Reviews for அம்மா வந்தாள்

30 reviews total

user_5673

★ 5/5 Feb 02, 2026

அம்மா வந்தாள் தமிழில் பெருவாரியாக வாசிக்கப்பட்ட நாவல். புனிதப்படுத்தலின் மீறல், நாவலின் மொழி, கதாபாத்திரங்களின் கச்சிதமான வார்ப்பு எனப் பல காரணங்களால் இது இன்றும் புகழ்பெற்ற நாவலாக இருக்கிறது. நாவல் வெளிவந்த காலத்தில் பெரும் எதிர்ப்பையே சம்பாதித்திருக்கிறது.

அலங்காரம் தன் மகனை வேதம் படிக்க அனுப்புகிறாள் — ஏன்? அப்புவைத் தன் உண்மையான மகனாக நினைக்கிறாள், அப்போ மற்ற குழந்தைகள்? தன் செயல் தவறு என்று உணர்கிறாள், ஆனால் தவிர்க்கவில்லை.

"இல்லடா அப்பு, லோகம் ஆரம்பிச்ச நாளிலிருந்து சம்பாதிக்கிறவனுக்குத்தான் மதிப்பு" — தண்டபாணியின் இந்த வரிகளில் அலங்காரம் எதிலும் திருப்தியடையவில்லை என்பது தெளிவாகிறது. மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார் தண்டபாணி.

"நீயும் எல்லாரும் போல அம்மா பிள்ளைதான்டா அப்பு" — இந்த ஒற்றை வரியே நாவலின் மொத்த சித்திரத்துக்கும் போதுமானது. மிகச் சிறிய நாவல், மிக நல்ல படைப்பு.

user_5672

★ 5/5 Feb 02, 2026

1966-ல் முதற்பதிப்பு கண்ட நாவல். தி.ஜானகிராமன் "சக்தி வைத்தியம்" சிறுகதைத் தொகுப்பிற்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். "மரப்பசு", "நாலு வேலி நிலம்", "மோகமுள்" முதலான 9 நாவல்களை இயற்றியுள்ளார். பிறழ்வுகளையும் மீறல்களையும் கடந்த நூற்றாண்டின் மத்தியிலேயே கையாண்டிருக்கிறார்.

ஒரு பிராமணத் தாய் மரபு மீறல்கள் செய்வதாகப் புனைந்திருக்கிறார் — இதற்காக அவரைப் "பிரஷ்டம்" செய்ததாகத் தி.ஜா அவர்களே கூறியிருக்கிறார்.

வேதம் படிக்க அப்புவைச் சிறுவயதிலேயே காவிரிக்கரையோர கிராமத்திற்கு அனுப்புகிறார் தந்தை தண்டபாணி. வேதம் கற்பது, பவானியம்மாள் மற்றும் இந்துவுடனான அனுபவங்கள், சென்னைக்குத் திரும்பியதில் கசப்பான தர்க்கங்கள், மீண்டும் சித்திரகுளத்துக்கே பயணம் என முடிகிறது.

அப்பு-இந்து, அப்பு-தண்டபாணி, அப்பு-அலங்காரம் உரையாடல்கள் யதார்த்தமாகவும் ஆழ்ந்த தத்துவார்த்தங்கள் பொதிந்தவையாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. தி.ஜா ஏன் இப்போதும் கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த ஒரு நாவலே போதும். நிச்சயம் புது அனுபவம் — உணர்வுக்குவியலும் உயிரோட்டமும் நிறைந்த கதை!

user_5671

★ 5/5 Feb 02, 2026

இது நான் படித்த தி.ஜா-வின் இரண்டாவது நாவல். "அடி" படித்தபோது சிறு உறுத்தல் இருந்தது — பிராமண மொழியும், அவர்களைக் கதை மாந்தர்களாகப் பார்ப்பதும். ஆனால் இரண்டு நாவல்களையும் முடித்தவுடன், குட்டையில் விழுந்த கல் மாதிரி எண்ணங்களையும் சிந்தனைகளையும் கலங்கடித்தது ஜானகிராமனின் எழுத்தும் சிந்தனையும்.

"அம்மா வந்தாள்" முடித்து முன்னுரை படிக்கிறேன் — மூச்சடைக்க வைத்தது. நிஜ வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன் இதை. என் குழந்தைப் பருவமே சிதைந்தது — என்ன நடக்கிறது என்றே அறியாமல், கண்ணீரோடு காதைப் பொத்திக்கொண்டு, ஒவ்வொரு நாளும் மனதில் போட்டுப் புழுகிக்கொண்டே கடந்திருப்போம் நானும் அண்ணனும் தம்பியும்.

"அம்மா" என்ற உறவைப் புனிதமாக மட்டுமே சமூகக் கட்டமைப்புக்குள் அடைத்து வைத்திருக்கிறோம் — அவளை ஒரு பெண், ஒரு மனிதர் என்பதை மறந்து. அவளுக்கும் மனம் மற்றும் உடல் தேவைகள் இருப்பதை உணர மறந்து. பெண்ணின் மீது வரையப்பட்டுள்ள பல கட்டுகளை அவிழ்த்துக் கேள்விகளை வீசுகிறது "அம்மா வந்தாள்". மனித உறவுகளையும் உளவியலையும், அதில் இருக்கும் சிக்கலான பின்னல்களையும் ஒரு வாலிபனின் வளர்ச்சிக் கதையில் அடுக்கடுக்காக வைத்து, 1960-களிலேயே ஒரு தலைசிறந்த படைப்பாகக் கொடுத்திருக்கிறார் தி.ஜா. ஆம், "மீறலின் புனிதப் பிரதி" தான் இது.

user_5670

★ 3/5 Feb 02, 2026

மனித மனத்தின் நுட்பங்களை, அது நிகழ்த்திப் பார்க்கிற மீறல்களைப் புரிந்திடத்தான் முடியுதா? எல்லாத்தையும் காவேரியில் கரைத்திடத்தான் முடியுதா? வேதத்தால எல்லாத்தையும் பொசுக்கிடத்தான் முடியுதா?

மனித மனம்தான் மீறல், மனித மனம்தான் பிராயச்சித்தம். அம்மா வந்தாள் — மீறலின் பிரதி.

user_5669

★ 4/5 Feb 02, 2026

2023-இன் கிளாசிக் வாசிப்பு. பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் என்றாலே ஒரு வித தயக்கம் — புரியுமா புரியாதா என்ற ஆராய்ச்சி. இந்தப் புத்தகம் அந்தத் தயக்கங்களைத் தகர்த்துவிட்டது.

நாயகன் அப்புவின் பார்வையில்தான் பெரும்பாலான பக்கங்கள் இருக்கின்றன. அப்பு-இந்து-தண்டபாணி-அலங்காரம் — கதையின் பிரதான பாத்திரங்கள். அப்பு-தண்டபாணி இடையே நடக்கும் உரையாடல்கள் நன்றாக இருந்தன. காவிரிக்கரையோ திருவல்லிக்கேணியோ — இரண்டையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது ஆசிரியரின் வர்ணனை.

இன்றைய காலகட்டத்தில் திருமணம் தாண்டிய உறவோ, விவாகரத்தோ, விதவை மறுமணமோ சகஜமாகிவிட்டது. ஆனால் 1960-களில் இது பெரும் சர்ச்சையாக இருந்திருக்கும். இன்றைய சூழ்நிலையிலும் கூட இந்நாவலின் கருத்துகள் ஒத்துப்போகின்றன. உண்மையாகவே ஒரு கிளாசிக்.

user_5668

★ 4/5 Feb 02, 2026

பாராட்டப்பட வேண்டிய முயற்சி. கண்டிப்பாக ஒரு கிளாசிக்தான்.

user_5667

★ 3/5 Feb 02, 2026

அலங்காரம் அம்மாளின் ஆசை — மகன் அப்புவை வேதம் படிக்க வைக்க வேண்டும் என்பது. மற்ற பிள்ளைகள் பள்ளி, கல்லூரி, வேலை என்றிருக்க, அப்புவை மட்டும் பவானியம்மாள் நடத்தும் வேத பாடசாலையில் சேர்க்கிறார்கள். 16 வருடம் வேதம் படிக்கிறான் அப்பு.

பவானியம்மாளின் மருமகள் இந்து — கணவனை இழந்த விதவை, அப்புவின் மீது ஈர்ப்பு கொண்டவள். படிப்பை முடித்துப் பெற்றோரிடம் செல்லும் அப்புவிற்குப் பட்டணம் பிடிக்கவில்லை. அப்பு தாயின் ஆசையை நிறைவேற்றினானா? இந்துவைப் புரிந்துகொண்டானா? — அதுதான் அம்மா வந்தாள்.

user_5666

★ 4/5 Feb 02, 2026

விதி மீறல்! காலம் காலமாக வரையறுக்கப்பட்ட ஒழுக்க மரபு, ஆசாரங்களை மீறுதல் — உணர்வுகள்தான் மனிதர்களை நிர்ணயிக்கின்றன என்பதே இந்நூலின் கரு.

user_5665

★ 4/5 Feb 02, 2026

தி.ஜா தனது நுட்பமான பாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் வழியாக, மனித உறவுகள் மரபுகளுக்குக் கட்டுப்படாமல் உணர்ச்சிகளுக்கு எளிதில் வசப்படும் என்பதை நிரூபிக்கிறார். மரபு என்னும் புனிதத்தை உடைத்த "அம்மா வந்தாள்" — மரபு மீறலின் புனிதப் பிரதி.

user_5664

★ 5/5 Feb 02, 2026

அப்பு, விதவையான இந்துவின் காதலை நிராகரிக்கிறான் — தன் தாயின் விழுமியங்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய இயலாது என்று. ஆனால் வீடு திரும்பும்போது, அந்த விழுமியங்களையே தன் தாய் சிதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டடைகிறான். ஜானகிராமனின் அமிழ்த்தும் உரைநடை, ஒழுக்கத்தை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது, பல பழமைவாதிகளைக் கொதிக்கவைத்திருக்கும் (நாவல் வெளிவந்தபோதும் அப்படித்தான் நடந்தது). நவீன தமிழ் இலக்கியம் படிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்.