Reviews for நட்சத்திரவாசிகள்

26 reviews total

user_15870

★ 4/5 Feb 02, 2026

வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனதில் இருத்துகிறார்கள். ஐடி துறையின் நிலையின்மையையும் அதன் மனிதர்களின் உள்ளக் குமுறலையும் நேர்த்தியாகப் பிடித்துள்ள நாவல்.

user_15869

★ 5/5 Feb 02, 2026

ஐடி துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வேறு பல அலுவலகங்களுக்குச் செல்பவர்களும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் உள்ளது. அலுவலகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் அவர்களின் குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் எனப் பல நிகழ்வுகளையும் கொண்ட கதைக்களமாக உள்ளது. சில நிகழ்வுகள் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ளவும் முடிந்தது.

user_15868

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை அகில இந்திய வானொலி செய்தியில் சாகித்ய அகாதமி விருது பெற்றதாகக் கேட்டு வாங்கினேன். 10 நாட்களில் படித்து முடித்தேன் — கதாபாத்திரங்களின் ஈர்ப்பு அவ்வளவு அதிகம்.

புனைகதையாக இருந்தாலும் ஐடி துறையில் பணிபுரியும் மனிதர்களின் யதார்த்தத்தை, அவர்களின் வெவ்வேறு அனுபவங்களையும் அன்றாட வாழ்க்கையையும் பதிவு செய்கிறது. ஐடி துறைக்கே உரிய சுருக்கெழுத்துகளை ஆசிரியர் புத்தகத்தில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு பாராட்டுகள்.

user_15867

★ 5/5 Feb 02, 2026

நன்கு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட புத்தகம் அல்லது திரைப்படம் கிடைப்பது மிகவும் அரிது. இவ்வளவு ஆழமான பல கதாபாத்திரங்களைக் கொண்டிருப்பது ஆசிரியரின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் அத்தகைய அரிய படைப்பு. அவரது கதைசொல்லல் முறையும் மொழியாளுமையும் ஆனந்த விகடனின் பொற்காலத்தை நினைவூட்டுகிறது, ஆனால் கதையோ மில்லெனியல் தலைமுறையின் நிஜ போராட்டங்களைச் சுற்றி மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

இந்நாவல் பணியிட நார்சிசிசம், மில்லெனியல் உறவுச் சிக்கல்கள், படிநிலை அரசியல் மற்றும் உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உலகின் மன நல பிரச்சினைகளை நுட்பமாக வெளிக்கொணர்கிறது. ஏ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன் ரசிகர்களுக்கு இந்த புத்தகம் ஏமாற்றாது. இதை ஒரு திரைப்படமாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்!

user_15866

★ 5/5 Feb 02, 2026

பொருளாதார முன்னேற்றமும், ஊர் மற்றும் உறவுகளின் கவனமும் இந்த ஐடி பணியாலேயே கிடைத்தது என்பது இந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்தத் துறையில் பணி நிரந்தரமா என்று கேட்டால் இல்லை — எப்பேர்ப்பட்ட பதவியில் இருந்தாலும் ஒரு எதிர்பாராத நாளில் வேலையிழப்பு நடக்கும். நீ எப்படி உழைத்திருந்தாலும் ஒரு நாள் புதிய புராஜெக்ட் இல்லை, லாபம் குறைகிறது என்று சொல்லி வேலையிலிருந்து தூக்கிடுவார்கள்.

வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும், ஆனால் சென்றவர்கள் சிறைக்கைதி போன்ற வாழ்வில் எப்போது ஊர் திரும்புவோம் என்ற ஏக்கத்துடன் நாட்களை நகர்த்துகிறார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்மையாக உழைப்பவனுக்கு மறுக்கப்பட்டு அரசியல் செய்பவனுக்கு வழங்கப்படும்.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய புனைவே நட்சத்திரவாசிகள். ஏதோ ஒரு கதாபாத்திரம் நமக்கு நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்.

user_15865

★ 5/5 Feb 02, 2026

ஐடி துறையின் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் பல குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், ஒரு சிறு கூட்டினில் அடைந்து பறக்கச் சொல்கிறது. ஒரு கட்டத்தின் மேலே, இந்த வளர்ச்சியும் அதிகாரத் தேடலும் ஈகோவை உருவாக்கி, சக பணியாளர்களைச் சீண்டுகிறது.

அனைத்தையும் தாண்டி, முதலாளித்துவ பொருளாதாரம் லாப நோக்கத்துக்கே ஓடுகிறது, மனித நலத்திற்காக அல்ல. "எனது வேலை எனது நிலையாக இல்லை, அதே நேரத்தில் எனது வேலை எனது அடையாளமும் இல்லை."

ஒவ்வொரு பணி உயர்வும் ஒரு மியூசிக்கல் சேர் — ஒருவர் அமர்ந்தால் இன்னொருவர் நீங்க வேண்டும். அலுவலக வாழ்க்கை குடும்ப உறவுகள் வரை சிக்கலாக்குவதை ஆசிரியர் நேர்த்தியாக சித்தரித்துள்ளார்.

ஐடி துறையின் வளர்ச்சியையும் அதே நேரத்தில் கொடூரமான போட்டியையும் ஆசிரியர் நுட்பமாக வெளிக்கொணர்ந்துள்ளார். "நாம் ஒரு பெரிய இயந்திரத்தில் ஒரு நட் அல்லது போல்ட் மட்டுமே. முக்கியமானவர்கள் ஆனால் மாற்ற முடியாதவர்கள் அல்ல" — இதுதான் இந்நாவலின் சாரம்.

user_15864

★ 4/5 Feb 02, 2026

கார்த்திக் பாலசுப்ரமணியன் தற்போதைய இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத படைப்பாளி. தகவல் தொழில்நுட்பத்துறைதான் அவரின் பெரும்பாலான கதைகள் நடக்கும் களம். புதிய நூற்றாண்டில் மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, பொருளாதாரம் என இந்த துறை ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்.

கண்ணாடித்தீவுகளுக்குள் குடிபெயர்ந்த இவர்களின் வேலை நேரங்கள் ஒரு நெறிமுறையின்றி இந்தியா இரவினை தின்னும் அமெரிக்க பகல்களாக நீளுகின்றன. பெண்கள் நவீன உழைப்பு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் — கணவனுக்கு சமைத்தும், குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வேலையின் அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டிய நிலை.

டொரினோ, நட்சத்திரவாசிகள் இரண்டையும் ஒருசேரப் படிக்கும்போது ஆசிரியரின் கதைக்கான கருப்பொருள் தேர்வும் அதன் உருமாற்றமும் தெளிவாகத் தெரிகிறது. நட்சத்திரவாசிகள் நாவலில் ஐடி நிறுவனத்திலேயே வாழ்ந்துவிட்டு வந்தது போன்ற உணர்வை ஆசிரியர் கடத்துகிறார்.

மீரா நித்திலனுக்கு எழுதிய மின்னஞ்சலைப் படிக்கும்போது நான் என் மனைவிக்கு எப்படிப்பட்ட கணவனாக இருக்கிறேன் என்பதை சுயவிமர்சனம் செய்துகொண்டே இருந்தேன். அடைத்த குளிரூட்டப்பட்ட கியூபிக்கல்களுக்குள் சிறைப்பட்டிருக்கும் மனிதர்களுக்கும் அவர்தம் மனங்களுக்கும் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் தேவையாகவே இருக்கின்றன.

user_15863

★ 4/5 Feb 02, 2026

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு வெவ்வேறு வாழ்க்கைகளை ஒரே தருணத்தில் மாறி மாறி வாழ்கிறான். ஒன்று வெளி உலகத்திற்காக வேஷம் போட்டு வாழும் புற வாழ்க்கை, மற்றொன்று தன் முழு சுயத்தையும் நிலைநாட்ட முயலும் அகவாழ்கை.

முழுக்க முழுக்க நிகழ்காலத்தில், சென்னையின் மென்பொருள் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழும் கதைகளின் உலகம்தான் நட்சத்திரவாசிகள். நிறுவனத்தின் செக்யூரிட்டியின் வாழ்க்கையுடன் கதை தொடங்குகிறது. பணிபோர், தனிமை, குடும்பச் சிக்கல்கள், உழைப்புச் சுரண்டல் எனப் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் கதை நகர்கிறது.

வேணுகோபால், சத்தியமூர்த்தி இடையேயான பணிபோர், தன் மகளுடன் தனியே வாழும் அர்ச்சனா, அமெரிக்கா வரை சென்று திரும்பும் விவேக், நித்திலன்-மீரா தம்பதியின் யதார்த்த வாழ்க்கை, வேலையும் கைவிட்டுப்போகும் தருணத்தில் தத்தளிக்கும் சாஜு — ஒவ்வொரு கதாபாத்திரமும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி.

பார்கவி என்ற கதாபாத்திரம் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. சிலரின் சுயநலமும் போட்டியும் பொறாமையும் அவளின் மென்மையான மனதைக் கொத்தி தின்றுவிட்டு குப்பையைப் போல் வீசியெறிந்த காட்சி என் மனதிலிருந்து அகல மறுக்கிறது.

5 எண்களில் ஊதியம், நவீன உபகரணங்கள், அடுக்குமாடி வாழ்க்கை என வெளி உலகம் காட்டும் பிம்பம் ஒன்று; அவர்களின் மனம் காட்டும் உண்மையோ வேறு — சோர்வு, சுரண்டல், வெறுமை, தனிமை, அடிமைத்தனம். ஆசிரியர் சொல்வது போல் "இங்கு நாங்கள் கூட்டமாகத் தெரிந்தாலும், அனைவரும் தனித்தனியேதான் உணர்வோம்."

user_15862

★ 3/5 Feb 02, 2026

புத்தகங்கள் மூலம் என் முன் விரிந்த உலகங்கள் பல. எழுத்தாளனின் உதவியோடு அந்த உலகம் நமக்குப் பரிச்சயமாகிறது. நித்தமும் நான் உழலும் அந்த உலகமும் பிறிதொருவருக்கு அனுபவமாகக் கூடும் என்று நட்சத்திரவாசிகள் வாசித்தபொழுது உணர முடிந்தது.

ஐடியில் வேலைக்கு சேர்ந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு விவாகரத்து பெற்றவரைப் பார்த்ததில்லை. ஒரே நாளில் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டவரை சந்தித்ததில்லை. அலுவலக மன அழுத்தத்தால் வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பற்றி கேள்விகூடப் பட்டதில்லை. அதற்காக இப்புதினத்தைக் குற்றச்சாட்டவில்லை. பூமி சுற்றுவதையா கதையாக்க முடியும்.

ஆர்த்திக்கு பரதவாஜுக்கும் கிடைப்பது எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று நித்திலன் யோசிப்பதாக வைத்துவிட்டது எழுதியவரின் சாமர்த்தியம்தான். டெய்சி, சஞ்சய் பகுதியின் சாத்தியங்கள் முகத்தில் அறைகிறது. Y2K காலத்தில் வந்தவர்களை நட்சத்திரவாசிகள் எனலாம். நாங்கள் பூமிக்கு இறங்கி வந்து பல நாட்கள் ஆகிறது.

user_15861

★ 4/5 Feb 02, 2026

நட்சத்திரவாசிகள் மிக முக்கியமான சமகால பிரச்சினைகளை அழகாகவும் எளிமையாகவும் பதிவு செய்துள்ளது.

இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் சுவாரஸ்யமானது. அனைத்து அத்தியாயங்களும் மிகச் சிறியவை என்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து கவனிப்பதில் சிறு இடையூறு ஏற்படுவதாக உணர்ந்தேன். கதாபாத்திர வார்ப்பு அருமை, ஆனால் பெண் கதாபாத்திரங்கள் வேண்டுமென்றே துணிச்சலாக காட்டப்படுவதாக உணர்ந்தேன்.

ஒரு கதையை படித்து முடித்த பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க வைத்தால் அந்தக் கதை என்னை வென்றுவிட்டது என்று பொருள். நட்சத்திரவாசிகள் அதைச் செய்தது. நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் இவை — அவர்களின் கதையை நாம் அறிந்ததாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் அறிவதில்லை. ஆசிரியருக்கு பாராட்டுகள். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.