சூட்கேஸை அறைந்து சாத்தி லாக் செய்த ஸ்ரீராம் கல்யாணியின் கன்னத்தை மெள்ளத் தட்டினான்.
“அப்படீன்னா நான் தைரியமா பெங்களூர் போகலாம்?”
கல்யாணி சிரித்தாள்.
“தாராளமா...”
“சரி. எனக்கு விபூதி வெச்சு விடு...”
கல்யாணி பக்கத்தில் இருந்த பூஜையறைக்குப் போய் விபூதி பொட்டலத்தைக் கொண்டு வந்து ஆட்காட்டி விரலில் தொட்டு நெற்றிக்கு இட்டாள்.
“என்னைப் பத்தி கவலைப்படாமே போய்ட்டு வாங்க. வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க...”
“ம்.. ம்...”
ஸ்ரீராம் சூட்கேஸை எடுத்துக் கொண்டான். “ஸ்ட்ரீட் கார்னர்க்குப் போய் ஆட்டோ பிடிச்சு போயிடறேன்...”
கல்யாணியின் கன்னத்தை மறுபடியும் மெள்ள தட்டிவிட்டு மாமியிடம் சொல்லிக் கொண்டு வாசற்படி இறங்கினான்.
நான்கைந்து குடித்தனங்கள் கொண்ட குடியிருப்பு பகுதி அது.
அவனுடைய தலை மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த அபிராமி மாமி கல்யாணியிடம் திரும்பினாள்.
“ஸ்ரீராம் மாதிரி ஒரு நல்ல புள்ளையாண்டான் உனக்கு புருஷனா அமைந்தது போன ஜென்மத்துல நீ பண்ணின புண்ணியம்.”
கல்யாணியின் கண்களில் நீர் பளபளத்தது.
“சந்தேகமேயில்லை மாமி... நோயாளியாயிட்ட என்னால அவர்க்கு எந்த சுகமும் இல்லாமே போனாலும், ஒரு நாள் கூட அதுக்காக அவர் வருத்தப்பட்டது கிடையாது. ஒரு குழந்தையைப் பார்த்துக்கற மாதிரி என்னைப் பார்த்துக்குவார்... கோபமே வராத அவர்க்கு எப்போ கோபம் வரும் தெரியுமா மாமி... நான் மாத்திரை சாப்பிட மறந்துட்டாத்தான் அந்த கோபம் வரும்...”
மாமி சிரித்தாள்.
“எனக்கு தெரியாதா என்ன... நான்தான் அனுதினமும் பார்த்துட்டிருக்கேனே...!”
“பெத்த அம்மா அப்பா கூட இவ்வளவு அனுசரணையா என்னைப் பார்த்துக்க மாட்டாங்க...”
“எனக்கு தெரியாதா என்ன?”
“நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க மாமி... நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு கரண்ட் திடீர்ன்னு போயிடுச்சி. உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?”
“ம்... இருக்கு...”
“கரண்ட் திடீர்ன்னு போனதுமே ஃபேன் காத்து இல்லாமே புழுக்கத்தாலே என்னோட உடம்பு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சுடுச்சி. அவர் என்ன பண்ணினார் தெரியுமா மாமி..!”
“சொல்லு...”
“ஒரு அட்டையை எடுத்துட்டு வந்து எனக்கு வீச ஆரம்பிச்சுட்டார். காத்து பட்டதுமே நான் தூங்க ஆரம்பிச்சுட்டேன். வீசறதை நிறுத்திட்டா... என்னோட தூக்கம் எங்கே கலைஞ்சிடுமோன்னு நினைச்சு ராத்திரி ஒரு மணி வரைக்கும்... அதாவது மறுபடியும் கரண்ட் வர்ற வரைக்கும் எனக்குப் பக்கத்துல உட்கார்ந்துட்டு வீசிட்டே இருந்திருக்கார்...”
“அடப்பாவமே! தோள்பட்டை என்னாறது?”
“ரத்தம் கட்டிகிட்டு கஷ்டப்பட்டாரே.. வெந்நீர் ஒத்தடம் கொடுத்ததும்தான் சரியாச்சு...”
“எல்லாப் பொண்களுக்கும் இப்படி அமையணுமே...” அபிராமி மாமி சொல்லிக் கொண்டே சேலை மடிப்பில் மறைத்து வைத்திருந்த டம்ளரை வெளியே எடுத்தாள் மெள்ள.
“கல்யாணி...”
“என்ன மாமி...?”
“வீட்ல பால் ஆய்டுச்சி.. ஒரு டம்ளர் பால் கிடைக்குமா...? மாமாவுக்கு பூண்டு போட்டு காய்ச்சித் தரணும்.”
“தர்றேன் மாமி... வாங்க..”
“அப்படியே ஒரு கரண்டி சர்க்கரையும் இரண்டு பல் பூண்டும் வேணும்.. நாளைக்கு கொடுத்துடறேன்...”
“எடுத்துட்டுப் போங்க மாமி...”
“உன்னோட தங்கமான மனசு யாருக்கு வரும்...?”
மாமிக்கு அவர் கேட்டதையெல்லாம் கொடுத்து அனுப்பிய கல்யாணி வாசல் கதவைச் சாத்திக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். சாமான்களை ஒழுங்குபடுத்திவிட்டு பின்பக்கக் கதவை அடைப்பதற்காக போனவள் -
ஆச்சரியப்பட்டாள்.
ஸ்ரீராம் நின்றிருந்தான்.
உதட்டில் விஷமப் புன்னகை. கல்யாணி பேச்சு வராமல் திணறினாள்... “எ.. என்னங்க.. இது.. முன்பக்க வாசல் வழியா போயிட்டு இப்படி திடீர்ன்னு பின்பக்க வழியா வந்து நிக்கறீங்க...?”
ஸ்ரீராம் புன்னகையை மென்றுவிட்டு இறுகிய முகத்தோடு சொன்னான்.
“ஒண்ணை எடுத்துட்டு போக மறந்துட்டேன்...”
“எதை..?”
“உன்னோட உயிரை...”
சொல்லிக் கொண்டே பின்பக்கக் கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டான்.
“இப்படியொரு வெளியூர் போற சந்தர்ப்பத்துக்காகத்தான் ரொம்ப நாளா காத்திட்டிருந்தேன்... வேலைக்காரியும் வீட்ல இல்லே... இதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது பயன்படுத்திக்க வேணுமா வேணாமா?”
“................”
“என்ன... கல்யாணி அப்படிப் பார்க்கிறே...? புருஷன் கையால உயிரை விடப் போகிற பாக்கியம் இந்த உலகத்துல எத்தனை பேர்க்கு கிடைக்கும்...? ஆயிரத்துல ஒருத்தருக்கு கிடைக்கும். இன்னிக்கு உனக்கு கிடைக்கப் போகுது...”