Reviews for கோபல்லபுரத்து மக்கள்

30 reviews total

user_6231

★ 5/5 Feb 02, 2026

புத்தகத்தின் 60 சதவிகிதம் வரை இது ஏன் சாகித்ய அகாதெமி விருது பெற்றது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்... ஆனால் கடைசி 100 பக்கங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. முடிவு மிகவும் அற்புதமாக இருந்தது!

user_6230

★ 4/5 Feb 02, 2026

இந்நாவலை மூன்று பகுதிகளாகப் பகுப்பதே பொருத்தமாக இருக்கும் — கிட்டப்பனின் கதையை கூறும் முதற்பகுதி, கல்வி வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கும் இரண்டாம் பகுதி, இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய மூன்றாவது பகுதி.

கோபல்ல கிராமத்தின் அப்பழுக்கற்ற கிராமத்து வாசனைக்கு நான் எப்போதும் ரசிகனே. மிகவும் இயல்பாகவும் தனித்துவமுடையவையாகவும் அமைக்கப்பட்ட பாத்திரங்களும், கல்வி வளர்ச்சியால் மூடநம்பிக்கைகள் அர்த்தமிழந்து போவதும், சாதிய ஒடுக்குமுறைகளும் எடுத்துக்காட்டிய விதம் சிறப்பு. முற்போக்குக் கருத்துக்களை பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் மூலமாக கதையோட்டத்தை சிறிதும் பாதிக்காத வகையில் குறிப்பிட்ட விதத்தை ரசித்தேன்.

சற்று நீண்ட முதற்பகுதிக்கும், ஒரு நான்-ஃபிக்ஷன் வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மூன்றாவது பகுதிக்கும் சற்றுக் கத்தரித்திருந்தால் நாவல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்.

user_6229

★ 3/5 Feb 02, 2026

இது ஒரு நிகழ்வுகளின் தொகுப்பும் சுதந்திரத்திற்கு முந்தைய வரலாறும் கலந்த நாவல். கி.ரா-வின் கவர்ச்சியான உரைநடையில் கோபல்லபுரத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது. பழமொழிகளும் சுருக்கமான ஆனால் பயனுள்ள விவரணைகளும் அடிக்கடி வருகின்றன.

முன்னோடி நாவலான கோபல்ல கிராமத்தில், ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் மக்கள் கரிசல் நிலத்திற்கு இடம்பெயர்ந்து கிராமத்தை உருவாக்குகிறார்கள். இந்நாவல் அங்கிருந்து தொடர்ந்து 1947 வரையிலான நிகழ்வுகளை உள்ளடக்குகிறது.

மூன்றில் இரண்டு பகுதிக்குப் பிறகு நாவல் திடீரென சுதந்திரப் போராட்ட நினைவுகளாக மாறுகிறது. சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், பல வரலாற்று நிகழ்வுகளை அறிய முடிகிறது. சுதந்திரம் குறித்து அன்றைய காலத்தில் நிலவிய வெவ்வேறு கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சிதறலான கட்டமைப்பு கொண்டிருந்தாலும், சோதனை வடிவமும் வாய்மொழிக் கதைசொல்லல் மரபின் பாதுகாப்பும் இதை தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக்குகிறது.

user_6228

★ 5/5 Feb 02, 2026

1990-ம் ஆண்டு முதற்பதிப்பு கண்டு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இரண்டு பாகங்களை உள்ளடக்கியது.

இந்நாவலின் முந்தைய பாகமாகக் கருதப்பட வேண்டிய "கோபல்ல கிராமம்" நாவலைப் போன்றே, இந்நாவலிலும் கோர்வையான கதையாக இல்லாது, கோபல்ல கிராமத்து மக்களின் குணங்களையும் அவர்களுக்குள் நடக்கும் சிறுசிறு சம்பவங்களையும் சொல்லிச் செல்கிறது.

தெலுங்கு தேசத்திலிருந்து தென்கோடி தமிழகத்திற்கு வந்த நாயக்கர்களின் வரலாற்றை, கோபல்ல கிராமம் எனும் கற்பனைக் கிராமத்தின் மூலமாக கி.ரா அவர்கள் நமக்குள் கடத்துகிறார். கதைக்காலம் இந்திய சுதந்திரத்திற்கு வெகு நெருக்கத்திற்கு முன் என்பதால், அந்த வரலாற்று நிகழ்ச்சிகளும் இரண்டாம் பாகத்தில் கதைமாந்தர் வழி சொல்லப்படுகிறது.

முதல் பாகத்தில் மண்ணெண்ணை விளக்குகள் அறிமுகம், தேயிலை பயன்பாடு, உடன்கட்டை முறை ஒழிந்தது, கிட்டப்பன்-அச்சிந்தலு காதல் என கதையோட்டம் செல்கிறது. இரண்டாம் பாகத்தில் படிப்படியாக கடிகாரங்கள், டார்ச்லைட், துப்பாக்கி போன்ற உபகரணங்கள் அறிமுகமாவதும், சுதந்திர வேட்கை கோபல்ல மக்களிடம் ஏற்படுத்திய தாக்கமும் விறுவிறுப்பாகச் செல்கிறது.

கடைசியாக நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில், கோபல்ல கிராமத்தில் பெண்களின் குலவையோடு மூவர்ண கொடியேற்றம் நடைபெற்று நாவல் முற்றுப் பெறுகிறது.

user_6227

★ 5/5 Feb 02, 2026

கோபல்ல கிராமத்தின் தொடர்ச்சியான நாவல். கிராம வாழ்க்கையின் எளிமையும் அழகும் இந்நாவலில் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

user_6226

★ 5/5 Feb 02, 2026

கரிசல் மண்ணின் வாசனையும் அதில் வாழும் மக்களின் உயிர்ப்பும் நிறைந்த படைப்பு. படிக்கும்போது கரிசல் நிலத்தில் புரண்டு எழுந்த ஆனந்தம் கிடைக்கிறது.

user_6225

★ 4/5 Feb 02, 2026

சுதந்திர காலகட்டத்தில் வெளி உலகத்திற்குத் தெரியாத ஒரு கிராமமும் அதன் மக்களும் எப்படி இருந்தார்கள் என்று சொல்லும் அழகான நாவல். கதை சொல்லும் விதம் பேசுவது போல் இருக்கிறது.

கிராம மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள், புது பொருளை வியந்து பார்ப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் பின் அதைக் குறை கூறுவதும் என சுவாரசியமாகச் செல்கிறது. சுதந்திர காலகட்டத்தில் கிராம மக்கள் எப்படிச் செயல்பட்டார்கள், தேசத் தலைவர்கள் செய்த தவறுகள், பல போர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் பற்றியும் இந்நாவல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கதாபாத்திரத்தோடு நாமும் தகவல் அறிந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது. திரு. கி.ராஜநாராயணனின் அழகான படைப்பு.

user_6224

★ 4/5 Feb 02, 2026

கோபல்ல கிராமத்தின் அடுத்த பகுதியான இந்நூல் ஆங்கிலேயர்கள் பிடியில் அக்கிராமம் சந்திக்கும் மாற்றங்கள், அவர்களுக்கு அறிமுகமாகும் புதிய பொருட்கள் மற்றும் நாட்டுச் சுதந்திரம் பற்றிய ஒவ்வொருவருடைய கருத்துக்கள் ஆகியவை அந்தக் காலத்து மக்களின் மனநிலையை அறிய உதவும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அறியப்படாத மாலுமிகளின் யுத்தம் போன்றவை இந்நூலின் முக்கியத் தரவுகள்.

user_6223

★ 5/5 Feb 02, 2026

இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளை கோபல்ல கிராம மக்களின் கதைகளோடு கலந்து அளித்துள்ளார். முதலில் வட்டார வழக்கை படிப்பது மிகக் கடினமாக இருந்தது. காரணம் அக்கிராமத்தில் தெலுங்கர், கன்னட மக்கள் குடியேறியதால் மூன்று மொழிகள் கொண்ட கலவையாக அவ்வட்டார வழக்கு இருந்தமையால்.

இந்நாவலில் வரும் இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளை முதல்முறையாகப் படித்தேன். சிப்பாய்கள் கழகம், ஒத்துழையாமை இயக்கம், சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஆதரவாளர்களின் போராட்டங்கள் பற்றி மட்டுமே படித்துள்ளேன். இந்நாவலில் மாலுமிகள் போராட்டமும் அவர்களுக்கு ஆதரவாக இந்திய மக்களும் ராணுவ சிப்பாய்களும் செயல்பட்டதும், அவர்களுக்கு ஆதரவு தர மறுத்த தலைவர்களும் பற்றிய வரலாறு எல்லோரும் அறியப்பட வேண்டியவை.

user_6222

★ 5/5 Feb 02, 2026

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதன்முதலில் கோபல்ல கிராமத்திற்கு அறிமுகமாவதும், அதை அவர்கள் வியப்புடன் பார்ப்பதும், சுதந்திரப் போராட்டம் போன்ற நிகழ்வுகளின் தாக்கம் கோபல்ல கிராமத்தில் எப்படி இருந்தது என்பதும் நாவல் முழுவதும் விறுவிறுப்பாகச் செல்கிறது.

சாகித்ய அகாதெமி விருது நிகழ்ச்சியின் போது பேசிய கி.ரா-வின் ஏற்புரை இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் அவருடைய நாவல் போல மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதில் குறிப்பிட்டது போல கோபல்ல கிராமத்தையும் இந்த நாவலையும் முதல் பாகம், இரண்டாம் பாகமாக வாசிக்க வேண்டும்.