Reviews for நந்திபுரத்து நாயகி
20 reviews total
user_10210
★ 4/5 Feb 02, 2026பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக விக்கிரமன் எழுதிய இந்நாவல், குந்தவை, அருள்மொழி, வந்தியத்தேவன், பழுவேட்டரையர் போன்ற பழைய கதாபாத்திரங்களை மீண்டும் சந்திக்கும் இனிமையை அளிக்கிறது. ஆசிரியர் தனது சொந்த நடையில் அசல் கதையின் வேகத்தை தக்கவைக்க முயன்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக படிக்க நன்றாக இருக்கிறது.
user_10209
★ 4/5 Feb 02, 2026அமரர் கல்கி பொன்னியின் செல்வனை முடிக்கும்போது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார். அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும் பார்த்திபேந்திரனையும் கொண்டுவந்து நிறுத்தி அற்புதமான நாவலாக எழுதியுள்ளார் விக்கிரமன்.
user_10208
★ 3/5 Feb 02, 2026கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லையென்றால் இந்தப் புத்தகத்தின் மதிப்பு பூஜ்யம். ஏற்கனவே நந்திபுரத்து நாயகி குறித்த கருத்துக்களைப் பார்த்தும் படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவது கல்கியின் படைப்புகள்தான்.
மூன்று நான்கு முறை புத்தகத்தைப் படிப்பதை இடையில் நிறுத்திவிட்டு வேறு படைப்புகளில் கவனம் செலுத்தி ஒருவழியாக முழுமையாகப் படிக்க முடிந்தது. கதையில் ஏற்படும் தொய்வே காரணம் - ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருந்தாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை.
சுருங்கக் கூறின், கடல்கடந்து சென்ற அருள்மொழி மீண்டும் தஞ்சை வந்து குழப்பங்களுக்குத் தீர்வு கண்டு இறுதியில் அரசனாக முடிசூட்டிக்கொள்கிறார். அவ்வளவுதான்.
பின்னடைவுகள்: அளவுக்கு அதிகமான வர்ணனைகள், குறிப்பாக இன்பவல்லியை ஒவ்வொரு முறையும் வர்ணிப்பது சலிப்பை உண்டாக்கும். மூன்று பாகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் கதையை நீட்டியிருப்பது பல இடங்களில் தெரிகிறது. ராஜராஜனின் முக்கிய வரலாறான பெரிய கோவில் பற்றி சிறிதளவும் எழுதப்படவில்லை.
சில கதாபாத்திரங்களின் மர்மங்கள் கடைசி வரை வெளிப்படுத்தப்படவில்லை. கலையுள்ளம் கொண்ட பெரியவர் யார் என்று சொல்லவேயில்லை. இவர்கள் இல்லையென்றால் ஒரு பாகத்தில் முடிக்கப்பட வேண்டிய படைப்பு. பொன்னியின் செல்வனின் உயரத்தைத் தொட முடியாத முயற்சி.
user_10207
★ 1/5 Feb 02, 2026ஆதித்த கரிகாலனின் படுகொலை பற்றிய விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் ஏமாற்றமாக, பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட அதே உண்மைகள் இங்கும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளன.
ராஜராஜ சோழனின் வீரமும் அரசியல் தந்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது தோற்றமும் பெண்கள் மீதான காதலும் அதிகம் பேசப்பட்டுள்ளன. பார்த்திபேந்திரன் நடத்திய போர் மிகவும் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுடனான போர் அல்லது வந்தியத்தேவன் கடற்கொள்ளையர்களை வீழ்த்துவது போன்ற காட்சிகள் இருந்திருந்தால் மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
இயற்கை, கலை, காதல் ஆகியவற்றின் விரிவான வர்ணனைகள் விரும்புவோருக்கு இந்நூல் பிடிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக, கதைக்களத்தில் பலவீனமும் தேவையற்ற பாத்திரங்களும் நிறைந்துள்ளன.
user_10206
★ 5/5 Feb 02, 2026பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியான இந்த நாவல் ராஜராஜ சோழனின் கதையைச் சொல்கிறது. மிக அருமையான நாவல். வந்தியத்தேவனும் குந்தவையும் என்றும் எனக்குப் பிடித்தமான கதாபாத்திரங்கள்.
user_10205
★ 5/5 Feb 02, 2026மிகவும் பிடித்திருந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக இந்த நாவலை ரசித்துப் படிக்கலாம்.
user_10204
★ 2/5 Feb 02, 2026மூன்று தொகுதிகளில் 1262 பக்கங்கள் கொண்ட இப்புதினம், பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக விக்கிரமனால் படைக்கப்பட்டது. கல்கி தனது புதின முடிவுரையில் குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுசிறு சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.
கடல்கடந்து சென்ற அருள்மொழி வர்மர் சீன வணிகர் வேடத்தில் காஞ்சிக்குள் நுழைகிறார். வல்லவராயர் வந்தியத்தேவர் ஆதித்த கரிகாலனைக் கொன்ற குற்றவாளியாக தஞ்சை சிறையில் அடைக்கப்படுகிறார். பார்த்திபேந்திர பல்லவன் சூழ்ச்சி என தெரிய வந்ததும் விடுதலையாகி குந்தவையை மணக்கிறார். பார்த்திபேந்திரன் பல்லவத்தை மீண்டும் சுதந்திர நாடாக்க படையெடுத்து வேளக்காரப்படையால் கொல்லப்படுகிறான்.
கற்பனையாக, கடல்கடந்து செல்லும் அருள்மொழி முல்லைத்தீவில் இன்பவல்லி என்ற பெண்ணைச் சந்தித்து அவளது நாட்டியத்தில் மனதைப் பறிகொடுக்கிறார். பின்னர் தான் கட்டவிருக்கும் பெரியகோவிலின் சிற்பங்களுக்காக நடன அரசியாகி கலையை வளர்க்கக் கோருகிறார்.
குறைகள்: நந்திபுரத்து நாயகி என்பது குந்தவையைக் குறித்தாலும் அவர் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை. வந்தியத்தேவன் பாத்திரமும் வீணடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்திலேயே முடித்திருக்கலாம் - மூன்றாவது பாகம் சரியான இழுவை. இன்பவல்லி கற்பனை பாத்திரம் கதைப்போக்குடன் ஒட்டாமல் தனியாகத் தெரிகிறது. ஆனைமலைக்காட்டில் படைதிரட்டும் அமரபுஜங்கன் கதையை ஆசிரியர் பிற்பகுதியில் தொடாமலே விட்டுவிடுகிறார்.
பொன்னியின் செல்வனின் உயரத்தைத் தொட முடியவில்லை. இரு பாகங்களில் முடித்திருக்கலாம்.
user_10203
★ 3/5 Feb 02, 2026கதை அமரகாவியமான பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி. இளையபிராட்டி குந்தவை தேவி கதையின் நாயகி. தனது சொந்த வாழ்விலும் சோழநாட்டிலும் ஏற்படும் இன்னல்களை வல்லவரையரின் இல்லத்தரசி என்ற முறையில் கையாள்கிறாள் என்பதுதான் கதையின் மையப் புள்ளி.
முதல் இரண்டு பாகங்கள் வேகமாக நகர்ந்தன. இறுதிப்பாகம் ஒரே இழுவை. காளாமுகன் என்று சிவனடியாராக மாறுவேடமணிந்த சோழ நாட்டின் முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயர் எதைச் சாதித்தார் என்பது பெரிய கேள்வி. வில்லன் ரவிதாஸன் படைப்பில் உள்ள பயங்கரத்தை வார்த்தைகளில் விவரித்துவிட்டு அவன் ஈடுபடும் காரியங்களால் வாசகர்கள் அச்சமுறவில்லை என்பது ஆசிரியருக்கு மிகப் பெரிய வழுக்கல்.
இறுதிப் பக்கங்களில் இன்பவல்லியின் ஏக்கங்களை அளவுக்கு அதிகமாக விவரித்திருப்பதால் பெருமூச்சு விட்டுக் கொண்டே பக்கங்களை நகர்த்துகிறோம். அமரபுஜங்க பாண்டியன் சேர மன்னனிடம் சோழ நாட்டை எதிர்க்க உதவி கோருகிறான். சேரமன்னரின் புதல்விக்கும் அமரபுஜங்கனுக்கும் காதல் மலர்கிறது. ஆனால் இந்தப் பழிவாங்கும் படலம் கதையில் விவரிக்கப்படவில்லை.
நந்தினியும் யாரென்பது தெளிவாக்கப்படவில்லை. இதற்கு முன்னோடியான கல்கியின் பொன்னியின் செல்வன் அமரகாவியமாக இன்றும் எப்பொழுதும் திகழும் என்பதுதான் நந்திபுரத்து நாயகி நமக்கு அளிக்கும் செய்தி!
user_10202
★ 2/5 Feb 02, 2026வானதிதேவி மூர்ச்சையடைந்த செய்தி கேட்ட அருள்மொழி, இன்பவல்லியின் அழகுக்கும் பஞ்சவன் மாதேவியின் அழகுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எண்ணலானார் - என்ன சொல்ல வருகிறார்?
அருள்மொழி, குந்தவை, வந்திய தேவன் - இந்த மூன்று பெயர்கள் மட்டும் இல்லையென்றால் இப்புதினம் படிப்பதை பாதியிலே நிறுத்தியிருப்பேன். கல்கியின் இம்மூன்று கதாபாத்திரங்களுக்கும் இந்நாவல் ஆசிரியரின் கதாபாத்திரங்களுக்கும் ஒரே ஒற்றுமை பெயர் மட்டும் தான். கல்கியின் அழகிய கதாபாத்திரங்களை இன்னும் யார் யாரெல்லாம் நாசமாக்கப் போகிறார்களோ!
user_10201
★ 3/5 Feb 02, 2026தமிழில் உள்ள பெரும்பாலான சரித்திர நாவலாசிரியர்களிடம் ஏதாவது ஒரு வகையில் கல்கி மற்றும் அவருடைய பொன்னியின் செல்வனின் பாதிப்பு இருக்கும். அந்த மகா உன்னதமான நாவலில் வேண்டுமென்றே பல ரகசியங்களை வெளிப்படுத்தாமல் முடித்திருப்பார் கல்கி. இதன் காரணமாக சில ஆசிரியர்கள் அந்த நாவலின் தொடர்ச்சியை தனி நாவலாக எழுதியுள்ளனர். இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்தது. பொன்னியின் செல்வனின் தொடர்ச்சிதான் நந்திபுரத்து நாயகி.
இந்த ஆசிரியர் கவிஞரும் கூட. அதனால் கதையின் பல பகுதிகள் கவிதை நடையில் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் கவிதை நடையும் அனாவசிய உவமை நடையும் கதையின் வேகத்தைத் தடைப்படுத்துகின்றன. இந்த கதையை இன்னும் சுருங்கச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து. பல பக்கங்களை ஆசிரியர் வீணடித்து விட்டார்.
கதையின் நடையில் போக்கு சீராக அமையவில்லை. சுமாராக தொடங்கும் நாவல் விறுவிறுப்பாக மாறி மீண்டும் சுமாராகப் பயணித்து சப்பென முடிகிறது. முதல் 70-80 பக்கங்களில் கதையை கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் மூலம் தெரியப்படுத்துவது கதையின் பலவீனம்.
கதையில் பல பாத்திரங்கள். வாசகர்கள் குழம்பினால் தவறில்லை; ஆனால் கதாசிரியரே பாத்திரங்களின் உறவு முறைகளில் குழம்பிவிடுகிறார். மதுராந்தக சோழனுடைய மகன் மதுரன் அக்காள் முறையான குந்தவையை அத்தை என்று விளிக்கிறான். தன்னுடைய சிற்றன்னையின் தங்கையை காதலிக்கிறான். ஆசிரியர் ஏன் இப்படி கோட்டைவிடுகிறார்?
யார் நந்திபுரத்து நாயகி? இக்கதைப்படி குந்தவை. அவளா கதாநாயகி? இல்லை - இன்பவல்லி என்ற கற்பனைப் பாத்திரம். பின் ஏன் இந்தத் தலைப்பு? போதாத குறைக்கு தலைப்புக்கு நியாயம் சேர்க்கவோ என்னவோ, பழையாறையை நந்திபுரம் என்ற பெயரில் பலர் தேவையின்றி குறிப்பிடுகின்றனர்.
பல சம்பவங்கள் நம்ப முடியாதவை. அநிருத்த பிரம்மராயரின் மாறுவேடத்தை பெரிய மர்மம் போல கடைசி வரை கொண்டு செல்வதும் வாசகர்கள் யாரும் ஊகித்திருக்கமாட்டார்கள் என்று ஆசிரியர் நம்புவது பெரிய நகைச்சுவை.
மொத்தத்தில் நல்ல தமிழ் தெரிந்த ஆனால் கதையை சரியாகக் கையாளத் தெரியாத ஆசிரியரால் படைக்கப்பட்ட கதை இது.