Reviews for காடு

29 reviews total

user_6030

★ 3/5 Feb 02, 2026

சில இடங்களில் அழகாகவும், வேறு சில இடங்களில் எரிச்சலூட்டும் விதமாகவும் இருக்கிறது. எனினும், இது ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, தமிழில் உள்ள சில முழுமையான நாவல்களில் ஒன்று. பொறுமை தேவை, ஆனால் நிச்சயமாக பலன் தரும்.

user_6029

★ 4/5 Feb 02, 2026

காடு - சிறிய சொல். பெரிய நூல். காட்டின் ஊடே நம்மை இழுத்துச் செல்கிறது புத்தகம். நான்கு மாதங்கள் ஆகிவிட்டது படித்து முடிப்பதற்கு.

ஓரோர் சமயங்களில் கிரிதரனாக, குட்டப்பனாக, அய்யராக, நீலியாக என்று பல பாத்திரங்கள் வழியாக நாமும் காட்டுக்குள் வாழும் உணர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் பல இடங்களில் மொழி புரியவில்லை. சற்றே சவாலாக இருக்கிறது.

user_6028

★ 5/5 Feb 02, 2026

நாம் வாசிக்கும் புத்தகங்களில் ஒரு சில, நம் தூக்கத்தை பதம் பார்த்து விடும் ஆற்றல் கொண்டிருக்கும். நான் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த நாவல் காடு என்று சொல்லலாம்.

காரிருள் சூழ்ந்த அடர்ந்த காட்டின் அழகு இரவிலும், மழையிலும், பெருவெள்ளத்திலும் எப்படி பன்முகங்கள் கொண்ட வனயக்ஷியாக தாண்டவமாடும் என்பது காட்டின் மீது தீரா மோகம் கொண்ட ஒருவரால் தான் உருவகம் கொடுத்து ரசிக்க முடியும்.

காடு சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, மனித உறவுகளின் மத்தியில் இயங்கும் மௌன உணர்வுகள், காதல், காமம், கடந்த கால நினைவுகளின் வலி, யானையின் கரிய உடல், பலாமரம், மிளா மான், மலை தேன் என இந்த புத்தகம் நம்மை குறிஞ்சி, முல்லை திணைகளின் ஊடாக சங்க இலக்கியத்தின் சாராம்சத்தை உடன் இணைத்துக்கொண்டு பயணிக்கிறது.

காடு உங்கள் நித்திரையின் பெரும்பகுதியை திருடிக்கொள்ளும். அந்த உறக்கம் துலைத்த இரவுகளின் அழகிய பாரத்தை கொஞ்சம் சுமந்து தான் பாருங்கள்.

user_6027

★ 5/5 Feb 02, 2026

வாழ்வில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகளை தந்து செல்வதுதான் முதல் காதல். அது கிரிதரனுக்கு காட்டில் நிகழ்கிறது. அவன் நீலி என்ற மலையத்தியுடன் கொண்ட காதலால் காட்டை அறிகிறான். அதன் மூலம் அவன் கண்டடையும் அனுபவங்களே காடு.

சில நேரங்களில் கதையின் நாயகன் கிரிதரனா அல்லது குட்டப்பனா என சந்தேகம் எழுகிறது. அய்யர், மேஸ்திரி ரெசாலம், தேவாங்கு, சினேகம்மை, கீரக்காதன் எனும் யானை, மிளா மான், இரட்டையர்கள், காஞ்சிர மரத்து யட்சி, குரிசு - மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

காட்டில் கம்பீரமாக நடமாடிய கீரக்காதனை பின்னாளில் ஒரு காண்ட்ராக்டர் வீட்டு வரவேற்பறையில் பாடம் செய்து மாட்டியிருக்கும் காட்சி போதும் காட்டின் அழிவை நம் கண்முன்னே காண்பதற்கு. நீலிக்கும் கிரிதரனுக்கும் இடையேயான காதலை நம் அனைவராலும் உணர முடியும், அதுவே ஜெயமோகனின் எழுத்துக்கு உண்டான வீரியம்.

user_6026

★ 5/5 Feb 02, 2026

இந்தக் காட்டை வணங்காமல் எந்த ஒரு தமிழ் இலக்கிய வாசகனின் தேடலும் முழுமை அடையாது.

user_6025

★ 5/5 Feb 02, 2026

காடும் காடு சார்ந்த இடமும் - குறிஞ்சி. மனமும் மனம் சார்ந்த இடமும் - காடு!

மனிதனை மனிதனாக சற்று தொலைவில் இருந்து அறிந்தவர் எவரேனும் உண்டா? புத்தகத்தின் முடிவில் பதிலாக அறிய முடியாத நிறைந்த மௌனங்கள் - காடு.

user_6024

★ 5/5 Feb 02, 2026

காதலும், காடும், காமமும் எவ்வளவு ஆழம் என்பதை அழகாக சொல்கிறார் ஜெயமோகன்.

user_6023

★ 5/5 Feb 02, 2026

இயற்கையுடனான நம் குழந்தைப் பருவ நினைவுகளைத் தூண்டும் புத்தகம் இது. காடு அழிவை நோக்கிச் செல்வதை குறியீடாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர். நகர வாழ்க்கைக்கும் கிராமிய காதலுக்கும் இடையே ஊசலாடும் கிரிதரனின் கதை.

கொன்றை மலர், ஆயணி மரம் போன்ற விவரிப்புகள் வெறும் வாசிப்பல்ல, அந்த மணத்தையே சுவாசிக்க வைக்கின்றன. யானையும் மிளாவும் நம்மை இந்த நாவலுடன் பிணைக்கும் நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன. நாவல் முழுவதும் கிரிதரனுடன் ஒன்றிணைந்து உணர வைப்பதே இதன் வெற்றி.

user_6022

★ 5/5 Feb 02, 2026

குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எது செய்தாலும் அது அத்தனை நேர்த்தியாக அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்ட மிருகத்தை மனிதர்களை பணிய வைத்தாலும், ஏன் காலில் இருக்கும் நகத்தைச் சுத்தம் செய்தாலும் கூட அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதுதான் குட்டப்பன்.

நீலியைக் காணாது தவிக்கும் போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும் முதலாளி என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பது பிடிக்காது திருப்பி அடிக்கும் போதிலும், குட்டப்பன் ஒரு தெரிந்த நீரோடையாகவே இருக்கிறான்.

குட்டப்பனுக்கும் குரிசுவிற்கும் இடையே வரும் வாய்த்தகராறுகளை ஜெயமோகன் மிகவும் ரசித்து எழுதியிருப்பார் என நினைக்கிறேன். குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.

user_6021

★ 4/5 Feb 02, 2026

கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு புதினம். இயற்கையை அதனுடைய அழகை எந்த விதத்திலும் குறையாமல் துல்லியமாக தீட்டப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. கதையில் அடிக்கடி வரும் ஒரு சொல் "காட்டுக்கு விளி". அதாவது காட்டில் பழகி சிலருக்கு காட்டை விட்டு விலக முடியாத ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. எனக்கும் அதே காட்டுக்கு விளி கிடைத்தது இப்புதினத்தின் வாயிலாக.