Reviews for அஜ்வா
15 reviews total
user_13007
★ 4/5 Feb 02, 2026பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம். பயம் ஆழத்தில் சிக்கிக்கொண்டு மனிதனின் உடலிலிருந்து வெளியேற பல வழிகளில் முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வழியாகப் போதையைத் தேர்ந்தெடுத்தவனின் கதை இது.
நம்மை உடன் அழைத்துச் சென்று தன் மனதை ஒரு நிலைப்படுத்தி வெளிப்படையாகக் கதையைச் சொல்கிறான். சலிக்காமல் உங்களிடமும் சொல்வான்.
"உச்சி என்று பயப்படுகிறீர்கள். மேலேயும் நின்றுகொள்ள ஒரு சமவெளி இருக்கிறது." "புத்தியைவிட நம்பிக்கைகளுக்குக் கனம் அதிகம்."
user_13006
★ 4/5 Feb 02, 2026அஜ்வா என்பது ஒருவகைப் பேரீச்சம்பழம். நபிகள் நாயகம் சாப்பிட்டதாகச் சொல்லப்படுவது. ஏழு அஜ்வா பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டால் எந்த செய்வினையும் அண்டாது என்பது நம்பிக்கை.
"தான் செத்து மீன் பிடிக்கக்கூடாது" என்ற பழமொழி இந்த நாவல் முழுக்க நினைவுக்கு வந்தபடியே இருந்தது. பிழைத்து வாழும் நோக்கத்தில் செய்யப்படுகிற முயற்சியிலேயே உயிரை விட்டால் எதற்குமே அர்த்தமில்லாமல் போகும்.
எந்த ஒரு பழக்கத்தையும் நீண்ட நாட்களாய்க் கடைபிடிக்கிற ஒருவன், அதன் உச்சங்களைத் தொட்டு ஆனந்தத்தை அடைந்தவன், அதைப்பற்றி கண்கள்விரிய பேசுவதைக் கேட்டால் நாமும் ருசித்துப் பார்க்க நினைப்போம். போதையோ, குடியோ, உணவோ, காமமோ, பயணமோ, இலக்கியமோ — எதுவோ... அப்படியொருவன்தான் அஜ்வாவின் கதைசொல்லி. அவன் தன் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் தன் கதையைச் சொல்கிறான். தனக்குப் பின்னாலிருக்கிற வலியைச் சொல்கிறான்.
இவன் ஒரு சரிந்த சாம்ராஜ்யத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசன் போல்தான். தாய்மாமனிடமிருந்து தப்பிக்க நாடோடியாய் வாழ்ந்தலைகிறான். போதைக்குப் பழக்கப்பட்டு அதன் சுழலில் சிக்கிக்கொள்கிறான். ஜார்ஜ் ஆண்டனி, டெய்சி, பசுபதி அத்தை — வாழ்க்கை முழுவதும் இவனைப் பாதுகாக்கிற தேவதைகளாய்ச் சூழ்ந்திருக்கிறார்கள்.
பிறரின் பாவங்களுக்காக சிலுவை சுமந்த மீட்பனாய்த் தோன்றுகிறான் இவன். அந்த மீட்பனின் மீட்சிதான் அஜ்வாவின் கதை.
user_13005
★ 3/5 Feb 02, 2026தான் செய்யும் செயலுக்குக் காரணமாக எதையாவது தேடுபவர்களுக்கு ஒரு மையப்புள்ளி அவர்களின் மனதிலே புதைந்து கிடைக்கும், தேவைப்படும் நேரத்தில் அதை வெளிக்கொண்டு அதையே பற்றாக்கி மொத்த சார்பையும் அதன் மீதே நிலைக்கச் செய்துவிடுவர்.
ஒன்றிலிருந்து விடுபட நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேற செய்யும் முயற்சி பலிக்காத பட்சத்தில் மேலும் மோசமான வேறொன்றிலே சரண்புகுவர்.
தந்தையின் வாரிசாக அவரின் பயத்தையே தன்னுள் கொண்டிருப்பவன் அதை மறக்கும் பொருட்டு போதை உலகில் நுழைகிறான். அங்கே நடக்கும் நிகழ்வுகள் அவனை உலுக்குகின்றன. டெய்சி தன் கண்முன்னே உடலை கெடுத்துக்கொண்டு வாழ்வை இழக்கும்போது, அனைத்திலிருந்தும் விடுபடுகிறான். பிணத்தின் மீதான அச்சமும் விடுபடுகிறது. அவளின் இறப்பையே பற்றிக்கொண்டு போதைப் பழக்கத்திலிருந்து வெளியேறுகிறான்.
தவறை மன்னிக்கும் மாண்பைக் கொண்ட ஜார்ஜ் சுத்த ஆன்மாவாக அவனின் தவறுகளை மன்னித்து அடைக்கலம் அளிக்கிறான். சம்பவங்களைக் கோர்த்து சராசரி மனதிற்குத் தெரிந்த அதீத உச்சத்தையும் சலனமில்லாமல் சொல்லிக்கொண்டே போகிறவனின் மனநிலையில் நம்மையும் வைத்திருப்பதில் இருந்தது கதாபாத்திரத்தின் வடிவமைப்பு.
அஜ்வா பழத்திற்கு இருக்கும் சிறப்பைக் கொண்டே விவசாயத்தின் பக்கத்தையும் தொட்டு முடிகிறது. அஜ்வா பழத்தை உண்டு புதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவன் என்றோ ஒரு நாள் நிலத்தில் நட்டு வைத்த அஜ்வா கன்றும் துளிர்த்தெழுந்து புதுவாழ்விற்கு நம்பிக்கையை விதைக்கிறது.
user_13004
★ 4/5 Feb 02, 2026ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் கதையாக இல்லாமல் பல சம்பவங்களின் தொகுப்புகளாக நாவல் இருப்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் புதுமையாக இருந்தது. துளி கூட சலிப்பு தட்டவில்லை.
user_13003
★ 5/5 Feb 02, 2026போதை உலகில் சிக்கிக்கொண்ட ஒரு எளிய மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்கள் தரும் அனுபவங்களையும் பகிரும் எளிமையான, சுவாரஸ்யமான நாவல்.