Reviews for குற்றப் பரம்பரை
30 reviews total
user_5732
★ 4/5 Feb 02, 2026பொன்னியின் செல்வனுக்கு நிகரான ஒரு நாவல். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்கள், அனைத்தும் இறுதியில் ஒருங்கிணையும். சாதிய ஒடுக்குமுறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டாலும் மிக ஆழமான கதை என்பதால் வழக்கமான பல்லவி இல்லாமல் சுவாரசியமாக நகர்கிறது. வேயன்னா என்ற தலைவனின் பண்புகள் எங்கள் தலைவனை நினைவூட்டுகின்றன.
user_5731
★ 4/5 Feb 02, 2026அழகான கதைக்களங்களும் கதாபாத்திரங்களும் நிறைந்த சிறந்த கதை. என்னுடைய ஒரே அச்சம் என்னவென்றால், இதை பாலாவோ பாரதிராஜாவோ திரைப்படமாக மாற்ற முயன்றால் இந்தப் புத்தகத்திற்குப் பெரும் அநீதி இழைக்கப்படும் என்பதுதான்.
user_5730
★ 4/5 Feb 02, 2026கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டு, அது குற்றம் என்று கூடத் தெரியாமல் வாழும் ஒரு சமூகத்தைப் பற்றிய புனைகதை. ஆனால் அவர்களின் மனிதாபிமானம், சாதிவெறி இல்லாத சிந்தனை, நேர்மை ஆகியவை அவர்களை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் வைக்கின்றன.
குறிப்பாக போலீஸ் அதிகாரி விக்டர், வேயன்னா ஆகிய கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்திருந்தன. சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று.
user_5729
★ 4/5 Feb 02, 2026சாதிவெறி மற்றும் அவர்கள் செய்யும் தொழில் அவர்களின் வாழ்க்கையை எந்தளவு பாதிக்கிறது என்பது பற்றிய வெவ்வேறு பார்வைகள் கிடைத்தன. கொம்பூதி என்பது ஊர் அல்ல, அது ஒரு உணர்வு. வேல ராமமூர்த்தியின் அருமையான கதை சொல்லல்.
user_5728
★ 4/5 Feb 02, 2026இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாலாவும் குற்றப் பரம்பரை என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்க சில வருடங்கள் முன்பு மோதிக்கொண்டார்கள். அன்றிலிருந்து இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம். இப்போதுதான் படிக்க முடிந்தது.
இந்த நாவலை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று - நான் இப்படித்தான் இருப்பேன் என்ற கொம்பூதி, எப்படியாவது உயிர் வாழணும் என்ற பெரும்பச்சேரி, நான் சொல்றதைக் கேட்டுத்தான் அனைவரும் வாழணும் என்ற பெருநாழி, இவர்கள் இடையிலான பிரிவைப் பயன்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்ட நினைக்கும் ஆங்கிலேயர்கள். இந்தக் கூட்டங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம்தான் குற்றப்பரம்பரை.
இரண்டாவது - வைரம் தேடி அலையும் நாகமுனியின் கதை எதற்காக முக்கியக் கதையுடன் இணைக்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். இந்தச் சிறுகதை முக்கியக் கதையின் கருப்பொருளை உவமைப்படுத்தி எழுதப்பட்டது. ஒரு பேராசைபிடித்தவன், ஒரு வெள்ளந்தி, அந்த வெள்ளந்திக்கு வேறொரு மனிதனிடம் அளவுகடந்த பாசம் - இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரும் குற்றப்பரம்பரை சேர்ந்தவர்கள்.
இந்தக் கதை திரைப்படப் பாணியில் எழுதப்பட்ட நாவல். கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் வரை படிக்க சற்று சிரமமாக இருந்தது.
user_5727
★ 4/5 Feb 02, 2026நம் நாட்டில் நிகழும் சாதிக்கொடுமைகள் பற்றி ஏதேனும் ஒரு செய்தி தினந்தோறும் நம் காதுகளில் ரீங்காரமிடத்தான் செய்கிறது. அத்தகைய நிகழ்வு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னும் நடந்ததாக இப்புத்தகம் நமக்குக் கூறுகையில், நம் சமுதாயத்தின் வளர்ச்சியைக் குலைக்க பெரிய முயற்சி எதுவும் இன்றி, சாதிகளே அதைக் கச்சிதமாகச் செய்து வருகிறது என்பதை உணர்ந்தேன்.
களவுத் தொழில் புரியும் கொம்பூதி மக்கள், கீழ்சாதி என்று ஒதுக்கப்பட்ட பெரும்பச்சேரி மக்கள் மற்றும் மேல்சாதி என்று கூறிக்கொண்டு கொடுமைகள் இழைக்கும் பெருநாழி மக்கள் என இம்மூன்று சமூகத்தைச் சுற்றியே நகர்கிறது கதை. கொம்பூதி மக்களின் தலைவராகக் கம்பீரமாக வலம் வருகிறார் வேயன்னா.
ஒரு கட்டத்தில் பெரும்பச்சேரி மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கையில், பெருநாழியின் பகையைச் சம்பாதிக்கிறார் வேயன்னா. அவரை எதிர்கொள்வதற்காக பெருநாழி மக்கள் காவல் நிலையம் ஒன்றை அவ்வூரில் வர ஏற்பாடு செய்கின்றனர். எத்தனை ஆங்கிலேய அதிகாரிகள் அங்கு பொறுப்பேற்றாலும் வேயன்னாவையும் அவர் மக்களையும் அசைக்க இயலாத நிலையில், சேது காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். யார் இந்த சேது? இறுதியில் வேயன்னா வீழ்ந்தாரா என்பதுதான் கதை.
உணர்வுபூர்வமான கதைக்களத்தைக் கொண்டு, சாதியை வைத்துத்தான் இங்கு அரசியல் நடக்கிறது என்று எளிமையாகக் கூறியிருக்கிறார் எழுத்தாளர். அனைவரும் இது போன்ற படைப்புகளை வாசித்து சாதி மற்றும் அரசியல் பற்றிய புரிதல் அடைய வேண்டும்!
user_5726
★ 5/5 Feb 02, 2026ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியிருந்த கிராமங்களான பெரும்பச்சேரி, பெருநாழி, கொம்பூதி கிராமங்களைக் கதைக்களமாகப் புனையப்பட்ட நாவல் குற்றப்பரம்பரை. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.
அம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள் என இரத்தமும் சதையுமாக கதை நகர்கிறது.
கதையில் வரும் வஜ்ராயினி, நாதமுனி, ஹசார் தினார் கதாபாத்திரங்கள் மாய யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கதையில் தொய்வு மேலிடுகிறது.
வேயன்னா கதாபாத்திரம் விளக்கப்பட்ட விதமும், அதன் கம்பீரமும் மிடுக்கும் வாசிப்பர் மனதில் பதிந்துவிடும்! கூழாணிக்கிழவி, சேது, வையத்துரை என எல்லா கதைமாந்தரும் நம் அகக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார் வேல ராமமூர்த்தி!
பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தைக் கொம்பூதியின் மேல் அமல்படுத்துவதற்காக வெள்ளை அரசு மேற்கொள்ளும் கொலைவெறி ஆட்டத்தை வாசிக்கையில் மனசாட்சியுள்ள எவருக்கும் பதைபதைக்கச் செய்யும்.
நாவலின் கதாநாயகன் வேயன்னாவின் சுவடுகள் இன்னும் கொஞ்ச நாள் மனதிற்குள் நிலைத்திருக்கும், அந்தளவு அழுத்தமான கதாபாத்திரம். அன்பையும், வீரத்தையும், வெள்ளந்தித்தனம் நிறைந்த மனிதர்களையும் காட்டிய இந்த நாவல் சாதியப் பிரிவினையைத் தூண்டி குளிர்காயும் சமூகத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது!
user_5725
★ 2/5 Feb 02, 2026முதலில் சொல்ல வேண்டும், இது ஒரு சிறந்த படைப்பு அல்ல. நாவல் பண்பாட்டை ஆழமாகச் சித்தரிக்கவில்லை, தெளிவற்ற விவரணைகளை மட்டுமே தருகிறது. சாதாரண கதை போல் உருண்டு புரண்டது. வஜ்ராயினி கதாபாத்திரம் வரும் இடங்களில் எரிச்சலாக இருந்தது. காவல் கோட்டம் முன்பே படித்திருந்தால் குற்றப் பரம்பரை படிக்கப் பரிந்துரைக்க மாட்டேன். சிறந்த நாவல் அல்ல.
user_5724
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் கொம்பூதி, பெரும்பச்சேரி, பெருநாழி என்ற மூன்று ஊரையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.
கொம்பூதி - இந்த ஊரினைச் சார்ந்த மக்கள் களவு ஒன்றையே தொழிலாகக் கொண்டவர்கள். அதை அவர்கள் தவறு என்று உணர்ந்ததே இல்லை, அதுதான் அவர்களைப் பொறுத்தவரை பிற அனைத்து தொழில்களை விட நேர்மையானது. திருட்டிற்காக கொலையும் செய்வர். ஆனால் தொழிலைத் தாண்டி யாரையும் ஏமாற்றவோ, தொல்லை கொடுக்கவோ, கொலையோ செய்யாத நல்லவர்கள். திருடும் பொருளின் மதிப்பு கூடத் தெரியாது, அதைத் தெரிந்துகொள்ளவும் விரும்பியதில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் களவு என்பது உணவிற்கான தொழில், விலைமதிப்பற்ற வைரத்தைத் திருடினாலும் ஒரு மூட்டை அரிசிக்குக் கொடுத்து விடுவார்கள்.
பெருநாழி - மேல்சாதியினர் மட்டும் வாழும் ஊர்.
பெரும்பச்சேரி - கீழ்சாதியினர் மட்டும் வசிக்கும் ஊர். பெருநாழி ஆட்களின் வீட்டு வேலைகளுக்கும், விவசாய வேலைகளுக்கும் செல்வதே இவர்களின் பிழைப்பிற்கான வழி.
பெருநாழி மக்களின் தீண்டாமைப் பழக்கத்தின் விளைவாய் பெரும்பச்சேரிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு கொம்பூதி மக்களும் ஆதரவாக நிற்க, இவர்களை அடக்க பெருநாழி மக்கள் வெள்ளைக்காரப் போலீசைத் துணைக்கு அழைக்க, அதன் பின் நடப்பவற்றை விறுவிறுப்பாக சில கிளைக் கதைகளோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்கு ஏற்ற அத்தனை அம்சங்களும் நிறைந்த இந்தப் புத்தகம், படிப்பவர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் தரும்.
user_5723
★ 5/5 Feb 02, 2026அற்புதம்! என்ன ஒரு அழகான, உயிர்ப்புள்ள வாசிப்பு அனுபவம். வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு புனைகதையிலும் நம் இதயத்தில் தங்கும் கதாபாத்திரங்கள் இருக்கும். கூழாணிக்கிழவியும் வேயன்னாவும் அந்தக் கதாபாத்திரங்களை எல்லாம் தோற்கடித்து என் இதயத்தில் முதலிடம் பிடித்துள்ளனர், குறிப்பாக வேயன்னா.
குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களைக் கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார், வேல ராமமூர்த்தி.