Reviews for நாளை மற்றுமொரு நாளே

30 reviews total

user_7427

★ 5/5 Feb 02, 2026

நான் இதுவரை பார்த்திடாத, பேசிடாத மனிதர்கள் பற்றிய கதை. ஆயினும் என்னால் அவர்களின் உலகைப் புரிந்துகொள்ளும்படியாக எழுதியிருக்கிறார் ஜி.நாகராஜன்.

ஒருவனின் அன்றாட வாழ்க்கையை விவரித்து, அவன் மூலம் நம்மை அவனின் உலகிற்கு அழைத்துப்போகிறார். அவனது ஒரு நாளின் அனுபவத்தை நாமும் பெறுவது போலான வாசிப்பு. அந்த அனுபவம் பிடித்ததா இல்லையா என்பது வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்தது. ஆனாலும் அனுபவத்தைப் பெறுவது நிச்சயம்.

user_7426

★ 5/5 Feb 02, 2026

அன்றாட வாழ்வில் நடக்கும் யதார்த்தங்களை தத்ரூபமாக வடிப்பது ஒரு கலை எனில், ஜி.நாகராஜன் அதன் பிதாமகன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

வாழ்வின் அழகை பலர் எழுதியிருப்பினும், அழகின்மையே வாழ்க்கை — அதை வெல்லவோ வீழ்த்தவோ முடியாது, வாழ்ந்து அனுபவிப்பதே புரிந்துகொள்ள ஆகச் சிறந்த வழி என்பதை கதை மாந்தர்கள் வழியாகக் கடத்தியிருக்கிறார். 35 வருடம் முன்பு எழுதிய நாவல் இன்றும் அதே அனுபவம் தருமெனில் அதுவே கிளாசிக். வரலாறு கடந்து நிற்கும் ஆகச்சிறந்த படைப்பு.

user_7425

★ 4/5 Feb 02, 2026

வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் காதல், துரோகம், வீரம் என எழுதித் தள்ளிக்கொண்டிருக்கையில், இது சற்று வித்தியாசமாகவும் புதுமையானதாகவும் இருந்திருக்க வேண்டும்.

பாலியல் தொழில் செய்பவர்களை எந்தவிதக் குற்ற உணர்வோடும் அணுகாமல் சாதாரண மனிதர்களாகக் காட்டியதற்கு நன்றி. எந்த இடத்திலும் பாடம் எடுக்காமல், சோக ரசம் பிழியாமல் இருந்ததற்கும் நன்றி. ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய நாவல்.

user_7424

★ 4/5 Feb 02, 2026

இந்த எழுத்து நடையில் வேறு யாராலும் எழுத முடியாது. அற்புதமான புத்தகம்!

1950களின் இந்திய சாமானிய மனிதனின் ஒரு நாள் வாழ்க்கை. இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத ஒரு மணி நேரம் தேவை — அவ்வளவு ஆழமான படைப்பு.

மறக்க முடியாத வசனம்: "நான் டீ, காஃபி எதுவும் சாப்பிடக் கூடாது; விஸ்கிதான் சாப்பிடனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். எங்க பிளட்டுக்கு அதுதான் ஒத்துக்குது."

user_7423

★ 3/5 Feb 02, 2026

தமிழ் இலக்கியத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாலியல் தொழிலாளிகளையும் அவர்களைச் சுற்றி வாழும் விளிம்புநிலை மனிதர்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். எழுபதுகளிலேயே கலாச்சாரக் கோட்பாடுகளையும் புனிதத்துவங்களையும் கட்டுடைத்து எழுதிய ஜி.நாகராஜன் பாராட்டுக்குரியவர்.

ஆனால் கந்தன் ஏன் ஒரு பாலியல் தொழிலாளிக்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற கேள்விக்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. சுப்பையா செட்டியார், ஐரின், கம்யூனிசம் பேசும் இளைஞன் போன்ற பாத்திரங்கள் இயல்பாகப் படைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கதையோட்டத்தோடு ஒட்டாத இடைச்செருகல்கள் போல இருந்தது. ஒட்டுமொத்தமாக நல்ல நாவல்தான் — ஆனால் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றை வாசிக்கும் ஆவலுடன் வாசித்த எனக்கு சிறிது ஏமாற்றமே.

user_7422

★ 4/5 Feb 02, 2026

ஒரு கிலோ சர்க்கரை இரண்டரை ரூபாய் இருக்கும் காலகட்டத்தில் அமைந்த நாகராஜனின் கதைக்களம். கந்தன் எனும் காமத் தரகரின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை stream of consciousness வடிவில் கூறுகிறது.

காலையில் போதை தெளியாமலே ஜிஞ்ஜர் அருந்தி, சலூனில் மிதுனம் ராசி பலன் கேட்டு, மனைவி மீனாவுடன் புணர்ச்சியில் ஈடுபட்டு, அன்றாட வேலைகளைச் செய்யத் தொடங்குகிறான். அவன் பார்க்கும் மனிதர்கள், சந்திக்கும் சூழ்நிலைகளே இக்கதையின் கரு.

தனிப்பட்ட முறையில் கந்தன் பேசும் வட்டார வழக்குகள் பல இடங்களில் புரியவில்லை. இதைத் தவிர, சிறப்பான நாவல்.

user_7421

★ 3/5 Feb 02, 2026

சராசரி மனிதனின் ஒரு நாள் வாழ்க்கை! இந்த கதையின் நாயகன் கனவுகளை துரத்துபவன் அல்ல, பெரிய லட்சியங்களை நோக்கி நகர்பவன் அல்ல — மாறாக அன்றாடத் தினத்தை அதன் போக்கில் கழிக்கும், நாம் தெருவில் தினமும் கடந்து செல்லும் ஒருவன். இவனின் தேவைகள் எல்லாம் இந்த நாளை, இந்த பொழுதைக் கடந்துவிட வேண்டும் — நாளைய எதிர்காலம் நாளை மற்றுமொரு நாளே.

பெரிய சாதனைகள் நாவலில் இல்லை என்றாலும், நாவல் யதார்த்தமாகக் கையாண்டிருப்பது படிப்போருக்கு புது அனுபவத்தைத் தரும். நம்மிடையே கடந்துபோகும் ஒருத்தனை வைத்து கதை சொன்ன விதம் அருமை!

user_7420

★ 5/5 Feb 02, 2026

"நீங்க வாழ்க்கையிலே எதைச் சாகிக்கனும்னு திட்டம் போட்டிருக்கீங்க?" — "எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறந்தேன்?"

பரமேஸ்வரன் பசுபதி சலூன் கடை, கந்தனின் குடும்பம் — மகளின் இழப்பு, மகன் காணாமல் போதல், இட்லி விற்கும் பெண், செட்டியார், லாட்ஜில் அரசியல் வாக்குவாதம், சிறுமியின் கர்ப்பம், ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் வாழ்வு, இறுதியில் ஒரு மரணமும் அதன் சாட்சியும் — இன்னும் நிறைய நிஜங்கள். மனித வாழ்க்கையில் ஒரு நாளில் நாம் கண்டும் காணாததுமாக கடந்து செல்லும் படிமங்களாக ஒருவித வலியோடு, கிண்டலோடு, அனுபவத்தோடு நம்முள் நிறைக்கிறார் ஜி.நாகராஜன்.

user_7419

★ 3/5 Feb 02, 2026

நான் படிக்கும் ஜி.நாகராஜனின் இரண்டாவது படைப்பு. கண்டிப்பாக முதல் படைப்பு கொடுத்த உற்சாகத்தையும் ஆர்வத்தையும் இரண்டாவது நாவல் தரவில்லை. எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றம்தான் என்பதை உணர்த்தும் புத்தகமிது.

குறத்தி முடுக்கு போல் ஆரம்பித்து, கந்தனின் ஒரு நாள் வாழ்க்கையைச் சொல்ல முனைந்து, எதிர்பாரா ஒரு கொலையுடன் முடிகிறது. கதையோட்டத்தில் தேக்கம் இல்லாமல் இருப்பது மட்டுமே ஆறுதல். போகப் போக எல்லா கதாபாத்திரமும் நீர்த்துப் போய்விடுகிறது. குறத்தி முடுக்கு நாவல் ஒன்றே ஜி.நாகராஜனின் மொத்த திறமைக்கும் சான்றாய் இருக்கும்.

user_7418

★ 3/5 Feb 02, 2026

பள்ளிப்பருவத்தில் ரோஜர் மார்ட்டின் டு கார்டின் Vielle France நாவலை வாசித்தேன் — ஒரு மலையடி கிராமத்தில் போஸ்ட்மேனின் ஒரு நாள் கதை. நாளை மற்றுமொரு நாளே அதே வடிவத்தில் எழுதப்பட்டது.

கந்தன் என்ற பிம்பம். தியேட்டரில் வேலை செய்த அவன் மீனா என்ற வேசியின் மீது காதல்வயப்படுகிறான். சோலைப்பிள்ளையால் ஏமாற்றப்பட்டு, தானும் பிறரை ஏமாற்றுபவனாக மாறுகிறான். இவ்வொரு நாளில் ஓடிப்போன மகன், இறந்த மகள், தூக்கிமாட்டிய இளைஞன், லாரி இடித்த சிறுமி என பல மனிதர்களின் கதையை கந்தன் வழியே அறிகிறோம்.

என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் புரோக்கர் அந்தோணி. சதுரங்கவேட்டை படத்தின் வசனம் போல — "உன்ன ஒருத்தன் ஏமாத்திட்டா அவன குருவா பாரு" — அவனின் வாழ்க்கைப் பார்வை தெளிவாக உள்ளது. நெட்வர்கிங் ஜித்தனாக அவன் இருக்கிறான்.

நாவலின் இறுதியில் கந்தன் இருட்டில் அடையாளம் தெரியாமல் தவறான நபரைக் கொலை செய்துவிடுகிறான். நல்ல வடிவம், நல்ல கதைகளைக் கொண்டிருந்தாலும் சலிப்பான நாவல் இல்லை.