Reviews for விஷ்ணுபுரம்

30 reviews total

user_6211

★ 5/5 Feb 02, 2026

நாவலில் உள்ள தத்துவ உட்பொருள்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு முயற்சி. ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தன்னை வார்த்தைகளில் கரைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எல்லாமாகவும் இருக்கிறார், ஒன்றுமில்லாமலும் இருக்கிறார்.

வாழ்க்கையின் என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகளை நம் மனதில் எழுப்பும் வாசிப்பை அனுபவித்தேன். சிறப்பான படைப்பு — விஷ்ணுபுரம்.

user_6210

★ 1/5 Feb 02, 2026

நேரவிரயம். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள முதல் தமிழ் நூல் இதுவே என்று சொல்லலாம். ஜெயமோகன் தனது அரைவேக்காட்டு தத்துவ ஆராய்ச்சிகளை எழுத்து வழியே கொட்டி வைத்துள்ளார்.

ஆகம விதிகள், ஆரிய பண்பாடுகள், கடவுளர்களின் கட்டுக்கதைகளை புரியாத மொழியில் தெளிவில்லாத நடையில் படிக்க விரும்புபவர்களுக்கானது. மற்றவர்கள் வேறு ஏதாவது உருப்படியான புத்தகத்தைப் படிக்கவும்.

user_6209

★ 5/5 Feb 02, 2026

தமிழில் இந்நாவல் ஒரு பெரும் கொடை. வாழ்வில் நம்முள் எழும் கேள்விகள் பல உண்டு. அவற்றை தேடல்களாக மாற்றிக்கொள்ள தவறவிட்டுவிடுவோம். ஒருவேளை அத்தேடல்கள் அனுபவங்களாலும், இந்து மற்றும் பௌத்த ஞான நூல்களின் துணையாலும் நடந்திருந்தால் அதன் தொகுப்பே இந்தக் காவியம்.

ஒரு அர்ப்பணிப்பு இருந்தால் படிக்க எளிதான ஒரு நாவல் தான். ஆனால் அது அளிக்கும் படிமங்களைப் புரிந்துகொள்ள மறுவாசிப்பு தேவைப்படும். ஏனெனில் முதல் வாசிப்பு நம் தேடல்களின் கண்டடைந்த பரவசத்தின் கிளர்ச்சியனுபவமாகவும், நாம் தினமும் பார்க்கும் கோயில்களில் இருக்கும் பிரமாண்ட தரிசனமும் நம்மை ஆட்கொள்ளும். அதனைக் கடந்து இதன் ஆழத்திற்குச் சென்று மறுவாசிப்பும் விவாதங்களும் தருக்கங்களும் செய்தால் மிகப் பயனுள்ளதாக அமையும்.

user_6208

★ 4/5 Feb 02, 2026

ஒரு அருவியின் அருகில் நின்றால் சிலிர்க்கும் குளிர் காற்று, சற்று அருகே போனால் சாரல் அடிக்கும், அருவியில் குளிக்கப் போனால் தாப் தாப் என்று கனத்த நீர் தலையில் விழும், நீண்ட நேரம் நிற்க முடியாது, மூச்சு திணறும், கண் தெரியாது, அருவியை விட்டு வெளியே வந்துவிடத் தோன்றும். குளித்துவிட்டு வெளியே வந்தால் மீண்டும் குளிக்கத் தோன்றும். அப்படிதான் படித்தவுடன் உணர்ந்தேன்.

இந்நூலின் கருதுகோளை ஒரு வரியில் கூறிவிட முடியாது. வரலாறு, தொன்மம், அறிவியல், ஆன்மிகம், பண்பாடு, கலாச்சாரம் என பல கிளைகள் உள்ளடக்கிய மாபெரும் விருட்சம். எந்த ஒப்பனையும் இல்லாத எதார்த்தம் வாய்ந்த படைப்பு. பல இடங்களில் முகம் சுளிக்க வைத்தாலும் இது தான் உண்மை.

சில இடங்களில் மர்மம், சில இடங்களில் சுவாரஸ்யம், சில இடங்களில் சலிப்பு, சில இடங்களில் குழப்பம், சில இடங்களில் தெளிவு.

கண்டிப்பாக மறுவாசிப்பு செய்யப்பட வேண்டிய நூல். சில ஆண்டுகளுக்குப் பின் நிச்சயம் மீண்டும் படிப்பேன்.

user_6207

★ 5/5 Feb 02, 2026

ஒரே மூச்சில் படிக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனால் பணி நிமித்தம் ஒரு மாதமாகி விட்டது. காவியம் என்றவுடன் கொஞ்சம் பயம் இருந்தது. புரியுமா புரியாதா என யோசித்தேன். கொஞ்சம் முன்தயாரிப்பு செய்துகொண்டேன்.

ஜெயமோகனின் பின்னூட்டங்களைப் படித்து கொஞ்சம் தெளிவான உடன் ஆரம்பித்தேன். நல்ல காலம் பின்னூட்டத்தில் ஸ்பாய்லர்கள் ஏதும் அகப்படவில்லை.

திருவட்டாறு சாமியை முதன் முதலாகப் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. பத்மநாபசாமியின் அவரின் ஆரோகணம் கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைக்கும். அடுத்த முறை பார்க்கும் போது நிச்சயமாக ஜெயமோகன் வரிகள் மனதில் நினைக்காமல் எம்பெருமானைப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.

ஒரு புனைவு நகரம் எப்படி இருந்திருக்கும் என வார்த்தை சிற்பங்களில் செதுக்கப்பட்ட கல் மண்டபம் இந்தப் புத்தகம். பிரளயம், ஊழி, காலபைரவன் என வார்த்தைகளில் சொல்வதற்கும் விரிவாகப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த புதினம்.

user_6206

★ 4/5 Feb 02, 2026

முதலில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க நிறைய பொறுமை வேண்டும். முதல் பாகமான ஸ்ரீ பாதம் — விஷ்ணுபுரத்தின் 41 நாள் ஸ்ரீ பாத திருவிழா விரிவாக விவரிக்கப்படும் பகுதி — கிட்டத்தட்ட அனைவருக்கும் சோர்வாகத் தோன்றலாம். அத்தியாயங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடையே பெரும்பாலும் தொடர்பு இல்லை என்று உணர்ந்தேன்.

இரண்டாம் பாகமான கெளஸ்துபம், பௌத்த துறவி அஜிதன் ஞான தர்க்கத்தில் வென்று வைஷ்ணவர்களிடமிருந்து விஷ்ணுபுரத்தைக் கைப்பற்றுவதைப் பேசுகிறது. இங்கு பல்வேறு கோணங்கள் விவாதிக்கப்படுகின்றன.

மூன்றாம் பாகமான மணிமுடியில் தான் முதல் பாகத்தில் படித்ததன் தெளிவான, இணைந்த சித்திரத்தைப் பெற முடிந்தது.

ஒட்டுமொத்தமாக, கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரம்மாண்ட நகரமான விஷ்ணுபுரம், அதன் உச்சகட்டத்தில் எப்படி இருந்தது, எப்படி சிதைந்தது, இறுதியில் மறைந்தது, மீண்டும் உயிர் பெற்றது என்பதைப் பேசும் நாவல். மதம் மற்றும் கடவுள் என்ற கருத்து எவ்வாறு பிறந்திருக்கலாம் என்பதைப் புரிய வைக்கும் தூய புனைகதை.

user_6205

★ 1/5 Feb 02, 2026

மிகவும் ஏமாற்றமான அனுபவம். நீண்ட காலமாக இதைப் படிக்க விரும்பினேன். படிக்கத் தொடங்கியவுடன், இதை ஜெயமோகன் எழுதியிருக்கிறார் என்பதே நம்ப முடியவில்லை. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நாவல்.

user_6204

★ 5/5 Feb 02, 2026

இந்திய நவீன இலக்கியத்தில் ஒரு மைல்கல். கனவும், கற்பனையும், தர்க்கமும், அங்கதமும், தேடலும் கலந்த ஒரு காவியம்.

user_6203

★ 4/5 Feb 02, 2026

ஒரு புராண இலக்கியத்திற்கு உரிய எல்லா அணிகளும் உடைய நாவல். தொன்ம வரலாற்று இலக்கியங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த படைப்பு.

user_6202

★ 4/5 Feb 02, 2026

நாவலின் சாராம்சம் சூன்யத்தில் தொடங்கி சூன்யத்தில் முடிவடைகிறது. சூன்யத்தை நீக்கிடும் போது மிஞ்சுவதும் சூன்யமே. நாவலின் தொடக்கம் எளிதாகவில்லை — எழுத்தாளர் விஷ்ணுபுரம் என்ற நகரை முதல் நூறு பக்கங்களில் பிரமாண்டமாக வளர்க்கிறார். தமிழில் இருந்தாலும் பல வார்த்தைகளின் அர்த்தம் விளங்கவில்லை. இது இலக்கிய வகையா, ஆன்மீகத் தேடலா, படிக்க வேண்டாமா என்று எண்ணிய போது நூற்று நாற்பது பக்கங்களையும் கடந்து விட்டாயிற்று. கதையும் இடமும் வேகம் பெறத் துவங்கியதும் இந்த இடம் தான்.

நாவல் மூன்று பாகங்களையும் வெவ்வேறு கால ஓட்டத்தையும் கொண்டு புனையப்பட்டுள்ளது. முதல் பாகம் விஷ்ணுபுரத்தின் நிர்மாணம், ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத்தரம், விழாக்கள் என விரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்ப்பார்ப்பையும் தேடலையும் கொண்டவை. வருண அடையாளங்கள் முன்னிருத்தப்பட்டு அரசாள்பவர்கள் ஞானமுள்ளவர்களை நசுக்கி ஆட்சியைத் தக்கவைப்பதோடு நகரும் இந்த நாவல், விஷ்ணுபுரத்தை அழிக்க சிற்பி எடுக்கும் முயற்சியும் அது முடியாமல் அவன் தற்கொலை செய்வதோடு முடிகிறது.

இரண்டாவது பாகம் விஷ்ணுபுரத்தின் முந்தைய காலக்கட்டத்தோடு பயணிக்கிறது. அஜிதன் என்ற பௌத்தனின் வரவும் அவன் வாதத்தால் மணிபீடத்தைப் பிடிப்பதும், அடிமைத் தளைகள் தகர்க்கப்படுவதும் இந்தப் பகுதியின் மையம். கண்டிப்பாக முதல் பாகத்தைப் படிக்கும் முன் இரண்டாம் பாகத்தைப் படிக்கும்போது பல சிக்கல்கள் தீர்க்கப்படுகிறது. சில இடங்களில் அலுப்பைக் கொடுத்தாலும் இது பௌத்த ராஜ்யத்தையும் அதன் அழிவையும் மையப்படுத்தி புனையப்பட்டுள்ளது.

மூன்றாம் பாகம் விடுப்பட்டுப்போன பல கதாபாத்திரங்களின் முடிவுகளோடும் விஷ்ணுபுரத்தின் அறத்தால் நிர்மாணிப்பதையும் அதில் வழுவும் போது ஏற்படும் அழிவையும் மையப்படுத்துகிறது. படிக்கலாமா வேண்டாமா என்பது வாசகர்களின் மனநிலையைப் பொறுத்ததே.