Reviews for Pradhaba Mudhaliar Sarithiram
17 reviews total
user_9543
★ 3/5 Feb 02, 2026தமிழில் வெளியான முதல் நாவல் இது, 141 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. கடந்த மாதம் படிக்க ஆரம்பித்தபோது, விவரிக்கப்படும் வாழ்க்கை முறை, முன்வைக்கப்படும் கருத்துகள், எழுத்து நடை அனைத்தும் நவீன தமிழ் நாவல்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்ததால் ஆர்வம் குறைந்தது.
இது சிறுகதைகளும் அறிவுரைகளும் ஒரு காலவரிசையில் இணைக்கப்பட்ட கதை. ஆனால் தரத்தில் உயர்ந்தது. அக்காலத்தில் எழுதப்பட்ட முதல் படைப்பு என்ற மனநிலையோடு படித்தால் நல்ல வாசிப்பு அனுபவம். ஆசிரியர் வரலாறு, நெறிமுறைகள், சட்டம் பற்றி அதிகம் பேசுகிறார்.
அக்காலத்தில் முற்போக்கான சமூக சிந்தனைகளாக இருந்தவை இன்றைய உலகில் பொருத்தமாக இல்லாமல் போகலாம். Doctrine of Lapse பற்றி படித்திருப்போம், ஆனால் அது அக்கால மக்களை எப்படி பாதித்தது என்பதை இந்நாவல் காட்டுகிறது. ஆங்கிலம் திணிப்பு, பெண்கள் முன்னேற்றம், தொற்றுநோய் பற்றிய குறிப்புகள் கூட இடம்பெறுகின்றன.
user_9542
★ 5/5 Feb 02, 2026தமிழின் முதல் நாவலான இது பல வகைகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல்களைக் காட்டிலும் முதிர்ச்சியும் வடிவக் கச்சிதமும் சுவாரஸ்யமும் மிக்கதாக அமைந்தது எதிர்பாராத ஒன்று. புத்தகத்தை எடுக்கையில் அக்கால மொழிநடையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் விரைவில் அயர்ச்சியடைந்து கைவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால், மொழியிலும் சிந்தனைகளிலும் நவீனமாக, பேசுபொருட்கள் பலவகைப்பட்டதாக, நகைச்சுவையும் குறும்பும் நிரம்பியதாக அமைந்தது இச்சரித்திரம்.
கதாநாயகனின் சரித்திரம் அவனுடைய குழந்தைப்பருவத்தில் தொடங்கி நேர்க்கோட்டில் பயணிக்கிறது. அக்காலத்து குடும்ப நாடகமாக குறுகிவிடும் என்ற எதிர்பார்ப்புகளைத் தகர்த்து, சாகசங்கள் ததும்ப கதை விரைகிறது. செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பதால், அக்காலத்திய சராசரி மனிதனுக்கு எட்டாத அனுபவங்கள் முதலிக்கு எளிதில் எட்டுகிறது.
முக்கியமான இரு பாத்திரங்கள் முதலியின் தாயான சுந்தரத்தண்ணியும், அவனது தோழி மற்றும் மனைவி ஞானாம்பாளும். இவ்விரு பெண்களும் மிகுந்த அறிவும் தெளிவும் சாமர்த்தியமும் விவேகமும் கொண்டு தொழிலையும் கிராமத்தையும் வீட்டையும் நிர்வகிக்கிறார்கள். தமிழ் நாவல்களில் பெண்கள் பெரும்பாலும் பின்னணியிலேயே இருந்துள்ளதால், முதன்முதலில் எழுதப்பட்ட இப்புதினத்தில் ஆளுமைமிக்க பெண்கள் பிரதானம் வகிப்பது ஆச்சரியமளிக்கிறது.
ஆள் கடத்தல், குதிரை மேலேறி துரத்தல், எதிர்பாரா பயணங்கள் என விரியும் கதை ஆச்சரியமூட்டும் இடங்களுக்குப் பயணிக்கிறது. ஒரு கட்டத்தில் கதை அமெரிக்காவையும் தொடுகிறது. கடைசி 50 பக்கங்களில் அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற போதனைகள் கதையை ஆக்கிரமிக்கின்றன.
உரைநடைக் கதைகள் ஒரு மொழிக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்த, செய்யுளின் சந்தத் தளைகளை தகர்த்து தமிழில் ஏற்பட்ட சிறந்த தொடக்கம் இப்புதினம். 150 ஆண்டுகள் கழித்தும் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் பொருத்தமாக இருப்பது மேலும் சிறப்பு.
user_9541
★ 4/5 Feb 02, 2026தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். 313 பக்கங்கள் கொண்ட நெடிய கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. அக்காலகட்டத்தில் சமஸ்கிருத மற்றும் வடமொழி சொற்களின் ஆதிக்கத்தை இந்நாவலில் கண்கூடு காணமுடிகிறது.
மூல கதையை விட கிளைக் கதைகள் ஆர்வத்தைத் தூண்டியது. அதிக திருப்பங்கள் அற்ற நேர் கதை. கடைசி அத்தியாயங்கள் சோம்பலை ஏற்படுத்துகிறது.
user_9540
★ 5/5 Feb 02, 2026தமிழில் எழுதப்பட்ட முதல் புதினமாகும். இந்நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, இது ஒரு எளிய கதையாகவே இருக்கும் என நினைத்தேன். ஆனால் வாசிப்பின் தொடக்கத்திலிருந்தே என் கணிப்பு தவறானது என்பதை உணர்த்தியது. இந்த நாவல் என் எதிர்பார்ப்புகளை முற்றிலும் மீறி, வியப்பூட்டும் தன்மையுடன் அமைகிறது.
இந்நாவல் நகைச்சுவை, காதல், நையாண்டி, அரசியல், சாதி, மதம், சமயம் ஆகிய அனைத்தையும் இணைத்துத் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு வளமான இலக்கிய நூலாகும். துணைக்கதைகள் மையக் கதைக்கு தொய்வூட்டாமல், அதை மேலும் சிறப்பாக்குகின்றன.
இப்புதினத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை, நீதித்துறை நடுவராகவும், தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவராகவும், சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவராகவும், சமூக சீர்திருத்த நோக்குடன் கற்பனையிலக்கியத்தை தமிழ் மொழியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியவராகவும் விளங்கினார்.
செம்மொழி மட்டுமின்றி வடமொழிச் செறிவும் காணப்படுவதால் சில சொற்கள் எளிதாகப் புரியாமல் போகலாம். ஆனால் மொழி நடையில் புதுமை, விளக்கத் திறன் போன்றவை தெளிவாகத் தெரிகின்றன.
முக்கிய கதாபாத்திரங்களான பிரதாப முதலியாரும் அவரது துணைவி ஞானாம்பாளும் கதைக்கு உயிர் கொடுக்கின்றனர். குறிப்பாக ஞானாம்பாள் அறிவும் ஆளுமையும் மிக்க பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரதாப முதலியாரின் தாயார் சுந்தரத்தண்ணியும் கதைக்கு வலு சேர்க்கிறார்.
1857ல் எழுதப்பட்டு 1879ல் அச்சான இப்புதினம், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சமூக மாற்றங்களை எதிர்கொண்ட தமிழ்நாட்டின் கதையை பிரதிபலிக்கிறது. அக்காலத்திலேயே பெண் கதாபாத்திரம் படித்தவராகவும் துணிவானவளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது — இது அக்கால தமிழ் இலக்கியத்தில் வியக்கத்தக்க முயற்சி.
தமிழ் புதின இலக்கியத்தின் முன்னோடியான இப்படைப்பு, நகரம், கிராமம், அரசவை எனக் காட்சிகள் மாறிக்கொண்டே செல்வதால் வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. தமிழராக பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய புதினம்.
user_9539
★ 5/5 Feb 02, 2026மிக சுவாரசியமான சரித்திரம் இது. மனிதரிடம் வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் வாழ்க்கைக்கு ஏதுவான பண்புகள், அறிவாற்றல், ஒழுக்கம் மற்றும் நீதி நெறி ஆகியவற்றை மிக இயல்பாக கதைகளாக எழுதி வாசகர்களின் மனதையும் கவர்ந்து, தன் வாழ்வியல் பாடங்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் ஆசிரியர்.
ஒரு முறையாவது எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நகைச்சுவை விரும்புவோர் இதனை வாசித்து மகிழுங்கள்.
user_9538
★ 4/5 Feb 02, 2026தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற செய்தியின் அடிப்படையில் படிக்கும் எண்ணத்தைத் தூண்டியது. இன்றைய மொழிநடைக்கும் அக்காலத்திய மொழிநடைக்குமான வேறுபாட்டை நூலில் காணமுடிகிறது.
1879 காலத்தில் வெளிவந்திருந்தாலும் ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை கடைசி அத்தியாயங்களில் வெளிப்படும் சிந்தனைகள் இக்காலத்திய பிரச்சினைகளைப் பற்றிய அலசல்களை அச்சு பிசகாமல் வெளிப்படுத்துவது மிக்க ஆச்சர்யம்.
நாவலை சாதீய கண்ணோட்டத்தில் எதிர்கொள்ள வேண்டுமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்திருந்தாலும் அதில் மனுதர்மத்தின் வர்ணத்தை எதிர்ப்பதும் மக்கள் ஒன்றுதான் என்ற கருத்தும் அன்றைய சூழ்நிலையில் மனிதனின் சமூக வாழ்வியலை எடுத்துக் காட்டுகிறது. பழைய மொழிநடையாக இருந்தாலும், பல இடங்களில் கேட்டிராத வார்த்தை உபயோகமிருந்தாலும் வாசிப்பதில் எந்த அசிரத்தையும் கொடுப்பதில்லை.
user_9537
★ 4/5 Feb 02, 2026தமிழின் முதல் உரைநடை நவீனம். 1879 ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.
140 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தை படிக்க போகிறோமே, நம்மால் அந்த நடையை புரிந்து கொள்ளவியலுமா என்ற சந்தேகம் எனக்குள் கிளர்ந்து எழாமல் இல்லை. ஆனால் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த உடன் அவ்வளவு கஷ்டம் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது. சில சமயம் சில வரிகள், சில சமயம் சில பத்திகள் என்று நடை வேறுபடுகிறது. அவருடைய வாழ்க்கை சம்பவங்களை தான் நவீனமாக எழுதியுள்ளார்.
முதல் நவீனம் என்றே நம்பமுடியவில்லை. இன்றைய நவீன எழுத்தாளர்களின் தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அன்றைய தமிழுக்கும் இப்பொழுது உள்ள தமிழுக்கும் இருக்கும் வேறுபாடுகளை அடையாளம் காணமுடிகிறது. நிறைய வார்த்தைகளை நாம் இன்று பிரயோகிப்பது கூட கிடையாது. அவ்வளவு வார்த்தைகள் நமக்கு புதிதாக இருக்கின்றன. ஆசிரியரின் நடையில் சமஸ்கிருதம் கொஞ்சம் தூக்கல் என்று தான் சொல்லவேண்டும். ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு நன்றாக வெளிப்பட்டுள்ளது.
எத்துணை நிறைகள் குறைகள் இருந்தாலும், நம் மொழியின் முதல் நவீனம் என்பதற்காகவே படிக்கலாம்.