Quotes from அழகர் கோயில்

ஆடி மாதத்துப் பூர நட்சத்திரத்தினை எல்லா வைணவக் கோயில்களிலும் ஆண்டாளின் திருநட்சத்திரமாகக் கொண்டாடுவர். இத்தலத்திறைவனான அழகரை ஆண்டாள் மணாளனாகக் கருதி மனமுருகிப் பாடியிருப்பதால் இங்கு இத்திருவிழா வைணவ அடியார்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவில், திருவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்து வரவிட்டமாலையினை அழகர் அணிவதும் அழகர் கோயிலுக்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குமுள்ள உணர்வுப் பிணைப்பினைக் காட்டும். தமிழ்நாட்டு வைணவத்தில் ஒவ்வொரு தலத்திறைவனுக்கும் ஆண்டுக்கு ஒரு நாள் அத்தலத்திறைவனின் திருநட்சத்திரமாகக் கருதப்பெறும். அழகர் கோயிலில் இறைவன் திருநட்சத்திரமாக ஆடி மாதத்து உத்திராட நாளைக் கருதுவர். இந்நாள் அழகர் கோயிலில் கொண்டாடப் பெறுவதுபோலவே திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் கொண்டாடப்பெறுவதே இதன் சிறப்பாகும். திருவில்லிபுத்தூர் கோயிலில், ஆண்டாள் சப்பரத்தில் எழுந்தருளிக் கோயிலுக்குள்ளே ஒரு மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து இத்திருவிழாவினைக் கொண்டாடுவது வழக்கமாகும். அழகர் கோயிலில் இந்நாளில் இறைவனுக்குப் புத்தாடை அணிவிப்பர்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
இவ்வசந்த மண்டப மேற்கூரையில் (Ceiling) நாயக்கர் ஆட்சிக்கால இராமாயண ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
எங்கே அநீதியும் அடக்குமுறையும் உள்ளனவோ அங்கே அவற்றிற்குப் பலியானவர்கள், நாட்டுப்புறப் பண்பாட்டியலில் தங்களுக்கு வடிகால் அமைத்துக்கொள்வதைப் பார்க்கலாம். அச்சமூட்டும், ஆனால் எதிர்க்க இயலாத தனியாரையோ நிறுவனத்தையோ நோக்கிய நாட்டுப்புற மக்களின் கோபமானது கேலிகள், பாடல்கள், பழமொழிகள் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது” என்பர் ஆலன் டண்டீஸ் (Alan Dundees).
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சாதியினராக இன்று கருதப்படும் சில இனத்தவரே பிராமணர்கள் பெறும் இடத்தினைப் பெற்றிருந்தனர் என அறிஞர் சிலர் கருதுகின்றனர். “பிராமணர் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவில் இன்று அடிமைச் சாதியாராகக் கருதப்படுவோர் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர் என்பது தெரிந்த செய்தியே. அவர்களே நிலஉடைமையாளராக இருந்தனர். அவர்கள் பெற்றிருந்த உயர்வுகள் வினோதமான தொல்லெச்சங்களாக, சில ‘தனிஉரிமை’களின் வடிவில் இன்றும் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றம் மறக்கப்பட்டுவிட்டதால் அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன” என்று கூறும் வாலவுஸ் (Walhouse) மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டு விழாக்களில் கள்ளர் சாதியினரே பூசாரியாகவும், தெய்வவாக்கினைத் தெரிந்து சொல்பவராகவும் உள்ளதையும், திருவாரூர்க் கோயில் திருவிழாவில் ஒரு பறையர் யானை மீதேறி வருவதையும், சென்னையைச் சேர்ந்த வாணிகச் சாதியினர் சிலரும், வீட்டுத் திருமணங்களுக்குத் தாழ்ந்த சாதியாரிடம் சென்று அனுமதி பெறும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்ததனையும் எடுத்துக்காட்டுகிறார். “தமிழ்நாட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் பறையர்களே அத்தேவதையின் மணமகனாகக் கருதப்படுகிறார்கள்” எனக் கூறும் அனுமந்தன், தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் பறையர், அரசர் ஆதரவும் சமயத் தலைமையும் பெற்றிருந்ததாகக் கூறுவர். கேரளத்தில் பகவதி கோயில்களில் சாமியாடும் தாழ்ந்த சாதியாரான வெளிச்சப்பாடுகளைப் பற்றி எழுதும்போது, “ஆரிய பிராமணர் வருகைக்கு முன்னர் பகவதி கோயில்களில் அவர்களே பூசை செய்வோராக இருந்திருக்க வேண்டும்” என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். திருமணத்தன்று மணமக்களுக்கு பிராமணப் புரோகிதர் கட்டும் காப்புநாணை, மறுநாள் நாவிதர் சாதியினர் புரோகிதர்க்குரிய மரியாதையினைப் பெற்று அறுப்பது, தென்மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாரிடம் நடைமுறையில் இருந்துவருகிறது. “பாப்பானுக்கு மூப்பு பறையன், கேப்பார் இல்லாமல் கீழ்சாதியானான்” என்னும் வழக்கு மரபு தென்மாவட்டங்களில் பெருக வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட சாதியார் பெற்றுள்ள தனி உரிமைகள் பிராமணர்கள் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை உணர்த்துகின்றன.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைணவத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை ‘மாலிருங்குன்றம்’ என்று குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினை ‘திருமால் குன்றம்’ என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
இத்தலம் குறித்த நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும், ‘நங்கள் குன்றம்’ என்ற சொல் இக்கோயிலின் கருவறைக்குப் பெயராக வழக்கில் இருந்துவருகிறது. ‘நங்கள் குன்றம்’ என்பது ‘நம்முடைய குன்றம்’ என உரிமை சுட்டும் பெயராக அமைந்திருப்பது சிந்திக்கத் தகுந்தது. தவிரவும், கோயிலின் கருவறைப் பகுதிக்கு மட்டும் தனியே ஒரு பெயரிட்டு அழைப்பது தமிழ்நாட்டு சைவ, வைணவக் கோயில்களில் வழக்கத்தில் இல்லை. இக்கோயிலில் மட்டும் அமைந்திருப்பது விதிவிலக்கான ஒரு செய்தியே.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
சீனி.வே.யின் கருத்தினை மனத்தில் இருத்தி இத்தலம் குறித்த பரிபாடலை நோக்க வேண்டும். “பகைவர்களை வெற்றி கொண்டவனுடைய இருங்குன்றத்திற்கு மனைவியோடும், பெற்றாரோடும், பிறந்தாரோடும், உறவினரோடும் செல்லுங்கள்” என்பது இப்பாடல் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில், ‘இக்கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள்’ என்னும் பிரச்சாரப் போக்கில் அமைந்த பாடல் இது ஒன்றேயாகும். இருங்குன்றம் சமயப் போராட்டக் களமாக விளங்கிய குறிப்பும், இக்கோயிலுக்கு மக்கள் ஆதரவினைத் திரட்ட வைணவம் முயன்றதும் இப்பாடலில் புலப்படுகின்றன. இத்தலம் குறித்த பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரின் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், ‘இம்மலை திருமாலுக்குரியது; இக்கோயில் திருமாலுக்குரியது’ என்னும் கருத்து பேசப்படுகிறது. இக்கருத்து மீண்டும் பேசப்படுவதற்குரிய காரணம் சிந்தனைக்குரியது.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
இக்கோயிலில் மூலத்திருமேனியாக விளங்கும் திருமால், கையில் சக்கரத்தை, சுற்றிச் செலுத்தும் நிலையில் (பிரயோக நிலையில்) வைத்துள்ளார். வழிபடும் அடியார்க்கு அருள் சுரக்கும் இறைவன், எதிரிகளை அழிக்கச் செலுத்தும் சக்கரத்தை ஆயத்த நிலையில் வைத்திருப்பது யாரோ ஒரு பகைவனை அழிப்பதற்காகவே இருக்க முடியும். பொதுவாக, வைணவக் கோயில்களில் திருமாலின் கையில் சக்கரம் அணியாகவே விளங்கும்; செலுத்தும் நிலையில் இருப்பதில்லை. இக்கோயிலில் இது ஒரு விதிவிலக்கான செய்தியே.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
சமணக் கோயில்களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும் போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'
வைணவப் பகைவனாக விளங்கிய இரணியனை அழிப்பதே நரசிம்ம அவதாரத்தின் நோக்கமாகும். எனவே புறமதத்தவர்களை எதிர்க்க முற்படும் போதெல்லாம், நரசிம்மமூர்த்தத்தினை வைணவர் நிறுவி வழிபடுவது பொருத்தமுடையதே. அழகர் கோயிலிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விளங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பே என்று கொள்ளலாம்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'அழகர் கோயில்'