Reviews for எரியும் பனிக்காடு

30 reviews total

user_10243

★ 5/5 Feb 02, 2026

வாழ்வாதாரத்தைத் தேடிப் புறப்பட்ட பயணம் வாழ்வையே முடிக்க நினைக்கும் பல சிக்கல்களைக் கொண்ட முடிச்சுக்களாக அமைந்தால், அதைப் பொறுமையாக அவிழ்ப்பதற்குள் வாழ்வே முடிந்துவிடுகிறது.

சகமனிதனையே ஆளும் மிகப்பெரிய சக்தியாக மற்றொரு மனிதன் உருவாகும் போது இரத்த சுவடையே விட்டுச் செல்கிறான் வரலாறாக.

வானம் பொய்த்துப்போக வயிற்றுப்பாட்டுக்காக வேலைத் தேடி அலையும் கருப்பனைப் பசப்பு வார்த்தைகளால் கட்டி மனைவியுடன் எஸ்டேட் வேலைக்கு அழைத்துவரும் மேஸ்திரி. எந்த வகையான வசதிகளும் இல்லாத குடியிருப்பு, உடலை உருக்கியெடுக்கும் வேலைகள், உயிரைப் பலிகொள்ளும் நோய்கள்.

மூன்று வருடம் போராடியும் கையில் காசு சேர்க்க முடியாமல் துடிப்பவன் மனைவியையும் நோய்க்குப் பலி கொடுத்த பிறகு, சாவகாசமாக அழக்கூட விடாமல் வேலை அழுத்தம் கொடுக்கிறது.

இனிமை கூட்டுவதற்குப் பின்னே ஒளிந்திருக்கும் கசப்பு எப்பொழுதும் மறைக்கப்படுவதிலே அதன் சுவை கூடுகிறது.

user_10242

★ 5/5 Feb 02, 2026

இணையம் முழுவதும் தேடி, அதிர்ஷ்டவசமாக இந்த அற்புதப் படைப்பின் ஒரு பிரதியைப் பெற்றேன்.

மொழிபெயர்ப்பு: இரா.முருகவேள் அவர்களுக்குப் பெரும் பாராட்டுகள். தென் தமிழ்நாட்டு வட்டார வழக்கின் நுட்பங்களையும், சொல்லுக்குச் சொல் அற்புதமான மொழிபெயர்ப்பையும் தந்துள்ளார். மொழி அழகாகப் பாய்ந்தது — ஆனைமலை மலைகளின் ஊசிமுனை வளைவுகளையும், திருநெல்வேலி கிராமவாசிகளின் எளிய வாழ்க்கையையும் கண்முன் காண முடிந்தது.

புத்தகம்: புனைவாக இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறை அன்றாட வாழ்வில் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பேசும் முக்கியமான இலக்கியப் படைப்பு இது.

திரைப்படம்: பரதேசி திரைப்படம் கதையின் சாரத்தை எடுத்து இயக்குனர் பாலா தன் பார்வையில் விரிவுபடுத்தினார் — அதிலும் தவறில்லை.

கடினமான வாசிப்பு — ஒவ்வொரு பக்கமும் கடினம்தான், ஆனாலும் முடிக்காமல் இருக்க முடியவில்லை. கொத்தடிமைத் தொழிலாளர்களாக நம் முன்னோர்கள் அனுபவித்த கஷ்டங்களை அறிந்து சக்தி பெற்றேன். இன்னும் படிக்காவிட்டால், தயவுசெய்து படியுங்கள். இப்போதே.

user_10241

★ 5/5 Feb 02, 2026

இந்த நெஞ்சை உருக்கும் நாவல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 1900களின் முற்பகுதியில் நிகழ்கிறது. தேயிலைத் தோட்டங்களில் முதன்மை மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் டேனியலின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டிஷ் ஆளுமையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் துரதிர்ஷ்டமானதாக இருந்தது.

தென் தமிழ்நாட்டின் கிராமங்களிலிருந்து பட்டினியில் வாடிய ஏழை மக்களை கங்காணிகள் ஏமாற்றி, மூனார் மற்றும் வால்பாறை போன்ற மலைப்பகுதித் தேயிலைத் தோட்டங்களுக்கு இடம்பெயர்க்கச் செய்தனர். நல்ல சம்பளம், தங்குமிடம், மருத்துவ வசதி என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சென்றதும் அவர்களின் வாழ்க்கை சீரழிந்தது — சிக்கிக் கொண்டனர், அடிமைகளானார்கள்.

சரியான தங்குமிடமோ, மருத்துவ வசதியோ, அடிப்படைத் தேவைகளோ இல்லை. பலர் நோயால் இளம் வயதிலேயே இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்தனர், ஆனால் சிலரே உயிர் பிழைத்தனர். இறுதியில் கதாநாயகன் உணர்கிறான் — இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் தன் மகளையும் மனைவியையும் இழந்திருக்க மாட்டான் என்று. ஆனால் நேரம் கடந்துவிட்டது.

கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான படைப்பு. கடைசிப் பக்கத்தை வாசிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாது.

user_10240

★ 5/5 Feb 02, 2026

"உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன்தான். திட்டமிட்டுத் தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்."

புதினம் முழுவதும் இந்த வாசகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, நம் மக்களும் தங்களுடைய சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தி அப்பாவி மக்களுக்குச் செய்த கொடுமைகள் சொல்லில் அடங்கா.

தேயிலைத் தோட்டங்கள் = பன்னாட்டு நிறுவனங்கள்
கங்காணிகள் = மேலாளர்கள்
கூலிகள் என்றுமே கூலிகளாகவும்

இந்தப் புதினம் புதிய பரிமாணத்துடன் இன்றும் தொடர்கிறது.

user_10239

★ 4/5 Feb 02, 2026

ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எழுதப்படும் இலக்கியப் படைப்புகளில் உண்மையும் புனைவும் கலந்து படைக்கப்பட வேண்டுமா, அல்லது உண்மையை மட்டுமே உள்ளபடி எழுத்துவடிவில் வெளிக்கொணர்ந்தால் போதுமானதா என்ற தர்க்கம் இலக்கிய உலகில் நிலவுவது உண்டு. இதற்கான பதில் அதனை எழுதுவது யார் என்பதில்தான் அடங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த எரியும் பனிக்காடு வெறும் சரித்திரப் பதிவாக மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக விளங்குவதற்குக் காரணம் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால்தான். இதனை எழுதிய பி.எச்.டேனியல் பாதிக்கப்பட்டவர்கள் வலிகளை நேரில் பார்த்தவர் என்பது அவருடைய படைப்பில் தெளிவாகத் தெரிகிறது. மொழிபெயர்ப்பு நூல் என்று எங்குமே சுட்டிக்காட்ட முடியாத வண்ணம் சிறப்பான மொழிபெயர்ப்பு.

கதையின் முதல் அத்தியாயத்திலே கருப்பன்-வள்ளி குடும்பத்தின் வறுமை நம்மையும் சூழ்ந்துகொள்கிறது. ஆனைமலை எஸ்டேட் வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாலும், அவர்கள் ஏமாற்றப்படப் போகிறார்கள் என்று நம் மனது தடுத்து நிறுத்தத் துடிக்கிறது. நூற்றுக்கணக்கில் ஏழை மக்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விலங்கை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.

உரைப்பணி, ஈரத்தில் ஊறிய கால்கள், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள், கொட்டும் மழையிலும் ஒற்றை கோணி சாக்குடன் வேலை, தரமில்லா உணவுப்பொருட்கள், உயிரைக் கொல்லும் மலேரியா, நிமோனியா, மருத்துவன் என்ற பெயரில் ஒரு கம்பௌண்டர் — நினைத்துப் பார்க்க முடியாத சூழலில் தினமும் 12-14 மணிநேர வேலை.

ஒரு பெண்ணிற்கு தன் வாழ்வில் இரண்டு முறை புதுச்சேலை கிடைத்தது — ஒன்று அவள் திருமணத்திற்கு, மற்றொன்று அவள் பிணத்திற்கு.

இந்தப் படைப்பு சிறந்து விளங்குவதற்கு இன்னுமொரு காரணம், பாதிக்கப்பட்டவர்களாகக் கூலிகளை மட்டுமே சித்தரிக்காமல், கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்ட இந்தியர்களும் எவ்வாறு ஆங்கிலேயர்களால் அடக்கியாளப்படுகிறார்கள் என்பதையும் கதை விரிவாக விவாதிக்கிறது.

வள்ளியின் இறப்பிற்குப் பின் கருப்பனுக்கு உண்டாகும் தனிமை வாசிக்கும் நம்மையும் சூழ்ந்துகொள்கிறது. பனிக்காடுகளில் வறுமையின் தீயில் அணுஅணுவாக எரிந்த நம் மக்களின் வலிமிகுந்த நினைவுகள் இன்றும் அந்தக் காடுகளிடையே அலைந்துகொண்டுதான் இருக்கும்.

user_10238

★ 3/5 Feb 02, 2026

இந்த நாவல் மிகவும் புகழ்பெற்றது என்பதால் இதைப் பற்றிக் கூறப் பெரிதாக ஒன்றும் இல்லை. புத்தகம் வாசிக்கக்கூடிய அனைவரும் அறிந்த கதைதான். ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்களை ஆரம்பித்தபொழுது வறுமையில் வாடிக்கொண்டிருந்த தமிழர்களைக் கூலிகளாக, சொல்லப்போனால் அடிமைகளாக அழைத்துச் சென்று இரவு பகலாக வேலை வாங்கினார்கள். முறையான கூலியோ தங்கும் இடமோ எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிருகங்களைப் போல் ஒரே வீட்டில் நான்கு ஐந்து குடும்பங்களை அடைத்துவைத்து பதினாறு பதினெட்டு மணிநேரம் வேலை வாங்கி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சினார்கள்.

கூலிகள் மலேரியாவால் கொத்துக்கொத்தாக மடிகிறார்கள். அதைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாத வெள்ளை அரசு அதிகாரிகள் மேலும் மேலும் கூலிகளைக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பக்கம் வெள்ளையர்கள் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள், இன்னொரு பக்கம் தேயிலைத் தோட்டங்களில் அட்டைப் பூச்சிகள் உறிஞ்சுகின்றன.

ஒவ்வொரு ஐந்து தேயிலைச் செடிகளுக்கும் ஒரு கூலியைப் பலியாகக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் செத்து மடிகிறார்கள். தப்பி ஓடும் கூலிகள் அகப்பட்டால் அடித்துக் கொல்கிறார்கள். சட்டப்படியே அவர்களைப் பிடித்துக் கொண்டுசெல்ல உரிமை இருந்தது.

அந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதற்கு அடையாளமாக ஒரே ஒரு இடத்தை மட்டும் சொல்கிறேன் — ஒரு கூலித் தொழிலாளி பெண் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்றால், அவளைக் கட்டிப்போட்டு வயிற்றின் மீது ஏறி மிதிக்கிறார்கள். மனிதக் கொடூரத்தின் உச்சம்.

நீங்கள் பருகும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் எங்கள் குருதியின் வாடை வீசுகிறது.

user_10237

★ 3/5 Feb 02, 2026

இது ஒரு வரலாற்று நாவல் என்று சொல்லலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றி, தங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றி, நவீன யுக முதலாளித்துவ அடிமைத்துவத்தைத் தொடங்கி வைத்தார்கள். மனிதர்களின் வறுமையைப் பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி, கடன் வலையில் சிக்க வைத்து நிரந்தர அடிமைகளாக மாற்றுவது எப்படி என்பதன் தொடக்கம் அதுவாகத்தான் இருக்கும். பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரைப் பலிகொண்டுதான் இந்தத் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன என்று சொன்னால் மிகையில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அதேசமயம் 250 பக்கங்களில் இந்த நாவலைச் சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தேவையற்ற சில உரையாடல்களை, எழுத்தர்களுக்கு இடையிலான நீண்ட உரையாடல்கள் போன்றவற்றைச் சுருக்கியிருக்கலாம். ஆனாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரைப் பதிவு செய்ததில் இது ஒரு முக்கியமான நாவல்.

user_10236

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்றாகும். இது வள்ளி மற்றும் கருப்பன் பற்றியது. தேயிலைத் தொழிலாளர்களின் கஷ்டம், ஏமாற்றம், வறுமை, காதல், கேலி, கோபம், பயம், இல்லாமை, அவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை எனப் பலவற்றை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

user_10235

★ 5/5 Feb 02, 2026

இங்கு படிக்கும் அத்தனை வார்த்தைகளும், திராவிட, பெரியாரிய, இடதுசாரிய சித்தாந்தங்களாலும், கால்டுவெல் வகையறாக்களாலும், எவருக்கெல்லாம் வெள்ளைக்காரனால் பயன் இருந்ததோ அவர்களாலும், தற்போது எழுதப்படும் தலித் இலக்கியங்களின் மறு உருவாக்க மூலமாகவும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்யான பிம்பங்களை இந்நாவல் தவிடு பொடியாக்கி விடுகிறது.

இந்நாவலை வாசிக்கும் கணம் வெள்ளையர்களின் எச்சங்களாக மீதமிருப்பவைகளைப் பார்க்கும் போது, கடித்து உறிஞ்சும் அட்டையைப் போல் இரத்தம் முழுதும் உறிஞ்சிய பின்னான வடுக்களாகவே அவை பிரதிபலிக்கின்றன.

எள்ளளவும் மனிதக் கருணையற்ற பாவிகளால் அறியாமையில் இருக்கும் பரிதாபப்பட்ட பல மக்களை வஞ்சித்துக் கொழுத்ததும் இல்லாது மனித நேயமற்ற வாழ்வை எந்தவொரு கூச்ச நாச்சமில்லாது அளித்தவர்களைப் பற்றிய விவரணைகளே.

கதையின் காலக்கட்டம் 20ம் நூற்றாண்டு தொடக்கம். பெரும் அறிவியல் புரட்சிகள் இந்த நூற்றாண்டில் இருந்தாலும் எப்படி ஒரு காட்டுமிராண்டி கூட்டம் மக்களை வதைத்து இன்பம் கண்டது என்பதை கதையினூடாக ஊகிக்க முடியும்.

ஒரு சமூகத்திற்கு இன்னொரு சமூகம் குறைந்தபட்ச எதிரிகள்தான். அதை விடக் கொடுமையானவர்கள் சொந்த சமூகத்திலிருப்பவர்கள் என்பதை கருப்பன், வள்ளி வாழ்க்கை சங்கர பாண்டியன் மேஸ்திரியால் நிர்ணயிக்கப்பட்டு அழிவதைப் படித்து மனம் கலங்கிப் புழுங்க வைக்கிறது.

ஒரு கட்டத்தில் புத்தகத்தை வாசிக்காமல் வைத்துவிடலாம் என்றே தோன்றியது. வாசிப்பதற்கான மனோதிடம் அவசியத் தேவை இந்நாவலுக்கு. மொழிநடை மிகச் சிறப்பு. ஆனைமலை தேநீர் தோட்டங்களையும், அதன் ஓயாத இயற்கைத் துயரங்களையும், அதில் பாடுபடும் விளிம்புநிலை மனிதர்களையும் கண்முன் நிறுத்திவிடுகிறது கண் கலங்க வைக்கும் புதினமே.

ஒவ்வொரு முறை தேநீர் பருகும் போது மண்ணுக்குள் புதையுண்ட மனிதக் குவியல்களால் செழிப்பாக வளர்ந்திருக்கும் இந்தத் தேநீர் தோட்டத்தின் கதையே படிப்பவர்களின் மனக்கண்முன் நிற்கும்.

user_10234

★ 4/5 Feb 02, 2026

இனிமேல் நான் தேநீர் அருந்தும் போதெல்லாம், அது கருப்பு தேநீர் அல்ல, பால் தேநீர் அல்ல, பச்சை தேநீர் அல்ல — அது சிவப்பு தேநீர் என்பது என் நினைவில் நிற்கும். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருண்ட தேயிலைத் தோட்டங்களின் நிலை மிகவும் பயங்கரமானது. பரதேசி திரைப்படம் இந்த நாவலின் சொந்த பதிப்பைச் சிறப்பாகவே சித்தரித்தது என்று நான் நம்புகிறேன். ஆனால் பாலா, மருத்துவரின் கதாபாத்திரத்தை ஒரு வெறிகொண்ட கிறிஸ்தவ மிஷனரியாகக் காட்டி அந்தப் பாத்திரத்தைக் கொன்றுவிட்டார்.