Reviews for ரூஹ்
29 reviews total
user_11120
★ 4/5 Feb 02, 2026நாவல் தன்னிறைவான ஒரு படைப்பு. லஷ்மி சரவணகுமார் ஒரு அற்புதமான கதை சொல்லி — தனது நிஜ வாழ்க்கையிலிருந்தே எழுத்துக்கான மூலாதாரங்களைப் பெறுகிறார். அவரது நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உங்களிடம் பேசுகின்றன. நாவலின் களத்திற்குள் அறியாமலேயே நீங்கள் இடம்பெயர்ந்து விடுவீர்கள் — அதுவே ஆசிரியரின் வெற்றி, படைப்பின் முழுமை.
அன்பே மனிதகுலத்திற்கு அருளப்பட்ட மிக உயர்ந்த வரம் என்பதை இந்நாவல் உணரவைக்கிறது. கதை சொல்லும் பாணி வாசகரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது — இறுதியில் ஒரு பேரின்ப உணர்வை அனுபவிக்கலாம்.
user_11119
★ 4/5 Feb 02, 2026லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு நன்றி — கதையோடு இறுதிவரை சுவாரஸ்யமாக வாசகனைக் கொண்டு சென்றதற்கு.
தொடக்கத்தில் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் ஜோதி மற்றும் ராபியாவின் ஆளுமை என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது. ஒருவரைப் பற்றி தெரிந்த பிறகும் நிபந்தனையின்றி அன்பு காட்டுவதை உடைத்தெறிந்தது ராபியாவின் பண்பு. ஜோதியின் மனமாற்றம் ஆண்களின் உண்மை மனசாட்சியைத் தூண்டியது.
இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு சூஃபி இசையின் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய கைபேசியின் இசைத் தொகுப்பில் அதுவும் ஒன்றாக இப்போது இருக்கிறது.
படித்த பின் கண்டிப்பாக மனதில் ஒரு வெறுமையை அகற்றி நல்ல எண்ணங்களை இந்தப் புத்தகம் நிரப்பியுள்ளது. நன்றி.
user_11118
★ 5/5 Feb 02, 2026அன்பைத் தவிர வேறெது புனிதமாகும்! இந்நாவலில் பக்கத்திற்குப் பக்கம் வார்த்தைகளால் பேரன்பைப் பேசுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னான கதையோடு நிகழ்கால கதை இணையும் அதிசயம் லஷ்மியின் எழுத்தாளுமைக்கு ஓர் சான்று.
ராபியா என்ற பெண்ணைத் தாயாக, காதலியாக, தோழியாக, சகோதரியாக என்று எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் கண்டிருப்போம். அவளின் அன்பையும் கருணையும் வாசிக்கும் போது மனம் இலகுவாகிறது.
ஜோதிலிங்கம் அவமானப்படும் போதெல்லாம் என்னை அறியாமல் மனம் நொந்தது. எல்லா கதாபாத்திரங்களையும் நம் அருகிலேயே பார்த்திருப்போம் — அந்த உணர்வு தான் நாவலை இறுதி வரை யதார்த்தத்தன்மையோடு அணுக முடிந்தது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த கதைக்கும் நிகழ்கால கதைக்கும் வரும் இணைப்பை வாசிக்கும் போது உண்டான உணர்வுக்கு நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அத்தியாயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டாடினேன்.
அற்புதமான வாசிப்பு அனுபவத்தை உணர ரூஹ் நாவலை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்!
user_11117
★ 1/5 Feb 02, 2026மொக்கைக் கதைகளும் தகாத வார்த்தைகளும் திணிக்கப்பட்ட இது போன்ற கதைகள், தமிழ் எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டுமென்கிற எண்ணத்தையே குறைக்கின்றன. காசு கொடுத்துப் பார்த்த திரைப்படம் படு மொக்கையாக இருந்தால் அந்த இயக்குனர் மீது வரும் அதே வெறுப்பு.
வித்தியாசமான பெயர்தான் இழுத்தது. இது பொது நாவல் — இதில் தகாத வார்த்தைகளுக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை.
சில வரலாற்றுப் பிழைகள் உள்ளன — இந்தியா என்ற நாடே இல்லாத காலகட்டத்தில் 'இந்தியா' என்று குறிப்பிடுவது, 'இந்து மன்னர்கள்' என்ற சொல்லாடல் போன்றவை. கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பமும் இருந்தது.
user_11116
★ 5/5 Feb 02, 2026முதல் சில அத்தியாயங்கள் சரியாகப் பிடிபடவில்லை. ஏதோ மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. கதை எந்த வருடம், எந்த ஊரில், ஏதாவது அரேபியக் கதையா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கதைமாந்தர்களும் கதை நடக்கும் சூழலும் நாவலோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.
அன்பை மட்டுமே வாரி வாரி வழங்கிடும் ராபியாவும், இச்சை-சுய கழிவிரக்கம்-வெறுப்பு-வன்மம் என பல்வேறு இன்னல்களுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் ஜோதி, சுகவாசியாய்ச் சுற்றித் திரிந்து பிறகு பொறுப்பான பிள்ளையாகவும் அன்பான கணவனாகவும் இருந்து ஏமாற்றம் தந்த வலியில் குடிக்கு அடிமையாகும் அன்வர் — கதைக்குள் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள்.
ராபியா குறித்தான வர்ணனைகள் அமைதியாக ஓடும் ஆறாக இருந்தால், ஜோதி குறித்தான அனைத்தும் கரைபுரண்டு ஓடும் காட்டாறாய் இருக்கிறது. அத்தனை உக்கிரமான எழுத்து. லஷ்மி சரவணகுமாரின் 'கானகன்', 'நீலப்படம்' இரண்டும் இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். இப்படியான ஒரு உக்கிரமான எழுத்தை இரண்டிலும் வாசித்ததாக நினைவில்லை.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் அத்தனை ஆசையோடும் ஆர்வத்தோடும் படித்து முடித்தேன். ரூஹ் — ஒரு பேரனுபவம்.
user_11115
★ 5/5 Feb 02, 2026வெகுநாட்களாக லஷ்மியின் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பட்டியலில் வைத்திருந்தேன். சமீபத்திய நாவலான ரூஹ், தலைப்பைப் பார்த்ததும் படித்துவிட வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.
நாவல் முழுக்க ராபியா தான். ராபியாவைப் போன்ற தேவதைகள் நிஜ உலகில் அரிது.
ராபியா ஜோதிக்கு எழுதிய கடிதத்தின் முதலெழுத்தைப் படித்ததும் உடைந்துவிட்டேன். "கண்மணி" — இந்த ஒரு வார்த்தையில் மொத்தப் பாவங்களும் கழுவப்பட்டுவிட்டது. "நீ என் மீது கொண்டிருந்த உணர்ச்சிகள் உனக்கு இன்பத்திற்குப் பதிலாக துன்பத்தையே தந்திருக்கக் கூடும்." "திரும்பி வா, உன்னை என் தாய்மையின் சிறகுகளுக்குள் அரவணைத்துக் கொள்கிறேன். அன்பு காலமற்றது கண்மணி. முழுமையானது. திரும்பி வா."
இந்த நூலை வெறும் நாவல் என்று மட்டும் கடந்துவிட இயலாது. இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான திரைக்கதை, ஆழ்மனதின் உணர்ச்சிகள், சபிக்கப்பட்டவர்களின் ஆன்மாவை அலசும் முயற்சி மற்றும் அந்த ஆன்மாக்களை அரவணைக்கும் தேவதைகள்.
பலதரப்பட்ட மனிதர்களின் சிக்கலை மிக லாவகமாக எழுத்தாளர் உள்வாங்கி எளிய வாசகனுக்கும் புரியும்படியாகப் படைத்திருக்கிறார்.
"இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள்."
"சொற்கள் தான் உலகம், சொற்கள் தான் வாழ்க்கை, சொற்கள் தான் விடுதலை, சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா."
user_11114
★ 4/5 Feb 02, 2026லஷ்மி சரவணகுமார் ஒரு ஆச்சர்யம் தான். இளம் வயதிலே எழுதத் தொடங்கி இன்று சமகால எழுத்துலகில் தனக்கென ஓர் இடமும் வாசகர் வட்டமும் உருவாக்கியுள்ளார்.
ரூஹ் — உயிர் அல்லது ஆத்மா என்று அர்த்தம். எவ்வளவு பொருத்தமான தலைப்பை தாங்கி நிற்கிறது இந்த நாவல்! மூன்று வெவ்வேறு காலங்களிலும் களங்களிலும் கதை தொடங்கினாலும், ஜோதிலிங்கம்-ராபியா என்ற இரு உன்னதமான ஆத்மாக்களைச் சுற்றியே கதை சுழல்கிறது.
மதுரைக்கு அருகே பேரையூரில் மராத்தியத்திலிருந்து புலம்பெயர்ந்த தோல்பாவை கலைஞரின் மகனாக பிறந்து வளரும் ஜோதிலிங்கம், பெண்ணிற்கான நளினம் அவன் உடல் மொழியில் தெரிவதால் ஊர் மொத்தமும் பரிகாசம் செய்ய, அவனுக்கு ஆறுதல் தர மிஞ்சியிருக்கும் ஒரே ஆத்மா ராபியா மட்டுமே.
ராபியா — மேலோட்டமாகப் பார்த்தால் சராசரி குடும்பப்பெண். ஆனால் அமர்வதற்குக் கூட கிளைகள் இன்றி சுற்றித்திரியும் பறவைகளுக்குத் தன் கரங்களை நீட்டும் ஒற்றை கிளை போலத்தான் ராபியா. மகள், மனைவி, அன்னை, அக்கா, தோழி — எத்தனையோ உறவுகளின் உருவம்.
லஷ்மி சரவணகுமாரின் வழக்கமான சாரம்சங்கள் இருந்தாலும், இந்த கதை அவரின் படைப்புகளில் இருந்து தனித்து நிற்கிறது. வாழ்க்கையின் யதார்த்தத்தை எந்த ஒரு சாயமும் பூசாமல் படம்பிடித்துக் காட்டியுள்ளார். நம் காலத்தில் மறந்து போன கதைச்சொல்லிகளையும் தோல்பாவை கலைஞர்களையும் கதைக்குள் கொண்டு வந்து நினைவூட்டியது பாராட்டுக்குரியது.
"பிடிக்கவில்லை என்பதற்காக மனிதன் வாழாமல் இருக்கமுடியுமா?" — இந்த வரிகளில் தான் எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன!
user_11113
★ 5/5 Feb 02, 2026ஓய்ந்து போன ஓர் புயலின் முடிவில் எஞ்சியிருக்கும் கனத்த மௌனத்தைத் தாங்கிய மாலைப் பொழுதில் தான் ரூஹ் எனும் இந்நாவலை வாசிக்கத் தொடங்கினேன். ரூஹை எங்கிருந்து தொடங்குவது, யாரிடமிருந்து தொடங்குவது, யாருக்கு கடத்துவது என்ற கேள்விகளுடன் நிற்கிறேன்.
நிலத்தின் பாவங்களுக்காகத்தான் கடல் அவர்களை அணுகுவதில்லை — மாறாக ஆர்ப்பரிக்கிறது. இக்கதையில் வரும் அஹ்மதும் ஜோதியும் தங்களது அவமானங்களை, வலிகளை, இயலாமைகளை கடலுக்குத்தான் ஒப்புக் கொடுத்தார்கள். கடலின் உப்பிற்கு எல்லாவற்றையும் கரைக்கும் அதீத திறன் இருக்கிறது.
பெரும் வலிகளோடு வரும் மனிதர்களுக்கு ராபியா தனது கரங்களை அவர்களது தலையின் மேல் வைத்துப் பிரார்த்திக்கும் போது ஜோதிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
மாலுமியான அஹ்மதின் சாகசங்கள் எனக்கு 'ரோட் டு மக்கா' நூலின் ஆசிரியர் முஹம்மது அஸதை நினைவுக்குக் கொண்டு வந்தன.
ரூஹ் எனும் இந்நாவலின் முற்றுமுழுதான சிறப்பே பேரன்பு ஒன்றுதான். நிபந்தனைகளற்ற அப்பேரன்பு, ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் பேரன்பு. அது ராபியாவிலிருந்தே வெளிப்படுகிறது. அன்பைப் பரிசளிக்கிற ஓர் ஆன்மாவைப் பற்றித்தான் ரூஹ் முழுக்கப் பேசுகிறது.
ரூஹ் தரும் அன்பை அடைவதற்கான நெடும்பயணம் ரம்மியமானது. அவமானங்களோடு, இழப்புகளோடு, இயலாமைகளோடு அலைந்து திரிந்து, உலகம் எனும் அற்பத்தை மறந்து, கடலில் கரைந்து விடுகின்ற பொழுது — கடலோடு சேர்ந்து நிலமும் வானும் நட்சத்திரங்களும் ஒளிர்கின்ற பச்சை நிறம் தான் ரூஹ்.
லஷ்மி சரவணகுமாரின் தேடலும் முயற்சியும் இலக்கியப் படைப்புகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
user_11112
★ 4/5 Feb 02, 2026இது ஒரு விமர்சனம் என்பதை விட, புத்தகத்தை வாசிக்கும் போது என்னை நகர வைத்த அல்லது 'அட!' என்று சொல்ல வைத்த அல்லது 'ஆமால்ல!!' என்று சரணடைய வைத்த வார்த்தைகளின் தொகுப்பு.
ஆசிரியர் புத்தகம் முழுவதும் எளிய ஆனால் சக்திவாய்ந்த வார்த்தைகளை விதைத்திருக்கிறார். அவை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாமல், கதாபாத்திரங்களின் இயல்பான உரையாடல்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் அழகாக வெளிவருகின்றன.
"பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை."
"பயப்படத் துவங்கும் மனிதன் அதிலிருந்து மீள்வதற்குப் பதிலாக ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கென தனது பயங்களை அதிகமாக்கிக் கொள்கிறான்."
"இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள். சக மனிதனின் அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள் தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது."
"மனித உயிரின் இயக்கத்திற்கு ஈரமிக்க சொற்கள்தான் உரங்களாகின்றன."
"வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது."
user_11111
★ 2/5 Feb 02, 2026ஜோதிலிங்கம் சிறு வயதிலே நண்பர்களின் கேலிக்கும், குடும்பத்தினரின் வெறுப்புக்கும் ஆளானவன். அவனிடம் அன்பு காட்டிய ஒரே உயிர் ராபியா. பல வருடங்களுக்குப் பின் ஜோதியின் செயல்கள் ராபியாவையும் அவனை வெறுக்க வைக்கிறது. தன்னை நேசித்தவரே வெறுத்தவுடன் வாழ்வில் பற்றற்று, தன்னை மறந்து இறை ஒளி நோக்கி நகரும் ஜோதிலிங்கத்தின் கதை இது.
பேராசை, கெட்ட எண்ணங்களை உதிர்த்துவிட்டு சக மனிதனிடம் அன்பு கொள்ளுங்கள் என்பதை உணர்த்தும் நாவல் ரூஹ்.