Reviews for எங் கதெ
30 reviews total
user_12074
★ 3/5 Feb 02, 2026இமையம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்றாலும், இந்த குறுநாவல் பிடித்ததா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எங் கதெ, பத்து வருட உறுதியற்ற உறவில் ஒரு இளம் விதவை மீது ஒரு ஆண் கொண்ட வெறியைப் பற்றியது.
அவனது ஆண்மையவாத புலம்பல்கள் வழியாக நாம் கமலாவைப் புரிந்துகொள்கிறோம் — ஆனால் அவளின் உணர்வுகளும் எண்ணங்களும் வாசகருக்கு மறைவாகவே இருக்கின்றன. விநாயகம் வேலைக்குச் செல்லாத, உற்பத்தியான எதிலும் ஈடுபாடில்லாதவன். கமலா படித்தவள், அரசுப் பள்ளியில் பணிபுரிகிறாள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறைய இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் வரும்படியாக எழுதியிருக்கிறார். முடிவு சற்று ஆறுதலாக இருந்தது.
user_12073
★ 4/5 Feb 02, 2026கமலா, கணவனை இழந்தவள். கருணை அடிப்படையில் அரசாங்க வேலை கிடைக்கிறது. தனது இரு மகள்களுடன் வேலை செய்யும் இடத்துக்கே இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வருகிறாள். வசீகரிக்கும் தோற்றம் கொண்ட இளம் விதவை. அந்த ஊரில் உள்ள விநாயகம் அவள் மீது காதல் கொள்கிறான். அடுத்த பத்து வருடங்களில் நடந்த நிகழ்வுகளே எங் கதெ.
கதையில் இருந்த சில உண்மையான வரிகள் மனதைத் தொடுகின்றன — ஊர் வாழ்க்கையின் யதார்த்தம், ஜாதகம் காட்டி அலையும் அம்மா, கமலா மீது ஊர் முழுக்க இருந்த ஆசையும் பொறாமையும் என அனைத்தையும் இயல்பாக எழுதியிருக்கிறார் இமையம்.
user_12072
★ 5/5 Feb 02, 2026தற்போதைய எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் இமையம். அவருடைய மற்ற கதைகளிலிருந்து எங்கதெ சற்று மாறுபட்ட நடையில் எழுதப்பட்டுள்ளது. பல ஆழமான வரிகளையும் உணர்வுகளையும் அடக்கியுள்ளது நாவல்.
விநாயகம் வேலையில்லா பட்டதாரி. கணவனை இழந்த கமலா தன் இரு பெண் பிள்ளைகளுடன் கிராமத்திற்கு வருகிறாள். அவள் மீது காதல் கொள்கிறான் விநாயகம். பத்து ஆண்டுகளுக்கு மேல் இருவரும் உறவில் இருக்கிறார்கள். ஒரு நாள் கமலாவுக்கு கடலூருக்கு பணி மாற்றம் வருகிறது — பின்பு இவர்களின் உறவு என்னவாயிற்று என்பதே கதை.
ஆண்-பெண் உறவு பொதுவாகவே சிக்கலானது. அந்த உறவின் சிக்கலில் தான் கதை பயணிக்கிறது. விநாயகத்தின் பார்வையில் சொல்லப்பட்டாலும், கமலாவுக்கும் சேர்த்தே பேசுகிறான்.
user_12071
★ 2/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தைப் பார்த்தால் வாங்கிவிடுங்கள். ஒரு நாளில் முடிக்க வேண்டும் என்று எடுங்கள். இது ஆண்-பெண் உறவுகளுக்கிடையேயான மனப்பிறழ்வைப் பேசுகிறது. நம் வாழ்க்கையிலும் இது போன்ற சிலவற்றை கடந்திருப்போம் என யோசிக்கத் தூண்டும்.
ஒரு வாலிப ஆண், கணவனை இழந்த இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவள் மேல் பைத்தியமாகவும் திரிகிறான். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் விஷயங்களைத் தகர்த்துப் பேசுகிறது இந்த நாவல்.
நாவல் முழுக்க பேச்சு, மன ஓட்டம் என்று போகிறது — இது பல வகையில் பலம் சேர்க்கிறது. கண்டிப்பாக வாசியுங்கள்.
user_12070
Feb 02, 2026இந்தப் புத்தகத்திற்கு மதிப்பெண் கொடுப்பது மிகவும் கடினம். 3 நட்சத்திரத்தில் தொடங்கி, 2 ஆக மாற்றினேன். ஒரு கட்டத்தில் 5 நட்சத்திரம் தகுதி என்று தோன்றியது, அதே சமயம் 1 நட்சத்திரம் போதும் என்றும் நினைத்தேன்.
user_12069
★ 4/5 Feb 02, 2026ஒருவனின் மனக்குமுறல்களை விறுவிறுப்பாகப் பேச்சுவழக்கில் எழுதியுள்ளார். கதையின் பெயரே எங் கதெ ஆதலால், கமலாவின் பார்வையை சொல்லவில்லை.
user_12068
★ 4/5 Feb 02, 2026கதை சொன்ன விதம் அருமை. கதையும் தான்.
ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல், கமலா-விநாயகம் இவர்கள் இருவருடைய குணங்களை, இடையிலான உறவை தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் சொல்கிறது கதை. எந்த மிகைப்படுத்தலும் இல்லை. கதாநாயகன் கதை சொல்கிறான், நாம் கேட்கிறோம். அவ்வளவு எளிதான நடைமுறை வாழ்க்கையின் கதை இது.
படிப்பவரின் அந்தரங்க மனதையும் ஆட்டிப் பார்க்காமல் இருக்காது இந்தக் கதை. எல்லோருமே யாரோ ஒருவரிடம் கதையின் நாயகன் போல குழைந்து நெளிகிறோம், சுய மரியாதையை தூரப் போடுகிறோம், சபலப்படுகிறோம். கமலா பாத்திரம் மனம் கவரும்.
user_12067
★ 5/5 Feb 02, 2026இமையத்தின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் படைப்பு இது. ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணத்தை மையமாகக் கொண்டு காதல், காமம், காழ்ப்பு என உணர்வுப் பறவையை ஆவேசமாகவும் சுவாரசியமாகவும் பறக்கவிட்டு, அந்த ஊருக்கான அழகியல் அடங்கிய பேச்சுவழக்கிலேயே கதையை சொல்கிறார்.
கையாண்ட எழுத்தின் தன்மையும், பேச்சுவழக்கின் இயல்பழகும், அடுத்தடுத்தென அலையும் உவமைகளும் அதன் பொருத்தப்பாடுகளும், தூண்டிலில் மாட்டிய மீன் போல வாசகனை எழுத்தின் பின்னாலேயே இழுத்துச் சென்று பக்கங்களைத் தாண்டி பாய வைக்கிறது.
இமையத்தின் ஏனைய படைப்புகளிலிருந்து இது வேறுபட்ட கதை, வேறுபட்ட நடை என்கிறார்கள். ஏனையவற்றையும் வாசித்துத் தெரிந்து கொள்வோம்.
user_12066
★ 3/5 Feb 02, 2026நிகழ்வுகளின் ஓட்டம் பிடித்திருந்தது. பலமுறை கேட்ட ஒரு சாதாரணக் கதையை, கதாபாத்திரங்களின் ஆழமான உளவியலோடும் இடையிடையே வரும் அழகான வரிகளோடும் சொல்லியிருக்கிறார்.
user_12065
★ 2/5 Feb 02, 2026எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். இது முதலில் நாவலல்ல, சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சொல்லப்பட்டுவிட்ட ஆண்-பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல்.
கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம் — இத்தகைய புதிய கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை!
நாவலின் மொழி பல இடங்களில் தேவையின்றி கவிதைத்தனமாக மாறுகிறது. நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகள் மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.