைவரும் மடக்க முயல, தன் சாதுர்யமான பேச்சால் தர்க்கபூர்வமாக எதிர்கொண்டார் — உண்மையில் 'சிங்கம் தனியாகத்தான் வரும்' தருணம்!
தனிநாடு கோரிக்கையை இறையாண்மைக்குள் சுயாட்சியாக மாற்றியது, தேசியக் கவிஞரை மக்கள் கவிஞராகப் புதிய பார்வையில் முன்னிறுத்தியது, பெரியாரின் தீவிரக் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது — இவரை ஏன் 'பேரறிஞர்' என்று அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்நூல் தரமான கருவி.
அண்ணா — கனிவான தமிழன், துணிவான வீரன், தெளிவான தலைவன்!
user_12847
★ 4/5 Feb 02, 2026திராவிடர்களுக்காகக் கனவு கண்ட, குறிப்பாகத் தமிழர்களுக்காக மாபெரும் கனவு கண்ட பேரறிஞரின் சட்டமன்ற, பாராளுமன்ற உரைகள், கட்டுரைகள் இன்னும் பல அடங்கிய தொகுப்பு. சுதந்திர இந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், பொருளாதாரம், இறையாண்மை, அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அனைத்திலும் தன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாற்பதாவது வயதில் தி.மு.க. இயக்கத்தை ஆரம்பித்து மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றினார். அரசியல் அதிகாரத்தில் செல்வந்தர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் சாமானிய மக்களையும் அரசியல்படுத்தி அதிகாரத்தில் பங்கு பெற வைத்தார். இன்று தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகெங்கும் திகழ்வதற்கு அவர் தொலைநோக்குடன் வகுத்த இருமொழிக் கொள்கையே காரணம். அண்ணாவின் வரலாற்றையும் திராவிடக் கட்சிகளின் பயணத்தையும் அறிய விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
user_12846
★ 5/5 Feb 02, 2026அண்ணாவைப் பற்றி 800 பக்கங்கள் கற்றுக்கொண்டேன். ஒரு புத்தகத்தைப் படித்து முடித்ததில் இவ்வளவு திருப்தி இதுவரை கிடைத்ததில்லை. மக்களின் உண்மையான தலைவர் — அவரது மரபை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
user_12845
★ 5/5 Feb 02, 2026திட்டமிட்டபடி அண்ணாவின் 'மாபெரும் தமிழ்க் கனவை' முழுமையாக உள்வாங்கினேன். அம்பேத்கரின் எழுத்துகளைப் போலவே அண்ணாவின் எழுத்துகளும் ஒரு புத்துணர்ச்சியையும் புரட்சியையும் எனக்குள் விதைக்கின்றன. அண்ணா இன்னும் பரவலாக்கப்பட வேண்டிய ஆளுமை. இந்தியாவுக்கு இப்போதைய தேவையும் அண்ணாவின் பார்வைதான். தமிழ்நாட்டின் தலைமகனை இறுகப் பற்றிக்கொள்வோம். ஒரு நாள் கனவு நனவாகும்.
user_12844
★ 5/5 Feb 02, 2026அறிஞர் அண்ணாவின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் புத்தகம். உண்மையில் ஒரு தொலைநோக்குத் தலைவர் — அவரது வாழ்க்கை, சித்தாந்தங்கள், நாடாளுமன்ற செயல்பாடுகள், முதலமைச்சராகப் பணியாற்றியது, எழுத்து, திரைப்படத் துறையில் பங்களிப்பு என அனைத்தையும் தொட்டுச் செல்லும் நூல். அண்ணாவின் உலகத்தை அறிய ஒரு நுழைவாயில்.
user_12843
★ 4/5 Feb 02, 2026800 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் திராவிட அரசியலை அல்லது அண்ணாவைத் தெரிந்துகொள்ள கட்டாயம் படிக்க வேண்டியது. குறிப்பாக அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் மூச்சடக்க வைக்கும் அனுபவம்.
user_12842
★ 4/5 Feb 02, 2026தன்மானம் கொண்ட ஒவ்வொரு திராவிடனும் படிக்க வேண்டிய புத்தகம். இன்று தலைநிமிர்ந்து நிற்கும் தமிழகத்தின் தலைமகனாக வாழ்ந்த அறிஞர் அண்ணாவின் புகழை அறியாமல் வேறு தலைவர்களின் புகழைப் படிப்பது வீணே. வீரம், பேச்சுத்திறன், வெறுப்பு விதைப்பு கொண்டு மக்கள் வரவேற்பைப் பெறும் தலைவர்களிடையே ஜனநாயகம், உழைப்பு, எல்லோரையும் மதித்தல் என்ற பண்புகளுடன் தலைவரான அண்ணாதுரையைத் தமிழகம் கொண்டாடத் தவறிவிட்டது என்றே கூற வேண்டும்.
user_12841
★ 5/5 Feb 02, 2026நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்த அருமையான புத்தகம் 'மாபெரும் தமிழ்க் கனவு'. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு பிராந்தியக் கட்சி ஆட்சி அமைத்தது தி.மு.க. என்ற தகவலைப் படித்ததிலிருந்து, அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை அறிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதும் வரலாற்றில் நம்பிக்கை இல்லை. 'மாபெரும் தமிழ்க் கனவு' அப்படிப்பட்ட நூல் அல்ல — அண்ணாவின் காலத்தில் அவருடன் இருந்தவர்கள், எதிரில் இருந்தவர்கள் அனைவரின் பேட்டிகளும், சட்டமன்ற-நாடாளுமன்ற உரைகளும் இடம்பெற்றுள்ளன.
மாநிலச் சுயாட்சி, இருமொழிக் கொள்கை போன்றவற்றின் முக்கியத்துவம் இன்று மேலும் அதிகம். நாடு முழுவதும் ஒரே மொழி என்று கருதும் இந்த நேரத்தில் அண்ணாவைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சூப்பரான தருணம்: அண்ணாவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மனைவி ஆசைப்பட்டபோது மறுத்தார். தலைமைச் செயலக அதிகாரிகளைப் பழிவாங்க வேண்டுமென கட்சியினர் விரும்பியபோதும் மறுத்தார். 'கட்சிக்கும் குடும்பத்துக்கும் இடைவெளி வேண்டும், ஆட்சிக்கும் கட்சிக்கும் இடைவெளி வேண்டும்' என்று தனக்கே உரிய தொனியில் சொன்னார். 90-களில் பிறந்த அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
user_12840
★ 5/5 Feb 02, 2026சாமானியன் ஒருவன் தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய கதை. பேரறிஞர் அண்ணாவின் அரசியலை மாற்றிய வரலாறு, முக்கியப் பேட்டிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உரைகள், கடிதங்கள், சிறுகதைகள் என அனைத்தும் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கும் புத்தகம் மாபெரும் தமிழ்க் கனவு.