Reviews for ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை

14 reviews total

user_15744

★ 5/5 Feb 02, 2026
அன்பு செலுத்துவதற்கு அடையாளங்கள் எதற்கும்? உண்மையான அன்பு எந்த பெயரும், அடையாளமும் இல்லாமல் பரஸ்பரம் வளர்கிறது. அதுதான் இந்த நாவல் சொல்லும் உண்மை. - எஸ். ரா.

user_15743

★ 5/5 Feb 02, 2026
நாவல் போன்று ஒரு கவிதை. கவிதை போன்றொரு நாவல். காதலில் கவிதை இல்லாமல் எவ்வாறு பக்கங்கள் பயணிக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு, மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது இந்தப் புத்தகம். சில்வியாவும் சுப்பியும் கடக்கும் ஒவ்வொரு கோடையும் மனதைப் பாரமாக்கி வெளி செல்கின்றன. எஸ்.ரா. அவர்களின் மொழி நடையும் சரி, பதின்வயதின் மாற்றங்களில் சிக்கி தவிக்கும் சுப்பியும் சரி, வயதில் குறைவாக இருப்பினும் இந்த உலகத்தை எளிமையாக, விசித்திரமாக, யதார்த்தமாக நோக்கும் சில்வியாவாக இருந்தாலும் சரி, மனதில் மெல்ல ஒரு சாரல் பட்டும் படாமலும் கடந்து செல்கிறது. எல்லோரின் வாழ்விலும் சஞ்சரித்து, மெல்ல எப்போதும் நகர்ந்து சென்ற கோடைக்காலத்தின் மறு வாசிப்பே இந்த ஒரு சிறிய விடுமுறைக் கால காதல்கதை. சில மணி நுட்பங்கள் மட்டுமே கதையில் பேசும் நான்சி பற்றி நீங்கள் படிக்கும் பொழுது உவகை கொள்வீர்கள். பொதுவாகச் சொல்லனும்னா எல்லாரும் ஒரு முறை படிச்சே ஆகணும். நன்றி எஸ்.ரா. அவர்களே.

user_15742

★ 5/5 Feb 02, 2026
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் நாவல்களில் 'இடக்கை', 'யாமம்' இரண்டையும் வாசித்திருக்கிறேன். இரண்டுமே இந்திய வரலாற்றின் சில நிகழ்வுகளை மையமாகக் கொண்ட தீவிர கதைக்களங்களைக் கொண்டவை. எப்போதும் காதலைப் பற்றி, பெண்களின் அகவுலகம் பற்றி மேன்மையான கருத்துக்களைக் கொண்டது எஸ்.ரா.வின் எழுத்துக்கள். அத்தகைய எழுத்தாளர் காதலை மையமாகக் கொண்டு படைத்திருக்கும் ஒரு நாவல் இது. கோடைக்காலத்தில் இருவரிடையே உருவாகும் காதல், காதலின் உண்மையத்தைத் தம்மையும் உணரச் செய்து விடுகிறது. சில தருணங்களில் கவிதைப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்து விடுகிறது. எந்த அடையாளங்கள் இல்லாமலும் மனிதர்கள் பரஸ்பரம் அன்பு காட்ட முடியும், சில உறவுகள் நம் வாழ்நாள் முழுவதற்குமானது என்பது போன்ற நல்உணர்வுகளை வாசிப்பவர்களிடம் விதைக்கிறது இந்நாவல். தனது எழுத்துலகம் ரஷ்ய இலக்கியங்களிடமிருந்து உத்வேகம் பெற்று உருப்பெறத் தொடங்கியதாகத் தனது பல்வேறு உரைகளிலும், கட்டுரைகளிலும் எஸ்.ரா. கூறியிருக்கிறார். அந்த வகையில் தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கியவாதிகளுக்கு தமிழ் எழுத்தாளன் ஒருவன் செலுத்தியிருக்கும் அஞ்சலியாகவும் இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம். வாசித்து முடிக்கையில் கோடைக்காலத்தில் கருவான உங்கள் முதல் காதல் நினைவுக்கு வரக்கூடும்.

user_15741

★ 5/5 Feb 02, 2026
எஸ். ரா.வின் எழுத்து, கரிசல் நிலத்தின் தன்மையும், பதின்பருவ காதல் அரும்புறதையும், கோடைவிடுமுறையும், புழுத்தில் விளையாட்டதையும் இன்னும் பலவற்றையும் பற்றி படிக்க படிக்க அப்படியே என்னை இந்த நாவல் கட்டிப்போட்டுருச்சு. அவ்வளவு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பருவகால நினைவுகள் வந்து போனது. நிறைய தொடர்புடுத்திக்கொள்ள முடிந்தது. 'சில்வியா' இந்த பெயரை நான் மறக்கமாட்டேன்.