Reviews for நிர்வாண நகரம் [Nirvana Nagaram]

22 reviews total

user_11007

★ 3/5 Feb 02, 2026

மூன்று கொலைகள், மூன்றிலும் போலீசுக்குக் கிடைக்கும் ஜீவராசி என்ற பெயருடன் வரும் கடிதம். ஜீவராசி என்று புனைபெயர் வைத்தவனின் பெயர் சிவராஜ் அல்லது ராஜீவ் என்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையுடன் நாமும் பயணிக்க வேண்டியிருக்கிறது. வேறு கோணத்தில் ஏன் சிந்திக்கவில்லை என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கமான சுஜாதா நாவல்களுடன் ஒப்பிடும்போது இது சற்றே தோய்வான எழுத்துநடை போலத் தோன்றியது. பாதி கதைக்கு மேல் கணேஷ், வசந்த் வந்த பிறகே கதை விறுவிறுப்பு கூடுகிறது. இவ்வளவுதானா சுஜாதாவிடம் என்று நினைக்கையில், முடிவில் ஒரு எதிர்பாராத திருப்பம் — இதுதான் சுஜாதா என்று உணர்த்துகிறது.

user_11006

★ 5/5 Feb 02, 2026

பல வருடங்களுக்குப் பிறகு த்ரில்லர் நாவல் படித்தேன். இது என்னுடைய பதின்ம வயதுக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது. அப்போதைய த்ரில்லர் நாவல்களில் ஒவ்வொரு எழுத்தாளரும் முதன்மைக் கதாபாத்திரங்களின் பெயரையே பல நாவல்களில் பயன்படுத்துவார்கள் — பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்-சுசீலா, சுபாவின் நரேன்-வைஜெயந்தி, ராஜேஷ்குமாரின் விவேக்-ரூபலா, சுஜாதாவின் கணேஷ்-வசந்த் போல.

இந்நாவலில் கணேஷ்-வசந்த்தைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. 1980களில் தொடராக வெளிவந்த இந்த த்ரில்லர் நாவலில் கொலைகள், அவற்றில் உள்புகுந்து விளையாடும் சிவராஜ், துப்பறிந்து கண்டுபிடிக்கும் கணேஷ்-வசந்த் என விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரே மூச்சில் முடிக்கக்கூடிய சுஜாதாவின் எழுத்துநடையே நமக்கான ஆக்சிலரேட்டர். 1980 காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும், கம்ப்யூட்டர், ஐபிஎம், பஞ்ச் கார்ட் போன்ற குறிப்புகள் இருப்பதால் தற்போதைய வாசகர்களுக்கும் அந்நியமாகத் தெரியாது. 90s கிட்ஸ் மற்றும் புதிய வாசகர்களுக்கு சுஜாதாவின் எழுத்தை அனுபவிக்க ஏற்ற நாவல்.