பாண்டியர்களை மையமாக வைத்து (protagonists) எழுதப்பட்டுள்ள பாண்டிமாதேவி அருமையான சரித்திர நாவல். கால ஓட்டத்தில் பொன்னியின் செல்வனுக்கு சற்று முன்பு நடக்கும் கதை. நா. பா. இந்தக் சரித்திரப் புனை கதையை விறுவிறுப்பாக நடையில் எழுதியுள்ளார். பல்வேறு கதாபாத்திரங்கள், பல்வேறு கதை இழைகள் கொண்டுள்ள இந்தக் கதையின் முடிவும், இதில் உள்ள எதிர்பாராத திருப்பங்களும் வாசகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.
பாண்டிமாதேவி, மஹாமண்டலேஸ்வரர், தளபதி வல்லாளத்தேவன், சேந்தன் - இந்த நான்கு கதாபாத்திரங்களையும் நா. பா. அருமையாக உருவாக்கியுள்ளார். இந்தக் கதையில் வரும் சில கதாபாத்திரங்கள் பொன்னியின் செல்வனின் வரும் கதாபாத்திரங்களை நினைவு படுத்தக் கூடும். அப்படி உங்களுக்குத் தோன்றினால் தயவு செய்து கல்கியின் கதாபாத்திரங்களையும் , நா. பாவின் கதாபாத்திரங்களையும் ஒப்பிடுவதை அறவே தவிர்த்து கதையை படித்து மகிழுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் உங்க���ுடைய கணிப்பில் அனாவசியமாக குறைந்த மதிப்பெண்கள் பெரும்.
கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக விளக்கப்பட்டு அவர்களின் உருவங்களை மனக்கண்ணில் நாமே செதுக்கிக்கொள்ள ஆசிரியர் மிகவும் முயற்சித்திருக்கிறார். முக்கியமாக இடையற்று மங்களம் நம்பி ( ராஜா தந்திரியாகவும்), வானவன் மாதேவி, மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் , தளபதி வள்ளாளதேவன், ஒற்றன் நாராயண சேந்தன், அதங்கோட்டாசியர், பவழகனிவாயர், நம்பியின் மகள் குழல்வாய்மொழி, தளபதியின் தங்கை பகவதி, அதங்கோட்டாசியர் மகள் விலாசினி ஆகிய அனைவரை பற்றியும் தேவையான இடங்களில் தேய்வைக்கேற்ப அவர்களின் குணத்தையும், தோற்றத்தையும் அளந்து கொண்டிருப்பார் ஆசிரியர்.
கதையானது பராந்தக பாண்டிய மன்னன் மறைவுக்கு பின், அவன் மனைவி பாண்டிமாதேவி அரியணையில் அமர, அவர்களின் ஒரே புதல்வன் மூன்றாம் ராசசிம்மன் அப்போது நடந்த போர் ஒன்றில் சோழர்களிடம் தோற்றுப்போய் பாண்டியநாட்டின் தலைநகர் மதுரையை இழந்து உயிர் தப்பி, இலங்கையில் அவன் நண்பன் மூன்றாம் காசிபு மன்னனுக்குட்பட்ட எல்லையில் இருக்கிறான். இப்படி ஒரு சூழ்நிலையில் ஆரம்பிக்கும் கதை, மெல்ல மெல்ல சோழர்களின் தந்திரங்களால் ஒருபக்கம் முழு பாண்டிய நாட்டையும் அடைய போடும் சதி திட்டங்கள், இதனால் ஏற்படும் சிறு சிறு உள்நாட்டு பிரச்சனைகள், இளவரசன் இல்லாத நாட்டின் தலைவி வானவன் மாதேவிக்கு ஏற்படும் இன்னல்கள், வல்லாளதேவனுக்கும், இடையற்று மங்களம் நம்பிக்கும் ஏற்படும் சந்தேகங்கள் இப்படி எல்லா கோணங்களிலும் விரியும் கதை.
இந்நூல் வழியாக கற்று கொண்ட சில விஷயங்கள், நாண்மங்கலம் (மன்னர்குலத்தில் உள்ளவர்களின் பிறந்த நாள் விழா), ஓப்புரவு மொழி மாற ஓலை (தற்போது உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்), பாண்டியர்கள் காலத்திருந்த சமண குருக்களின் பங்கு, தென்பாண்டியில் முத்தெடுக்கும் திருவிழாவின் சிறப்பு, வந்தவர்க்கெல்லாம் பசிபோக்க பாண்டியர்கள் வைத்திருந்த முன்சிறை அறக்கோட்டம் , கன்னியாகுமரியில் குடிகொண்ட பாண்டியர்களின் குலதெய்வம் குமரியன்னையின் பெருமை, கைமுக்கு தண்டனை, ஏனாதி பட்டமும் அதற்கு வழங்கப்படும் ஏனாதி மோதிரமும், தென்பாண்டி நாட்டின் முக்கிய இடங்கள் (விழிஞம், பறளியாறு, காந்தளூர், கரவந்தபுரம் உக்கிரன்கோட்டை, சுசீந்திரம் இன்னும் பல), பாண்டிய மன்னர்களின் உள்ளாட்சி நிர்வாகம் கூற்றம், நாடு போன்றவைகள், இலங்கையின் எழில், காசிப மன்னரின் பிறந்தநாள் விழா இது போன்று நிறைய தகவல்களை கொண்ட களஞ்சியமே பாண்டிமாதேவி.
வரலாற்று உண்மைகள்: பராந்தக மன்னன் இறந்ததும் சோழர்கள் மதுரையை கைப்பற்றியது, கோப்பரகேசரி சோழன் சேர்த்த கொடும்பாளூர் அரசன், கீழைபழுவூர் பழுவேட்டரையன் கண்டன் அமுதன், அரசூரடையான் சென்னி பேரரையன் மற்றும் பரதூருடையன் ஆகியோர் அடைங்கிய ஐவர் குழு (இடைக்கால பாண்டியர்களிடம் இருந்து முழு பாண்டிய நாட்டை வென்ற கூட்டணி), மூன்றாம் ராசசிம்மன் பாதுகாக்க இலங்கை எடுத்து சென்ற பாண்டியர்களின் சுந்தரமுடி, வாள் (சந்திரஹாசம்) மட்டுறும் குடை, ராசசிம்மனுக்கு உதவிய இலங்கை தளபதி சக்கசேனாதிபதி, இது போன்ற உண்மை நிகழ்வுகள் கதையோடு பின்னிக்கொண்டிருக்கும். செம்பவள தீவு என்று ஊர் இடம் இக்கதையில் வரும், அது எந்த இடம் என்று புலப்படாது போனாலும், அத்தீவின் அழகு சிறப்பாகவே விவரிக்கப்பட்டரிக்கும்.
கதையின் ஆரம்பத்தில் மஹாமண்டலேஸ்வரர் இடைக்காற்று மங்களம் நம்பி, திறமை மிக்க ராஜா தந்திரியாக விவரிக்கப்பட்டாலும், பின் நமக்கே அவர்மேல் சந்தேகம் உண்டாகும் வண்ணம் கதை நகரும். குழல்வாய்மொழியும் அப்படித்தானே. ஆனால் இருவரும் இறுதியில் நல்ல அழுத்தத்தை கதையில் பதிக்கிறார்கள். மதிவதனி மற்றும் விலாசினி கதையின் இறுதியில் கண்டுகொள்ளாப்படாமல் போனார்கள். கதையின் இறுதியில் பாண்டியர்களின் வாரிசான மூன்றாம் ராசசிம்மன் நம் கவனத்தில் வலுவிழந்து, அதிகம் பெண்களால் லயித்தவனாகவும், நாட்டின் முக்கியமான போர் காலங்களில் பொறுப்பில்லால் இலங்கையில் பதுங்கி இருப்பதாகவும், இறுதியில் மீண்டும் போரில் தோற்று இலங்கை செல்வதும் அவன் மீதுள்ள சிறும்பான்மை எண்ணத்தையே வளர்கின்றன.
ஆனால் ஏனைய வரலாறுகள், மூன்றாம் ராசசிம்மன் கிபி 900ல் முடிசூடி, வெள்ளலூர் போரில் சோழர்களிடம் தோற்று தெண்டபாண்டி நாட்டை விட்டு இலங்கை செல்வதாக கூறுகிறது. ஆனால் இக்கதையோ அவனை இளவரசனாகவும், அவன் தாய் அவனுக்கு முடிசூட காத்திருப்பதாகவும் விவரிக்கும். எனவே பாண்டியர்கள் காலத்திற்கு சென்று அங்கு நடந்த வரலாறை நேரில் பார்ததது போன்ற பிரம்மையை இந்நாவல் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மீண்டும் மீண்டும் பொன்னியின் செல்வனே களமாடுகிறதா அரசியலில்?
பாண்டிமாதேவிக்கு பொன்னியின் செல்வனை போன்ற கதைக்களம்.
அறிவில் சிறந்த மஹாமண்டலேஸ்வரர்(அநிருத்த பிரம்மராயர்), அவருடைய ஒற்றன் சேந்தன்(ஆழ்வார்க்கடியான் நம்பி), ஆற்றலுக்கு வல்லாளதேவன்(வந்தியத்தேவன்), கழற்காற் மாறனார்(சம்புவரையர்), குழைக்காதன்(கந்தமாறன்), மதிவதனி(பூங்குழலி), குழல்வாய்மொழி(வானதி) மற்றும் குமாரபாண்டியன்(அருள்மொழி) என பாண்டிமாதேவியின் ஒவ்வொரு கதாபாத்திரத்திடமும் ஒரு பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் நிழலாடுகின்றது.
நா.பார்த்தசாரதியின் எழுத்துக்கள் அவ்வப்பொழுது மண்டையில் தட்டி இது பாண்டிமாதேவி என்று உரைத்தாலும் கதாபாத்திரங்களின் குணநலன்கள் அப்பட்டமாக பொன்னியின் செல்வனுக்கு இழுத்து செல்கின்றன. பொன்னியின் செல்வன் படிக்காது முதலில் பாண்டிமாதேவி படித்திருந்தால் தோன்றியிருக்காது போலும். பொன்னியின் செல்வனை நினைவு கூறாது ஒதுக்கி வைத்து படித்தால் பாண்டிய சாம்ராஜ்யத்தை விளக்கும் மிக தொன்மையான புதினம் பாண்டிமாதேவி.