Reviews for சஞ்சாரம்

30 reviews total

user_8894

★ 2/5 Feb 02, 2026

எஸ்.ராவின் சில புனைவல்லாத படைப்புகளைப் படித்திருந்ததால், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய நாவலை ஆர்வமாக எடுத்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

கிளைக்கதைகள் அளவுக்கு அதிகமாக இருந்தன — மையக்கதையிலிருந்து பெரிதும் விலகின. எல்லாமே சுவாரசியமாக இருக்கவில்லை. சில கதைகள் உண்மையிலேயே நன்றாக இருந்தன — எஸ்.ரா கரிசல் காட்டுப் புராணக் கதைகளின் தொகுப்பாக எழுதியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இருப்பினும், நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண் திறக்கும் நாவல். இனிமேல் அவர்களைப் பார்க்கும்போது அதிக மதிப்புடன் பார்ப்பேன்.

user_8893

★ 5/5 Feb 02, 2026

நம் வாழ்க்கைப் பயணத்தில் பலரைச் சந்தித்திருப்போம் — ஆனால் அவர்களின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் வலியை அறிந்திட வாய்ப்பில்லை. அப்படி நாம் அறிந்துகொள்ள முற்படாத, வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டிருப்பவர்கள் நாதஸ்வரக் கலைஞர்கள்.

கோவில்களில், திருமணங்களில் அவர்களைக் கண்டிருந்தாலும், இச்சமூகம் பெரிதாக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளர் சமூகம் கண்டுகொள்ளாத இடங்களை எழுத்துகளின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் — அந்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் எஸ்.ரா.

பக்கிரி, தண்டபாணி, பழனி, ரத்தினம் இவர்களோடு நானும் நாதஸ்வரத்தைத் தூக்கிக்கொண்டு பயணம் போன அனுபவம். எல்லா கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை — தனிப்பட்ட முறையில் என்னைப் பாதித்தவை தன்னாசியும் சரஸ்வதியும்.

இந்நாவல் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் — ஆனால் முடித்த பிறகு, எங்காவது நாதஸ்வர இசை கேட்டால் உங்களால் நின்று கேட்காமல் இருக்க முடியாது.

user_8892

★ 5/5 Feb 02, 2026

நாதஸ்வரம் வாசிப்பவர்களான பக்கிரி மற்றும் ரத்தினம், மூதூர் திருவிழாவுக்கு வாசிக்கச் சென்ற இடத்தில் கலவரம் ஏற்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். பக்கிரி பந்தலில் தீயிட்டுவிட்டு ஓடினான். காவலர்களிடமிருந்து தப்பிக்க ஊர் ஊராகப் பயணிக்கும்போது சந்தித்த மனிதர்கள், மக்கள், கரிசல் நிலங்களை அசைபோடுகிறார்கள்.

சோலையூர் தன்னாசி எனும் கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது — ஒரு இழப்பினால் இயலாமையில் உருண்ட பார்வையற்ற மனிதர், பின் நாதஸ்வரம் பயின்று முற்றிலும் உருமாறுகிறார். ஆட்டு வியாபாரி மகாலிங்கத்தின் கதையும், திருச்சுழி ஊமை ஐயரின் இசை ரசனையும் மறக்க முடியாதவை.

நாதஸ்வர வாசிப்பவர்களின் ஏழ்மை நிலை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவமானங்களை ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

user_8891

★ 5/5 Feb 02, 2026

இசைக்கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் எல்லோராலும் பாராட்டப்படுவதில்லை. நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் நிலைமை மிகவும் இழிநிலையே. நாதஸ்வர இசைக்கலைஞர்கள் குறித்து எழுதப்பட்ட சஞ்சாரம் ஒரு ஆவணமாக உள்ளது.

இசையை யார் வேண்டுமானாலும் கற்கலாம் என்ற நிலையிலிருந்து, ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கற்க வேண்டும் என்ற போக்கு இன்றும் உணரமுடியும்.

கரிசல் காட்டு நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, வரலாற்று மூலம் தொடங்கி அவர்கள் எவ்வாறு வளர்ந்து வாழ்ந்தார்கள், அவர்களின் மதிப்பு சமூகத்தில் எவ்வாறு உயர்ந்திருந்தது, இன்று எவ்வாறு இந்த இழிநிலையை அடைந்தார்கள் என்பதை இந்நாவல் பதிவுசெய்கிறது.

user_8890

★ 4/5 Feb 02, 2026

2018க்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். தமிழ் மரபு வாத்தியம், மங்கள இசை வாத்தியம் — நாதஸ்வரத்தை கருவாக்கி, கரிசல் மண்ணை களமாக்கி, நசுக்கப்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் படும் பாட்டை நான்-லீனியர் பாணியில் கிளைக்கதைகளாகச் சொல்கிறது.

எவ்வித தடுமாற்றமுமில்லாமல் கதை பயணிப்பதால், அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டத் தூண்டுகிறது. காவிரி கரையில் வாழும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் பொருளாதாரமும் கரிசலில் வாழும் சக மேதைகளுக்கு சாதியப் பாகுபாட்டாலும் அடக்குமுறையாலும் கிடைப்பதில்லை என்பதை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா.

நிகழ்கால கலைஞர்களின் வாழ்வின் வலிகளை ஓசையின்றி கடத்தும் ஓர் ஆழ் ஊசி இப்படைப்பு. இனிமேல் எங்காவது நாதஸ்வரம் இசைப்பதைக் கேட்டால் — இது கல்யாணியா, மல்லாரியா, பிலஹரியா, ரஞ்சனியா என்று மனம் என்னையறியாமல் ராகங்களில் சஞ்சரிக்கும்.

user_8889

★ 4/5 Feb 02, 2026

"துயரத்தின் இசை மட்டுமில்லை. மறக்கப்பட்ட சந்தோஷத்தின் இசை. நிராசையின் இசை."

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்ற ஆவலில் வாங்கிய புத்தகம். சிறுவயதில் திருமணத்திலும் கோவில் விசேஷங்களிலும் கேட்டுப் பழகிய இசையின் பின்னால் இருக்கும் வரலாறு, வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றிப் பேசும் நாவல்.

கோவில் திருவிழாவில் அவமதிக்கப்பட்ட நாதஸ்வர இசைக்கலைஞன் பக்கிரியின் வழியாக நாவல் விரிகிறது. தலைப்பும் முன்னுரையும் நாதஸ்வரம் பற்றியதாக இருந்தாலும், கதையில் கரிசல் நிலம், விவசாயிகளின் வீழ்ச்சி, சாதியின் வெறி, கரகம் ஆடும் பெண்களின் போராட்டம் என பல்வேறு சமுதாய நிலைகளைப் பேசிச் செல்கிறது.

எங்கும் தொய்வில்லாத நடை பக்கிரியுடன் ஒன்றிப் பயணிக்க வைக்கிறது. ஒரு காலத்தில் மைக்செட் இல்லாமல் அரையிருட்டில் நாதஸ்வரம் வாசிக்கும்போது கேட்கும் சங்கீத ருசி யாருக்காவது நினைவில் இருக்குமா? இந்த நாவலை வாசித்த பின்பு, எங்காவது நாதஸ்வர இசை கேட்டால் நின்று நிதானித்து ரசித்துவிட்டுச் செல்லத் தோன்றும்.

user_8888

★ 5/5 Feb 02, 2026

சஞ்சாரம் நாவல், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை — குறிப்பாக அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் சாதியப் பிரச்சினைகளை — ஆழமாகப் பேசும் முக்கியமான படைப்பு. பக்கிரி என்ற மையக் கதாபாத்திரத்தின் சவால்கள் வழியே கதை விரிகிறது.

ஃப்ளாஷ்பேக் பாணியில் எழுதப்பட்ட இந்நாவலில், கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் அழைத்துச் செல்வதன் மூலம் நுணுக்கமான கதைப்போக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு ஊரின் பெயர் தலைப்பாகக் கொடுக்கப்பட்டிருப்பது சுவாரசியமான அம்சம்.

இசைக்கலைஞர்களில் சிலரே பெயரும் புகழும் பெறுகிறார்கள்; பெரும்பாலானோர் சமூக அங்கீகாரம் இல்லாமல் பொருளாதார நெருக்கடிகளில் வாழ்நாளைக் கடக்கிறார்கள் என்பதை நாவல் சுட்டிக்காட்டுகிறது.

எளிமையிலும் ஆழத்தையும் கொண்ட கதையாடல் பாணியால், சஞ்சாரம் வாசகர் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல், நாதஸ்வரக் கலைஞர்கள் மீது மதிப்பை பெருக்குவதோடு, நாதஸ்வர இசையை அதிகம் கேட்கவும் தூண்டுகிறது.

user_8887

★ 5/5 Feb 02, 2026

நாம் எல்லோரும் சிறுவயதிலிருந்து ஏதோ வகையில் நாதஸ்வர இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் — திருமணம், கோவில் நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் வாயிலாக. ஆனால் அந்த இசைக்கலைஞர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது, அவர்களின் சமூக நிலை என்ன என்பதை இந்நாவல் விவரிக்கிறது. குறிப்பாக கரிசல் நிலத்து வித்வான்கள் ஏன் சோழநாட்டு வித்வான்கள் அளவுக்குப் பிரபலமடைய முடியவில்லை என்பதைப் பேசுகிறது.

நாதஸ்வரம் ஒரு மங்கள வாத்தியம், தேவலோக கருவி. இந்தக் கருவிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், ஏன் நாதஸ்வர வித்வான்களைக் கண்டுகொள்ளவில்லை? இந்த நாவலைப் படித்த பிறகு நானும் இதை நினைத்து வெட்கப்படுகிறேன். அவர்கள் நம் தமிழ் நிலத்தின் அடையாளம், நவீன கலைகளின் முன்னோடிகள்.

இந்த நாவல் படித்த எல்லோரும் கண்டிப்பாக எந்த சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் நாதஸ்வர இசையைக் கூர்ந்து கவனிப்பார்கள் என்பது நிச்சயம். இந்த அற்புதமான நூலை வெளியிட்ட எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றி. படிக்காதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல் — இதை ஒரு கரிசல் காட்டுப் பையனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

user_8886

★ 4/5 Feb 02, 2026

ஒரு சாதாரண புதினம் எப்படி இலக்கியமாக மாறுகிறது என்பதற்கான நல்ல உதாரணம் இந்த சஞ்சாரம். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றிய புதினமாக அறிமுகமாகி, அவர்களின் வாழ்வு, சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம், கலைஞர்களின் ஆசை, கவலை, கோபம் என உணர்வுகளாலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

எந்த ஒரு புதினம் சமூகத்தையோ அல்லது அதில் வாழ்ந்த மக்களைப் பிரதிபலிக்கிறதோ அதுவே இலக்கியம் என்ற புரிதலுக்கு ஏற்ற அற்புதமான படைப்பு. சாகித்திய அகாடமி விருதுக்கு உண்மையிலேயே தகுதியான புத்தகம் என்று நினைக்க வைத்த வெகு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இது வரை படித்த ராமகிருஷ்ணன் நாவல்களில் சஞ்சாரமே முதன்மையானது என்பது தனிப்பட்ட கருத்து. இலக்கியத்திற்குள் கால்பதிக்க நினைக்கும் தமிழ் வாசகர்களுக்கு அருமையான அறிமுக நூல். கண்டிப்பாக தவறவிடக்கூடாத புத்தகம்.

user_8885

★ 4/5 Feb 02, 2026

பல்வேறு ஃப்ளாஷ்பேக்குகள் வழியாக இரு கதாபாத்திரங்கள் மூலம் விரியும் கதை. ஒட்டுமொத்தமாக நல்ல வாசிப்பு அனுபவம்.