Reviews for என் பெயர் ராமசேஷன்

18 reviews total

user_8570

★ 4/5 Feb 02, 2026

தன் சுயத்தின் மீது பெரிதாக நம்பிக்கையோ அபிமானமோ இல்லாமல் குறை கண்டுபிடிக்கும் புத்தியுடன் டெல்லியைச் சுற்றி வரும் ஒரு கல்லூரி மாணவனின் மனக்குரல் தான் இந்த நாவல். தன்னை அறிவுஜீவி என்றும் சமுதாயத்துக்கு கட்டுப்படாதவனாகவும் நினைத்துக் கொண்டு வாழும் சாதாரண இளைஞனின் எண்ண ஓட்டங்கள் இவை.

சாதாரண மனிதனுக்குத் தோன்றும் உணர்வுகள், எண்ணங்கள் மேல் ஒரு காகிதக் கிரீடம் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த ராமசேஷனின் எண்ண ஓட்டங்கள் இருக்கும். ஆசிரியர் வாழ்ந்த காலத்தில் ராமசேஷன் போல் எண்ண ஓட்டம் கொண்டவர்கள் மிக அரிதாக இருந்திருப்பர், அதனாலேயே ராமசேஷனை தன் நாவலின் முதன்மை கதாபாத்திரமாக்கிக் காவியமாக்கியிருக்கிறார். ஆனால் இன்று வீதிக்கு ஒரு ராமசேஷன் இருக்கிறான்.

ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும், மனிதர்களின் மனங்களைப் படிக்கும் வித்தையையும் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். காகித மலர்கள் படித்துவிட்டு ஐந்து நட்சத்திரம் கொடுத்த நான் இதற்கு நான்கு கொடுக்கவே யோசித்தேன் — ஆனால் இது என் தனிப்பட்ட விருப்பம்.

user_8569

★ 4/5 Feb 02, 2026

ஆதவன் புதினம் முழுவதும் ஒரு நடுத்தர வருமானக் குடும்பத்து இளைஞனின் எண்ண ஓட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வரைந்துள்ளார். கல்லூரிக்குச் செல்லும்போது, குறிப்பாக விடுதியில் தங்குகையில் ஏற்படும் விடுபாட்டுணர்வு, வயசுக் கோளாறு, மேட்டிமை நூல்களைப் படித்து வரும் செருக்கு, தொடர்ந்து தன்னையும் பிறரையும் உளவியல் நோக்கில் அலசுவது என்று தேர்ந்து செதுக்கிய கதைமாந்தன் இராமசேஷன்.

மற்ற கதைமாந்தர்களை அத்தனை நுணுக்கமாக வடிக்கவில்லை. ஒரு சிலரை வேண்டுமென்றே மாறுபட்ட சூழல் பாத்திரங்களாகக் காட்டி உண்மைக் கதையிலிருந்து திசை திருப்புவது போலிருந்தது. இருந்தாலும் முதல் பாத்திரத்தின் நுணுக்கமே இந்நூலின் சிறப்பு.

மொழிநடை தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்தது. மிகையான ஆங்கில வடமொழிச் சொற்களின் கலப்பு ஒருவேளை கதை நடந்த காலத்துப் பயன்பாடாக இருக்கலாம், அல்லது ராமசேஷனின் வட்டத்தின் மொழியாக இருக்கலாம். ஆனால் சொல்வரிசை முதற்கொண்டு ஆங்கிலத்தைப் பற்றியிருப்பது வெள்ளிடை மலை. பல இடங்களில் இதை ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. சுருங்கச் சொன்னால் மொழிநடை கோபி மஞ்சூரியன் — இந்திய காரசார உணவாக ரசிக்கலாம், ஆனால் சீன உணவு என்று சொல்ல முடியாது. இருப்பினும் படிக்கும்போது நிறைய உள்நோக்கிய எண்ணங்கள் ஏற்படுவதால் மொழிநடை தடையாக இல்லை.

user_8568

★ 5/5 Feb 02, 2026

ஒரு இளைஞனின் உளவியல் சிக்கல்களை இந்த அளவு தெளிவோடும் நேர்த்தியோடும் ஒருவர் 1980களில் எழுதியிருக்கிறார் என்பது பிரமிப்பைத் தருகிறது. பல உள்ளுணர்வுகளையும் கேள்விகளையும் தூண்டுகிறது. ஆதவன் தமிழ் எழுத்து உலகில் மிக முக்கியமானவர்.

user_8567

★ 4/5 Feb 02, 2026

கல்லூரி நாவல்கள் அரிதான தமிழ்ச்சூழலில் ஒரு வித்தியாசமான படைப்பு. அறிவும் கவர்ச்சியும் சற்றே அதிகம் பெற்ற ராமசேஷனின் அனைத்தையும் ஏளனித்துத் திமிரும் இளமையையும், தோல்வியோடு வாழ்வைத் தழுவும் முதிர்தலையும் இந்நாவல் சித்தரிக்கிறது.

வழக்கமான தமிழ் நாவல்களின் பேசுபொருட்கள், கதாபாத்திரங்கள், புரிதல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி நின்று, அறிவார்ந்த உளவியல் அலசலின் மூலமே வேகம் பெற்றுப் பாய்கிறது. சில சமயங்களில் இது சோர்வூட்டினாலும் அதன் லட்சியம் குறிப்பிடத்தக்கது.

ஆணாதிக்கத்தால் ஆண்களின் சுதந்திரம் பலியாவதை சூசகமாக உணர்த்துகிறது. பெண் வெறுப்பு அடிக்கடி வெளிப்பட்டாலும் பதின்ம வயதான ஒருவனின் கதையாக இருப்பதால் அது யதார்த்தமாகப் படுகிறது. அனைவரையும் விமர்சனம் செய்யும் ராமசேஷனின் கோழைத்தனத்தை இறுதியில் நாவல் விமர்சனம் செய்வதன் மூலம் அவனுடைய இரட்டை வேடத்தை வெளிச்சமாக்குகிறது.

இறுகிய சமூகச் சூழலில் ஆண்-பெண் உறவுகள், காதலில்லாத் திருமணங்கள், பாசாங்குகளுக்கும் உண்மைக்கும் உள்ள தூரம், தனிமனித சுதந்திரத்திற்கான ஏக்கம், கலைக்கும் கலைஞர்களுக்கும் உள்ள தொடர்பு என்று பல சரடுகள் கதையில் நீள்கின்றன. வாழ்வைப் பற்றிய எதிர்பார்ப்புகளும், இளமையில் கட்டும் மனக்கோட்டைகளும் இந்திய சமூகத்தில் கரைந்து போவதை உணர்த்தி நாவல் முடிகிறது.

user_8566

★ 4/5 Feb 02, 2026

கண்ணாடிகளும் பிம்பங்களும் சந்தித்துக் கொள்ளும் தருணம், சுயமும் சுயம் பற்றியான பிம்பங்களும் விளையாடிப் பார்க்கும் விளையாட்டு, முகமூடி அணிந்த மனிதர்களின் முகமூடிகளற்ற சம்பாஷணை.

user_8565

★ 4/5 Feb 02, 2026

1980களில் எழுதப்பட்ட புதினம் என்று நம்ப முடியாத அளவில் மிகவும் நவீனத்துவம் தென்படுகிறது. இராமசேஷன் என்ற நடுத்தர வர்க்க இளைஞனின் மனவியலை உளவியல் ரீதியாக அணுகியுள்ளார். ஆதவனின் எழுத்துக்களில் இளமையும் மேட்டிமை இலக்கியத்தின் சாயல்களும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

user_8564

★ 4/5 Feb 02, 2026

தானிருக்கும் உலகைவிட எதிரில் ஈர்ப்புள்ள உலகில் நுழைந்து அதில் தனக்கொரு இடத்தை அடைய செய்யும் முயற்சிகளில் ஒரு மாயபிம்பத்தை உருவகித்து அவ்வுலகில் இருக்கும் பாசாங்குகளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளப் போராடுபவன் கொடுக்கும் பாவனைகளும், கையிலெடுத்துக் கொண்ட முகமூடிகளும் அவனின் தேடலைக் கண்டடைந்தான் என்பதை விடத் தன்னைப் பற்றிய சுயஅலசலில் வெற்றி பெற்றான் என்றே சொல்ல முடியும்.

பெண்களின் ஆளுமையில் ஊறித் திளைத்த குடும்பத்தில் பிறந்த ராமசேஷன் வளர வளர பெண்கள் தங்களின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தக் காட்டும் பாவனைகளை அறவே வெறுத்து ஒதுக்குபவனுக்கு விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல் குடும்பத்திலிருந்து தப்பிக்க வைத்துவிடுகிறது.

சராசரி மத்திய வர்க்கத்தில் வளர்ந்த ராமசேஷனுக்கு ராவ்வின் அறிமுகம் புதியதோர் உலகைத் திறக்கிறது. நாகரீக உச்சத்தில் வாழும் மேல்குடிகள் என்ற பெயரில் அவர்கள் அரங்கேற்றும் அனைத்திலும் தனக்கான இடத்தைப் பிடிக்கவும் போலியான பிம்பத்தை உண்டாக்கியவன் அதிலிருக்கும் இடர்களை அறிந்த பிறகு தப்பிக்க வழி தேடுகிறான்.

மாலாவுடன் சேர்ந்து அறிந்த பிறகு சுவாரசியம் குறைந்து சலிப்பே எழுகிறது. இருவரும் தங்கள் உண்மை முகத்தை மறைத்துப் போலியாகப் போட்டுக் கொள்ளும் முகமூடியை விரைவிலே அவிழ்த்து விடுகின்றனர். பிரேமாவிடம் பழக விரும்புபவன் அவளின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு வேறொரு முகமூடியை அணிகிறான்.

தன்னுடைய பாசாங்கெல்லாம் அர்த்தமில்லாமல் போவதை உணர்ந்து, வயதில் மூத்த மாமியின் மீது கொண்ட அனுதாபத்தைக் கல்யாணம் வரை கொண்டு செல்வேன் என்று பிதற்றும் ராமசேஷனை அவளின் நடைமுறை புத்தி பின்வாங்கச் செய்கிறது. தங்கை எவனோ ஒருவனுடன் பழகுவதைப் பார்த்தவுடன் தன் இயல்புக்கு வந்து சேர்கிறான் ராமசேஷன், அதுவரை போட்ட முகமூடிகள் அனைத்தையும் கழட்டிவிட்டு.

user_8563

★ 3/5 Feb 02, 2026

ஆதவனின் எழுத்துக்களில் தொடர்ச்சியாக வரும் கருப்பொருள் அடையாளத் தேடல். இதே கருப்பொருளை காகித மலர்களிலும் கண்டேன் — குறிப்பாக முதன்மை ஆண் கதாபாத்திரங்களின் காமவேட்கை இரண்டிலும் ஒத்திருக்கிறது. காகித மலர்கள் அளவுக்கு இது என்னைப் பாதிக்கவில்லை.

இருப்பினும், ஒரு கல்லூரி மாணவனின் மனவோட்டங்களை ஆசிரியர் தெளிவாகக் கொண்டுவந்திருக்கிறார், சில இடங்களில் அதிகப்படுத்தியிருந்தாலும். அந்த வயதில் காமம் எப்படி முடிவுகளை, செயல்களைப் பாதிக்கிறது என்பது நன்கு விவரிக்கப்பட்டிருக்கிறது — குறிப்பாக மாலாவின் தாயுடனான சம்பவமும், அவள் வலையில் விழுவதும் குறிப்பிடத்தக்கவை.

ராவ், பிரேமா போன்ற சில கதாபாத்திரங்கள் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. அதிகமான பகுப்பாய்வு சில இடங்களில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. ஆனால் ஒட்டுமொத்தமாக படிக்கத்தக்க நாவல், அவரது மற்ற படைப்புகள் அளவுக்கு சிந்தனையைத் தூண்டவில்லை என்றாலும்.