#239
Book 80 of 2023- அம்மா ஒரு கொலை செய்தாள்
Author- அம்பை
எதேச்சையாக இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்து படிக்க வேண்டும் என ஆர்வம் எழுந்தது. எழுத்தாளர் “அம்பை”யைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்பதால் இன்னும் இந்த புத்தகத்தின் மேல் ஆர்வம் எழுந்தது. 2023-இல் நான் படித்த கடைசி புத்தகம் இது! அத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய சிறுகதை தொகுப்பு தான் இது. பெண்களைப் பற்றியும்,அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் காலம் காலமாக உலக இலக்கியங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன.ஒரு பெண்ணின் மனதுக்குள் இத்தனை கதைகளா,இத்தனை ஆழமானதா என்றால் ஆமாம் தான். இதில் வரும் கதைகள், குறிப்பாக அம்பை எழுதியிருக்கும் முறையும், பெண்களின் மன ஓட்டத்தையும்,வாழ்க்கையையும் அப்படியே பிரதிபலிக்கிறது.உலகில் உள்ள எல்லா பெண்களாலும் இதில் வரும் ஒரு சம்பவத்தையாவது தங்களை பொருத்திக் கொள்ள முடியும்.
இந்த கதைகள் உங்களைக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஒரு பெண் குழந்தையாய் பிறந்தது முதல்,பருவமெய்து,படித்து,பணியில் அமர்ந்து,திருமணமாகி,குழந்தைப் பெற்றுத் தாயாகி,பின் குடும்பத்தை சுமந்து,அவள் வாழ்வு முடியும் வரை என்னவெல்லாம் அவள் சந்திக்க நேர்கிறது,சம்பவங்களை மட்டும் சொல்லாமல் அவளின் உள்ளுணர்வுகளைக் கொண்டு இது எழுதப்பட்டிருக்கும் விதம் wow!
Highly recommending!
My rating- ⭐️⭐️⭐️⭐️⭐️
"அம்மா ஒரு கொலை செய்தாள் "
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
279 பக்கங்கள்
"பேரோசையோடு ஒரு மெல்லிய ஒளிக்கீற்று "
இந்த புத்தகத்திற்கும் , அதன் எழுத்தாளருக்கும் வாசக உலகில் எந்த ஓர் அறிமுகமும் , முன்னுரையும் தேவையில்லை . இவரை பற்றியும் , இவருடைய எழுத்து மற்றும் கதைகளை பற்றி பல வருடங்களாக பல மனிதர்கள் பல சூழல்களில் பேசியும் எழுதியும் உள்ளனர் . இருந்தாலும் இந்த காலகட்டத்திலும் இவரை பற்றியும் இவருடைய எழுத்து பற்றியும் அறியாத பலருக்கும் இந்த மதிப்புரை உபயோகப்படும் என்று நம்புகிறேன் . பெண்ணை எழுதுவது என்பது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு மொழிகளில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் ஒரு பெரும் செயல்பாடு . அது இன்றுவரை எந்த வித தொய்வும் இன்றி அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் நிகழ்ந்த வண்ணம் இருந்ததால் , பெண்ணை பற்றி யார் எழுதுகிறார்கள் என்பதில் தான் அந்த ஆழம் பொருந்தியுள்ளது . ஒரு பெண்ணை பற்றி ஆண் எவ்வளவு ஆழமாக எழுத முற்பட்டாலும் அவன் ஒரு கட்டடத்தில் தோற்று , தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கிவிடுகிறான் .ஏனெனில், பெண் வாழ்க்கையின் ஆழமோ , மனதின் ஆழமோ அது அவளுக்கு மட்டுமே புலப்படக்கூடிய ஒன்று . அதனால்தான் ஒரு பெண் பெண்ணை பற்றி எழுதுவது என்பது அந்த ஆழத்தின் அடி வேர் வரை சென்று அதன் வெக்கையை நமக்குள் கடத்த முயற்சிக்கும் ஒரு பெரும் செயல் . அதில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி புரிந்துகொள்ள முடியாத அல்லது இதுவரை புரிந்து கொள்ளவே முயற்சிக்காத ஒரு இருளின் மீதான ஒரு ஒளிக்கீற்று படர்வதுபோல . ஒளியின் அளவோ , அடர்த்தியோ , விஸ்தாரமோ அங்கு முக்கியமில்லை , அந்த ஒளியின் வழி பார்ப்பவர்கள் பார்த்ததையும் , இப்படித்தான் பார்க்க வேண்டும் என்பதையும் பழகிக்கொள்வார்கள் . அந்த வகையில் அம்பை ஒரு மெல்லிய ஒளிக்கீற்றை வீசிப்பார்க்கிறார் இந்த தொகுப்பு முழுக்க .
இந்த தொகுப்பு முழுக்க பெண்கள் , பெண்கள் , பெண்கள் .......பெண்களால் நிறைந்த , நிரப்பப்பட்ட ஒரு புத்தகம் . தி ஜாவை தொட்டு என் இலக்கிய வாசிப்பை தொடங்கியவன் என்ற முறையில் பெண்களின் உலகம் எனக்கு அறிமுகமான ஒன்றாக இருந்தாலும் , அம்பை காட்டும் இந்த பெண்களின் உலகம் முற்றிலும் மாறுபட்டது . என்ன மாறுதல் ? இதுவரை பெண்களை பற்றி படித்த நான் அந்த கதையை தாண்டி அதனை பற்றி நான் எந்த பெண்ணுடனும் உரையாடியது இல்லை . ஆனால் , முதல் முதலாக "அம்மா ஒரு கொலை செய்தாள்'' என்ற கதையை வாசித்து முடித்த உடன் என் மனைவியிடம் அவளுடைய பருவமெய்திய அந்த முதல் நாள் , அந்த நொடிப்பொழுதின் உணர்வுகளை பற்றி ஒரு உரையாடல் மேற்கொண்டேன் . அந்த உரையாடலை நான் ஏன் திருமணமாகி இத்தனை ஆண்டுகளாக நிகழ்த்தவில்லை ? அந்த ஒரு கதையில், அந்த ஒரு நொடியில் , அந்த ஒரு உரையாடலில் எனக்கும் என் மனைவிக்கும் அம்பை ஒரு எழுத்தாளர் என்ற கோட்டை தாண்டி எங்கள் அருகில் வந்துவிட்டார் . ஒரு தொகுப்பில் எத்தனை கதைகள் இருந்தாலும் ஒரு கதை போதும் வாசகனும் எழுத்தாளனும் அருகில் வர . இதுதான் இலக்கியத்தின் பலம் , வெற்றி , உயிர்ப்பு , வீரியம் எல்லாமே .
இந்த தொகுப்பு முழுக்க வாசித்த பின் அம்பை எனும் எழுத்தாளரை தாண்டி , அம்பை எனும் பெண்ணை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . தன் கதைகளுக்கு தான் சேகரித்த பெண்களின் வாழ்க்கையை சில நேரங்களில் அப்படியே படம் பிடித்து காட்டினாலும் , சில நேரங்களில் தான் விருப்பப்பட்ட முடிவை அவர்களின் வாழ்க்கைக்குள் புகுத்தி பார்க்கிறார் . தான் விருப்பப்பட்டு சிறகிருந்தும் சிறகடிக்காமல் தவிக்கும் பறவைகளை சிறகுகள் முறியும் என்று கூறுகிறார் , அதே வேலையில் சில பறவைகளுக்கு அதன் சிறைகை கட்டவிழ்த்து விடும் கருவியாகவும் இருக்கிறார் அம்பை . அவருடைய பயணம் எண்களில் வரும் கதைகள் அனைத்தும் அவருடைய சொந்த பயணங்கள் தான் என்று நமக்கு விளங்கினாலும் , அங்கு அம்பை இருந்ததால்தான் அது இலக்கியமிக்க ஒரு கதையாக மாறியிருக்கிறது .
இந்த தொகுப்பில் பல கதைகளில் ஒரே கருவை வைத்து கொண்டு வேறு வேறு விதமான முடிவுகளை எழுதிப்பார்த்திருக்கிறார் . பெண்கள் பருவமடைதலும் ஒரு குற்றம் , பருவமடையாவிட்டாலும் ஒரு குற்றம் என்று " அம்மா ஒரு கொலை செய்தாள் - காட்டில் ஒரு மான் " என்ற கதைகளின் வழி இரு வேறு துருவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்து காட்டுகிறார் . அதே போல தன் விருப்பமின்றி தன் கருவை இழக்கும் வலியை விதியின் வழியாகவும் , வாழ்வின் எதார்தத்தின் வழியாகவும் " மஞ்சள் மீன் - நிலவை தின்னும் பெண் கதைகள் மூலம் அறிகிறோம் .
இசைக்கும் - அம்பைக்குமனா உறவு பிரிக்க முடியாத ஒன்று என்பது இந்த தொகுப்பின் " மல்லுக்கட்டு , அசர மரணங்கள் , காவு நாள் ," போன்ற கதைகளின் வழி நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது . " வீணைகளுக்கென்று ஒரு சவக்கிடங்கு உண்டோ ?" என்று அவர் வினவுவதில் எத்தனை தவிப்பும் ,பற்றும் ,பரிவும் இசைமேல் அவருக்கு உள்ளது என்பது தெரிகிறது .
"மல்லுக்கட்டு" -இசை தான் தன் வாழ்வு என்றிருந்த செண்பகம் தன் குருவிற்காக தன் வாழ்க்கையும் , ஏன் தன் இசையையும் ஒப்புக்கொடுக்க துணிகிறாள் .
"காவு நாள் "- இசையை மட்டுமே அறிந்து , தன் கனவுகளை களைய வந்த திருமண வலையில் சிக்கி இசையும் இழந்து . தன்னையும் இழந்து தவித்தவள் தன் தலை நரைத்த நேரத்தில் தன் சிறகை விரித்து பறக்க தொடங்குகிறாள் பிரமரா .
" அசர மரணங்கள் "- இந்த கதையில் வரும் கறுப்பி எனும் வீணைக்கு வயது 100.நம்ப முடிகிறதா ? இதை விட பேரதிசயம் அந்த வீணையும் தன் துனையாளோடு அவள் கலந்து கறைந்து போன நர்மதை நதி கரையிலே இறந்த பின்னும் அவளோடு நீக்கமுடியா இசையாக கலந்து விடுகிறது .
இந்த புத்தகம் முழுக்க ஒருவரால் வாசிக்க முடியாமல் போனாலும் , தவறினாலும் பரவாயில்லை , ஒரே ஒரு பத்தி , சில வரிகள் " வீட்டின் மூலையில் ஒரு சமையலறை " என்ற கதையில் வரும் ஒரு அரைப்பக்கம் கொண்ட ஒரு பத்தியையாவது நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும் . ஒரு பருவ பெண் தன் வீட்டின் முதிர்ந்து தள்ளாடும் ஒரு பெண்ணின் உடையை அகற்றி மாற்றும் ஒரு காட்சி . உலக இலக்கியத்தில் இப்படி ஒரு காட்சியை , நிகழ்வை இதற்கு முன் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பது சந்தேகம் தான் . " வாழ்ந்த உடம்பு . சிறுநீர் , மலம் , ரத்தம் , குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு . எத்தனை தடங்கள் அதில் !" இப்படி முடிகிறது அந்த பத்தி .
பெண்களை புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தாமல் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் விருப்பப்படி வாழ வழி விடுவோம் , முடிந்தால் அந்த வழியில் நாமும் பயணிப்போம் .பயணத்தின் வழி பாதைகள் பிரியலாம் , இணையலாம் , குறுகலாம் , விரியலாம் , அத்தனையும் விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொண்டு இலக்கினை கருத்தில்கொள்ளாமல் , பயணத்தை நேசிப்போம் சக பயணியோடு அவ்வளவுதான் வாழ்கை . பெண்களை உடலுக்கும் , உள்ளத்திற்கும் , உணர்விற்கும் காயம் ஏற்படுத்தியவர்கள், தனக்கே தெரியாமல் ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகமாக நான் இதனை பரிந்துரைக்கிறேன் .
--இர.மௌலிதரன்
13-12-23
எனது முதல் அம்பை. அனைவரையும் போல இப்புத்தகத்தின் தலைப்பே எனது ஆர்வத்தைத் தூண்டியது. பதினாறு சிறுகதைகளைக் கொண்ட இது ஓர் களஞ்சியம் என்றே கூறலாம். வாழ்க்கையின் அன்றாட கொடுமைகள் கூட சாதாரணமே என்று பிறப்பிலிருந்தே பெண்களின் மீது திணிக்கப்பட்ட விதிகளை அம்பை அவ்வளவு யதார்த்தமாக எடுத்துரைக்கிறார். அடிப்படையான விஷயங்களைக் கூடப் பெறாமல் நிராகரிப்பை மட்டுமே சேகரிப்பவள் பெண். வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் ஒரு ஒரு பெண்மணியும் தன்னேயே கேட்டிருப்பாள் - ஆணாக இருந்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்குமா என்று. அவ்வாறு நினைத்த அனைத்துப் பெண்களும் இக்கதைகளோடு தன்னை இணைத்துப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன்.
இவ்வாசிப்பில் என்னை பாதித்த விஷயங்கள்:
* அடிப்படை எதிர்பார்ப்புகளைக் கூட உணராத கணவனுக்கு, தனது அன்னையைப் போல, தன்னைத் தானே பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம். ஒரு ஒரு வார்த்தையிலும் கொடுமை வழிகிறது.
* பெண்ணின் நல்ல குணமாக அல்ல, கட்டாவசியமான குணமாகக் காணப்படும் "தியாகம்".
* அநீதிகளை சாதாரணம் என்று காலம் காலமாகத் திணிக்கப்பட்ட கொடுமை.
* ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அம்மாவின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம்! அவளால் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே கொண்டு ஓர் உயிரையும் கொல்லக் கூடும்.
* அம்பை மிக அழகாக வர்ணித்த ஓர் தீராக் காதல் கதை - பெண்ணிற்கும் அவளுக்கு நிராகரிக்கப்பட்ட அந்த ஊர்திக்கும். நியாயமற்றது அல்லவா? அடிப்படையான சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சண்டை போட்டுப் பெற வேண்டிய கட்டாயம்.
* ஒரு கதையை ஒரு சிறுவனின்/சிறுமியின் கண்ணோட்டத்திலிருந்து கேட்பது ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறது. கதைக்கு தூய்மை சேர்ப்பது போல்.
* ஒரு ஆண் பெண்களை வித்தியாசமின்றி, நியாயமாக நடத்தும் பொழுது (பாரபட்சம் கூட வேண்டாம்) அவள் சொர்க்கத்தையே உணர்கிறாள்.
* கடைசிக்கு, ஆண்கள் ஆண்களாகவே இருக்கும் பட்ச்சத்தில் பெண்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருப்பது எவ்வளவு உன்னதம்! வாழ்க்கை வாழக் கூடிய அளவிற்கு மாறிவிடும் அல்லவா?
* கல்யாணத்திற்குப் பிறகு பெண்களின் திறமைகள் கூட கணவனுடையதாகின்றனவே! இத்திறமை வெளி நபர்கள் காணக்கூடத்தை, கேட்கக்கூடாதவை. அவளும் அவள் அனைத்தும் அவனுக்கே அடிமையாகிப் போகின்ற ரணம் கொதிக்கும் "சாதாரணம்".
எல்லா சிறுகதைத் தொகுப்புகளைப் போல இங்கேயும் சில கதைகள் புரியவில்லை. மற்ற மொழி வார்த்தைகள் பல இடங்களில் பயன்படுத்தியது வாசிப்பதற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
இக்கதைகள் இக்காலத்திலும் பொருந்துவது இன்னும் வேடிக்கையான விஷயம். மிக ஆழமான, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, உருக்கமான வாசிப்பு. வேறு வேறு பெண்கள், வேறு வேறு காலா கட்டங்கள், வேறு வேறு உணர்ச்சிகள், வேறு வேறு சூழ்நிலைகள். ஆயினும், வாசிக்கும் எந்த ஒரு பெண்ணும் எல்லாவற்றையும் சம்மந்தப்படுத்திப் பார்க்கக்கூடிய அளவிற்கு அம்பை பெண்களின் வாழ்க்கையைக் கண்முன் வைக்கிறார்.
பெண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கதைகள் இவை.