வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுப்பில் வந்திருந்தான் சஞ்சய். காலையில் தான் விமானத்தில் வந்து இறங்கியிருந்தான். அப்பா கங்காதரன் பெரிய தொழிலதிபர். உலகத்தையே வளைத்துப் போட்டார். பல நாடுகளில் வர்த்தக தொடர்பு. தமிழ்நாட்டில் பெரும்பகுதி தொழிலுக்கு சொந்தக்காரர். மில், தியேட்டர்கள், மால், நகைக்கடை, ஜவுளிக்கடை, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எல்லாம் உண்டு.
வசிப்பது சென்னையில் - போர்ட்க்ளப் சாலையில் பல ஏக்கர்களை வளைத்துக் கட்டிய பங்களா. வீட்டுக்குள்ளே கார் போய் நிற்கும் அளவுக்கு விஸ்தாரம். பெருத்த அரசியல் செல்வாக்கு. கங்காதரன் மனைவி மகிமா அதை விட பிஸி. சகல சமூக இயக்கங்களிலும் முக்கிய பதவி. ரோட்டரி, லையன்ஸ் க்ளப், காஸ்மோ பாலிட்டன் என நகரின் முக்கிய பிரமுகர். சென்சார் போர்டு மெம்பர். என்ன பாக்கி? விட்டிருந்தால் கதை வளர வளர நீங்களே சொல்லி விடுவீர்கள். அப்படி ஒரு செல்வாக்கு.
சகல மெடிக்கல் பவுண்டேஷனுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு. தான தர்மத்துக்கு அளவே இல்லை.
பிரபலமான அரசியல் கட்சிகள், ஆளுங்கட்சி என இடர்கள், தயவை நாடி நிற்கும் அரசியல் கூட்டம். பதவி காலடிக்கு வந்தும் ஏற்க மறுத்தார் கங்கா.
அரசியல் சூதாட்டத்தை பதவி இல்லாமலே வெளியிலிருந்து ஆளும் மனிதர்.
இவர்களது மூத்த மகள் உதில்டா லண்டனில் தன் குடும்பத்துடன்.
அடுத்தவர் அஞ்சனா ஆஸ்திரேலியாவில்.
ஒரே மகன் சஞ்சய். இங்கே பெரிய படிப்பு. ஆனால் அப்பாவின் சகல கம்பெனிகளை கவனிக்க ஒரே வாரிசு. காலையில் சென்னையில் இருந்தால் இரவில் சிங்கப்பூரில். உலகம் முழுக்க வர்த்தகம். எங்கே எப்போது சஞ்சய் இருப்பான் என்பது அவனுக்கே தெரியாது.
இதோ சென்னை வந்துவிட்டான்.
அம்மா மகிமாவின் அவசர அழைப்பு. காரணம் 4 நாட்களுக்கு முன்பு, சிகாகோவில ஒரு கார் விபத்து அசந்திருந்தால் சஞ்சய் கதை முடிந்திருக்கும். 140 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் அவென்யூவில் யாரோ அடித்த பிரேக்கில் வரிசையாக வாகனங்கள் இடிபட்டு, இவனது 3 கோடி ரூபாய் கார் நொறுங்கி, சஞ்சய் தப்பி விட்டான்.
உடனே வெளிநாட்டு போலீஸ்- வழக்கு என தீப்பற்றிக் கொள்ள பிரபல தொழிலதிபர் சஞ்சய்க்கு விபத்து என சேனல்கள் அலற, அது என்.டி,டி.வி, சி.என்.என். போன்ற நிறுவனங்களில் தெரிய, சோஷிய மீடியாவில் வைரலாக, பிரேக் அடித்தபின் உள்ளே தள்ள, இது கவனக்குறைவால் வந்த விபத்து என பேசப்பட்டது.
மறுநாளே வேறு மாதிரி செய்தி வந்தது.
இது திட்டமிட்ட மோதல். தொழில் எதிரிகள் ஸ்கெட்ச் போட்டு செய்த வேலை.
பலரை பலி வாங்கி, அந்த வட்டத்துக்குள் சஞ்சயை கொல்லும் முயற்சி. சாலை விபத்து. அடித்த பிரேக்கில் நடந்த விபரிதம் என நவீன. யுத்தி என பேச்சு வர, நெருப்பு பற்றிக் கொண்டது.
அன்று வாகனம் ஓட்டிய அத்தனை பேரின் தகவலும் திரட்டப்பட, ஓட்டியர்களை விசாரிக்க,
அதில் நேரடி, மறைமுக எதிரிகள், நண்பர்கள் யார், யார் என பட்டியல் இட்டு, நிச்சயமாக இது தொழில் போட்டிதான் என பரபரப்பாக செய்திகள் பறக்க,
எப்படியும் 48 மணி நேரத்தில் எதிரி பிடிபட்டு விடுவான் என்ற தகவல் வர, இங்கே கங்காதரன், மகிமா துடித்துப் போனார்கள்.
பல ஆயிரம் கோடிகளுக்கு வாரிசு. தவமிருந்து பெற்ற மகன். இரண்டு பெண்களுக்கு பிறகு 5 வருடங்கள் கருத்தரிக்காமல், ஆண் குழந்தை வேண்டும் என மகிமா கேட்க, அதற்காக நவீன மருத்துவங்களில் இறங்கி, லட்சங்களைக் கொட்டி, எக்ஸ் ஒய் க்ரோமோ சோம்களை சேர்த்து திட்டமிட்டு மதிமா கர்ப்பத்தில் விதைக்கப்பட்டவன் சஞ்சய்.
கர்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்ப்பது சட்ட விரோதம் என்க, ஆண்தான் வேண்டும் என திட்டமிட்டு அவனை உருவாக்கி, சட்டத்தை ரகசியமாக மீறி, உள்ளே இருப்பது ஆண் குழந்தைதான் என டாக்டர் காண்பித்து, கர்பத்தில் வளர்ந்தவன் சஞ்சய். ஸ்பெஷல் சைல்ட்.
அவன் பிறந்த அன்று, இனிப்புக்காக மட்டுமே கங்காதரன் ஒரு கோடி செலவழித்தார்.
அன்றைக்கு ஒரு மாத சம்பளம் போனஸ், விருந்து, உடைகள் என பணத்தை வாரி இறைத்தார்.
சுமக்கும் காலத்தில், தன் பிள்ளை ஒரு சிறந்த மனிதனாக உருவாக, சகலமும் கடைபிடித்தாள் மகிமா. உணவு, பழக்க வழக்கங்கள், பேச்சு, கலை, அறிவு, அழகு, நிறம் என அத்தனையும் அமைய தன்னை வருத்திக் கொண்டாள் அந்த அன்னை.
வர்த்தகத்தை அவனுக்கு கர்ப்பப்பையில் புகட்டினார் தந்தை. ஹைடெக் அபிமன்யுவாக உருவாகியவன் சஞ்சய்.