Reviews for சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]

15 reviews total

user_16239

★ 5/5 Feb 02, 2026

இது போன்ற புத்தகங்கள் நம் ஆழமான நம்பிக்கைகளின் அடித்தளத்தையே அசைக்கின்றன. நாம் பின்பற்றும் நடைமுறைகளை சிந்தித்துப் பார்க்கவும் கேள்வி கேட்கவும் வாய்ப்பளிக்கிறது. இந்த நூலை வாசித்ததில் மிகுந்த நன்றி உணர்வு — உண்மையிலேயே கண்திறக்கும் அனுபவம்.

user_16238

★ 4/5 Feb 02, 2026

பழங்கால வழக்கங்கள், சமயங்கள், மரபுகள், நடைமுறைகள், குறிப்பாக சமயங்களின் பின்னால் உள்ள அரசியல் பற்றி தொ.பரமசிவன் சிறப்பான ஆராய்ச்சி செய்துள்ளார். வாசிக்க சுவாரசியமாக இருந்தது — அறிவுக்கு விருந்தளிக்கும் நூல். அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டியது.

user_16237

★ 5/5 Feb 02, 2026

தமிழகத்தின் சமயங்கள் மற்றும் தமிழ் மொழி பற்றிய விரிவான புரிதலை அளிக்கும் நூல். சைவ, வைணவ சமயங்கள் வருவதற்கு முன்பு சமண, பௌத்த சமயங்கள் தமிழகத்தில் வகித்த முக்கிய பங்கை ஆசிரியர் எளிமையான மொழியில் விளக்குகிறார். சோழப் பேரரசின் வீழ்ச்சியும், 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகான விஜயநகரக் காலம் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படுத்திய சேதமும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது.

user_16236

★ 5/5 Feb 02, 2026

ஏராளமான தகவல்களும் சமயங்களில் பொதிந்திருக்கும் அரசியலும் நம்மை அதிரச் செய்கிறது. ஒரு சமய சார்பின்றி இந்த கட்டுரையை எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது — அதை லாவகமாக கையாண்டுள்ளார்.

நாட்டார் தெய்வங்கள் பேசும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான சமய உரிமைகள் சிறப்பு. சமய குட்டையில் கல் எறியும் என்ற நினைப்புடன் வாசிக்கத் துவங்கியது ஒரு பெரும் பாறாங்கல் விழுந்த உணர்வுடன் முடிந்தது!

user_16235

★ 4/5 Feb 02, 2026

இந்து சமய நடைமுறைகளான பக்தி மார்க்கம் எவ்வாறு வரவேற்கப்பட்டது, பௌத்தமும் சமணமும் ஏன் பின்னடைவை சந்தித்தன என்பதை நன்கு விளக்கும் நூல். கடவுள் வழிபாட்டில் பெண்களுக்கும் இடம் தந்த பக்தி மார்க்கம், புலால் மற்றும் கள் உண்ணாமையை கடுமையாக கடைப்பிடித்த பிற சமயங்களை விட தமிழ் மக்களின் இயல்பான வாழ்வியலுடன் ஒத்துப்போனது. ஆட்சியாளர்களே சைவம் அல்லது வைணவத்தை பின்பற்றியதால் மக்களும் அதையே பின்பற்றினர் என்பதும் புரிகிறது.

user_16234

★ 5/5 Feb 02, 2026

இந்தப் பதிப்பு சமயங்களின் அரசியல் என்ற நூலையும் ஆசிரியருக்கும் சுந்தர் காளிக்கும் இடையே நடந்த சமயம் பற்றிய உரையாடலையும் சேர்த்தது. மிக குறுகிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஆய்வாக அமைகிறது.

சம்பந்தர் சொன்ன வைதீக கருத்துக்களும் கோத்திரப் பெருமையும் அப்பர் எழுப்பிய புரட்சிக் குரலையும் ஆராய்கிறார் ஆசிரியர். அப்பரும் சம்பந்தரும் ஒரே காலத்தில் வாழவில்லை என ஆசிரியர் முனைகிறார் — இதில் உண்மை இருக்கிறது என்றே தோன்றுகிறது.

சமஸ்கிருதம் காலப் போக்கில் வளராமல் கோயிலுக்குள் மட்டும் வாழும் காரணமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் நோக்கி வந்த பிராமணர் தமிழ்ப் பெண்களை மணந்ததால் வீட்டில் தமிழ் தான் பேசப்பட்டதாம் — இதனால் தமிழகத்தில் சமஸ்கிருதம் வளரவில்லை.

பௌத்தமும் சமணமும் ஆணாதிக்கத்தை எப்படி வெளிப்படுத்தின, தமிழகம் அம் மதங்களை நிராகரிக்க அமைந்த காரணங்கள் என்பது என்னை ஈர்த்த ஆய்வு. நம் தத்துவார்த்த சிந்தனையை வளர்க்கும் முயற்சியில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

user_16233

★ 3/5 Feb 02, 2026

இந்த சிறிய புத்தகம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வரும் சமயங்கள் குறித்து விரிவாக அலசி ஆராய்கிறது. அரசதிகாரத்தின் ஆதரவு பெற்ற சமயங்கள் எப்போதும் அந்தந்த காலகட்டத்தில் முதன்மையானதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது — இன்று வரை!

சடங்கில் உரிமைகள் பெண்களிடம் இருந்தது போன்ற தகவல்கள் புதிதாக இருந்தது. வட்டவடிவான கோட்டங்களே நம் பழந்தமிழ் வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது. பௌத்தத்தின் தாக்கமே இன்று நாம் வழிபடும் சதுர அல்லது நீள் சதுர வடிவான கோவில்களின் அமைப்புக்கள்.

தீட்டு போன்றவை உருவாக்கப்பட்டது நம் தமிழகத்தில் பக்தி இயக்க காலத்தில் தான். பார்ப்பனீயம் அரசதிகாரத்தோடு உள்நுழைந்து பிற சாதியினரையும் பெண்களையும் கர்பகிரக வழிபாடுகளில் இருந்து விலக்கியுள்ளது. அதன் கட்டுகளில் இருந்து இன்னும் விடுபடாமல் தான் நாம் இருக்கிறோம்.

நாட்டார் தெய்வ வழிபாடுகளை புறந்தள்ளியதில் வைணவத்தின் தாக்கம், மூதேவி வழிபாடு நிறுத்தப்பட்டது, திருவிளக்கு வழிபாடு போன்றவற்றை விரிவாக விவரிக்கிறார். சமயங்களை குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக வாசிக்கலாம்.

user_16232

★ 5/5 Feb 02, 2026

வைதீகம் எனும் ஆரியம் பிற சமயங்களை எப்படித் தன்னுள் கரைத்துக் கொண்டது எனும் ஆயிரத்தைநூறாண்டு வரலாற்றினைத் தெளிவாய் எடுத்துரைக்கிறது இந்நூல்.

யாகங்கள் என்று சொல்லப்படும் வேள்விகள் செய்வது ஆரியர் வழக்கேயாகும். சங்கக் காலத்திலேயே சிறிதளவில் ஆரியர் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. வேதங்களே பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வைப் போதித்தன. ஆரியர் வந்து வேள்வி நடத்துவதனால் நாட்டிற்கு நன்மைகள் நடக்கும் என்று மன்னரையும் மக்களையும் நம்ப வைத்தனர். க்ரமம் எனப்படும் வேதத்தைச் சொல்லிப் பெறப்பட்ட நிலங்களே பின்னாளில் கிராமம் என்றானது.

ஆரியர் வருகைக்கு முன்னர் வட்ட வடிவிலான கோட்டம் எனப்படும் திறந்தவெளியிடங்களே இறைவழிபாட்டிடங்களாய் இருந்தன. பின்னரே அவை கருவறை கொண்ட கோவில் ஆகின்றன. கருவறைக்குள் சமற்கிருதமே ஒலிக்க வேண்டும் எனச்சொல்லி தமிழை வெளியேற்றினர். இதனால்தான் இன்றும் தேவாரம் பாடும் ஓதுவார் கருவறைக்கு வெளியில் மட்டுமே நின்று பாடுகின்றனர்.

சித்தர்கள் எனும் தமிழ் மரபினர் ஆரியத்துக்கு எதிரான கலகக்குரலினை எழுப்புகிறார்கள். சித்த மருத்துவம் மூலம் மக்களுடன் நெருங்கியவர்களாகவே இருந்தனர். பல படையெடுப்புகளால் அரசுகள் வீழ்கின்றன, சித்தர் மரபு மறைகிறது — ஆனால் ஆரியர் மட்டும் சமூகத்தில் தாம் வகித்த உயர்நிலையைத் தக்கவைத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

user_16231

★ 4/5 Feb 02, 2026

சிறப்பான ஆராய்ச்சி நூல். பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் எவ்வாறு இருந்திருக்கிறது, குறிப்பாக சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பது குறித்த முழுமையான ஒரு சித்திரத்தை இவ்வாசிப்பு அளிக்கிறது. இதே ஆசிரியரின் "அறியப்படாத தமிழகம்" நூலைக் காட்டிலும் இது சிறப்பான நூல்!

user_16230

★ 5/5 Feb 02, 2026

தொ.பரமசிவன் நம் காலத்தின் தேவை. ஒற்றை மொழி, கலாச்சாரம், நாடு என்ற பன்மைத்துவத்திற்கு எதிரான பேராபத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய கருத்தியல் ஆயுதத்தை தரவல்லதே இப்புத்தகம்.

அவரின் நூல்கள் அனைத்தையும் மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு முறையும் அவை வெவ்வேறு பரிமாணங்களைத் தந்து கொண்டிருக்கின்றன. பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்களுடைய புத்தகங்களை, தொ.பரமசிவன் அவர்களின் படைப்புக்களோடு உடன் வாசிப்பு செய்யும்போது புதிய வெளிச்சம் கிடைக்கிறது.