Reviews for ரெயினீஸ் ஐயர் தெரு

18 reviews total

user_11781

★ 5/5 Feb 02, 2026

இளமையில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், கோடை விடுமுறையில் சில இடங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த நினைவுகள் கடைசி மூச்சு வரை மறக்க முடியாதவை. இந்தப் புத்தகம் ரெயினீஸ் ஐயர் தெருவில் ஒன்றிரண்டு முறை அல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் சென்றது போன்ற உணர்வைத் தருகிறது.

கதாபாத்திரங்கள் மிகவும் சாதாரண மனிதர்கள், ஆனால் எழுத்தாளரின் பாணியில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது, அவர்களை ஒருபோதும் மறக்க முடியாமல் செய்கிறது.

user_11780

★ 4/5 Feb 02, 2026

மொத்தமா 6 வீடு உள்ள சின்ன தெரு. ஆனா அந்த ஆறு வீடுகளிலும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் 60 வருசம் வாழ்ந்த ஒரு உணர்வு ஏற்படுறது இயல்பு.

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தம்பதி வசிக்கும் வீட்டுச்சுவர் கொல்லையில் ஓடும் கோடை மழைக்கு இடிந்து விழும் தருணம் அகாலமானது. அவங்களுக்கு உதவ யாருமே முன் வரலைன்னு சொல்றது யோசிக்கவைக்குது. ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு விசித்திரமான மனிதர்கள் வாழ்றதும் பிரச்சனைகள் இருக்குறதும் இயற்கைதானே.

பள்ளிக்கூடம் போற பிள்ளை, வேலையில்லா இளைஞன், குடியும் கும்மாளமுமா இருக்கும் தியோடர், படுத்த படுக்கையான புருசனை காப்பாத்த துடிக்கும் டீச்சர், அம்மாவால் கைவிடப்பட்ட கோழிக்குஞ்சுகள் என திருவனந்தபுரம் ரோட்டுல ஜாயிண்ட் ஆகுற ரெயினீஸ் ஐயர் தெரு. வண்ணநிலவன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகம் செய்ற விதம் அப்படியே நம்ம கண்ணுக்கு முன்னாடி நிக்குது. வண்ணநிலவன் - வர்ணனை நிலவன்!

user_11779

★ 3/5 Feb 02, 2026

ஆறு வீடுகள் கொண்ட ஒரு குறுகிய தெரு. 50-க்கும் சற்றே குறைவிலான கிறிஸ்தவ-வேளாள நடுத்தர சமூக மக்களின் வாழ்வியல் சுகம், துக்கம், அன்பும்தான் கதையின் கரு.

டாரதி வீடு, இருதய மேரி வீடு, ஹென்றி மருதநாயகம் பிள்ளை வீடு, அன்ன மேரி வீடு, ஒரு கல்லறை, ஜோய்ஸிலின் வீடு என ஒவ்வொரு வீட்டிற்கும் கூட்டிச் சென்று அவர்களின் குடும்பத்தை அறிமுகப்படுத்தி, காமம், காதல், அன்பு, துயரம் என அவர்களின் பார்வையில் இயற்கையில் காணும் அன்பு பாசம்தான் கதை.

மழை நேரம், அனாதை கோழி குஞ்சுகளின் சந்தோஷம், மீன் வாங்கும் திறன், மாம்பழ திருவிழா, கோழி இறகு தரும் சுகம் என நுண்ணிய கால இணைப்புகள் நம்மை ரெயினீஸ் ஐயர் தெருவில் வாழச்செய்கின்றன. கதையில் காம முரண்கள், சமூக முரண்கள் வருகின்றன, ஆசிரியர் தனது சொல்லாடலால் எளிமையாக கடந்துபோகிறார்.

தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, பாளையம்கோட்டை, திருநெல்வேலி பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்களை ஐயர் என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது - அதுதான் ரெயினீஸ் ஐயர் தெரு. ஒரு மழை நேரம், தேனீர், தின்பண்டங்களும் படைக்கக்கூடிய ஒரு குறுநாவல்.

user_11778

★ 4/5 Feb 02, 2026

கல்லறை பக்கத்தில் தெரு; ஆறு வீடுகள், பள்ளிச் செல்லும் சிறுமி டாரதி சொல்வதாக கதை ஓட்டம் பிடித்து ஈர்த்து நகர்கிறது. வயதான தம்பதி, நோய்வாய்ப்பட்ட கணவனை ரசிக்கும் மனைவி, நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்கும் ஒரு மானிடன் என இன்னும் நாம் பார்த்து பழகிவரும் மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையை ஒரு தெரு மக்களாய் அமைத்து கதை சொல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். வெறும் எண்பது பக்கத்தில் இவ்வளவு உரையாடல்கள், நிகழ்வுகள், முக்கியமாக சிறுமிகளின் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளால் விவரிக்கும்போது ஆர்வமும் கூடவே அன்பும் கலந்து விடுகிறது.

வண்ணநிலவன் வார்த்தை தேர்வுகளிலேயே கட்டிப் போட்டு விடுகிறார். கதை முழுக்க மழை பயணிக்கிறது, கதாபாத்திரங்களோடு ஒவ்வொரு நிகழ்விலும் விரிவுபடுத்தி அன்பை பரிமாறி! கட்டாயம் வாசித்து விடுங்கள்.

user_11777

★ 2/5 Feb 02, 2026

இது நாவலுக்கான தயாரிப்பு போல் உணர்ந்தேன். கதாபாத்திரங்களின் விரிவான விவரணைகள், இடம் மற்றும் காலக்கட்டம் பற்றிய வர்ணனைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் பெரிதாக எதுவும் நிகழ்வதில்லை. சுமாரான ஒரு சிறு வாசிப்பு.

user_11776

★ 4/5 Feb 02, 2026

ஆறு வீடுகள் கொண்ட சிறு தெரு. அதிகபட்சமாக 30-40 மனிதர்கள் வசிப்பர். கதையாக இல்லாமல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அத்தியாயங்களாக உள்ளன.

குடித்தாலும் தெருவில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் தயங்காமல் உதவி செய்யும் தியோடர், சிறு பெண் என்று வர்ணிக்கப்படும் டாரதி, உடலில் ஏற்படும் மாற்றங்களால் எண்ணங்களும் மாறி அல்லாடும் ஜீனோ, உடல்நலம் குன்றிய கணவனுக்காக போராடும் இருதயம் டீச்சர், வயதான ஆசிர்வாதம் பிள்ளை மற்றும் ரெபக்கால் தம்பதி என்று ஒவ்வொரு பாத்திரமும் வாழ்க்கையை சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கின்றன. சில சமயங்களில் மனம் கனத்து விடுகிறது. கதை என்று இல்லாமல் சில சமயம் உணர்ச்சி பிரளயமாக இருக்கிறது.

120 பக்கங்கள் என்றாலும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வாழ்க்கையை நமக்கு புகட்டி விட்டு செல்கின்றன.

user_11775

★ 4/5 Feb 02, 2026

ரெயினீஸ் ஐயர் தெரு - ஆறு வீடுகள் அடங்கிய தெரு. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை. முதல் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் டாரதி வழியாக கதை தொடங்குகிறது. தாய் கோழி இல்லாமல் தனியே இரை தேடும் குஞ்சுகள், எதிர் வீட்டு இருதயத்து டீச்சர், எபன் அண்ணன் மீதான அன்பு என்று கதை கதாபாத்திரங்களின் மூலம் விரிந்து செல்கிறது. டாரதி சின்ன பெண், யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்ற விபரம் பத்தாது. இப்படியாக ஒவ்வொரு வீடாக கதாபாத்திரங்கள் வழியாகவே கதை நகர்கிறது.

பெரும்பாலும் பெண்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். டாரதி, அவளது சித்தி மகள் ஜீனோ, கல்யாணி அண்ணன், இருதயத்து டீச்சர், இடிந்தகரையாள், பிலோமி, சேசய்யா, அன்ன மேரி டீச்சர், அற்புதமேரி, சாம்சன், எஸ்தர், குடிக்கு அடிமையான தியோடர், ஆசீர்வாத பிள்ளை-ரெபெக்காள் தம்பதி, ஆலிஸ் என்று எண்ணற்ற பாத்திரங்கள், அவர்களுக்குண்டான ஆசைகள், கஷ்டங்கள் என புத்தகம் அதற்கே உண்டான வேகத்தில் நகர்கின்றது.

தெருவாசிகளின் குடும்ப நிலவரங்கள், யாருக்கு யாரை பிடிக்கும், வாரத்திற்கு வாரம் வருமானத்திற்கு ஏற்ப மாறும் வாழ்க்கை முறை என்று நம் கண் முன்னே நிஜ ஆசாமிகளை உலவ விட்டு வேடிக்கை காட்டுகிறார் கதையாசிரியர். கடைசியாக ஜாஸ்லின் பிள்ளை வீடும் பூர்வீகமும் விளக்கப்படுகிறது. "மழையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது" என்ற வாக்கியத்துடன் நிறைவு பெறுகிறது.

user_11774

★ 4/5 Feb 02, 2026

இது கதை மையமான நாவல் அல்ல. ஆறு வீடுகள் கொண்ட ஒரு தெருவில் வாழும் மனிதர்களின் கதாபாத்திர விவரணை. ஒவ்வொரு வீட்டிலும் வாழும் தமிழ் கிறிஸ்தவ வேளாள மக்களை வண்ணநிலவன் சதையும் ரத்தமுமாக சித்தரிக்கிறார். சுவாரஸ்யமான சித்தரிப்பு.