Reviews for தண்ணீர்

30 reviews total

user_5851

★ 5/5 Feb 02, 2026

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரையைப் படித்த தாக்கத்தில் அவரின் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருந்தது. ஒரு வருடம் கழித்து தண்ணீரைக் கையில் எடுத்தேன் — வெகு வேகமாக மூழ்கி முடித்தேன்.

புத்தகத்தின் முன்னுரையில் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா எழுதுகிறார்: "தண்ணீரை முப்பது வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தால் நான் இன்னும் மேன்மையான மனிதனும் எழுத்தாளனுமாகியிருப்பேன்."

1973ஆம் ஆண்டு சென்னையின் தண்ணீர் பிரச்சனையை மையமாகக் கொண்ட கதை. தண்ணீருக்குத் தவிக்கும் மூன்று பெண்களின் — ஜமுனா, சாயா, டீச்சரம்மா — வழியாக மானுட வர்க்க மனதின் பேதங்களை அடித்துடைக்கிறார் அசோகமித்திரன்.

தண்ணீர் வாய்க்கப்பெற்றவர் எஜமானராகவும், தவிப்பவர் கீழானவராகவும் மாறிப்போகும் சமூக அவலங்கள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சாயா தங்கையாக இருந்தாலும் நடப்புகளில் அக்காவாக வலம் வருகிறாள். டீச்சரம்மா ஜமுனாவின் வாழ்க்கையை மாற்றும் திருப்புமுனை.

பக்கத்திற்கு பக்கம் சமூக சாடல்கள், தனித்துவிடப்பட்ட பெண்களின் எண்ணவோட்டங்கள், தண்ணீரை வைத்து விளக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் — தண்ணீரின் பயணம் நெஞ்சை நிறைக்கிறது.

user_5850

★ 4/5 Feb 02, 2026

அசோகமித்திரனின் தண்ணீர் — சமூகத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று பெண்களின் கதை.

சினிமா கனவில் சீரழியும் ஜமுனா, ராணுவக் கணவனைப் பிரிந்து குழந்தையையும் உறவினரிடம் விட்டுவிட்டு தனிமையில் வாழும் சாயா, நோயாளி கணவனையும் குடும்ப சுமைகளையும் வேறு வழியின்றி தாங்கும் டீச்சரம்மா.

கற்பு என்ற நிர்ப்பந்தத்தால் ஜமுனா சமூகத்தில் சந்திக்கும் சிக்கல்கள், சாயாவின் சுயநலமான முடிவுகள், குழந்தையின்மையை பெண்ணின் குறையாகக் கணிக்கும் சமூகப் பார்வையால் டீச்சரம்மாவின் பரிதாப வாழ்வு — எல்லாவற்றையும் தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து நெய்திருக்கிறார்.

தண்ணீர் கிடைக்கும் போது அவர்களுக்குள் நிகழும் உளவியல் மாற்றங்களும், அதன் விளைவாக எடுக்கும் தெளிவான முடிவுகளும் கதையை உயிர்ப்புடன் நகர்த்துகின்றன. தெரு மக்களின் தண்ணீர் போராட்டம், குழாயடி சண்டை, அரசாங்கத்தின் அலட்சியம் — நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன.

user_5849

★ 4/5 Feb 02, 2026

"ஜமுனாவும் சாயாவும் தங்கள் வீட்டெதிரிலும் நீண்டிருந்த அந்தச் சேற்றுப் பள்ளத்தைக் கவனமாகத் தாண்டித்தான் தெருவில் காலடி வைக்க முடிந்தது" — இந்த ஒரு வரியே நாவலின் சாரத்தைச் சொல்லிவிடுகிறது. வாழ்க்கையின் சேற்றுப் பள்ளங்களை கவனமாகத் தாண்டும் பெண்களின் கதை.

user_5848

★ 4/5 Feb 02, 2026

ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகிய மூவரைச் சுற்றிக் கதை நிகழ்கிறது. மூவரும் ஒருவகையில் சுயநலமிக்க ஆண்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள்.

அவர்கள் வாழ்வில் நிகழும் போராட்டம், வலி, வேதனைகள், நம்பிக்கை என பல்வேறு உணர்ச்சிகளை அசோகமித்திரன் தனக்கே உரிய தனித்துவமான நடையில், தண்ணீர் பற்றாக்குறையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார்.

user_5847

★ 5/5 Feb 02, 2026

1970களில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டையும் அதை ஒட்டிய மக்களின் வாழ்க்கையையும் பற்றிய சுருக்கமான ஆனால் ஆழமான வாசிப்பு அனுபவம். தனிக்குடித்தனத்தில் இருக்கும் குடும்பங்களை தண்ணீர் எப்படி பாதிக்கிறது என்பதையும், குடும்ப உறவுகளை எப்படி சிதைக்கிறது என்பதையும் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம்.

user_5846

★ 4/5 Feb 02, 2026

வெகு நாட்களாக என் புத்தக அடுக்கில் காத்திருந்த இந்த நாவலை ஒருவழியாகப் படித்துவிட்டேன். அசோகமித்திரன் என்றோ வார்த்து வைத்தது இன்று தாகம் தீர்த்தது — ஆனால் அவர் எழுத்தின்மேல் புதிய பசியையே கிளப்பியிருக்கிறது.

அன்றாட வாழ்வில் தண்ணீருக்காகத் தவிக்கும் ஒரு சமூகத்தின் ஏக்கங்களையும் இன்னல்களையும் பின்னணியாகக் கொண்டு, அதற்கு மத்தியிலும் வேறு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஒரு பெண்ணின் கதை. ஆரம்பத்தில் கஷ்டங்களைக் கண்டு துவண்டுபோகும் அவள், ஒரு கட்டத்தில் வாழ்க்கை மீதான பார்வையை மாற்றுகிறாள். அந்தத் தருணத்தில் மழை மண் தொடுகிறது.

அவளின் மனப்போக்கை மாற்றும் கதாபாத்திரத்தின் தாக்கம் கனமானது. சகோதர பாசம், ஒருவர் கஷ்டத்தில் ஒருவர் துணை — தண்ணீரைப்போல மனித நேயமும் காய்ந்துவிட்ட சமூகத்தில் நாளையை மறந்து இன்றை அனுபவிக்கத் துடிக்கும் இவர்களின் மாற்றத்தோடு கதை முடிவடைகிறது.

கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன — "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்."

user_5845

★ 4/5 Feb 02, 2026

இலக்கியம் என்பது நிஜ வாழ்க்கையைச் சார்ந்து அதையே பிரதிபலிக்கும் ஒரு கலை. இந்த நாவலில் அந்தப் பிரதிபலிப்பு மிகவும் இயல்பாக அமைந்திருப்பது சிறப்பு. நம் காலகட்டத்தின் சமூகத்தை யதார்த்தமாகப் பதிவு செய்திருப்பது மற்றொரு சிறப்பு.

user_5844

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் நீண்ட காலம் என் இதயத்திலும் நினைவிலும் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். நான் படித்ததிலேயே மிகச் சிறந்த எழுத்துக்களில் ஒன்று.

கதையெங்கும் தண்ணீர் நெருக்கடியின் தாக்கம் ஒவ்வொரு புள்ளியிலும் நெஞ்சை உலுக்குகிறது. நடுத்தர வர்க்க வாழ்க்கையின் சித்தரிப்பு மிகத் துல்லியமாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது நுட்பமான பெண்ணியம் — குறிப்பாக 18-வது அத்தியாயத்தில் டீச்சரம்மாவுக்கும் ஜமுனாவுக்கும் இடையிலான உரையாடல். வாழ்க்கையைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் நிறையச் சிந்திக்க வைத்தது. இது ஒரு ரத்தினம் — நான் நேசிக்கும் அனைவருக்கும் பரிந்துரைப்பேன்.

user_5843

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான கதை. ஆசிரியரின் கரைந்த நிழலில் வரும் ஒரு பாத்திரம் என்று நினைக்கிறேன். மிகக் கச்சிதமான கதை.

நடுத்தர வர்க்க மனிதர்களின் சமத்காரம் — வார்த்தைகளில், விவரணைகளில் — இந்தக் கதையில் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. கடைசி சில அத்தியாயங்களில் வரும் சித்தரிப்புகள் அருமை. தண்ணீரே இல்லாமல் இருந்து திடீரென தண்ணீர் வர ஆரம்பிப்பதும், ஒருவன் அதை அடித்து தள்ளுவதும், மையக் கதாபாத்திரம் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதும் — கதையின் ஓட்டத்தை வாசகனுக்கு கடத்திவிடுகின்றன.

வாழ்வின் மத்தியகாலம் — நம்பிக்கைகள் கலைந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய பருவம். துணை என்பது அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள மட்டுமல்ல, தன் இருப்பை உறுதிசெய்வதற்கும் தேவை. ஜமுனாவும் சாயாவும் வேறு வேறு கிடையாது — ஜமுனாவின் நிழல் சாயா, சாயாவின் நிஜம் ஜமுனா என்று படுகிறது.

கதையின் பலம் சென்னை நடுத்தரக் குடும்பத்தின் அன்றாட சூழல் — அந்தச் சூழலே ஒரு படிமமாக இருப்பது மிகப்பெரிய சாதனை.

user_5842

★ 3/5 Feb 02, 2026

வழக்கம்போல் அசோகமித்திரன் தன் எளிமையான எழுத்து நடையில் 80களில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டையும், அதனூடாக மூன்று பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும் பதிவு செய்திருக்கிறார். சினிமா ஆசையில் சீரழிந்த ஜமுனா, கணவனைப் பிரிந்து வாழும் சாயா, நோயாளி கணவனுடனும் கொடுமையான மாமியாருடனும் அல்லல்படும் டீச்சரம்மா — இவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் தரக்கூடிய நாவல்.