Reviews for கூகை

21 reviews total

user_8905

★ 5/5 Feb 02, 2026

இந்நாவல் மேல்சாதி ஜமீன்களுக்கும் கீழ்சாதி மக்களுக்கும் இடையிலான இருத்தலியல் போராட்டத்தை ஆராய்கிறது. ஜமீன்தார்களும் காவல்துறையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் அம்பலப்படுத்துகிறது.

ஒரு வரியில் சுருக்க முடியாத கதை — ஆனால் ஜமீன்தார் கதையின் மறைமுகமான மையப்புள்ளியாக விளங்குகிறார். பல்வேறு ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை உயிரோட்டமாகச் சித்தரிக்கிறது — சீனித்தாத்தா, அப்புசுப்பன், பேச்சி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக வெளிப்படுகின்றனர். சமூகப் பின்னணியைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழ் தலித் நாவல்.

user_8904

★ 4/5 Feb 02, 2026

சோ. தர்மனின் புத்தகங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கூகை வாசிக்க நினைத்த முதல் புத்தகம் — காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் பதிப்பு 2005.

கூகையைத் தலித்துகளுக்கான குறியீடாகப் பாவனை செய்து, அதன் பின்னணியில் தலித் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். காலம்காலமாக எவ்வாறெல்லாம் அடக்கப்படுகிறார்கள், எப்படி உடைக்கப் போராடுகிறார்கள் என இறுக்கமான எழுத்துக்களில் படைக்கப்பட்டுள்ளது.

எழுத்து சில இடங்களில் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திரைக்கதை போலவே விறுவிறுப்பாக நகர்கிறது. அசுரன், கர்ணன் படங்கள் அடிக்கடி நினைவில் வந்தன. இயற்கையோடு இணைந்த கதை சொல்லல் வியப்பை ஏற்படுத்தியது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

"நீச்சலடிக்கத் தெரியாதவன் கெணத்துல விழுந்திட்டா அப்படியே செத்துப்போக மாட்டாண்டா, கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் கையக்காலை ஒதறிப் போராடி சோர்ந்துபோயிப் பெறகுதாண்டா சாவான்."

user_8903

★ 5/5 Feb 02, 2026

கூகை எனப்படும் கோட்டானைத் தலித்துகளின் குறியீடாகச் சித்தரித்து, சமகாலத் தலித் வாழ்வைப் படைப்பாக உருவாக்கியிருக்கிறார் சோ. தர்மன். கூகை ஒரு அபசகுணப் பறவையாக முன்மொழியப்பட்டுள்ளது — அதைப் பார்த்தாலோ குரலைக் கேட்டாலோ தீய சகுனம் என்று அறியப்பட்டுள்ளது. இரவில் கூகையைப் போல பலம் கொண்ட பறவை எதுவும் இல்லை, அதுபோல பகலில் அதுபோல பலவீனமானதும் எதுவும் இல்லை. இதுபோல ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் அறியாமை எனும் இருட்டில் உள்ளனர்.

மேல்தட்டு இன மக்கள் எவ்வாறு ஒடுக்குமுறையை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமாக உணர்த்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்டவன் விரும்பிய உணவை மேல்தட்டு மக்களுடன் உண்டதற்குத் தண்டிக்கும் கொடுமை, சம்மதமின்றி பாலியல் வன்புணர்வு, சொந்த மகளையே வன்புணர்வு செய்ய முயல்வது — இவை தன் வேலையுடன் அமைதியாக இருப்பவனின் சமநிலை தவறும்போது எழும் கோபத்தின் கொடூரத்தை உணர்த்துகின்றன.

சாதி ஒழிப்பு குறித்து பல படைப்புகள் தோன்றியிருந்தாலும், ஒடுக்கப்படும் மக்களை கூகைப் பறவையுடன் பொருத்திக் கூறியிருப்பது தனித்துவமானது. இதைப் படித்த பின் தோன்றும் எண்ணம் — கூகை அபசகுணம் அல்ல, ஒடுக்கப்பட்ட மனிதனும்தான்.

user_8902

★ 4/5 Feb 02, 2026

Introvert-களின் கடவுள் இந்தக் கூகை. சாமியிலும் உயர்வு, தாழ்வு உண்டு என்பதைக் கூகைச் சாமி வழியே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தர்மன்.

கூகைச் சாமியை வணங்கி வாழ்பவர்களின் நிலையைச் சொல்ல ஆரம்பித்து, கடைசியில் கூகைச் சாமிக்கே ஆகும் நிலையுடன் முடித்திருக்கும் கதைப்போக்கு தமிழில் ஒரு புதுமுயற்சிதான். தொடர்வதற்குக் கொஞ்சம் கடினமாக ஆரம்பிக்கும் நாவல் சிறிது நேரத்தில் படிப்போரை ஈர்த்துவிடுகிறது. நம் கண் முன்னேயிருந்தும் அதிகம் பாராட்டப்படாத படைப்பாக இருக்கிறது இந்தக் கூகை.

user_8901

★ 2/5 Feb 02, 2026

தலித் இலக்கியம் என்று தெரிந்தபின் ஆர்வம் குறைந்துவிட்டது. வாய்மொழிக் கதைகளும் கட்டுக் கதைகளும் நிறைந்திருக்கின்றன. அப்புசுப்பனுக்கும் பேச்சிக்கும் இடையிலான உறவு நம்பகத்தன்மையில்லாமல் இருக்கிறது. ஐயர் தலித் மக்களுக்கு நிலத்தைப் பங்கிட்டுக் கொடுப்பது ஆச்சரியமாக இருந்தது. தலித் இலக்கியம் படித்துப் படித்துச் சலிப்பாக இருக்கிறது.

user_8900

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புதினத்தில் கையாளப்பட்டிருக்கும் உவமை மிகவும் ஈர்ப்பானது. பறவைகளில் வலுவுள்ள கூகை இரவு நேரங்களில் எல்லாப் பறவைகளும் ஓய்ந்து ஒடுங்கி இருளுக்குப் பயந்து உறங்கிக்கொண்டிருக்கையில், தனது இறக்கைகளை நன்கு விரித்துப் பயமின்றி பறந்துகொண்டிருக்கும். ஆனால் பகலில் வலுவற்ற சிறு பறவைகள் கூட கூகையைத் தாக்கும் — ஏனெனில் அப்போது கூகைக்குப் பார்வை தெரியாது.

இதில் கூகை தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற பறவைகள் இந்தச் சமூகத்தையும் உவமையாகக் குறிக்கின்றன. கதையின் போக்கிலும் பல இடங்களில் இந்த உவமை அருமையாகக் கையாளப்படுகிறது. கதையின் நாயகனான கிழவன் கூகைச் சாமியைக் கும்பிடுவதும், அந்த சாமியை வழிபடுவதற்கான கதையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்தது.

user_8899

★ 5/5 Feb 02, 2026

தலித் இலக்கியங்களில் மிகவும் முக்கியமான படைப்புகளில் ஒன்று. ஒடுக்கப்பட்டவர்கள் திரும்பத் திரும்ப எழுகிறார்கள். மொத்தம் 318 பக்கங்கள் — அனைத்துப் பக்கங்களும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.

Magic Realism நாவல் நெடுக மிக நேர்த்தியாகப் பறவைகளைத் தெய்வங்களாக்கிக் கடத்துகிறார் ஆசிரியர். சீனியின் முடிவு சொல்ல முடியாத மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அப்புசுப்பனுக்கும் பேச்சிக்கும் இருக்கும் பெயரிடப்படாத உறவு இந்நாவலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

user_8898

★ 5/5 Feb 02, 2026

ஒரு சமூகத்தின் கதையை எந்தப் போலித்தனமுமில்லாமல், மண்ணின் வாசனையோடும் செங்குருதியின் வீச்சோடும் பதிவு செய்திருக்கிறார் சோ. தர்மன். சாதியத்தின் கூர் நன்றாகப் புரிகிறது, நாமும் இந்தச் சாதிய அவலங்களின் ஒரு பங்குதாரராக இருக்கிறோமே என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது. நாம் சாதியை மறந்து இனமாக ஒன்று கூடினால் ஒரு விமோசனமுண்டு, இல்லையேல் அழிவு உறுதி.

கூகை என்னும் கடவுளை வைத்துக் கதை சொல்லிய விதம், இருளில் வாழும் மக்களின் கதைக்கு நேர்த்தியாகப் பொருந்தியுள்ளது. "The Shape of Water" திரைப்படத்தில் வரும் அடிமைப்படுத்தப்பட்ட தெய்வீக விலங்கை நினைவுபடுத்துகிறது. புத்தகம் முடிந்தபிறகும் பேச்சியின் அழுகுரல் ஆழ்மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

user_8897

★ 4/5 Feb 02, 2026

அறுந்து சிதறிக் கிடக்கும் இரும்புத் துண்டுகள் ஒரே சங்கிலியாய் இணைந்துவிடாதோ!

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு கொடுமையானது. இன்றும் சில இடங்களில் அத்தகைய வன்முறைகள் தொடர்வது வேதனைக்குரியது. பல கேள்விகளை விட்டுப் பிரிகிறது இந்நாவல். கூகை — நேசிக்கப்பட வேண்டிய ஒரு அற்புதப் பறவை.

user_8896

★ 5/5 Feb 02, 2026

கோவில்பட்டி அருகே இருக்கும் சித்திரம்பட்டி கிராமத்தில் சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் அநீதிகளும், அதன் பொருட்டு அம்மக்கள் கொதித்தெழும்போது காவல்துறை என்ற அரசு இயந்திரம் அவர்களை வன்முறையாலும் சட்டத்தாலும் வதைக்கும் கதைதான் இந்நாவல். இப்படி ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் நாவல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது.

முட்டாள் பறவை என நம்பப்படும் கூகையைச் சாமியாக ஏற்றுக்கொண்டு கோவில் கட்டி வணங்கும் மக்கள், அந்த நம்பிக்கையை எள்ளிநகையாடும் இளவட்டங்கள், தொடர்ந்து இழைக்கப்படும் சாதிய ஒடுக்குதல், இனாமாகக் கிடைக்கும் கோதுமைக்காக கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள், சொந்த நிலத்தில் கூலியின்றி வேலை செய்ய நிர்பந்திக்கும், பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் மேல்சாதியினர் என நாவல் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

வாசிக்கையில் உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கின்றன. சோ. தர்மனின் எழுத்து உயிரோட்டமுள்ள கிராமத்தையும் கிராம மக்களையும் கண் முன்னே நிறுத்துகிறது. சில இடங்களில் விவரணை பல பக்கங்கள் செல்கையில் மட்டும் சோர்வை ஏற்படுத்தியது. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.