Reviews for தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]

10 reviews total

user_9665

★ 5/5 Feb 02, 2026

இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம், இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப-வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டுமல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை இதுவரை அறிந்திராத கோணத்தில் புரிந்துகொள்ள முடியும்.

நாட்டார் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கும் தெய்வங்களாக இல்லாமல் பெரும்பாலும் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் தரித்த, மக்களைக் காக்கும் கோபம் கொண்ட தெய்வங்களாகவே உள்ளன. இந்தக் கோயில்கள் பெரும்பாலும் வடக்கு திசை நோக்கி இருக்கக் காரணம் — பகைவர்கள் வடக்கிலிருந்து மட்டுமே வரமுடியும், எனவே தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்தி வடதிசை நோக்கி நிற்கிறது.

நீலியின் கதை, அரசிகளின் பள்ளிப்படைக் கோயில்கள், வள்ளி, நயினார் நோன்பு, சமணப்பள்ளி, வள்ளலார், ஆழ்வார் பாடல்கள், சடங்கியல் தலைமை, சாதிப் படிநிலை எனப் பல கருத்துக்களை இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமே தொ.ப-வின் புத்தகத்தில் உள்ள பல்வேறு தகவல்களை உள்வாங்க முடியும்.

user_9664

★ 4/5 Feb 02, 2026

மிகச்சிறந்த ஆய்வுகளுடன் கூடிய சிறப்பான புத்தகம். சைவம், சமணம், வைணவம் மற்றும் அனைத்துத் தமிழ்ச் சமயங்களின் வழிபாட்டு முறைகள் பற்றியும், முருகன் பற்றிய வரலாற்று உண்மைகளையும் நமக்குத் தருகிறார் பரமசிவன் ஐயா.

ஒரு நாத்திகனாகக் கடவுள் வழிபாட்டைப் பற்றி ஒரு நாத்திகரின் மூலமே அறிந்ததில் பெருமிதம்.

user_9663

★ 5/5 Feb 02, 2026

தெய்வம் என்பதோர் நூலில் வரலாற்றில் சில குழுக்களால் அரசியல் நலன்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட உண்மைகள் குறித்த ஆழமான ஆராய்ச்சி உள்ளது. தொ. பரமசிவன் பல ஆண்டுகால ஆய்வின் மூலம் நம்பகமான தகவல்களைத் தொகுத்துள்ளார்.

உங்கள் வேர்களை அறிய விரும்பினால், நாம் வழக்கமாகச் செய்யும் சடங்குகளின் மூலத்தை அறிய விரும்பினால், இந்தப் புத்தகத்தை கட்டாயம் வாசியுங்கள். தொ.ப போன்ற ஆசிரியர்களின் பல ஆண்டு ஆராய்ச்சிப் பணி பாராட்டுக்குரியது!

user_9662

★ 4/5 Feb 02, 2026

ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து, ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டெழும் நாட்டார் தெய்வங்களைப் பெரியார் எதிர்கொள்ளவில்லை. மாறாக, அதிகார மையமாகிய கோயில்களையும் அதை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்.

தெய்வங்களிலும் மேல்-கீழ் காட்டுவதற்கு முருகனின் இருபுறமும் மனைவியர் நிற்கும் சிற்பங்களில் தெய்வானைக்கு மட்டும் மார்புக் கச்சு இருப்பதைக் காணலாம்.

user_9661

★ 5/5 Feb 02, 2026

நிச்சயமாக ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். தமிழ் மக்களின் சமயம் மற்றும் பண்பாடு குறித்த ஆழமான பார்வையை இந்நூல் வழங்குகிறது. தொ.ப-வின் பகுத்தறிவுப் பார்வையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, எல்லாமே உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை.

user_9660

★ 3/5 Feb 02, 2026

வைதீகத்தைப் பின்பற்றிச் சமூகத்தில் பாகுபாடு பார்க்கின்ற நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களே ஒதுக்கப்பட வேண்டியது, தமிழ்ச் சமூகத்தின் கடவுள் நம்பிக்கை அல்ல என்பதுதான் தொ.ப இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளில் சொல்லவருவது. துணைக்குப் பெரியாரையும் கூட்டிக்கொள்கிறார்.

மீனாட்சி, காமாட்சி, சமயபுரம் மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு பெருந்தெய்வங்களாக மாற்றம் செய்யப்பட்டன என்ற வரலாற்றையும் குறிப்பிட்டிருக்கலாம். இந்து மதத்தில் கரைந்து போன நாட்டார் தெய்வங்கள் பற்றி ஏற்கனவே தெளிவடைந்திருப்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தில் பெரிதாகப் புதிய தகவல்கள் இருக்காது.

user_9659

★ 5/5 Feb 02, 2026

தெய்வம் என்பதோர்... தொ.ப-விடமிருந்து மற்றுமொரு தகவல் களஞ்சியம். தெய்வங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய முடியாது என்று தொடங்கும் அவர், ஒற்றைத் தெய்வத்தை முன்னிருத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாகத் தமிழ் மக்கள் ஒரே ஊரில் பலவகைத் தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பதில் தொடங்கி, கொற்றவை எப்படி முருகனுக்குத் தாயாக்கப்பட்டாள், வள்ளி யார், தெய்வானை எப்படி முருகனுக்கு மனைவி ஆக்கப்பட்டாள் என விரிந்து...

பெரியார் ஏன் நாட்டார் தெய்வங்களை ஆதரித்தார், நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று மற்றும் பல கேள்விகளுக்குச் சுவாரஸ்யமாகப் பதில் அளித்திருக்கிறார். இறுதியாகப் பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரடியான வரைவிலக்கணத்தைத் தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கையுடன் முடிக்கிறார்! ஒவ்வொரு தமிழரும் அவசியம் வாசிக்க வேண்டிய தொ.ப-வின் படைப்பு.

user_9658

★ 4/5 Feb 02, 2026

யாவும் அறிந்த தெய்வங்களே! ஆனால் அதன் பின்னணி, வரலாற்றுச் சுவடுகளைக் கட்டுரைத் தொகுப்பாக விளக்கப்பட்டுள்ளது. நாட்டார் மரபு தெய்வங்கள், மேலோர்/பார்ப்பனர்களின் தெய்வங்கள், இவர்களுக்கிடையே உள்ள பாகுபாடுகள் அருமையாகப் பதிவிடப்பட்டுள்ளன.

கொற்றவை, அம்மன், பழையோள், கடல்கெழு செல்வி எனத் தாய்த்தெய்வங்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன என்று விறுவிறுப்போடு நகர்கிறது. நாட்டார் தெய்வங்கள் பற்றி விரிவாகப் படிக்க, இந்நூல் ஓர் முன்னுரையாக அமைகிறது.

user_9657

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் என் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தது. நூல்களைப் படிப்பதன் நோக்கமே பதில்களைத் தேடுவதுதான் என்று நம்புபவன் நான். அந்த வகையில் இது மிகவும் திருப்தியான வாசிப்பு அனுபவம்.

user_9656

★ 4/5 Feb 02, 2026

நிறுவனம் என்பதே அதிகாரச் சார்புடையது. எனவே அங்கு மேல்-கீழ் என்ற வரிசைமுறையுடன்தான் அதிகாரம் செயற்படத் தொடங்குகின்றது. அதிகாரத்தை நிலைப்படுத்த விரும்புகின்ற நிறுவனச் சமயங்களுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் உண்டு. முதலாவது ஒரு புனித நூல், இரண்டாவதாக விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூசை முறை, மூன்றாவதாகப் புனித இருப்பிடங்கள். இதுதான் இந்தப் புத்தகத்தின், தென்னகத்தின் அடிப்படை முடிச்சு.

இதுவரை வைதீக சக்திகள் இந்தத் தென்முனையைக் கடக்கமுடியாமல் நின்ற இடம். அதே வைதீக, வர்ணாஸ்ரம அடக்குமுறை சக்திகள் கடைசி தடையை மீறி இந்தத் தென்முனையில் கால் வைத்தாயிற்று என்று உரக்கக் காதில் ஒலிக்கும் வேளையில், மாற்றம் ஒன்றைத்தவிர வேறெல்லாம் மாற்றத்தின் காற்றில் கலைத்துப்போடப்படும் என்ற உண்மையை வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

காந்தியின் ஆகப்பெரிய ஆயுதம் பெரும்பான்மை மக்களை முக்கிய தேசிய நீரோட்டத்துக்குள் இழுத்து வந்ததுதான். அம்பேத்காரிய, தலித்திய, பெரியாரிய இயக்கங்கள் அப்படிப்பட்டவைதான். இறுதியாக எழுபது, எண்பதாண்டு கால முன்னேற்றத்தையும், காந்திய, அம்பேத்காரிய, பெரியாரிய இயக்க அரசியல் வரலாற்றையும் இப்படிப் பூச்சாட்டிக் கருவறைக்குள் அடைத்துக் கடந்து போவோமா?