Reviews for காடு

29 reviews total

user_6020

★ 4/5 Feb 02, 2026

நாம் படிக்கும் மனநிலையையும் தாண்டி ஒரு நாவல் நம்மை இட்டு செல்கிறது. அதில் காடு விரியும் தளமும், பசுமை நிறைந்த உலகம். காடு ஒரு மொரடுதனமான சுகம். காட்டுடன் காதலும் காமமும் கவிதையும் சேர்ந்து நம்மை ஒரு வழியாக்கிவிடும்.

காடு கொந்தளிக்கும், மனமும் கொந்தளிக்கும். புராதன மனிதன் நம்முள் இன்னமும் இருக்கிறான், அவன் காட்டுவாசி, அவனால் மட்டுமே காட்டை ரசிக்க முடியும். இந்த நாவல் நம்மில் மறைந்து கிடக்கும் அந்த காட்டுவாசிக்காக. கொந்தளிப்பு ஏற்படுத்திய நாவல்.

user_6019

★ 5/5 Feb 02, 2026

கதை நாயகன் கிரிதரன் கண்களின் வழியாக விரியும் கதை. காடு அவனுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு வகையில் காடு உருவகம்.

காதல், காமம், யதார்த்தம் - இப்படி பல கோணங்களில் கதையை நோக்கினாலும், உண்மையில் இது மனிதனின் கண்ணீர் கதை. சினிமாவைப் போல வெறும் நிகழ்வுகளின் அவலம் அல்ல. யதார்த்த கட்டாயங்களினால் எடுக்கப்படும் கோழைத்தனமான முடிவுகள் வாழ்க்கையையே புரட்டி போட்டு அசிங்கப்படுத்தும் அடிப்படை அவலம்.

கள்ளம் கபடமற்ற இயற்கையின் ஓங்கார உச்சம் காடு. இயற்கை தெய்வங்கள். மாசற்ற மலையன்மார்கள். காட்டை சார்ந்து இருக்கும் சாதாரண மனிதர்கள் அதை அனுசரித்து கொண்டாடி வாழ்பவர்கள்.

user_6018

★ 2/5 Feb 02, 2026

பொன்னியின் செல்வனுக்குப் பிறகு இதைத் தேர்ந்தெடுத்தது தவறாகப் போனது என்றே நினைக்கிறேன். மையக் கருத்து என்னைக் கவரவில்லை. இயற்கையின் வர்ணனையும் காட்டின் வலிமையும் இருந்தாலும், இது அடிப்படையில் மனித உறவுகள், துரோகம், கடுமையான வார்த்தைகள், புரியாத பேச்சு வழக்கு ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது. இந்தப் புத்தகத்தின் இலக்கு வாசகன் நான் அல்ல, இதற்கான முதிர்ச்சி எனக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு சுயநலவாதியின் கதை என் தன்னம்பிக்கையை வளர்க்கப் போவதில்லை.

user_6017

★ 4/5 Feb 02, 2026

ஜெயமோகன் அறிமுகப்படுத்திய காட்டில் என் பயணம் கிரியுடன் துவங்கியது. காட்டின் உள்ளே செல்ல செல்ல மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருந்தது. காட்டைப் பற்றியும் அங்கு வசிக்கும் பல மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது இப்பயணம்.

காடு அனைவருக்குமானது, அதை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது என்பதை உணர்த்தியது. காட்டின் பயணம் நிறைவு செய்து வெளியேறும் தருணத்தில் மனம் கனத்ததாக உணர்கிறேன். காட்டினுள் மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை, வெறும் பார்வையாளராக அல்ல ஓர் காடோடியாக மாற்றம் பெற.

user_6016

★ 5/5 Feb 02, 2026

மனதை உலுக்கும் படைப்பு. ஒரு கதையையும் புனைவையும் தாண்டி, காட்டின் உணர்வை நேரடியாக நமக்குள் கடத்துகிறது இந்த நாவல். காதலும், காமமும் இயல்பாக விரிகின்றன. கதையின் சூழலில் முழுமையாக மூழ்கி, படிக்கும்போது பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு ஈர்க்கிறது. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.

user_6015

★ 4/5 Feb 02, 2026

காடும், நீலியும் என்னை ஆட்கொண்டனர். வாழ்வில் முதல் முறை வரும் பெருங்கணம்.. அப்பெருங்கணத்தின், வற்றாத நினைவுகளின் பேரனுபவம் காடு.

மனிதர்களும், விலங்குகளும், தெய்வங்களும் பெருங்காமமும், கூடலும் கூடல் நிமித்தமுமாய் கொண்டாடித் தீர்க்கும் வரனுறல் அறியாச் சோலை - குறிஞ்சி.

நீலி - உண்மையில் அவள் அணங்கு!

user_6014

★ 5/5 Feb 02, 2026

காடு - தற்செயலாக படித்து, அதன் ஆழத்தால் அதிர்ந்து போய், மனதில் ஒரு வடுவாக படிந்துவிட்ட புத்தகம்.

ஜெயமோகன் காட்டைக் கதையாக கொண்டு செல்லவில்லை... வாழ்வின் நேரடி வர்ணனையாகவே கொடுத்துள்ளார்.

கதையில் வரும் மக்களின் இயல்பு மொழியிலும், சம்பவங்களிலும், இடங்களின் சித்தரிப்புகளிலும் பலகாலமாக யாரும் ஒன்றியிருக்க வைக்கவில்லை, ஆனால் ஜெயமோகன் அதற்கு விதிவிலக்கு. காட்டின் விவரிப்பை இந்த அளவிற்கு வேறு யாரும் சிறப்பாக செய்யவில்லை என்பது என் கருத்து.

காட்டை விவரிக்கும் போது என்னை அங்கேயே கட்டிப்போட்டு, நகரத்தை விவரிக்கும் போது அங்கிருந்து எப்பொழுது வெளியில் செல்வோம் என்றாக்கி, முதல் பகுதியிலேயே என்னை விடுமுறை முடிந்து வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை போலாக்கிவிட்டார்.

காதலும், காமமும் இயல்பாகவே இருந்தாலும் ஒவ்வொரு கணமும் நீலியின் வரவை கிரிதரனை விட நான் எதிர்பார்த்தேன் என்பதே உண்மை.

குறைந்த வாசிப்பு பழக்கமே உள்ள என்னை பொன்னியின் செல்வனுக்குப் பிறகு தூங்க விடாமல் செய்த ஒரே புத்தகம் இது.

user_6013

★ 5/5 Feb 02, 2026

காடு, தமிழிலக்கிய உலகின் ஒரு பிரம்மாண்டமான படைப்பு. ஒரு எழுத்தாளனால் எப்படி இதுபோன்ற படைப்புகளைத் தொடர்ந்து படைக்க முடிகிறது என்பதில் பிரமிப்பாகவுள்ளது. வாசிக்கும் போதும், முடிவிலும் நகரவாசியான எனக்கு ஓரிரு வாரங்கள் தனித்துக் காட்டில் விடப்பட்டது போன்றதொரு நிலையே இருந்தது. சிந்தனையை ஈர்த்து, முடிவற்ற நிலை நீள்கிறது.

காடு இயற்கை. காடு அழகின் உறைவிடம். காடு தெய்வங்கள் மனிதர்களுடன் வாழுமிடம். காடு உள்மனதின் ஓர் ஒப்பு.

நாட்டார் வழக்காடல், கபிலரின் வரிகள், சங்க இலக்கியப் பாடல்கள், காதல், காமம், அந்தரங்கம், குறிஞ்சித் திணை என்று இலக்கியம், வாழ்வியல் சார்ந்த தளங்களைக் கடத்திச் செல்கிறது இந்நாவல்.

படைப்புமொழி ஓர் எல்லையில் கவிதையின் செறிவை எட்டிவிடும்போது மற்றொரு எல்லையில் மிகவும் நெகிழ்வு கொண்டதாகவும் உள்ளது.

நாவலின் கருவையடுத்து மிக முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் மொழிநடை. ஒரு பகுதி அல்லது இனக்குழு சார்ந்த படைப்புகளில் அவ்வினத்தாரின் இயல்பு மொழியின் வழக்காடல், நாவலின் செறிவைக் கூட்டி இயல்பு மாறாமல் இருக்க இன்றியமையாததாகிறது.

இப்புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை ஓரிரு பக்கத்தில் நிறைத்துவிட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பெருஞ்சுழலில் சிக்கி, அதில் கரைந்தது போன்றதொரு உணர்வு.

user_6012

★ 4/5 Feb 02, 2026

காடு ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் நாவல். இதை ஒரு வார இறுதியிலோ, தொடர் விடுமுறையிலோ அதிலேயே தோய்ந்து படிப்பதே நன்றாக இருக்கும். விட்டு விட்டு படிக்கக் கூடிய புத்தகம் அல்ல. நிஜமாகவே காட்டுக்குள் நுழைந்து வந்த அனுபவத்தைக் கொடுக்கும் அருமையான நாவல்.