Reviews for காதுகள்

25 reviews total

user_7549

★ 4/5 Feb 02, 2026

என்றாவது உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறீர்களா? ஆம் என்றால், வாழ்த்துக்கள்! இது உங்களுக்கான புத்தகம்.

நமது எண்ணங்களுக்குக் குரல் இருந்து அவை நம் காதுகளுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை மகாலிங்கம் எனும் படைப்பின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர்.

மாலி - கூச்ச சுபாவம், நல்ல வேலை, பிறகு தொழில். நலமான வாழ்க்கை. ஒரு கட்டத்தில் செல்வமிழந்து நடுத்தெருவுக்குத் தள்ளப்படுகிறான். நாட்கள் செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகள் கேட்கிறது. முருகன் அவனை நெறிதவறாமல் நடக்கச் சொன்னாலும் காளி அவனை நிலைகுலையச் செய்கிறது. மாலியினுள் நடக்கும் இந்தப் போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதுமே காதுகள்.

ஆசிரியர் மகாலிங்கம் தான்தான் என்றும், தன் 20 வருட வாழ்க்கையின் அனுபவம் தான் காதுகள் என்கிறார். சாகித்திய அகாடமி விருது பெற்ற இந்த நாவல் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

user_7548

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான எழுத்தாற்றல் எம்.வி.வெங்கட்ராமுக்கு, அதோடு கவியாற்றலும். நாவலின் ஓரிடத்தில் நாயகன் இரவில் வெளியே உலாவப் போகிறான், அங்கு "வெளியே நடந்த அவனை வானம் இலட்சம் கோடி பல்லைக் காட்டிச் சிரிக்கிறது" என நட்சத்திரங்களை வானின் பற்களாக உவமையாக்குகிறார்.

இன்னோர் இடத்தில் வாழ்க்கையை ஊசிமுனை தவம் என்கிறார். கவி உவமைகளுக்கு அப்பால் நாவல் முழுமைக்கும் ஓர் உலகையே சிருஷ்டித்திருக்கிறார், அதுவும் நாயகனின் உடலின் உள்ளே அவன் மனத்தைக் கொண்டே!

user_7547

★ 5/5 Feb 02, 2026

Introvert ஆன மாலி என்கிற முதன்மைக் கதாபாத்திரத்தின் காதுகளில் ஏற்படும் விசித்திரமான சத்தங்களின் ஒட்டுமொத்தப் போராட்டமே இக்கதையின் கதைக்களம்.

பொதுவாகக் கும்பகோணத்தின் காவிரிக்கரையில் இருந்து தோன்றும் பெரும்பாலான எழுத்தாளர்களின் கதையாடல்கள் அந்த ஊரின் பவுசான வாழ்க்கையும் அவர்களின் மனப்போராட்டங்களும் தான் கதைக் கருக்களாக இருக்கும். எம்.வி.வெங்கட்ராமின் எழுத்துகள் இவற்றிலிருந்து புதுமையானவை.

எம்.வி.வி தன் சொந்த வாழ்வில் மத்திய வயதில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு புனைந்துள்ள இந்நூல் Psychological, Magical Realism மற்றும் Transgression வகையைச் சேர்ந்தது. நான் விரும்பிப் படித்த நூல்களில் இந்நூலும் ஒன்றாக அமைந்ததில் எம்.வி.வியின் மொழிச்செழுமைக்காகவும் வித்தியாசமான கதைமுறைக்கும் இந்நூலைக் கண்டிப்பாக வாசிக்கலாம்.

user_7546

★ 4/5 Feb 02, 2026

இத்தனை வருடங்களாக பல புத்தகங்களைப் புதினங்களாகவும் சிறுகதைகளாகவும் படித்திருந்தாலும் வித்தியாசமான ஒரு படைப்பு என்பதை அவ்வளவாகக் கண்டடைந்ததில்லை. அப்படி ஒரு தேடலின் பலனே இந்த காதுகள். நான் இதுவரை படித்ததில் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது இந்தப் புத்தகம்.

வெங்கட்ராம் என்ற எழுத்தாளரைப் பற்றி அறிமுகம் இல்லாத நான் இந்தப் புத்தகத்தைப் பல நாட்கள் புறக்கணித்து வந்தேன். பிறகு சாகித்திய அகாடமி விருது பெற்ற புத்தகம் என்று கண்டுகொண்டதும் வாசித்துத் தான் பார்ப்போமே என்று முற்பட்டேன். அது நல்ல முடிவும் கூட. இல்லையேல் இப்படி ஒரு கதையைத் தெரிந்திருக்க முடியுமா?

மாலி எனும் மகாலிங்கத்தின் கதையே இந்த காதுகள். தனது பெற்றோருக்கு ஒரே மகனாகப் பிறந்த மாலி கூச்ச சுபாவத்துடன் வளர்கிறான். படித்து முடித்து வேலை செல்கிறான். பிறகு தொழில் நடத்துகிறான். சிறு வயதில் கல்யாணமும் நடத்தி வைக்கப்படுகிறது. செல்வ செழிப்பில் திகழும் மாலியின் நிலையில் மாற்றம் வர செல்வங்கள் இழந்து நடுத்தெருவுக்குத் தள்ளப்படுகிறான்.

நாட்கள் செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகள் கேட்கிறது. முருகன் அவனை நெறிதவறாமல் இருக்கச் சொன்னாலும் காளியின் பேச்சு அவனைப் பல கெட்ட செயல்களைச் செய்யவும் கெட்ட எண்ணங்களை நினைக்கவும் தூண்டுகிறது. மாலியினுள் நடக்கும் இந்தப் போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதுமே காதுகள்.

மாலியின் மனக்குழப்பத்தைத் தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார் எம்.வி. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஆக இருந்தாலும் இந்தக் கதைக்களம் நம்மை அது ஒரு கற்பனைக் கதை என்றே நினைக்கத் தூண்டுகிறது. இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள் சிலர். மனநல மருத்துவர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் இதற்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருக்கத் தான் செய்யும்.

user_7545

★ 4/5 Feb 02, 2026

மிகவும் நல்ல புத்தகம். வெவ்வேறு மொழிப் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தின் விளைவாக இந்த நாவலைக் கண்டடைந்தேன். இதில் முதன்மை கதாபாத்திரத்தின் தலைக்குள் குரல்கள் அவனது வாழ்க்கையைப் பற்றி விவாதிக்கின்றன. குறிப்பாக ராமன் மற்றும் கருப்பன் உரையாடல்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தன. இந்தப் புத்தகம் 1992-ல் சாகித்திய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.