Reviews for காகித மலர்கள்

18 reviews total

user_11580

★ 5/5 Feb 02, 2026

நவீன உலகில் கவிந்திருக்கும் போலித்தன்மைகளும், அதன் ஊடே நாம் கட்டமைத்திருக்கும் கற்பிதங்களும், வாழ்க்கை குறித்த பிம்பங்களும், ஒரு தலைமுறையினரின் மனப்போக்கினையும் துல்லியமாகச் சித்தரிக்கிறது காகித மலர்கள்.

user_11579

★ 4/5 Feb 02, 2026

கண்களைக் கவர்ந்திழுக்கும் பலவிதமான வண்ணங்களில், சிறியதும் பெரியதுமான பலவகையான வடிவங்களில், உண்மையையேத் தோற்கடித்து விடும் பல்வேறான தோற்றங்களில், இதுவே எனது நிரந்தரம் என்று காண்பவரின் மதியை மயங்க வைக்கும் சாதுர்யங்களில் — விதவிதமான விந்தைகளை எப்போதும் தன்னகத்தே தக்கவைத்திருப்பவை காகித மலர்கள். தன் இயல்பிலிருந்து சற்றும் மாறாமல் எப்போதும் மலர்ந்திருக்கும் தன்மை வாய்க்கப்பெற்றிருந்தாலும், ஆசையுடன் அதனை நெருங்கிப் பார்க்கும் சூழல் வாய்க்கும் வேளையில், பளீரென்று முகத்தில் அடிக்கும் அதன் மெய்மை சற்றேனும் மிரட்சி கொள்ளத்தான் வைக்கிறது.

அதுபோலவேதான் மனிதர்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும். பாவனைகள், பிம்பங்கள், அக்கறைகள், வேலைகள், எண்ணங்கள், கருத்துக்கள், கொள்கைகள் — எதிலும் மனிதர்களுக்கு இரட்டை முகம்தான். உள்ளும் புறமும் அவர்களால் ஒரே முகமாக நடந்துகொள்ள முடிவதில்லை. பிறருக்காகவும், தனக்காகவும், தனக்குள்ளாகவும்கூட அவன் இருகூறாகப் பிரிந்தே நிற்கிறான்.

1970களின் பிற்பகுதியில் டெல்லியில் வாழும் ஒரு மேல் நடுத்தர வர்க்கப் பிராமணக் குடும்பம் — அரசாங்க உயரதிகாரி பசுபதி, நாடகங்களில் நடிக்கும் மனைவி பாக்கியம், சூழலியல் துறையில் இலட்சியவாதியான மூத்த மகன் விசுவம், அரியர்ஸ் வைத்துக்கொண்டு அலட்சியமாகத் திரியும் செல்லப்பா, கட்டுப்பாடுகளை உடைக்கத் துடிக்கும் பத்ரி — ஒரே வீட்டில் வசித்தாலும் உள்ளார்ந்த பிணைப்பே இல்லாதவர்கள்.

பதவி ஆசையில் சுயமிழக்கும் பசுபதி, இலட்சியவாதி என்று தன்னைக் காட்டிக்கொண்டு இறுதியில் சராசரிக்கு விலக்கல்ல என்று உணரும் விசுவம், வெளியே அலட்சியமாக நடிப்பினும் உள்ளுக்குள் விசனப்படும் செல்லப்பா, கல்லூரி மாணவனின் குழப்பங்களைச் சுமக்கும் பத்ரி — ஒவ்வொரு ஆண் கதாபாத்திரமும் யதார்த்தமாகவும் சிறிதும் பாசாங்கற்றதாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

பெண் கதாபாத்திரங்களில் — மிஸஸ் பசுபதி என்றே அழைக்கப்படும் பாக்கியம், நவீன பெண்ணாக அறிமுகமாகி சராசரி வாழ்க்கைக்கு உட்படுத்திக்கொள்ளும் பத்மினி, ஒழுக்க நியதிகளை எளிதாகக் கடக்கும் தாரா — ஆசிரியர் இலேசாகத் தொட்டுவிட்டுச் செல்கிறார் என்ற குறையிருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு நவீன காவியமாக விளங்குகிறது இந்த நாவல்.

காலம் மாறினாலும் மனிதர்கள் மாறவில்லை — காகித மலர்கள் வாடாமல் இன்றும் தன் விந்தைகளைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை ஐயந்திரிபற உரைத்துச் செல்கிறது ஆதவனின் இப்படைப்பு.

user_11578

★ 5/5 Feb 02, 2026

மிக ஆழமான சிந்தனைகளைப் பேசும் புத்தகம். புதினத்தின் கதாபாத்திரங்களின் வழியே நம்மையும், நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறார் ஆதவன். 70களில் எழுதப்பட்ட புத்தகம் எனினும், இன்றைய காலகட்டத்துக்கும் வெகுவாகப் பொருந்துகிறது.

தலைமுறை தலைமுறையாக நம் சமூக சூழலும், எண்ணங்களும், கட்டிவைத்த பிம்பங்களும் என்றும் மாறாமல் இருப்பதே இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது புலனாகிறது. ஒரு நல்ல வாசிப்பு அனுபவம். ஒரு நல்ல சிந்தனை அனுபவம்.

user_11577

★ 4/5 Feb 02, 2026

போலச் செய்யும் பாவனைகளின், வேஷங்களின், பிம்பங்களின் பிரதி.

தனக்கென்று கவர கூடிய மணமோ, நிறமோ, மகரந்த சுவையோ, வடிவமோ, ஈர்ப்போ இல்லாத ஆனால் நிஜமான மலர்களைப் போல தன்னைப் பிரதி எடுத்துக்கொள்ளும் காகித மலர்களைப் போல, எந்த சுயமான உள்ளீடும் இல்லாத, ஒருவருக்கொருவர் மீண்டும் மீண்டும் அணிந்துகொண்ட வேஷங்களை மாறி மாறி அணிந்து போலச் செய்யும் — காகித மனிதர்களின் பிரதி.

user_11576

★ 5/5 Feb 02, 2026

முதலில் இது ஒரு பொழுதுபோக்கான நாவல் என்றால் அது தவறு, இது அதுபோன்ற நாவல் அல்ல. இந்நாவல் ஒரு கண்ணாடி போல மனிதனின் பல பிம்பங்களைக் காட்டுகிறது. இந்நாவலின் சிறப்பு — மனிதன் என்றும் இயல்பாக இருப்பதில்லை; அவன் கோமாளித்தனமாக செய்யும்போதும், காதலிக்கும்போதும், இதர வேலைகள் செய்யும்போதும் ஒரு முகமூடியை அணிந்துகொள்கிறான். அவன் உதட்டில் வரும் சொல்லும், மனதில் தோன்றும் சொல்லும் என்றும் ஒன்றாக இருந்ததில்லை. அவன் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்கிறான்.

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை நாமே ஒளிந்துகொண்டு பார்ப்பதுபோல இருக்கிறது. மொத்தத்தில் ஆதவனின் விருந்து இந்நாவல். தன்னைப் பற்றி அறிந்தவர்கள் இந்நாவலைப் படிக்கும்போது காகிதமலர்களின் வாசம் இன்னும் வீசும்.

user_11575

★ 3/5 Feb 02, 2026

வசந்தம் தேடும் காகித மலர்கள் — ஆதவனின் இந்த நாவல் ஒரு தடவை வாசிக்கலாம். கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக சராசரியான வாசிப்பு அனுபவமாகவே இருந்தது.

user_11574

★ 5/5 Feb 02, 2026

நான் கொடுக்கும் முதல் 5 நட்சத்திர ரேட்டிங் நாவல் இது. மனித மனங்களை, அவற்றின் உணர்வினை, அதனால் விளையும் வினைகளை, எதிர்வினைகளை இத்தனை அழகாய் விவரிக்க வேறு யாராலும் முடியாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஒரு மேற்கத்திய இலக்கிய எழுத்துக்கு இணையாக, எந்த விதத்திலும் குறையில்லாத நாவலாகத்தான் காகித மலர்களை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும், அந்த கதாபாத்திரம் நாவலுக்கு அளிக்கும் பங்களிப்பு நிறைவாகவும் இருக்கிறது, அதே சமயத்தில் நிறைவின்றியும் இருக்கிறது. பத்ரீ கதாபாத்திரத்தைப் பற்றி பெரிதாக அறிந்து விட்டோம் என்று நம்மால் எண்ணவும் முடியாது, மிஸ் பத்மினி பற்றி முழுதாகத் தெரிந்து விட்டோம் என்றும் எண்ண முடியாது. முரண்பாடான கதாபாத்திரங்கள் என்றே இந்த நாவலின் கதாமாந்தர்களைச் சொல்ல வேண்டும்.

மனித இயல்பு என்பது முரண்பாடுடன்தான் இருக்கும். அதை அப்படியே ஒரு கண்ணாடி போல் காட்டியிருப்பதில் இந்த நாவல் வெற்றியடைந்திருக்கிறது. 60களில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்தபோதிலும் நாவலாசிரியர் ஆதவனின் எண்ண ஓட்டம், கலாச்சார கண்ணோட்டம், சமூக பார்வை எல்லாம் இன்றைய காலத்துக்கு ஏற்றது போல் இருக்கிறது. காலங்கள் பல கடந்தாலும் மனித மனங்கள் ஒன்றுதான் என்பதை உணர்த்துகிறது. முரண்களின் மகுடத்தை தன் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் அற்புதமாய் சூடி, அழகாய் படைக்கப்பட்ட ஒரு நவீன காவியம்தான் இந்த காகித மலர்கள். இலக்கிய ஆர்வமுள்ள அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல்.

user_11573

★ 4/5 Feb 02, 2026

காகித மலரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவனான செல்லப்பா ஓரிடத்தில் காமத்தை வெல்கிறான். அப்படி ஒரு மனிதனால் காமத்தை வென்றுவிட முடியுமா என்ற கேள்வி இருப்பினும், நம்பகத்தன்மையான எழுத்தின் மூலம் ஆதவன் அதை சாத்தியமாக்கி விடுகிறார். கதையின் உச்சக்கட்டம் ஐரோப்பிய கலைத்திரைப்பட மேதைகளின் படைப்புகளுக்கு இணையான தரத்தில் அமைந்திருக்கிறது.