வசீகரன். இந்தக் கதையின் நாயகன்! பெயரில்தான் வசீகரம்! ஆள் சுமார்தான். கொஞ்சம் கட்டை, குட்டையான உருவம். பளிச்சென்ற நிறமெல்லாம் இல்லை! கொஞ்சம் கறுப்பில் சேர்த்திதான். ஓஹோவென்ற பர்சனாலிட்டி இல்லை! இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் உடனே வேலை கிடைக்கவில்லை ஒரு வருடம் அலைபாய வைத்துவிட்டு, பிறகு ஒரு நல்ல கம்பெனியில் கிடைத்து விட்டது!
புத்திசாலி, நல்லகுணம், அறிவு எல்லாம் நிறைய உண்டு. காரோட்டத் தெரியும். நல்ல குரல் வளம். அழகாக பாடத் தெரியும்! மற்றவர்களிடம் இனிமையாகப் பழகி, சுலபத்தில் அவர்களை வசீகரிக்கத் தெரியும்!
மது சூதனன் என்ற மது இந்தக் கதையில வில்லன்! வசியின் அக்கா புருஷன்! நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். சொந்த வீடு எல்லாம் உண்டு! ஆளும் பார்க்க, உயரமாக, நல்ல நிறத்துடன் இருப்பான்! தாராள தயாளத்தின் இன்னொரு பெயர்தான் இந்த மது. தன் தாய் தகப்பனை நன்றாக பராமரிக்கத் தெரிந்தவன்! அதாவது அவர்கள் மேல் பக்தி, பாசம் என்றெல்லாம் தப்பாக நினைக்க வேண்டாம். அவர்கள் பேரில் ஒரு வீடும், பேங்க் பேலன்ஸ் 50 லட்சம் இருப்பதால், ஒரே மகனான தனக்கது சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை தாங்கும் பார்ட்டி!
அகிலா. வசியின் அக்கா. ஜாதகம் பொருந்திவிட்டது. அவளும் பள்ளிக் கூட டீச்சர்தான்!
ஆனாலும் திருமணம் பொருந்தியதும் மதுவும் அவன் அம்மாவும் முடிந்த வரை அகிலாவின் அப்பாவிடம் கறந்தார்கள்.
அவர் மத்திய அரசாங்க உத்யோகம்.
ஒரே மகள் என்பதால் கடனை உடனை வாங்கி நிறையச் செய்தார்கள். தவிர, ஒரு வருட காலத்துக்கு பண்டிகை, சீர்செனத்தி, பிறந்த நாள் என சகலத்துக்கும் மாப்பிள்ளை மரியாதை!
மதுவின் அம்மா துரும்பைக் கூடக் கிள்ளி போடமாட்டாள். அகிலா வீட்டு வேலைகள் சகலமும் செய்து விட்டு, பள்ளிக் கூடத்துக்கும் போக வேண்டும்!
கல்யாணமாகி ஆறு மாதமாக குழந்தை இல்லாததால் அகிலாவைக் கழுவி ஊற்றினார்கள்.
அடுத்த ஒரு வருடத்தில் பிறந்து விட்டது!
மது மாதத்தில் பாதி நாள் ஏதாவதொரு சாக்கைச் சொல்லி மனைவி அகிலாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான். அவனும் வந்து நன்றாக சாப்பிடுவான்.
சல்லிக்காசு செலவழிக்க மாட்டான்! எங்கம்மாவால் முடியாது என மனைவி, குழந்தையை இவர்கள் தலையில் கட்டி விடுவான். அகிலாவுக்கு தர்ம சங்கடம்.
கோவிலுக்கும் போக வேண்டும்! புகுந்த வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்பா-அம்மா மகளை விட முடியாது.
அவளது சங்கடம் தெரிந்து இவர்கள் பார்க்க வேண்டிய கட்டாயம். ஆனால் ஊரில் அகிலா பெயர் கெட்டுவிட்டது.
எந்த நேரமும் பிறந்த வீட்டில்தான் என வருவோர்-போவோர் விமர்சிக்க அவளால் விளக்கம் சொல்ல முடியவில்லை.
“காரணம் மது”
எந்த ஒரு பொண்ணுக்கும் இங்கே புகுந்த வீட்டாரை குறை காணவே முடியாது.
கணவன் சரியாக இருந்தால், எந்த ஒரு பொண்ணும் தலை நிமிர்ந்து நிற்கலாம்!
புருஷன் பொறுப்புகளை உதறி விட்டு சுயநலத்தின் உச்சத்தில் நின்றால், இங்கே பெண்ணுக்கு நேர்வது அவமானம் தான்.
அதுதான் அகிலாவுக்கும் நேர்ந்தது.
இந்த லட்சணத்தில் தன் பொறுப்புகளை உதறும் மதுவுக்கு மாப்பிள்ளை பந்தா மட்டும் போதாது!
மாமனார், மாமியாரிடம், தர்பார் கொடி பறக்கும்.
இதில் அதிகம் மாட்டிக் கொண்டவன் அகிலாவின் தம்பி வசீகரன்! அவனை நாய் மாதிரி, அடிமை மாதிரி நடத்துவான் மது.
அகிலாவுக்கு கல்யாணம் ஆன புதிதில வசீகரனுக்கு வேலை கிடைக்கவில்லை!
“உனக்கு புத்தி பத்தாது வசீ! அதனாலதான் வேலை கிடைச்சா அதிக சம்பளத்தை எதிர் பார்க்காதே! கிடைச்சதை பிடிச்சுக்கோ!”
“எத்தனை காலத்துக்கு அப்பா முதுகுல சவாரி செய்வே?”
வசீகரன் அக்கா புருஷனாச்சே என்று பொறுத்துக் கொண்டான்.
அவனை பெற்றவர்களுக்கு இது பிடிக்கவில்லை.
மாப்பிள்ளை எதிர்க்க முடியாது என்று மௌனமாக இருந்தார்கள்.
“மது-வசியை சீண்டுவது தொடர”
“அகிலா! இது சரியில்ல! நீ சொல்லிவை! வசியை எதுக்கு அவர் இந்த மாதிரி பேசுறார். எங்களுக்கு பிடிக்கல”.
“இல்லம்மா! உரிமையில பேசுறார்!”
“நீ எதுக்குடி உன் புருஷனை ஆதரிக்கறே! எங்க பிள்ளையை பேசும்போது, எங்களால தாங்கிக்க முடியல!”
“விடும்மா! அவர் கோவக்காரர். இவன் மேல உள்ள உரிமைல பேசுறார். பெரிசா எடுக்காதே!”
அவளுக்கே புருஷனின் போக்கு பிடிக்கவில்லை!
ஆனாலும் பிரச்சனைக்கு பயந்து விவகாரத்தை அமுக்கினாள். வசீகரனுக்கு வேலை கிடைத்த நேரம்தான், அகிலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.