Reviews for விஷ்ணுபுரம்
30 reviews total
user_6201
★ 4/5 Feb 02, 2026புத்தகத்தை படித்து முடித்தவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி, இந்தப் புத்தகத்திற்காக ஏன் ஜெயமோகனுக்கு சாகித்ய அக்காடமி விருது வழங்கப்படவில்லை என்பதே. இந்தப் புத்தகம் வந்த வருடம் இதில் உள்ள இலக்கியத்தை விட தேர்வாளர்கள் கண்ட இலக்கிய செறிவடைந்த நாவல் எதுவாக இருக்கும்? இரண்டு புத்தகத்தையும் படித்துத் தான் விஷ்ணுபுரத்தை நிராகரித்தார்களா அல்லது இந்தப் புத்தகத்தின் பக்கங்களின் கணக்கைக் கண்டு பயந்து படிக்காமல் வேறு புத்தகத்திற்கு விருதை வழங்கிவிட்டார்களா?
இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒற்றை வரி விமர்சனம் — காவியம். மற்ற மொழிகளின் காவியங்கள் எல்லாம் ஓரளவு நாகரிகம் வளர்ந்த பின் எழுதப்பட்ட காவியங்கள். ஆனால் தமிழ் மொழியின் காவியங்களின் சூத்திர ரகசியங்களைக் கற்பதற்கான வழிகளே சொற்பம். அப்படியிருக்கும் பட்சத்தில் இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம். மற்ற 500+ நாவல்களைப் போல் அல்லாமல் இதைப் படித்தவுடன் ஒரு நாவலுக்கும் இலக்கிய காவியத்திற்குமான வித்தியாசத்தை ஒரு சாதாரண வாசகனால் உணர முடிவதனாலேயே இந்தப் புத்தகம் இன்னும் வெகுஜனத்திற்கு போய் சேர வேண்டும் என்பது என் ஆசை.
user_6200
★ 5/5 Feb 02, 2026விஷ்ணுபுரம் என்னும் புராண நகரத்திற்குள் நுழைந்து அதன் பிரமாண்டத்தை நேரில் அனுபவியுங்கள். அற்புதமான படைப்பு!
user_6199
★ 2/5 Feb 02, 2026விஷ்ணுபுரம் முழுக்க பேசப்படும் சிற்ப சாஸ்திரம், யானை, குதிரை சாஸ்திரங்கள், ஆகம விதிகள், வேதங்கள், இந்து, பெளத்த ஞான மரபுகள் பற்றிய விவரணைகள் என பலவும் ஆசிரியரின் பெரும் உழைப்பைக் காட்டுகின்றன. ஆனால் நாவல் ஒட்டு மொத்தமாக அனைத்து தகவல்களையும், கருத்தியல் சாத்தியக் கூறுகளையும் கலந்து கட்டிப் பூசி மொழுகப்பட்ட ஒன்றாகத் தெரிகிறதே ஒழிய பார்த்து பார்த்துச் செதுக்கியதாகத் தெரியவில்லை.
user_6198
★ 5/5 Feb 02, 2026எது எங்குமுள்ளதோ, எது எங்குமில்லாததோ, எது எல்லாமானதோ, எது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ, அது வணங்கப்படுவதாக என்று வசந்தன் துதித்ததும் அவனுடைய கைத்தாளம் ஓம் ஓம் ஓம் என்று முழங்கியது. கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்! இது ஒரு வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றியது — மிகவும் கலக்கமூட்டும், சிந்திக்க வைக்கும் படைப்பு.
user_6197
★ 3/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் குறிப்பாக இலக்கிய வட்டாரங்களில் மிகவும் பேசப்பட்டது. எழுத்து நடை நன்றாக இருந்தாலும், கதை எப்போதும் ஈர்க்கும் விதமாக இல்லை. மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்ட இந்த நாவலில், இரண்டாம் பாகம் மிகவும் அடர்த்தியானது. தமிழும் தமிழ்படுத்தப்பட்ட சமஸ்கிருதமும் கலந்த மொழிநடை. ஆசிரியரின் முதன்மை நோக்கம் இந்து மற்றும் பௌத்த தத்துவத்தின் பல்வேறு கிளைகளில் தான் சேகரித்த அறிவை வெளிப்படுத்துவதே என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாகத்தின் ஆரம்ப அத்தியாயங்களைக் கடந்தவுடன், புத்தகத்தை முடிப்பது ஒரு கடமையாக உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தின் இலக்கு வாசகர்கள் கூட்டத்தில் நான் இல்லை என்பது நிச்சயம்.
user_6196
★ 5/5 Feb 02, 2026விஷ்ணுபுரம் ஒரு காவியம் — காவியங்களை வாசிப்பது மட்டுமல்ல, இன்னும் எழுதவும் முடியும் என்பதை நிரூபிக்கும் அற்புதமான வெற்றி.
இது ஒரு வாசகன் வெறுமனே படிக்கும் புத்தகம் அல்ல, மாறாக ஒரு பிரமாண்டமான தரிசனம் — நீண்ட காலமாக மறைந்துபோன ஒரு பண்டைய கலாசாரத்தின் வாழ்வை எந்த காலக்கட்டத்திலும் காட்டும் நாவல். ஏதோ ஒரு பக்கத்தில் வாசகனுக்கு ஒரு கண்ணாடி காட்டும், அது இருப்பையே அசைக்கும் அளவுக்கு. கதைக்குள் கதை, வரலாற்றின் கலவையில் உருவான ஒரு கதை, விஷ்ணுபுரத்தின் இடிபாடுகளில் உலவி நம்மையே கண்டுபிடிக்க தூண்டும்.
இது நம்பிக்கைகளை கேள்வி எழுப்பும் ஒரு நம்பிக்கைப் பாய்ச்சல். இந்த மாபெரும் புராண நகரத்தின் இடிபாடுகளிலிருந்து அற்புதமான அம்சங்களை தோண்டி எடுக்கும் ஆராய்ச்சி. மனிதர்கள் தங்கள் மீதே பிரளயத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்ற கடுமையான எச்சரிக்கை. உண்மை தேடுபவர்களுக்கு, வேதங்கள் எல்லாம் வேறு யாரோ ஒருவரின் அகவய விளக்கமாக இருக்கலாம் என்ற கடுமையான விழிப்புணர்வு.
இவை எல்லாம் அதிகமாக தோன்றினால், உங்கள் எல்லா முன்முடிவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு விஷ்ணுபுரத்தை படியுங்கள். படித்து முடிக்கும்போது நீங்கள் வேறு ஒரு மனிதராக இருப்பீர்கள். அவ்வளவு சிறந்தது இது.
user_6195
★ 4/5 Feb 02, 2026விஷ்ணுபுரம் என்பது வெறும் புதினமல்ல, அது ஒரு அனுபவம். இதனை வாசிக்கும் போதே நம்முள் ஏதோ ஒன்று மாறிவிடுகிறது. உலகத்தை, நம்பிக்கையை, மனிதனை, கடவுளை இவை அனைத்தையும் புதிதாய் பார்க்க வைக்கும் ஆழமான ஒரு பயணம் இது.
இது எளிய வாசிப்பு அல்ல; இதன் ஆழம் ஒரு பெருங்கடல் போல. எனவே வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் தான் இதனை முழுமையாக அனுபவிக்க முடியும். குறிப்பாக இரண்டாம் பாகம் முழுவதும் ஆன்மீக வாதங்களால் நிரம்பியதால், அது சிலருக்கு சற்று கடினமாய் தோன்றலாம். ஆனால் மனதை திறந்தபடியே வாசிக்கிறோம் என்றால், இது தரும் சிந்தனையின் பரப்பை எதுவும் சமமாக்க முடியாது.
முதல் பாகம் விஷ்ணுபுரம் என்னும் மாநகரின் தோற்றம், அதன் மக்கள், பார்ப்பன மரபுகள், அவர்களின் நம்பிக்கைகள், சுயநலம், மறைமுகக் கொடுமைகள் அனைத்தையும் நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. பிங்களன், திருவடி, சங்கர்ஷணன் போன்ற கதாபாத்திரங்கள் உருவெடுக்கும்போது வாசிப்பு ஒரு புதிய ஓட்டத்தை எடுக்கிறது.
இரண்டாம் பாகம் முற்றிலும் சிந்தனைக்குரியது. ஆன்மீக வாதங்கள், கடவுள், மனிதன், ஞானம் என்றெல்லாம் விரியும் இந்தப் பகுதி சிலருக்கு சலிப்பைத் தரலாம், ஆனால் அதேசமயம் சிலருக்கு அது உள்நிலை வெளிச்சத்தை தரும். குறிப்பாக ஒரு சித்தனும் அவனது சீடனுமான சிறுவனின் உரையாடல்கள் மெய்ப்பொருள் நிறைந்தவை. இறுதியில் புத்ததுறவி பேசும் பகுதி முழுக்க ஒரு தத்துவ அனுபவம்.
மூன்றாம் பாகம் விஷ்ணுபுரத்தின் அழிவையும் மனிதனின் நினைவின் பரிமாணத்தையும் பேசுகிறது. முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் இங்கு புராணங்களாக மாறி மக்களின் வாயில் பிதற்றல்களாக மாறியிருக்கும். உண்மை எவ்வாறு மாறி பொய்யாக உருவெடுக்கிறது என்பதைப் பார்க்கும் போது அது சிரிப்பையும் துயரத்தையும் ஒரே நேரத்தில் தருகிறது.
புதினத்தின் இறுதி பகுதி விஷ்ணுபுரத்தின் உண்மை தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு பழங்குடி மனிதனின் வழியாக வெளிச்சத்துக்கு வருவது அதிர்ச்சியூட்டும். அதில்தான் கதை ஒரு முழுமையான வட்டத்தை முடிக்கிறது.
விஷ்ணுபுரம் ஒரு புதினம் அல்ல, ஒரு வாழ்வியல் தத்துவம். ஒரு மன அனுபவத்தின் காவியம்.
user_6194
★ 4/5 Feb 02, 2026பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம்.
விஷ்ணுபுரம் மிகவும் சவால் நிறைந்த மற்றும் நன்கு கவனித்து வாசிக்கப்பட வேண்டிய நாவல். இதுபோன்ற கதைக்களத்திற்குள் பிரயாணித்துச் சென்றது இதுவே முதல் முறை. இலக்கியத்தைப் பற்றிய ஆழமான புரிதலில்லாத சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் சிரமமாகத் தோன்றும். மானுடர்களின் ஞானத் தேடல், வாழ்வியல் பற்றிய தத்துவங்கள், அவற்றைப் பற்றிய தருக்கங்கள், ஐதீகம், சமய சிந்தனை, சமணம், பெளத்தம், வைஷ்ணவம் என்ற பல்வேறு வட்டத்திற்குள் நம்மை இழுத்துச் சென்று, அதைப் பற்றிய புரிதலையும் ஆராய்ச்சியையும் வாசகர்களாகிய நம்மிடமே விட்டுச் செல்கிறது.
கஜபிருஷ்ட மலை, வராகபிருஷ்ட மலை, சோனா நதி, ஹரிதுங்கா மலை பற்றியக் கற்பனையும் அவற்றின் விவரிப்பும் நம்மை பிரமிக்க வைக்கிறது. மானுட உளவியல், சிற்ப சாஸ்திரங்கள், மிருக வைத்தியம், தாந்திரிகம் மற்றும் பழங்குடிகளின் சம்பிரதாயங்களை விளக்கமாக அளித்துள்ளார். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது.
வாசிப்பின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை சரியான புரிதலின்றி, பல நேரங்களில் குழப்பமாகவும் வெற்றிடமாகவும் தோன்றியது. குறிப்பாக கெளஸ்துப பகுதியில் வரும் ஞானசபை தர்க்க நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில் சிரமம் அதிகமிருந்தது. ஒவ்வொரு பகுதிகளையும் கடந்து செல்லும் போதும், மறுவாசிப்பு அவசியம் என்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.
வாசிப்பில் அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட நாவல் இதுவாகத் தானிருக்கும். நூற்றிற்கும் மேற்பட்ட கதைமாந்தர்களை உள்ளடக்கியது. அதில் வந்து செல்லும் சில கதைமாந்தர்களின் பயணம் நம்மில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
நமக்கு அதிகம் பரிட்சயமில்லாத புதிய சொற்கள் புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அவை தமிழ்ச் சொற்களா அல்லது சமஸ்கிருதச் சொற்களா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. ஆசிரியரின் நுண்ணிய விவரிப்புகளையும், வர்ணனைகளையும் கற்பனை செய்து கொள்வதிலேயே அதிக நேரம் செலவானது.
user_6193
★ 4/5 Feb 02, 2026மரணம் நெருங்க நெருங்க சகல பிரமைகளும் உதிர்கின்றன. சகல மாயைகளும் விலகுகின்றன. ஞானியும் பேதையும் பாவியும் புனிதனும் அப்போது ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள்.
ஒரு கற்பனையான நகரம். அங்கு ஒரு மலைவாழ் மக்கள் தங்கள் மூதாதை நினைவாக ஒரு பெரும் கற்சிலையை எழுப்பி அதற்கு வருடம் தோறும் தங்களையே பலி கொடுத்து வழிபடுகிறார்கள். பின் வட நாட்டில் இருந்து ஒரு வைதிகன் வந்து, அவர்களுடைய வழிபாடு தவறு என்றும், அது விஷ்ணு சிலை தான் என்றும் நிறுவி கோவில் கட்டி தன்னுடைய ஞான மரபை அந்த நகரின் விதிமுறை ஆக்கி ஆள்கிறான்.
ஒரு ஆயிரம் வருடம் கழித்து ஒரு பௌத்தன் வந்து அந்த நகரின் ஞான சபையில் தர்க்கம் புரிந்து, அங்குள்ள அனைவரையும் வென்று நகரை கைப்பற்றுகிறான். பின் அங்கு புத்தம் பரப்பப்படுகிறது. இன்னொரு ஆயிரம் வருடம் கழிந்து, மீண்டும் அங்கு வைதிக மதமே ஆட்சி செய்கிறது. அப்போது அந்த ஞான சபையில் ஒரு காவியம் இயற்றப்படுகிறது.
இந்த நாவலின் அழகே மேலே சொன்ன எந்த கதைக்கும் நம்பகத் தன்மை இல்லை என்பது தான். அத்தனை கருத்துக்களும் கதை மாந்தர்கள் சொன்ன கதைகள். ஆனால் அந்த கதையில் வருபவர்களுக்கே எதுவும் உறுதியாக தெரியாது. எல்லாமும் யாரோ சொன்னதாகவோ, எங்கோ படித்ததாகவோ இருக்கும்.
ஒரு பெண் விருப்பமில்லா திருமணத்தை எதிர்த்து தற்கொலை செய்து கொள்வாள். ஒரு ஆயிரம் வருடம் கழித்து, அது ஒரு சாமி கதையாக மாற்றப்படும். அவள் கடவுளாக மாற்றப்படுவாள். ஒரு மிகப் பெரிய புத்திசாலி சாமானியனாகவும், ஒரு அரைகுறை மகா புத்திசாலியாகவும் நினைக்கப்படுவான்.
காலம் அனைத்தையும் மாற்றும். அனைத்தும் அதன் காலம் முடியும் போது இல்லாமல் போகும் என்பதன் நீட்டிய வடிவம் தான் இந்த நாவல். கொஞ்சம் கடினமான நடை, நிறையா சமஸ்கிருத வார்த்தைகள். படிப்பதற்கு கடினமான ஒன்று. இரண்டாம் பாகத்தில் முழுக்க வேத, ஞான விவாதங்கள். ஆனால் வாசகனின் மனதை முதல் பாகமே போதுமான அளவு தயார் செய்து விடுவதால் அது ஒரு குறையாக தெரிவதில்லை.
இந்த நாவலின் இன்னுமொரு அழகியல் என்னவென்றால் இந்த நாவலைப் பற்றி இதன் கதை மாந்தர்களே விவாதித்துக் கொள்வார்கள். இந்த நாவலை படிக்கும் முன் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் படிப்பது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும்.
user_6192
★ 4/5 Feb 02, 2026ரப்பர் முதலில் வெளிவந்திருந்தாலும், ஜெயமோகன் முதலில் எழுத ஆரம்பித்தது விஷ்ணுபுரத்தைத் தான். இதை எழுதி முடிக்க அவர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதிலிருந்தே அதன் கனதியை நாம் உணர முடிகிறது. இதைச் சாதாரணமான ஒரு வரலாற்று நாவலாகவோ அல்லது ஒரு புனைவாகவோ நினைத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பிப்பீர்கள், ஆனால் இதன் கனதியே ஏதும் அறியமுடியாத ஒரு சூனியத்துக்குள் உங்களைத் தள்ளிவிடும். விஷ்ணுபுரத்தில் பயணிக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களை அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்நூலின் மூன்று பகுதிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட நூற்றைம்பதுக்கு மேற்பட்ட மனித கதாபாத்திரங்கள் வருகின்றன. தவிர யானைகள், குதிரைகள், பசுக்கள் என்று விலங்குப் பாத்திரங்கள் வேறு. எனவே கொஞ்சம் ஞாபக சக்தியும் உங்களுக்கு இருந்தால் இன்னும் வரவேற்கத்தக்கது. இந்த நூற்றிச்சொச்ச பாத்திரங்கள், அவை சார் களங்களின் விபரிப்புகள் மூலமாக, விஷ்ணுபுரம் என்பது ஒரு புனைவு அல்ல, முன்னொரு காலத்தில் உண்மையில் நிகழ்ந்தது என்பது மாதிரியான ஒரு மனநிலையை எம்முள் இலகுவாக ஏற்படுத்திவிடுகிறார் ஜெயமோகன்.
பத்து வருடங்களுக்குப் பிறகு இன்னும் கொஞ்சம் பக்குவம், இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்ட பிறகு மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.