Reviews for சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]

15 reviews total

user_16229

★ 5/5 Feb 02, 2026

சமயம் மீது ஆர்வமுள்ளவர்கள் சமயங்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு சிறந்த நூல். இந்த நூலில் இருந்து சமயம் பற்றிய பல விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம். தொ.பரமசிவனின் எழுத்துக்கள் நம் இன்றைய சமூகத்திற்கு மிகவும் வேண்டியவை.

user_16228

★ 4/5 Feb 02, 2026

தமிழ் மானுடவியலாளர் தொ.பரமசிவன் மீண்டும் ஒரு முறை மிகப் பெரிய தகவல்களை மிகச் சுருக்கமாக வழங்கியிருக்கிறார். பல்வேறு சமய இயக்கங்கள் தமிழ் மண்ணில் எவ்வாறு உருவாகி வளர்ந்தன என்பதை ஒரு காலவரிசையில் நகர்த்திச் செல்கிறது இந்த நூல். இன்றைய தமிழகத்தின் சமய மக்கள்தொகை அமைப்பை புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

user_16227

★ 5/5 Feb 02, 2026

உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் பிறவா நிலை என்ற தேடலை மையப்படுத்தி கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தோன்றிய வைதீக வேத மரபானது பிறப்பை மையப்படுத்தி மக்களை அடிமைப்படுத்துதல் என்ற ஒற்றை கோட்பாட்டினை மறைவாக வைத்துக்கொண்டு காலத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு சமூகத்தை எப்படி ஆள நினைக்கிறது என்பதனை வெட்டவெளிச்சமாக விளக்கும் நீண்ட கட்டுரை இது.

சமணம், பௌத்த மதங்கள் நிறுவன மதங்களாக இருந்தாலும் அச்சமயங்களின் உணர்வுகள் மொழிவழியாகவோ பிற புறவழியாகவோ தமிழ்நாட்டில் வெளிப்படவில்லை. இதுவே சைவ வைணவ சமயங்கள் இங்கு தலைதூக்கக் காரணமாக இருந்தது என்பதனை நிறைய அறியா தகவல்கள் கொண்டு விளக்குகிறது.

துறவை மையப்படுத்திய சமணம் வெகுசன மக்களிடம் நெருங்காமல், ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்ததும், நிர்வாண துறவு நிலை பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதும் சமணம் வீழ்வதற்கு காரணமாக இருந்தது. சைவமும் வைணவமும் குடும்ப அமைப்பு முறை, சொத்துடைமை போன்ற கொள்கையினால் தமிழ் மக்களோடு இணக்கம் கொண்டது.

ஆனால் சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேத பரப்புரையைக் கொள்கையாகக் கொண்ட வைதீக சமயமே பெரிய எதிரி என்பதனை விளக்கும் சிறந்த கட்டுரை. எவ்வளவு பெரிய சமயங்கள் வந்தாலும் சென்றாலும், தாய் தெய்வ வழிபாட்டு நெறியினை மையமாகக் கொண்ட தமிழ் நாட்டார் தெய்வ வழிபாடு அழியாது நிலைத்து வாழும் காரணங்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சமய நம்பிக்கை உள்ளோர், சமய நம்பிக்கை இல்லாதோர் என அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_16226

★ 5/5 Feb 02, 2026

சமயங்கள் எவ்வாறு உருவானது, எந்தெந்த நிகழ்வுகள் இன்றைய சூழலுக்கு வழிவகுத்தன என்பதை அறிந்துகொள்ள அருமையான நூல். வழக்கம் போல் தொ.ப எந்த ஒரு விஷயத்தையும் சரியான ஆதாரங்களுடனும் உறுதியான சான்றுகளுடனும் பேசுகிறார். ஒரு மானுடவியலாளராக அவரின் ஆழமான ஆராய்ச்சி எப்போதும் பிரமிக்க வைக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல்!

user_16225

★ 5/5 Feb 02, 2026

அரசியல் என்பது எங்கிருந்து தொடங்கப்பட்டது என்கிற கேள்விக்கு சமயங்களில் இருந்து தான் அரசியலும் மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் நிகழ்ந்திருக்கின்றது என்பதை மனிதகுல வரலாற்றை ஊன்றி வாசித்தால் தெரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் நிகழ்ந்த அரசுடைமையாக்கத்தையும், பெரும்பான்மையான மக்கள் திரளை ஒரு திசை நோக்கி நகர வைப்பதற்கான வேலையை சமயங்கள் எவ்வாறு மேற்கொண்டன என்பதை இந்த நூல் விரிவாக பேசுகிறது.

இரண்டு பகுதிகளை கொண்ட இந்த நூல் முதல் பகுதியில் கட்டுரை வடிவிலும், இரண்டாவது பகுதி உரையாடல் பதிவாக இருக்கிறது. தமிழகத்தில் சமண, பௌத்த மதங்களின் வருகை எவ்வாறு இருந்தது, அதை எதிர்த்து வளர்ந்த பக்தி இயக்கம் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டது என்பதை விரிவாக விளக்குகிறார்.

சமணத் துறவிகள் மக்கள் வாழிடங்களை விட்டுத் தள்ளி வாழ்ந்ததற்கு அவர்களது நிர்வாணத் துறவு ஒரு காரணம். பௌத்த துறவிகளின் சங்க விதி அவர்கள் மக்கள் வாழ்விடங்களில் கலந்து வாழத் தடையாக இருந்தது. இன்றளவும் தாய்த் தெய்வ வழிபாடே பெருவாரியாக அமைந்திருக்கும் தமிழ்ச் சமுதாயத்தில், திகம்பர துறவியர் பிச்சைக்கு வரும்போது பெண்கள் ஓடிச்சென்று கதவினை அடைத்துக் கொண்டனர் என்பது அப்பர் தரும் சமூக வரலாற்றுக் குறிப்பாகும்.

துறவு நெறி மரியாதைக்குரியதாக இருந்தாலும் வாழ்நெறியாக இருக்க முடியாது. அதை வாழ்நெறியாக ஏற்கத் தமிழன் தயாராகவில்லை. கள் உண்ணாமையைத் தமிழர்கள் ஏற்கவில்லை — அக்காலத்தில் கள் உணவின் பகுதியாகக் கருதப்பட்டது. இன்றைக்கும் நம் நாட்டார் தெய்வங்களெல்லாம் கள்ளும் சாராயமும் குடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த காலகட்டத்தில் தான் பக்தி இயக்கம் மிக வீரியமாக தன்னுடைய பணியை செய்ய ஆயத்தமாகியது. சோழர்கள் ஆட்சிகாலத்தில் வேளாண் குடியினர் மீது அதிகமான வரிச் சுமை சுமத்தப்பட்டது, பெரும்பான்மையான விளைநிலங்கள் கோயில்களின் கட்டுப்பாட்டிலும் பிராமணர்களுக்கு தானமாகவும் வழங்கப்பட்டது. சோழர் ஆட்சிக்குப் பிறகான சித்தர் மரபு ஒரு சீர்திருத்த மரபாக உருவெடுக்கிறது. தமிழகத்தின் சமய வரலாற்றை பருந்துப் பார்வையாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்!