Reviews for ஊழல் - உளவு - அரசியல்
30 reviews total
user_8784
★ 4/5 Feb 02, 2026நீதிமன்ற காட்சிகள், சிறை அனுபவங்கள், அரசாங்கத்தின் மீதான தைரியமான விமர்சனங்கள், தகவல் அறியும் உரிமை மனுக்கள், அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை ஊழல், உயர்மட்ட அரசு அதிகாரிகளின் போலி முகங்கள் — அனைத்தும் மிகவும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அசாதாரணமான படைப்பு.
user_8783
★ 3/5 Feb 02, 2026அரசாங்க ஊழியராகப் பணியாற்றிய சங்கர் — அரசு அதிகாரிகளின் ஊழல்கள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய விதம், ஆட்சி மாற்றத்தின்போது மாறும் பச்சோந்தி முகங்கள், காவல்துறையின் மனித உரிமை மீறல்கள், சிறைச்சாலை ஊழல்கள், நீதிபதிகளின் உண்மை முகம், வழக்கறிஞர்களின் வாதங்கள், நீதிமன்ற நடைமுறைகள் — அனைத்தும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் தான் நிரபராதி என நிரூபிக்க நிகழ்த்திய போராட்டம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது.
'எல்லாவற்றையும் பார்ப்பன எதிர்ப்புக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது மிகத் தவறான விஷயம்' என்ற பேராசிரியர் கல்யாணியின் வார்த்தைகள் முதல், 'இந்த வேலை இல்லன்னா திரும்பி போய் விவசாயம் பண்றேன், செத்தா போயிடுவேன்' என்ற சங்கரின் வார்த்தைகள் வரை — அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வின் சாரம் இந்த நூலில் இருக்கிறது.
user_8782
★ 5/5 Feb 02, 2026சுதந்திர தினத்தன்று, நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் பட்டியலில் இருந்த இந்த நூலைப் படிக்க நேர்ந்தது — மிகச் சரியான நாள், மிகச் சரியான நூல்.
ஆசிரியர் தன் கருத்துகளையும் நிகழ்வுகளையும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் கோர்வையாகவும் எழுதியிருக்கிறார். அரசாங்கத்தின் பல துறைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான தொடர்புகளையும் பகிர்ந்திருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஒதுக்கீட்டு முறை தொடங்கி பல துறைகளில் நடந்த ஊழல்களை விரிவாக எழுதியிருக்கிறார். காவல் துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியவற்றின் நடைமுறைகளை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
user_8781
★ 5/5 Feb 02, 2026டேவிட் vs கோலியாத் — அரசு இயந்திரத்தின் கொடூர முகத்தை எதிர்கொண்ட சங்கரின் அனுபவக் கதை இது.
அரசியல்வாதிகளின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியும் அதிகாரிகள், சுயநலமான நீதித்துறை — இவை இணைந்து மக்களை எப்படி ஏமாற்றுகின்றன, சூறையாடுகின்றன என்பதை நடுங்க வைக்கும் விவரங்களுடன் சொல்கிறார். கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யம் பற்றிய பகுதிகள் அருமையான வாசிப்பு அனுபவம்.
1991 முதல் 2017 வரையிலான ஐந்து அரசாங்கங்களின் காலத்தை உள்ளடக்கிய இந்தக் கதையில், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஊழலின் வடிவம் மாறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
'ஊழலை எதிர்ப்பதை அரசு இயந்திரம் என்றுமே விரும்பாது. அந்த எதிர்ப்புக் குரலை முடக்குவதற்குத்தான் எல்லா முயற்சிகளையும் எடுக்கும். அதிமுக, திமுக என்ற வேறுபாடு கிடையாது — அது ஒரு இயந்திரம் மட்டுமே' என்ற வரிகள் புத்தகத்தின் சாரத்தையே சொல்லிவிடுகின்றன.
user_8780
★ 4/5 Feb 02, 2026ஒரு சாமானியன் அரசு இயந்திரத்தை எதிர்த்தால், அரசும் அரசு அதிகாரிகளும் அவனை எவ்வாறெல்லாம் நசுக்க முயற்சிக்கும் என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார் சவுக்கு சங்கர்.
புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலானோர் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் — ஆனால் இப்புத்தகத்திற்கு எதிர்ப்போ தடையோ வாங்காமல் இருப்பதே ஆச்சர்யம். அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது, சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இந்த அளவு தைரியமாக எழுதியதற்காகவே சங்கருக்கு வாழ்த்துகள்.
user_8779
★ 4/5 Feb 02, 2026சவுக்கு சங்கர் பிரபலமான யூடியூப் ஆளுமையும் சுதந்திர ஊடகவியலாளரும் ஆவார். அவரது பேட்டிகள் சுவாரஸ்யமானவை — பொது வெளியில் இல்லாத தகவல்களை எப்போதும் பகிர்வார். அந்தத் தகவல்கள் எங்கிருந்து, எப்படிக் கிடைக்கின்றன என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் — இந்தப் புத்தகம் அதற்கான பதிலைத் தந்தது.
16 வயதில் லஞ்ச ஒழிப்புத் துறையில் குமாஸ்தாவாகச் சேர்ந்து, 17 ஆண்டுகளில் அரசியல்-அதிகாரவர்க்க கூட்டணியின் உள்வேலைகளை நுணுக்கமாக அறிந்துகொண்டு, தன்னால் முடிந்தவரை சரிசெய்ய முயன்று, அதன் காரணமாகவே ஒரு உயர்மட்ட வழக்கில் முதல் குற்றவாளியாகச் சிக்கிய கதை இது.
எட்டு ஆண்டுகால அரசு இயந்திரத்துடனான போராட்டத்தை, இறுதியில் வெற்றிகரமாக விடுதலை பெற்றதை விவரிக்கிறது. எழுத்துநடை அருமை, எந்த இடத்திலும் சலிப்பு தட்டவில்லை, முடிந்தவரை நகைச்சுவையும் கலந்திருக்கிறது. 4.5 மதிப்பெண் கொடுக்கலாம்.
user_8778
★ 5/5 Feb 02, 2026அரசு அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் சங்கர், தனக்குத் துளியும் சம்பந்தமில்லாத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் அரசு இயந்திரத்தால் பலிகடா ஆக்கப்படுகிறார். ஊழல் மலிந்த, அரசியல் குறுக்கீடுகள் நிறைந்த அரசு இயந்திரத்தை எவ்வாறு எதிர்கொண்டு போராடி வெற்றி பெற்றார் என்னும் உண்மைக் கதையே இப்புத்தகம்.
அரசு இயந்திரத்தின் செயல்பாடு பற்றியும், 1990களுக்குப் பிறகான தமிழக அரசியலைப் பற்றியும் நிறையத் தெரிந்துகொள்ள முடிகிறது. உண்மைக் கதையை விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லும் எளிய மொழிநடை.
user_8777
★ 4/5 Feb 02, 2026சவுக்குவின் 'சென்று வா மகளே' கட்டுரையை நூறு முறை படித்திருப்பேன். 'இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன். ஆனால் இந்தச் சோரம் போன ஊடகங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்' என்ற வரி என் மன எண்ணமும் அதுவே. பாழ்பட்டுப் போன தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் சவுக்கு.
புத்தகம் எழுதுகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. 230 பக்கத்தை இரண்டரை மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஆனால் இது வெறும் விறுவிறுப்பு மட்டும் உள்ள கதையா?
சங்கர் தன் அரசுப் பணிக்குள் வந்தது, அனுபவங்கள், பிரச்சனைகள், அவற்றிலிருந்து வெளிவந்த சொந்தக் கதையைத்தான் சொல்கிறார். ஆனால் அதுவே 25 ஆண்டுகால தமிழக அரசியல் அதிகார வரலாற்றின் மேல் பயணிக்கிறது. ரஜினியால் பிரபலப்படுத்தப்பட்ட 'சிஸ்டம்' என்றால் என்ன, அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இந்தப் புத்தகத்தை விட அதிகமாக ஆவணப்படுத்திய வேறு முயற்சிகள் தமிழில் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
போகும் போக்கில் தமிழ்நாட்டின் பெரும் அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் புட்டு புட்டு வைக்கப்படுகின்றன. ஜெயலலிதா வழக்கில் கருணாநிதி செய்த தவறுகள், திலகவதி பற்றிய செய்திகள் எல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இந்தப் புத்தகத்திற்கு அவர்கள் தடை வாங்காமல் இருப்பதே ஆச்சர்யம்தான்.
அதிகாரத்தின் தவறுகளுக்கு ஒத்திசையாது அதை நோக்கிக் கேள்வி எழுப்புவதே அறம் என்பதைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு நன்றிகள்.
user_8776
★ 5/5 Feb 02, 2026அட்டைப்பக்கத்தில் 'கதையை மிஞ்சும் நிஜம், கற்பனைக்கும் எட்டாத சாகசம், உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்' என்று எழுதப்பட்டிருந்தது — அது எச்சரிக்கையாகவே இருந்தது.
எந்தவொரு அலங்காரப் புனைவுமின்றி, முழுக்க முழுக்க இயல்பிலேயே உயிரோடும் வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட நூல் இது. சாமானியன் ஒருவன் ஊழலால் கரைப்படிந்த அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்கத் துணிந்தபோது, அவனை அடிபணியவைக்க எடுக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்தும் சூழ்ச்சிகளிலிருந்தும் எப்படி மீண்டார் என்பதே இந்த உண்மைக்கதை.
ஒரே இரவில் படித்து முடித்தேன். அந்தளவிற்கு எழுத்தாளர் வாசகனோடு உரையாடுகிறார், சிரிக்கவைக்கிறார், அழவைக்கிறார், கற்பிக்கிறார், சிந்திக்க வைக்கிறார். எந்த இடத்திலும் சலிப்பு தட்டவே இல்லை.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சங்கர், தந்தையின் திடீர் மறைவால் பதினாறு வயதிலேயே அரசுப் பணியில் சேர்கிறார். பெரியாரியம், இடதுசாரிய கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். கருணாநிதியின் பொற்காலம் தொடங்கி அலைக்கற்றை ஊழல் வரையிலும், ஜெயலலிதாவின் ஆட்டங்கள், ஊழல்கள், கீழான அரசியல் வரையிலும் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பட்டியலிடுகிறார்.
தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். சிறைத்துறையிலும் நீதித்துறையிலும் நடக்கும் அநீதிகளை அம்பலப்படுத்துகிறார். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் போராடி, இறுதியில் அத்தனை குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை பெறுகிறார்.
வஞ்சனையால் புதைக்கப்பட இருந்த தன் வரலாற்றை தனியொருவனாக நின்று போராடி மீட்டுருவாக்கிய வகையில், இந்தப் படைப்பு நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய பொக்கிஷம்.
user_8775
★ 4/5 Feb 02, 2026அரசு துறையில் எல்.டி. குமாஸ்தாவாக இருந்த ஒருவர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல அதிகார மையங்களுக்கு எதிராக எப்படிப் போராடினார் என்பதை அற்புதமாகச் சொல்லும் நூல். முதல் நூறு பக்கங்கள் குறிப்பாக அருமை — 2000-ல் கருணாநிதியின் தவறு காரணமாக ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2014 வரை எப்படி இழுபட்டது என்பதை விளக்குகிறது. பள்ளியில் படிக்கும் குடிமையியல் புத்தகங்களைத் தாண்டி, அரசு உண்மையில் எப்படி இயங்குகிறது என்பதை அறிய இது போன்ற நூல்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.