Reviews for தன்மீட்சி
19 reviews total
user_15952
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் ஒவ்வொருவருடைய தன்மீட்சி பற்றிப் பேசுகிறது. லட்சியவாதத்தை முன்வைக்கும் நூல்.
வாசகர்களின் கேள்வி-பதில் வடிவில் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இந்தக் கேள்விகள் சமூகத்தின் முக்கியமான பிரச்சனைகளையும் சிக்கல்களையும் முன்வைக்கின்றன. அதற்கு ஜெயமோகனின் பதில்கள் நுட்பமாகவும் ஆழ்ந்த தரிசனத்துடனும் இருக்கின்றன. யாரும் தவற விடவே கூடாத புத்தகம்.
user_15951
★ 5/5 Feb 02, 2026"எது வேரில் கசக்கிறதோ, எது இலையில் துவர்க்கிறதோ, அதுவே கனியில் இனிப்பாகிறது" — ஜெயமோகன்.
என்னுள் பெரும் மாற்றத்தை விதைத்த நூல். அலைக்கழிப்புகள் கொண்ட மனம் வழி தேடி அலைகையில் கண்டுகொள்ளும் புத்தகம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. அந்த வயதின், வாழ்வின் நிலையிலிருந்து எழும் கேள்விகளுக்கான பதில்கள் இதில் உள்ளன.
என் பல சிந்தனைக் குழப்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை அளித்த நூல். கட்டுரை வடிவில், பல்வேறு வாசகர் கடிதங்களுக்குப் பதிலாக ஆசிரியர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு.
user_15950
★ 5/5 Feb 02, 2026இது என் முதல் புத்தக விமர்சனம். ஜெயமோகன் தனது வலைதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே தன்மீட்சி.
ஏதாவதொரு சூழலில் நாம் அனைவருமே நம்மை ஏதோவொன்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறாக ஏதோவொன்றில் சிக்கித் தவிக்கும்பொழுது எண்ணற்ற கேள்விகளும் மன உளைச்சல்களும் நம்மை பாடாய் படுத்தும்.
user_15949
★ 4/5 Feb 02, 2026தன்னறம், தனிமனித மேம்பாடு, சோம்பலை விடுத்து லட்சியத்தை அடைதல், மனச்சோர்விலிருந்து மீளுதல் குறித்து வாசகர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஜெயமோகன் அளித்த பதில்களின் தொகுப்பு இது.
ஒரு தனிமனிதனுக்கு வேலை நிமித்தமாகவும், படிப்பு சார்ந்தும், சமூகக் கோட்பாடுகளால் ஏற்படும் மனச்சிக்கல்கள் குறித்தும், அவற்றை எப்படி அணுகுவது என்பது பற்றியும் விவரித்துள்ளார். தன் சொந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
வாழ்வில் எந்தத் தருணத்திலாவது முன்னேற முடியாமல் சிக்கித் தவிப்பதாக உணர்ந்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். மனத்தடைகளை உடைத்து அடுத்த கட்டத்திற்கு நகர உதவி செய்யும். ஆனால் நேரடி பதில்கள் கொண்ட புத்தகம் அல்ல இது — உங்கள் அகத்தின் வழியே விடைகளைத் தேடத் தூண்டும் ஒரு கோல் அவ்வளவே.
user_15948
★ 4/5 Feb 02, 2026தமிழ்ச் சமூகத்தின் புறத்தோற்றம் நம் கண்முன் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது — அது தமிழ்ச் சமூகத்தின் அகத்தில், குறிப்பாக இளைஞர்களின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிறுத்திச் சிந்திக்க நமக்கு நேரமில்லை. தீவிர இலக்கியம் வாசித்து, வரலாறும் தத்துவமும் படிக்கும் அதே சமயம் நவீன பொருளாதார இயந்திரத்தில் ஒரு பொருத்தமான சக்கரமாகவும் இருக்கும் அந்த இளைஞன், தன் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை என்ற முடிவுக்கு விரைவில் வந்துவிடுவான்.
இந்தச் சூழலில்தான் ஜெயமோகன் தனது இளம் வாசகர்களிடமிருந்து கடிதங்களைப் பெறுகிறார். அவர்கள் அவரை மரியாதையாக ஜெயமோகன் என்றும், நெருக்கமாக ஜெ என்றும், மரபுப்படி ஆசான் என்றும், அப்பா என்றும் கூட அழைக்கிறார்கள். அவர் அவர்களுக்கு அயராது பதிலளிக்கிறார்.
ஜெயமோகன் தனது வலைதளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் உரையாடல், அவரது இலக்கியப் பங்களிப்பைப் போலவே முக்கியமானது. வேறு யாரும் இந்த உரையாடல்களை நிகழ்த்தியிருக்க முடியாது. பல பதில்கள் வாழ்க்கைகளை மாற்றியிருக்கின்றன.
user_15947
★ 4/5 Feb 02, 2026"உலகியலைக் கனவுகளுக்காக உதாசீனம் செய்தால், உலகியலுக்காகக் கனவுகளைக் கைவிட வேண்டியிருக்கும்."
தன்மீட்சி என்பது தனக்குள் திரும்பி வந்து, உண்மையான சுயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதைக் குறிக்கிறது. இது மனிதனின் அக உணர்வுகளைச் சீராக்கி, தனது வாழ்வில் எண்ணங்களில் எவ்வாறு நேர்மையாக இருக்கலாம் என்பதைக் கூறும் நூல்.
ஜெயமோகன் தனது வாசகர்களின் கேள்விகளுக்குக் கொடுத்த பதில்களின் தொகுப்பே இந்த நூல். வாசகர்களுக்குத் தன்னுணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. எல்லா வகையான மனிதர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இதில் அவர்கள் தேடும் கேள்விக்கான விடைகள் கிடைக்கும்.
அவருடைய வாழ்க்கையை மிகவும் நேர்மையான முறையில் பகிர்ந்துள்ளார். பதில்கள் வாசகர்களை ஆழமாக உணர வைப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கை மீதான ஒரு புதிய பார்வையை வழங்குகின்றன. இது ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நூல்.
user_15946
★ 4/5 Feb 02, 2026இளைய தலைமுறைக்கு ஜெயமோகன் அளிக்கும் ஆழ்ந்த தரமான அறிவுரைகள் நிறைந்த நூல். இதில் எழுதப்பட்டுள்ள சில கேள்விகள் மிக அழகானவை — சிந்தனை ஓட்டத்தின் வெளிப்பாடுகள்.
திரும்பத் திரும்ப சில கேள்விகளும் பதில்களும் சிறிது களைப்பூட்டினாலும், தன்னறம் தேடுபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷமே.
user_15945
★ 3/5 Feb 02, 2026ஜெயமோகன் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு தனிமனிதராக அவர் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு.
இந்நூலில் சில ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்களும் நிறைய ஏற்றுக்கொள்ள முடியாத முரண்களும் கொண்டிருக்கிறது. மிகக் கடினமான வாசிப்பாக அமைந்தது.
user_15944
★ 4/5 Feb 02, 20264.5 மதிப்பெண்கள் தருகிறேன். தன்னறம் குழுவின் வழியாக இப்புத்தகம் கிடைத்தது. இலவசமாகக் கிடைத்தது என்பதால் புகழ்ச்சிக்காக எழுதவில்லை.
தமிழ் இலக்கிய உலகைக் கூர்ந்து கவனிக்கும் எந்த வாசகனும் ஜெயமோகனின் எழுத்தில் பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அறிவான் — மத, சாதிய, வலது-இடது சார்பு சூழல்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறாரோ என்பதே. ஆனால் அவரை அப்படிக் காண்பது முரண் என்பது என் புரிதல். தன்மீட்சி அந்த முரணுக்கான பதிலைக் கொண்டிருக்கிறது.
அரிதினும் அரிதாய் எழுதும் மக்களில், தனக்கான தனியான இடத்திலிருந்து சலிக்காது எழுதிக் குவிக்கும் எழுத்து இயந்திரம் ஜெயமோகன். தன்மீட்சி வாசித்தவுடன் கிடைக்கும் மன நிறைவு எல்லாருக்கும் நிச்சயம் கிடைக்கும். சலிப்பில்லாது வாழ்ந்து எழுதிக் கொண்டேயிருக்கும் ஜெயமோகனுக்கும் வாழ்வியல் வெறுப்பும் சலிப்பும் இருந்திருக்கின்றன — அதை எதிர்கொண்ட தன்னாற்றல் வாசிப்பவர்களுக்கு ஊக்க மருந்து.
இன்றைய இளைஞர்களுக்கு இலக்கியம் சார்ந்த எதிர்கால வாழ்வின் தேடல்களுக்கும், தோல்விகளுக்கும், குழப்பங்களுக்கும் தடையாகும் தடுப்பரண்களைத் தட்டி எறிய தன்மீட்சி உதவும்.