அன்று அமாவாசை போலும்... இருள் சூழ்ந்த வானம்... எங்கும் கும்மிருட்டாக இருந்தது. களத்து மேட்டில் மல்லாந்து படுத்திருந்த அவனது விழிகள் இருண்ட வானை வெறித்து இருந்தது. இருண்ட வானில் அவன் என்ன தேடுகின்றானோ! ஒருவேளை அவனுக்கான வெளிச்சத்தைத் தேடுகின்றானோ!
அவன் மனதில் பல குழப்பங்கள்... அவன் பெற்றோரை இழந்த போது கூட இப்படித் தவித்தது இல்லை. யாருமற்ற அநாதையாய் நின்ற போது கூட இப்படி வாழ்க்கை வெறுத்துப் போனது இல்லை. ஆனால் இன்று ஏனிந்த தவிப்பு! தான் செல்ல போகும் பாதை சரியா? தவறா? என்று அவனால் எளிதில் தீர்மானிக்க முடியவில்லை.
மகாபாரதத்தில் அர்ஜூனன் தன்னுடைய தாத்தா பீஷ்மர், குரு துரோணாச்சாரியார் எல்லோரையும் எதிர்த்து போரிட முடியாது கலங்கி நின்ற போது அவர் கிருஷ்ண பகவானை பார்த்து இப்படிக் கேட்டாராம்.
'கிருஷ்ணா, நான் ரொம்ப மதிக்கிற பீஷ்மர், துரோணர் எல்லோரையும் எதிர்த்து நான் எப்படி அவங்களைப் போரில் தாக்குவேன்.'
'எது நல்லதுன்னு நமக்கு எப்படித் தெரியும் கிருஷ்ணா? அவங்கள நாம் ஜெயிக்கிறதா? இல்லை அவங்க நம்மளை ஜெயிக்கிறதா? யாரை கொன்னு நாம வாழுறதுல அர்த்தமே இல்லைன்னு நினைக்கிறோமோ அவங்களே நம்ம கூடப் போர் செய்யத் தயாரா நின்னுக்கிட்டு இருக்காங்களே... இப்ப நான் என்ன செய்யணும்? எது என் கடமை அப்படிங்கிறதுல நான் குழப்பம் அடைஞ்சிருக்கேன். இப்ப எனக்கு எது நல்லதுன்னு நீ தான் சொல்லணும் கிருஷ்ணா! உன் கிட்ட சரணடைஞ்சுட்டேன். உன் சிஷ்யன் நான்... நீ தான் எனக்குப் புத்திமதி சொல்லணும்!' என்று அர்ஜூனன் மனம் ஒடிந்து கிருஷ்ணரிடம் கேட்டானாம்.
அதற்குக் கிருஷ்ணர் பதில் சொன்னாராம்...
'ஆத்மாவுக்குப் பிறப்பு இறப்புக் கிடையாது! ஒரு சமயம் இருந்து அப்புறம் அழிஞ்சு போறது இல்லை ஆத்மா! உடல் அழியும்போது ஆத்மா அழியறதில்ல! ஆத்மா அழிவில்லாததுன்னு தெரிஞ்சுக்கிட்ட! அப்ப ஆத்மா எப்படிக் கொல்லவோ கொல்லப்படவோ முடியும்? எப்படிப் பழைய உடைகளைக் கழட்டிட்டு புது உடைகளைப் போட்டுக்கிறமோ அந்த மாதிரி ஆத்மா பழைய உடலை விட்டு புது உடலுக்குள் போயிடுது!'
'ஆத்மாவை எந்த ஆயுதத்தாலும் துண்டாக்க முடியாது. அதை யாராலும் நெருப்பால எரிக்க முடியாது! நீரால நனைக்க முடியாது! காற்றால உலர்த்த முடியாது! ஆத்மாவை பிளக்க முடியாது... கரைக்க முடியாது... அது எல்லா இடத்திலும் இருக்கிறது! என்னைக்குமே இருக்கிறது! மாறாம இருக்கிறது! ஆத்மாவை கண்ணால பாக்க முடியாது! அத மாத்த முடியாது! அதனால நிலையான ஆத்மாவப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நிலையில்லாத இந்த உடம்பப் பத்தி கவலைப்படாத அர்ஜுனா!'
'சரி, ஆத்மா பிறந்து இறப்பதாகவே நீ நினைச்சுக்கிட்டா கூட, இதுல வருத்தப்பட என்ன இருக்கு அர்ஜுனா? பொறந்தவன் எல்லாருக்குமே மரணம் நிச்சயம். அதே மாதிரி செத்த யாருக்குமே திரும்பப் பிறப்பு நிச்சயம்! அதனால செஞ்சே ஆக வேண்டிய கடமைகளைச் செய்வதில் இந்தப் பிறப்பு, இறப்பு போட்டு குழப்பிக்காதே... படைக்கப்பட்டது எல்லாமே முதல்ல இல்லாம இருந்து இடையில உருவாகி கடைசியில திரும்பவும் சாகுது… இதுக்கு எதுக்குக் கவலைப்பட்டுக்கிட்டு? கவலைப்பட என்ன இருக்கு இதுல?'
இதை எல்லாம் கேட்ட பிறகே அர்ஜூனன் தெளிந்து போருக்குத் தயாரானான். என்றோ அன்னை சொன்ன மகாபாரதக் கதை அவனது காதுகளில் இன்னமும் ஒலித்தது.
அவனும் அர்ஜூனன் போன்று மனம் கலங்கி தான் நிற்கின்றான். அவனுள் சற்றுக் கலக்கம் எட்டிப்பார்க்கத்தான் செய்தது. அவனுள் இருந்த நல்லவன் சிறிது எட்டிப்பார்த்து அவனைக் கலக்கமுற செய்தான். அவன் ஒன்றும் பிறவி கெட்டவன் இல்லையே... எல்லாம் ஒரு நொடி, ஒரு நொடி தான்... தனது தயக்கத்தை எல்லாம் விட்டொழித்து விட்டு நொடி பொழுதில் எழுந்தமர்ந்தவன் தனது பழைய கம்பீரத்தை மீட்டெடுத்தான்.
போர் என்று வந்துவிட்டால் எதிரில் இருப்பவர் நல்லவரா? கெட்டவரா? என்று பார்க்க கூடாது. அவர் நம் எதிரி அப்படித்தான் பார்க்க வேண்டும். எதிரியை கொன்று வென்று தானாக வேண்டும். இல்லை என்றால் நம் மரணம் நிச்சயம்.
அது போன்றதொரு நிலை தான் அவனுக்கும்... அவன் என்ன செய்தாவது வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் அவன் ஊர்மக்கள் முன் தலைகுனிந்து அவமானப்பட வேண்டி வரும். நல்ல ஆண்மகன் போரில் வென்று தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வான். அவனும் அப்படியே...
"யாருகிட்ட பிரசாத் கிட்டேயேவா? நான் ஸ்கந்தபிரசாத்..." என்று ஆத்திரத்துடன் அடிக்குரலில் உறுமியவன் தனது முறுக்கு மீசையை இன்னமும் முறுக்கினான். அவனது விழிகள் நெருப்பு துண்டங்களாக இருளில் ஜொலித்தது.