Reviews for சஞ்சாரம்

30 reviews total

user_8874

★ 1/5 Feb 02, 2026

கோபம்தான் வருகிறது. வாரமலர்ல வந்த கதை மாதிரி இருக்கு. நாவல் கட்டமைப்பு வலிந்து திணிக்கப்பட்டிருக்கு — சம்பந்தமே இல்லை, தொடர்பும் இல்லை. இதுக்கு சாகித்ய அகாடமி விருது வேற!

பல கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்புதான் — ஆனாலும் அந்தக் கதைகள் ஒரு கட்டத்தில் அலுப்பாக இருக்கின்றன. எதுக்கு இந்த நினைவு வருகிறது, என்ன தொடர்பு இருக்கிறது என்று புரியவில்லை. எஸ்.ரா இப்படி எழுதுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

user_8873

★ 3/5 Feb 02, 2026

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், இசை மீதான தீவிர ஆர்வம் குறித்த நாவல் இது. அரசியல், தீண்டாமை, விவசாயிகளின் நிலை என பல்வேறு சமூகப் பரிமாணங்களைப் பேசுகிறது. பல கிளைக்கதைகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.

user_8872

★ 5/5 Feb 02, 2026

கதைக்குள் கதை என்ற கோட்பாட்டில் உருவான சஞ்சாரம் மிகுந்த நேர்த்தியான அனுபவத்தை அளித்தது. நாதஸ்வர கலைஞர்கள் மீது மதிப்பைக் கூட்டும் வண்ணமே இப்படைப்பு அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையுமே அழகான அனுபவத்தை நமக்குள் கடத்தி மாயம் செய்கின்றன.

குறிப்பாக மாலிக் கபூரின் கதை சொல்லிய விதம் சில நிமிடங்களுக்கு அந்தக் கதையில் வாழவே வைத்தது. மொத்தத்தில் எஸ்.ராவின் மிகவும் அழகிய, நேர்த்தியான படைப்பு என்றே சொல்வேன்.

user_8871

★ 3/5 Feb 02, 2026

2016 தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம்தான் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் சாதிய ரீதியில் இழிவாக நடத்தப்படுகிறார்கள் என்று உணர்ந்த தருணம். பெங்களூரில் ஒரு காலை நாதஸ்வர இசையில் கண் விழிக்க நேர்ந்தது — தெருவில் வாசித்து யாசித்துக் கொண்டிருந்தனர். மங்கள இசை என்று விதந்தோதப்படும் ஒரு கலையும் அதை வாசிக்கும் கலைஞர்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாவது என்ற கேள்வி அப்போதே தொடங்கியது.

சஞ்சாரம் இந்த அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் என்று தெரியாமலேயே வாசிக்கத் தொடங்கினேன். ஏன் என்ற கேள்விக்குச் செல்லாமல், எப்படி என்று கிளைக்கதைகள் மூலம் சொல்லியிருக்கிறார் எஸ்.ரா.

பொதுவாகவே எஸ்.ராவின் எழுத்துக்களில் ஒரு அந்நியத்தன்மை உண்டு. அனுபவங்கள் வாயிலாக இல்லாமல் கேட்டதை வைத்து எழுதப்படும் கதைகள் என்பதுதான் காரணம். சஞ்சாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.

user_8870

★ 4/5 Feb 02, 2026

இந்த நாவல் முதல் அத்தியாயத்திலேயே ஒரு பெரிய சம்பவத்துடன் ஆரம்பிக்கிறது. நாயகன் பக்கிரி ஒரு நாதஸ்வர கலைஞன் — தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து வருவதால் கச்சேரியில் மேல்சாதியினால் அவமதிக்கப்பட்டு, கோபத்தில் ஒரு பயங்கரத்தைச் செய்து ரத்தினத்துடன் ஓடிவிடுகிறான்.

கதை அமைப்பு நான் எதிர்பார்த்தது போல இல்லை — பக்கிரி, ரத்தினம் எப்படி நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார்கள், அவர்களுடைய குரு யார், அந்த வித்வான்கள் எப்படி இசை வாசிக்க ஆரம்பித்தார்கள் என்று பல கிளைக்கதைகள் விரிகின்றன.

ஆரம்பத்தில் இந்தக் கிளைக்கதைகள் குழப்பமாகவே இருந்தன — முதல் அத்தியாயத்தில் நடந்ததற்குப் பிறகு என்னவானது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. ஆனால் கிளைக்கதைகள் விரிய விரியவே நாவலின் மையக்கரு புரிந்தது. சஞ்சாரம் வெறும் பக்கிரி, ரத்தினத்தின் கதை அல்ல — நாதஸ்வரத்தின் மகிமை, வரலாறு, வித்வான்கள், கரிசல் நில நாட்டுப்புறக் கலாச்சாரம், நகரமயமாதல் என பல்வேறு விஷயங்களைப் பேசும் முக்கியமான படைப்பு.

ஒவ்வொரு இடத்திற்கும் வாசிக்கச் செல்லும் அனுபவம் சின்னச் சின்ன அத்தியாயங்களாக வருகிறது. ஆரம்பத்தில் வரும் பாராட்டுகளும், காலம் செல்ல அவமதிக்கப்படுவதும் நெஞ்சை உலுக்குகிறது. பக்கிரி முரடன், கோபக்காரன்தான் — ஆனால் அவன் ஏன் அந்த அசம்பாவிதத்தைச் செய்தான் என்பது இசைப் பயணத்தில் புரிகிறது. நாவலின் இறுதியில் இருவரும் நாதஸ்வரத்தை விட்டுவிட நினைக்கும்போது சிறைக்குத் தள்ளப்படுவது ஒரு கவித்துவ நீதியாகவே தெரிகிறது.

இதைப் படித்து முடித்தபிறகு நாதஸ்வர இசை வாசிப்பவர்களைப் பார்க்கும் விதம் கண்டிப்பாக மாறிவிடும். 2018 சாகித்ய அகாடமி விருதுக்கு முற்றிலும் தகுதியான நாவல்.

user_8869

★ 3/5 Feb 02, 2026

பலரும் பரிந்துரைத்த எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகளை சுவைக்க சஞ்சாரத்தை எடுத்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தாலும், இது அவரின் சிறந்த படைப்பு அல்ல என்று தெரிகிறது.

நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், முதல் அத்தியாயத்தில் சாதி வன்முறையில் சிக்கும் இரு கதாபாத்திரங்களின் வழியாக தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நினைவுகளும் கேள்விச்செய்திகளும் வழியாக நாதஸ்வரத்தின் புராணம், கரிசல் காட்டு வாழ்க்கை, வித்வான்களின் கதைகள் என்று விரிகிறது.

நன்றாகச் செய்யப்பட்ட விஷயங்கள்: இசையை வார்த்தைகளால் வர்ணிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. கரிசல் காடுகளின் நாட்டுப்புறக் கதைகள் புதுமையாக இருக்கின்றன. பாத்திரங்களின் உரையாடல்கள் கச்சிதமான எதார்த்தம்.

ஆனால் அதிகமான கிளைக்கதைகளும் திரும்பத் திரும்ப வரும் தன்மையும் புத்தகத்தை பாதிக்கின்றன. எல்லாக் கதைகளும் சொல்லப்பட வேண்டியவையா என்று சந்தேகம் எழுகிறது. பக்கிரியின் குணாதிசயம் பல கதைகளில் மாறுபடுவதும் குறை. தமிழ் நடை அழகாக இருக்கிறது — குறிப்பாக விவரணைப் பகுதிகளில். அவருடைய புனைவல்லாத படைப்புகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது அமைகிறது.

user_8868

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை முடிக்க ஆறு மாதங்கள் ஆனது. மையக்கதையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் பல கிளைக்கதைகள் உள்ளன. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களை விரும்பினாலும், அவருடைய புனைவை அவருடைய புனைவல்லாத படைப்புகள் அளவுக்கு ரசிக்க இயலவில்லை.

மையக்கதையே கலைஞர்களின் சோகமான யதார்த்தத்தை விளக்குகிறது. ஒரு சிலரே புகழ் பெறுகிறார்கள், போதுமான வருமானம் ஈட்டுகிறார்கள். மற்றவர்கள் பக்கிரியையும் ரத்தினத்தையும் போல போராடுகிறார்கள். வருமானமின்மை மட்டுமல்ல, கலைக்கே மரியாதை இல்லை என்பதுதான் சோகமான பகுதி.

கிளைக்கதைகள் மிகவும் கவனத்தைச் சிதறடிக்கின்றன — பெரும்பாலும் மையக்கதையோடு ஒன்றிணையவில்லை. தனித்தனியாகப் பார்த்தால் நல்ல கதைகள்தான். ஆனால் கதையின் வேகத்தைத் தக்கவைக்க முயலும்போது ஏமாற்றமளிக்கின்றன. எஸ்.ராவின் மற்றொரு புனைவை வாசிக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது.

user_8867

★ 4/5 Feb 02, 2026

இதைப் படித்த பின்பு நாதஸ்வர இசையைக் கேட்டால் சற்றே உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சஞ்சாரம் — அதிக சலனங்களோ, சினிமாத்தனமான திடீர் திருப்பங்களோ இன்றி நிதானமாக, தெளிந்த நீரோடை போன்ற நடையில் நாதஸ்வர இசையின் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் குறைந்துவரும் முக்கியத்துவத்தையும் விவரிக்கிறது.

நாதஸ்வர இசைக்கலைஞர்களின் கலை மற்றும் சமூக வாழ்வியலையும், தஞ்சாவூர் சார்ந்த நன்செய் நிலப் பகுதிகளில் வாழும் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கரிசல் மண்ணில் வாழும் கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இடையிடையே தமிழ் சமுதாயத்தில் நிலவிவரும் சாதி ஆதிக்கமும் இயல்பான நடையில் வெளிவருகிறது.

கரிசல் மண் வாழ்க்கை கூட்டல் கழித்தல் ஏதுமின்றி பிரதிபலிக்கப்பட்டுள்ளது. புதினம் சலசலப்பின்றி எதார்த்தமாக முடிந்து போகிறது. புழுதியோடு சேர்ந்து கரிசல் மண்மணம் கமழும் இந்தப் படைப்பில் எழுத்து நடை எளிமையாக இருந்தாலும், 2018ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்தப் புதினம், குறிப்பாக ரத்தினம் மற்றும் பக்கிரி என்ற இரு கதாபாத்திரங்களின் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட காலம் நம்மில் கலந்திருக்கும் என்பது உறுதி.

user_8866

★ 5/5 Feb 02, 2026

எஸ்.ராவின் இரண்டாவது நூல் இது. கதைக்குள் கதையாக மையக்கதையை விட்டு விலகிச் சஞ்சாரம் செய்திருக்கிறார் என்று பலர் விமர்சனத்தில் பதிவிட்டிருந்தார்கள். அது உண்மை என்றாலும், இந்த கதை அமைப்பையும் நடையையும் ரசிக்க முடிந்தது. நாதஸ்வர கலைஞர்களின் சொல்லப்படாத கதை இது. ஆசிரியர் சேகரித்த தகவல்கள் திகைக்க வைக்கின்றன — சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று வியந்தேன்.

இதை ஒரு புதினமாகப் படிக்காமல் ஒரு குறு வரலாற்று நூலாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மையக்கதையை விடக் கிளைக்கதைகளை மிகவும் ரசித்து வாசித்தேன். நாதஸ்வரத்தைப் பற்றி இன்னும் பல தகவல்களை ஆசிரியர் சேர்த்திருக்கலாம் — அது எப்படி தமிழ்நாட்டின் அடையாளம் ஆனது, அதை எப்படி செய்கிறார்கள் போன்ற தகவல்கள் இன்னும் சுவை கூட்டியிருக்கும்.

நாதஸ்வர கலைஞர்களை சாதியின் பெயரால் சிறுமைப்படுத்துவார்கள் என்பது அதிர்ச்சியான தகவல். அவர்களை சமூகம் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். இக்கலைஞர்களின் பொருளாதாரப் போராட்டம், வறுமை, அவமானங்கள், எதிர்கால கேள்விக்குறி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எஸ்.ரா அவற்றை இந்நூல் வாயிலாக பதிவிட்டிருக்கிறார். இறந்துகொண்டிருக்கும் கலைகளின் வரிசையில் இக்கலையும் இருக்கிறது என்பது வருத்தமளிக்கிற தகவல்.

சஞ்சாரத்தில் நானும் எஸ்.ராவுடன் சஞ்சரித்தேன். சாகித்ய அகாடமிக்கு முற்றிலும் தகுதியான நூல்.

user_8865

★ 1/5 Feb 02, 2026

எஸ் ராவின் எழுத்துக்கள் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு பரிச்சயமாயின. இந்தியா முழுவதும் பரவிப்படர்ந்த என் ரயில் பயணங்களில் தனிமை, கி.ரா., ரஸ்கின் பாண்ட் இவர்களோடு, மிக நெருக்கமான எழுத்தாக எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் அவர் பெரும்பாலும் எழுதிய விஷயங்களான பயணம் மற்றும் புத்தக வாசிப்பு. இது தவிர அவருடைய சிறுகதைகள் என்னை அவர் வார்த்தைகளோடு கட்டிப்போட்டு வைத்திருந்தன.

அவர் எழுதிய உபபாண்டவம் தான், நான் முதன்முதலாக வாசித்த அவருடைய குறிப்பிடத்தக்க நெடும் புதினம் என்று நினைக்கிறேன். அதில் அவர் காட்டிய புனைவுலகம் என்னை பிரமிக்க வைத்தது. அதன் பிறகு அவருடைய வேறெந்த நெடும் புனைவும் அந்த பிரமிப்பை எனக்குத் தரவில்லை. சஞ்சாரம் பற்றி அறிந்தவுடன், அதை படிக்க வேண்டும் என்ற தவிப்பு வெகு நாட்களாக இருந்து வந்தது. எஸ் ராவின் புதினம் என்பது மட்டுமல்ல, நாதஸ்வர கலைஞர்களைப் பற்றியது என்பதும் தான் காரணம்.

வாசிக்க ஆரம்பித்தவுடன், அவர் எழுத்து வழக்கம் போலவே மிக இயல்பாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. மிகச்சுவையான ஒரு நாவல் போல வரிகள் மனதில் ஊறிப் பெரும் சுவையை கொடுத்தன.

ஆனால், அதுதான் இதில் பிரச்சினை. பாரம்பரிய நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய நாவல் என்றும், பெரும் ஆய்விற்குப் பிறகு எழுதப்பட்ட படைப்பு என்றும் விதந்தோதப்பட்ட இந்த புதினம், அவர்களின் சமூக அமைப்பைப் பற்றிய அடிப்படை உண்மைகள் கூட இன்றி வடிக்கப்பட்டிருப்பது பெரும் கொடுமை. பெரும் இசை ஆளுமைகளைப் பற்றிய வெறும் செவி வழிச் செய்திகளையும் குறிப்புகளையும் வைத்தே பின்னப்பட்ட புதினம் இது.

இசை வேளாளர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியம். சின்ன மேளம், பெரிய மேளம் என்ற சமூக அமைப்பையும் அதற்குள் இருக்கும் வரைமுறை மற்றும் பாகுபாடுகள் பற்றி பேசாமல் சாதிய அடக்குமுறைகளைப் பற்றி பேசுவது இயலாது. ஆனால் ஆரம்ப வரிகளிலிருந்தே அதைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேவதாசிகளுக்கும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கோடி உறவினைப் பற்றிய பிரக்ஞை இன்றி எழுதியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. கள ஆய்வை விடுங்கள் — டாக்டர் சதாசிவன், தவேஷ் சோன்ஜி போன்ற ஆய்வாளர்களின் முக்கியப் படைப்புகள் பொது வெளியில் இருக்கின்றன. அவற்றைப் படித்து எழுதும் அடிப்படை உழைப்போ, அதற்கான குறைந்தபட்ச நேர்மை கூட இல்லை.

அவர் மிகப்பெரிய புனைவெழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மிகப்பெரிய ஆய்வின் அடிப்படையிலான எழுத்து என்று சொல்வது ஏற்கப்பட முடியாது. இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில், வார்த்தை ஜாலங்களால் வாசகர்களை ஏமாற்றும் போக்கு வளர்வது உச்சகட்ட சோகம்.