Quotes from அழகர் கோயில்
இக்கோயிலின் தோற்றம் குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி ஒரு கருத்தினைக் கூறுகின்றார். “அழகர்மலை என்று வேறு பெயருள்ள இந்த இடம் (திருமாலிருஞ்சோலை) இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகையில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரிலுள்ள குளம் ஆராமத்துக்குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காராமம், அஃதாவது பௌத்த பிட்சுகள் வசிக்கும் இடம். அன்றியும் இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இக்கோயில் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றது”.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்று(கள்) ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும் பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார். ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்கு பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்கு பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்தி ஏதும் காணப்படவில்லை.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'