Reviews for சேரர் கோட்டை, பாகம் 1
14 reviews total
user_14081
★ 5/5 Feb 02, 2026'வாழ்க்கை நம் கண்களின் முன்னர் இந்தக் கணத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அது இறந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை.நிகழ்காலத்தில் இருக்கிறது.' 'ராஜகேசரி'யை முடித்த கையோடு இதைப் படிக்கத் தொடங்கினேன். அதிவேக ரயில் பயணம் முடிந்தது போல் உள்ளது! அத்தனை விறுவிறுப்பான கதைக்களம், சுவாரஸ்யமூட்டும் வரலாற்றுத் தகவல்கள் என ஒரு தரமான படைப்பு இது. 'சேரர் கோட்டை' தலைப்பைப் பார்த்துச் சேரர்கள் பற்றிய புத்தகம் என நினைத்தேன். ஆனால் இது இராஜ இராஜ சோழன் சேர நாட்டைச் சேர்ந்த காந்தளூர் சாலையில் நடத்திய போர் பற்றிய கதை. ஆதித்த கரிகாலனின் கொலைக்கும் காந்தளூர் சாலைக்கும் என்ன தொடர்பு? பாண்டிய நாடும் சேர நாடும் சேர்ந்து சோழருக்கு எதிராகத் தீட்டிய சதித் திட்டம் என்ன? சேர அரசின் அரசியல் நுணுக்கம் தெரிந்த தேரரின் ஆலோசனைப்படி போருக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் தேர்ந்தெடுக்கும் இருவர் — கம்பன் அரையனாரும் பரமன் மழபாடியாரும் — எதிர்கொள்ளும் விறுவிறுப்பான அனுபவங்களே சேரர் கோட்டையின் கதை.
user_14080
★ 4/5 Feb 02, 2026எனக்குத் தெரிந்தவரையில், தமிழில் வரலாற்றுப் புதினங்களுக்குக் கல்கி, சாண்டில்யன் தான் என்கிற என் எண்ணம் தவறு மட்டுமில்லை, இவர்களுக்கு இடையில் 'கோகுல் சேஷாத்ரி' என்று இடம் பிடித்துவிட்டார். 'சேரர் கோட்டை' என்ற தலைப்பால் சேரர்கள் பற்றியது என்று நினைத்திருந்தேன். ஆனால் இது சோழர்களைப் பற்றியது — அதுவும் தமிழர்களின் தலைச்சிறந்த அரசர்களில் ஒருவரான இராஜராஜரின் காலத்தைப் பற்றிய விறுவிறுப்பான இந்த நாவல்களைத் தமிழ்நாடு வந்ததும் வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.
user_14079
★ 5/5 Feb 02, 2026மிகச்சிறந்த, அற்புதமான எழுத்தாளர். அவரது எழுத்து மனதைக் கவர்கிறது.
user_14078
★ 4/5 Feb 02, 2026சோழர்களை, குறிப்பாக ராஜாரசோழனைப் பற்றி எழுதாமல் ஒரு தமிழ் எழுத்தாளரின் இலக்கியக் கடமையை முடித்துக்கொள்ள முடியாதென்பதாகிவிட்ட இந்தக் காலத்தில், ஏற்கனவே 'ராஜகேசரி' என்கிற அற்புதத் த்ரில்லர் தந்த எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி மீண்டும் ஒரு சோழர்காலத் த்ரில்லருடன் நம்மை 'சேரர் கோட்டையில்' சந்திக்கிறார். இம்முறை இன்னும் ஆழமாக, நிறைய ஆராய்ச்சியுடன், நமக்குத் தெரிந்த பழக்கப்பட்ட பல கதாபாத்திரங்களுடன் நமக்கு அருகில் வருகிறார். கோகுல் எழுதும் கதைகளின் வேகத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டிகூட தோற்கும் அவரின் வேகத்துக்கு வரலாற்றுப் பின்புலமும் கிளைக் கதைகளும் ஊக்கப்படுத்திக்கொண்டே போக, முடிப்பதும் தெரியாமல் இரண்டாம் பாகத்துக்கான ஏக்கத்தை ஏற்படுத்தியபடி முதல் பாகம் முடிகிறது. சோழர்களின் பற்றிய வரலாற்றுப் புதினங்களில் அதிகம் தொடப்படாத காந்தளூர் சாலைப் போர் பற்றிக் கதை அமைந்திருப்பது ரசிகர்களுக்கு விருந்தென்றே சொல்ல வேண்டும். சோழர் வரலாற்றுப் புதினங்களில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம் இது.