Reviews for வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
30 reviews total
user_6506
★ 5/5 Feb 02, 2026முதல் பாகமே என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பாகம் எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. இதனை மிஞ்சக்கூடிய புதினம் இனி கிடைக்குமா என்பதே சந்தேகம்.
இப்பாகத்தில் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள போர்க்களக் காட்சிகள் உயிருடன் நம்முன் நிற்பதுபோலவே உணர்த்துகின்றன. திரையர்கள் களத்தில் வருவதன் பேரில் எழும் உற்சாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கதையின் இறுதிப் பகுதியில் நிகழும் மாபெரும் போர் அத்தியாயங்கள் திரைப்படங்களை நிஜமாக முந்திச் செல்கின்றன.
பாரி காட்டின் இயற்கையை ஆயுதமாக மாற்றி, செடிகொடிகளைப் பயன்படுத்திப் போராடும் விதம் மனதைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. காட்டிற்குள் திரையர் தலைவனுடன் பாரி நேரடியாக மோதும் காட்சி என் மனதில் என்றும் அழியாதபடி பதிந்துவிட்டது.
மொத்தத்தில், இந்தக் காவியம் தமிழ் இலக்கியத்தில் நம்மை இழுத்துச் செல்லும் அபூர்வமான அனுபவம். பாரியுடன் வாழ்ந்துபார்த்த அனுபவத்தை இவ்வளவு நேர்த்தியான செந்தமிழிலும் உயிர்ப்பூட்டும் கதையிலும் அளித்த சு. வெங்கடேசன் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.
user_6505
★ 5/5 Feb 02, 2026வீரயுக நாயகன் வேள்பாரி இரண்டாம் தொகுதி — சோமபானம் மற்றும் செருக்களம் என இருபாகங்களைக் கொண்டது. படிக்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் இடங்கள் பல உண்டு. சு.வெங்கடேசன் எழுத்தில் கதை சொல்ல, ம.செ அழகிய ஓவியத்தின் வழியே நமக்குள் கதையைக் கடத்திவிடுகிறார்.
கதைச் சுருக்கம்: வைப்பூர் துறைமுக அழிவுக்குப் பழிவாங்க பாண்டியன் தனது படையைப் பறம்பு நாட்டின் எல்லையில் குவிக்கிறான். சேரன் தோகைநாய் உதவியுடன் பறம்பு உள்ளே நுழைந்து தாக்கத் திட்டமிடுகிறான். சோழன் காடர்கள் உதவியுடன் பறம்பின் உள்ளே வருகிறான்.
சேரன், சோழன் இருவரின் படையும் பறம்பு வீரர்களால் பந்தாடப்படுகிறது. இதையறிந்த குலசேகரப் பாண்டிய மன்னன் மூவரையும் ஒன்றிணைக்கிறான். மூவேந்தர்களும் சதிவேலை செய்து நீலனைச் சிறைபிடிக்கிறார்கள். கொதித்தெழும் பாரி போர்புரிந்து நீலனை மீட்க முடிவெடுக்கிறான்.
அறம் பிறழ்ந்துவிட்டது — இனி அழித்தொழிப்பே! பறம்பு நாட்டின் அனைத்துக் குடிகளும் களம்புகுந்து மூவேந்தர்களின் படைகளை அழிக்கிறார்கள்.
user_6504
★ 5/5 Feb 02, 2026பாகம் 3 சோமபானம் — பெரியதொரு புயலடித்த மறுநாள் மலரும் ஆதவனுடன் கலந்த மெல்லிய காற்றைப்போல் துவங்குகிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் கதை, சேரனுடன் அவனுடைய முதல் போர், ஆதினியுடன் திருமணம் போன்ற கடந்த காலத்தின் நினைவுகளில் துவங்கி நிகழ்காலத்துக்கு வரும் சமயம் கதை மீண்டும் வேகம் கொள்கிறது.
வடமேற்கே சேரர்களின் படை புதிய உத்திகளுடன் பறம்பின் மீது போர் தொடுக்க வருகிறது. அதே சமயம் தெற்கே சோழனின் ஐநூறு யானைகளையும் ஐயாயிரம் காலாட்படைகளையும் கொண்ட பிரம்மாண்டமான படை பறம்பின் பொக்கிஷங்களைச் சூறையாட முன்னேறுகிறது.
ஒரே சமயம் நிகழும் இரண்டு போர்களின் வர்ணனையும், எதிரிகளை முறியடிக்க பாரியும் பறம்பு வீரர்களும் கையாளும் உத்திகளும் அபூர்வமானவை.
சேரனும் சோழனும் தோல்வியுற்ற அதே சமயம் குலசேகரப் பாண்டியன் கிழக்கே தன்னுடைய பெரும் படையை அணிவகுக்கிறான். 500 பக்கங்கள் கொண்ட மூவேந்தர்கள் இணைந்த போரின் கதை — தட்டியங்காட்டில் நடக்கும் போரை வெங்கடேசன் வர்ணித்துள்ள விதம் அற்புதமாக அமைந்துள்ளது.
முதலாம் தொகுதியைப்போலவே மணியம் செல்வனின் வண்ணப்படங்கள் சு.வெங்கடேசனின் சிறப்பான எழுத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ளது.
user_6503
★ 5/5 Feb 02, 2026அறம் என்னும் ஒற்றைத் தன்மையை அச்சாணியாக வைத்துப் புனையப்பட்ட வரலாற்றுப் புதினம் வேள்பாரி! கடையேழு வள்ளல்களில் முதன்மையானவரான பாரியின் பறம்பு மலையையும் அங்கு வாழும் மனிதர்களையும் பெரும் சங்கப் புலவர் கபிலரின் வழியே காட்டுகிறது இந்தப் புதினம்.
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை உணர்த்தும் கதைக்களம். அப்போதைய பேரரசுகளைப்போலவே இன்றைய மக்களாட்சி அரசுகளும் மலை மக்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை என்பதைக் கதையின் ஊடாக உணரலாம்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண்ணற்ற தகவல்கள் ஊடாக கதையின் பிரவாகம் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. பறம்பின் காடுகளும் அதன் உச்சியில் அமைந்திருக்கும் எவ்வியூரும், மணியம் செல்வம் அவர்களின் ஓவியங்களுமாக நாம் எவ்வியூரின் சிகரத்திற்கே சென்று வந்த உணர்வு!
காலம் காலமாகப் பார்ப்பன மயமாக்கப்பட்ட முருகனின் கதைகளையே கேட்டு வந்திருக்கிறோம் — ஆனால் இந்தப் புத்தகத்தில்தான் முருகனும் வள்ளியும் அவர்களின் சுயத்தோடு வந்திருக்கிறார்கள்.
கதையில் பாரி-ஆதினி, எவ்வி-சோமா, நீலன்-மயிலா, தேக்கன், முடியன், இரவாதன் என நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் வாசகனுக்குக் குழப்பம் வராமல் கதை சொல்லிய பாங்கை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை!
போர்க்காட்சிகள் நம்மை இருக்கை நுனியில் அமர்த்தி நகம் கடித்து வாசிக்க வைக்கின்றன. பிரதானமாகச் சொல்லப்பட்ட அறம் பிறழாமை திகழ்ந்தாலும், "அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே" என்னும் பாடத்தைப் பாரியின் மூலம் உணர்த்தியிருக்கிறார் சு.வெ!
அனைவரும் நிச்சயம் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒப்பில்லா புதினம் வேள்பாரி!
user_6502
★ 4/5 Feb 02, 2026கதைசொல்லலின் ஆற்றல் நம்மை வேள் பாரியின் மீது காதல் கொள்ளவைக்கிறது. ஆனால் இரண்டு விஷயங்களில் சிறிது ஏமாற்றம் — 1. பாரியின் மரணம் கதையில் இடம்பெறவில்லை. 2. ம.செ-யின் ஓவியங்கள் எழுத்துக்கு முன்னதாக வந்ததால் கதையின் போக்கு தெரிந்துவிடுகிறது. ஓவியங்கள் எழுத்துக்குப் பின் வந்திருந்தால் வாசிப்பு அனுபவம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்.
user_6501
★ 5/5 Feb 02, 2026இதுவரை நான் வாசித்த நாவல்களில் மிகவும் பிடித்தமான புத்தகம் வேள்பாரிதான். நான் மீள்வாசித்த ஒரே புத்தகமும் இதுவே. வேள்பாரி ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.
காதலையும் வீரத்தையும் வெங்கடேசன் சொல்லும் அழகு தனித்தன்மையானது. பறம்பின் மக்களாகவே இருந்து பாரியுடனே பயணம் செய்யும் வாய்ப்பு. போர்க்காட்சிகளை விவரிக்கும் கலை வெங்கடேசனைப்போல் யாரிடமும் பார்த்ததில்லை — அப்படியே கண்முன்னால் கதை நடத்தும் கலைப்படைப்பு இது. என் மட்டில் வேள்பாரி ஒரு பொக்கிஷம்.
"கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி என இயற்கை எல்லாம் நமக்குத் துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையைக் கதையன்றி வேறு யார் கொடுப்பது?"
user_6500
★ 5/5 Feb 02, 2026பாரியையும் பறம்பையும் கண்டு வியந்து முதல் பாகம் நகர்ந்து வர, இரண்டாம் பாகம் யுத்த காண்டம்.
மூவேந்தர்களின் கூட்டுப்படை ஒன்றுசேர்ந்து பறம்பு மலையை வெற்றிகொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளைத் தன் மதிநுட்பத்தாலும் ஆற்றலாலும் இயற்கையையே ஆயுதமாக மாற்றி வேளிர்குலத் தலைவன் வேள்பாரி கொள்ளும் பெருவெற்றிதான் இரண்டாம் பாகம்.
இப்படி ஒரு தலைவனா என்று வியந்தும், இப்படி ஒரு வணங்கத்தக்க மாமனிதன் தமிழ் நிலத்தில் எப்போதோ வாழ்ந்து மறைந்திருக்கிறான் என்றும் மனம் பூரித்து மகிழ்கிறது. வரலாற்றுப் புனைவுக் கதைதான் என்றாலும், பாரி போன்று மக்கள் நலமும் இயற்கை நலமும் முதன்மையாகக் கொண்ட தலைவர்கள் வாய்க்க மாட்டார்களா என மனம் ஏங்குகிறது.
"பனையன் மகனே.. பனையன் மகனே.." என்ற பாடலோடு புத்தகம் முடியும்போது மனம் பறம்பு மலையை விட்டு இறங்கி வர மறுக்கிறது.
user_6499
★ 5/5 Feb 02, 2026இயற்கையுடன் மனிதன் கொண்டிருந்த உறவையும், மன்னர்கள் நிகழ்த்திய குரூர அழித்தொழிப்புகளையும் பாரி மற்றும் பறம்பின் பின்னணியில் விவரிக்கும் நாவல்தான் வேள்பாரி. இரண்டு பாகங்களாக இது வெளிவந்திருக்கிறது.
இரண்டாம் பாகம் போரும் அதன் தந்திரங்களும் யுக்திகளும் என முதலாம் பாகத்திலிருந்து வேறுபட்டு நின்றாலும், ஆசிரியர் சொல்ல வந்த இயற்கையின் முக்கியத்துவமும் மனிதனாய் பிறந்தவனின் மாண்பும் எந்த இடத்திலும் பிறழவில்லை.
பாரியின் பெயரை முன் அட்டையில் தாங்கி நின்றாலும், நாவல் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நாவலைத் தாங்கி நிற்கின்றன. எல்லா கதாபாத்திரங்களும் தங்களது பார்வையில் தருமம் என நினைப்பதை விட்டு எப்போதும் விலகவில்லை.
பொற்சுவையின் பகுதிகள் சில இடங்களில் ஒட்டாமல் அமைந்திருந்தாலும், இறுதியில் அந்தக் கதாபாத்திரத்தின் பங்கு அளப்பரியது. மூவரசர்களுக்கு இடையே நம்பிக்கை உருவாகவில்லை — நம்பிக்கை இல்லாத இடத்தில் துரோகத்துக்கு இடமில்லை. இருந்தும் வாசிப்பவர்கள் பரிதாபப்படும்படியான துரோகங்கள் இருக்கின்றன.
user_6498
★ 5/5 Feb 02, 2026பனையன் மகனே! இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணர்ந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த அனுபவத்தை சொற்களால் சொல்ல முடியாது. இந்தப் புத்தகம் என் நெஞ்சின் ஒரு பகுதியாக என்றென்றும் பின்னிப் பிணைந்திருக்கும்.
user_6497
★ 5/5 Feb 02, 2026"மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்."
"ஏன்?"
"அது அவ்வளவு விரிந்து பரந்தது... அளவற்றது."
முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்...
"எங்கள் பாரியின் கருணையை விடவா?"
கபிலர், மனதுக்குள் சுருங்கிப் போனார்!