Reviews for அரியநாச்சி [Ariyanachi]

14 reviews total

user_12630

★ 3/5 Feb 02, 2026
அரியநாச்சி. வன்முறை தான் முடிவென்பதை அட்டைப்படத்தை பார்த்ததுமே நீங்கள் முடிவெடுத்திருந்தால் நீங்களும் நானும் வேறல்ல. கதை படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே அரியநாச்சி நிறைமாத கர்ப்பிணி என்று தெரிந்தவுடன் சற்றே மனம் படபடக்க ஆரம்பித்தது. அதன்பின் கதையின் ஓட்டம் நம்மை வேறு எண்ணங்களுக்கு திசைதிருப்பாமல் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு போக, இறுதியில் நாம் எதிர்பார்த்த வன்முறை முடிவு எவ்வித ஆச்சரியமும் ஏற்படுத்தாமல், நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் முடிந்தது. குருதியாட்டம் குறுநாவலை போலவே நன்றாக போய்க்கொண்டிருக்கும் நாவல் பக்கங்கள் குறைய குறைய வலுக்கட்டாயமாக முடிவுக்கு தள்ளப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது. ஆசிரியரின் விறுவிறுப்பான நடை மட்டுமில்லையென்றால் கண்டிப்பாக முழுதாய் படித்து முடித்திருக்க கூட முடியாத ஒரு குறுநாவலாக தான் இது அமைந்திருக்கும். கதாபாத்திரங்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. கதையும் பெரிய திருப்பங்களையோ, புதிய கதவுகளையோ திறக்கவில்லை. எழுத்தாளரின் எழுத்தை விரும்பி படிப்பவர்கள் ஒரு முறை அதுவும் எழுத்தாளருக்காக படிக்கலாம். அவ்வளவு தான்.

user_12629

★ 3/5 Feb 02, 2026
சண்ட செய்வோம் வாடா! என கோபத்தில் சிந்தனையை இழக்கும் மனிதன் சந்திக்கும் இழப்புகள் ஈடுகொடுக்க முடியாத இழப்பாக அமைந்துவிடும் என்பதற்கு சான்றாக அரியநாச்சி நாவல். தென் திசை மக்களின் வட்டார வழக்கு மொழி நாவலின் சிறப்பு.

user_12628

★ 5/5 Feb 02, 2026
இது, என் மண். இவர்கள்தான் என் மனிதர்கள். இந்த மண்பற்றி மட்டுமே எழுதுகிறேன். இந்த மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகம். அவர் புத்தகத்தின் பின் உறையில் கூறியது போல் ரத்தம் பற்றி எழுதப்பட்ட கதை. மண்வாசம் பக்கங்களினூடே கமழ்கிறது. அவசரத்தில் செய்த கொலைக்காக ஜெயில் வாசம் செய்யும் வெள்ளையத்தேவன். தாயும் குழந்தைப்பேரில் இறக்க, தந்தையும் விட்டுச்சென்ற குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கிறார் அவர் தங்கை வள்ளி அத்தை. அக்கா அரியநாச்சியின் மச்சினன் சோலைகக்கு தன் தங்கை மாயழகிய மணமுடித்து தன்னோடு அழைத்துச் செல்ல நினைக்க, அண்ணன் பாண்டி தன் மச்சினன் கருப்பையாவுக்கு அவளை மணம் செய்ய விரும்ப., இடையில் இது ஊர்பிரச்சனையாக மாறாமல் அரியநாச்சியின் கணவர் சக்கரைத்தேவன் பாந்தமாக நடந்து கொள்ள, இறுதியில் மாயழகி யாரை மணந்தாள் என்று கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு குறையாமல் எழுதி இருக்கிறார் ஆசிரியர். கோபம் குலத்தை அழிக்கும் என்ற வழக்குமொழிக்கு சான்றாகிறது கதை.

user_12627

★ 4/5 Feb 02, 2026
தான் எனும் அகங்காரம், அது கொடுக்கும் கோபம், அதன் உந்துதலில் அழியும் குலம்… என்பதை இரத்தமும் சதையுமாக நம் எண்ணங்களை ஆட்கொள்கிறாள் அரியநாச்சி. சாதாரண விசயத்துக்காகக் கொலை செய்து விட்டு, ஜென்மக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் வெள்ளையத்தேவனைக் காண, அவரது முதலும் மூத்தவளுமான மகள் அரியநாச்சி சிறைக்கு வருகிறாள். அவள் நிறைசூழி. தனது தங்கையான மாயழகிக்கு தனது கொழுந்தன் சோலையைக் கல்யாணம் செய்யும் பொருட்டு, தந்தையின் சம்மதம் வேண்டி பார்த்து விட்டு செல்கிறாள். இதனை அறிந்து கொண்ட அவளது இளைய சகோதரன் பாண்டிக்கு கோபம் எழுகிறது. சாதாரணமாகவே அவனது அக்காவின் ஊரான வெள்ளாங்குளம் என்றாலே அவனுக்கு அவ்வளவு வெறுப்பு. இதில் அரியநாச்சியின் செயல் அவனது கோபத்திற்கு எண்ணெய் ஊற்ற, அதை மேலும் அவனது மனைவி குமராயி ஊதி பெருதாக்குகிறாள். அரியநாச்சி, பாண்டி, மாயழகி மூவரும் சிறு வயதிலேயே தாயை இழந்து விட, அவர்களை சீராட்டி வளர்த்தது வள்ளி அத்தை தான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று விட்ட பிறகு, தன் அண்ணனுடைய மக்களை சொந்த மக்களாக பாவித்து வரும் வள்ளிக்கு, இப்பிரச்சனை மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது. பாண்டி தன் மச்சினனுக்கும், அரியநாச்சி தன் கொழுந்தனுக்கும் என மாயழகியை மணமுடிக்க நினைக்க, இப்பிரச்சனை வெள்ளாங்குளம் – பெருநாழி எனும் இரு ஊராரின் பிரச்சனையாக வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனினும், அரியநாச்சியின் கணவன் சக்கரைத்தேவனின் பெருந்தன்மையினால், மாயழகியை பாண்டியின் மச்சினனுக்கு நிச்சயம் முடித்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணமும் நடக்கிறது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, திருமணம் முடிந்த அன்றே, மாயழகி, அரியநாச்சி, குமராயி மூவருமே தாலி அறுக்கின்றனர். கோபம், மூர்க்கம், சினம் என எல்லாம் ஒரே உணர்வைக் குறித்தாலும் அவை வெளிப்படும் அளவுகளில் வேறுபடும். இக்கதை மாந்தர்களின் உணர்விலும், வாழ்விலும் இரண்டறக் கலந்திருப்பதும், வெளிப்படுவதும் மூர்க்கம் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பே. வாழ்வுக்கும் வார்த்தைக்கும் உணர்வுக்கும் இடையே கண நேர இடைவெளியில்லாமல் அடுத்தடுத்து என உடனுக்குடன் காரியத்திற்கு துணிந்த பின்னரே, அதனை எண்ணிக் குமைகின்றனர். ஏதேனும் நடந்து விடுமோ. எனும் பதைபதைப்பிலேயே கொண்டு சென்று, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஆசுவாசம் கொள்ளும் வேளையில், சட்டென்று அது நடந்து விடும் நேரம் நம்மையும் அப்பதற்றம் சூழ்ந்து கொள்கிறது. அந்த அளவிற்கு ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாத எழுத்து நடை. வட்டார வழக்கிலான உரையாடல்களின் நேர்த்தியும், களங்களைக் காட்சிப்படுத்தும் விதங்களும், கதை மாந்தர்களின் உணர்வுகளைக் வாசகருக்கும் அப்படியே கடத்தி விடுதல் இதன் கூடுதல் சிறப்பு.