Reviews for வெக்கை

29 reviews total

user_5492

★ 3/5 Feb 02, 2026

வட்டாரத் தமிழை வாசிப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது. ஒரு கொலையின் மீதான பழிவாங்குதலை விளக்குகிறது. உணர்ச்சிகள் நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. வாசிக்கத்தக்க புத்தகம்.

user_5491

★ 5/5 Feb 02, 2026

பரமசிவத்திடம் உள்ள கையளவு விவசாய நிலத்தை பக்கத்து பண்ணை முதலாளி வடக்கூரான் கையகப்படுத்தும் ஆசையினால் பரமசிவத்தின் மூத்த மகன் கொலை செய்யப்படுகிறான். பழிக்குப் பழி வாங்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை வெட்டிச் சாய்கிறான். பிறகு என்ன நடந்தது என்பதே வெக்கை.

அய்யா, ஆத்தா, மாமா, அத்தை, சின்னையா, சித்தி, அண்ணன், தம்பி செலம்பரம், தங்கை, சானகி, வடக்கூரான், ஜின்னிங் பேக்டரி முதலாளி, நாய், முயல், பன்றி, பறவைகள், மலை, ஊர், வெள்ளாமை காடுகள் — இவையே வெக்கை நாவலின் கதாமாந்தர்கள். பூமணியின் யதார்த்தமான எழுத்துக்கள் கதை நகர்வை விறுவிறுப்பாக்குகிறது.

உணர்வுகளின் ஊற்றுப்பெருக்கான வெக்கையில் இருந்து சில உண்மையான வரிகள்:

"கையகல நெலமிருந்தாத்தான் நாலுபேரப்போல நமக்கும் ஒழைக்கணுமிங்கிற அக்கற வரும்"

"நம்ம சட்டத்துணி போட்டு அலையிறது புடிக்கல. மனசு புழுங்குது. எல்லாம் சேத்து அமுக்குறதுக்கு வுட்டுக்குடுத்தா நல்ல மனுசன். இல்லன்னாக் கெட்டவன்."

"ஊருல ஆயிரம் அநியாயம் நடந்தாலும் தொந்தரவு எதுக்குன்னு நழுவிக்கிறவந்தான நெறைய இருக்கான்."

"எல்லாம் பட்டுப்பட்டுத்தான் தெரியும்."

"கஸ்டந்தான். அதுக்காகச் சும்மாருந்தா வயிறு நெறஞ்சிருமா."

user_5490

★ 4/5 Feb 02, 2026

ஒரு திரைப்படம் பார்ப்பது போல் உணர்ந்தேன். காட்சிகள் கண்முன் விரிவதுபோல எழுதப்பட்டிருக்கிறது. 4.25/5 மதிப்பெண் தரலாம்.

user_5489

★ 5/5 Feb 02, 2026

சிறந்த மற்றும் வசீகரிக்கும் கதை. புத்தகம் முழுவதும் எளிய நடை. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஈர்த்துப் பிடிக்கும் கதையோட்டம், எளிமையான மொழியில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

user_5488

★ 4/5 Feb 02, 2026

புத்தகத்தை தழுவிய திரைப்படம் என்றால் அந்தப் புத்தகத்தை வாசித்தபின் படத்தைப் பார்ப்பது அல்லது படத்தைப் பார்த்த பின்னாவது புத்தகத்தை வாசித்துவிடுவது என்ற வழக்கம் என்னிடம் உண்டு.

அசுரன் திரைப்படம் பார்த்த நாள் முதல் வாசிக்க விரும்பிய புத்தகம் வெக்கை. புத்தகத்தில் உள்ள கதாமாந்தர்களைக் கடன் வாங்கி திரைப்படத்துக்காகக் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அடிப்படையில் உள்ள கதையின் கரு மட்டும் அப்படியே உள்ளது.

சிவசாமியைச் சுற்றித்தான் படத்தில் கதை இருக்கும். ஆனால் செலம்பரம்தான் புத்தகத்தின் நாயகன்.

அய்யாவின் நிலத்தைப் பறித்துக்கொள்ள அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானைப் பழிவாங்கக் கையில் ஆயுதம் எடுக்கும் செலம்பரத்தின் கதை. காடுமேடுகளில் சுற்றித்திரியும் அவனோடு நாமும் பயணிக்கிறோம்.

"கம்மாத்தண்ணீரில் அலைகள் சிறிசு சிறிசாக வந்து மறைவதை வேடிக்கை பார்த்தான். ஆத்தா அம்மியில் தேங்காய் அரைக்கும் போது இப்படித்தான் இருக்கும்" — இது போன்ற வரிகளை வாசிக்கும் போது, கோலியும் கிட்டியும் விளையாடித் திரியும் அவனின் குழந்தைப்பருவம் பழி உணர்ச்சியால் சீக்கிரம் பிடுங்கப்பட்டுவிட்டதே என்று நிச்சயம் நமக்கு மனம் ரணமாகும்.

வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்டிருப்பதால் முதலில் புரிந்துகொள்ளச் சற்று நேரம் ஆகும். காடுகழனியின் அழகினை பூமணி விவரிக்கும் அழகில் மண்வாசனை கமழ்கிறது பக்கங்களினூடே.

user_5487

★ 5/5 Feb 02, 2026

அருமையாக எழுதப்பட்ட நாவல். வாசிக்கத் தொடங்கியதும் என் ஆன்மா செலம்பரத்துடனும் அவன் தந்தையுடனும் சேர்ந்து பயணித்தது.

அசுரன் திரைப்படம்தான் இந்த நாவலை வாசிக்க உத்வேகமளித்தது. சாதி அடிப்படையிலான வன்முறை நம் மனித சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது யாருக்கும் நடக்கக்கூடாது.

user_5486

★ 4/5 Feb 02, 2026

3.5 நட்சத்திரங்கள் தருவதே சரியாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் பிடிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அடக்குமுறையையும் பழிவாங்குதலின் அரசியலையும் பேசுகிறது. இந்தியாவில் தலைமறைவாக வாழும்போது என்ன நடக்கிறது என்பதை மிக விரிவாகச் சொல்கிறது.

ஆனால் இரண்டு விஷயங்கள் சங்கடமாக இருந்தன — தாய்மொழி தமிழ் தெரிந்தாலும் இது எளிதாக வாசிக்கக்கூடிய புத்தகம் அல்ல. திருநெல்வேலி வட்டார வழக்கு தெரிய வேண்டும். மேலும் முடிவு திறந்த முடிவாக இருப்பது பிடிக்கவில்லை.

user_5485

★ 5/5 Feb 02, 2026

"ரெண்டு நாளைக்குப் பட்னி கெடந்தாக்கூடத் தெம்பா ஒறங்கீறலாம். ஆயுதமில்லாம ஒறக்கம் வராது" — பூமணி எழுதிய வெக்கை நாவலிலிருந்து.

குற்றங்கள் எவ்வாறு உருவாகிறது? அதன் ஊற்றுக் காரணிகள் என்ன? வர்க்க பேதமையும் தனிமனித பேராசையும் எப்படி குற்றங்களை உருவாக்குகிறது? இவற்றை ஒரு பிரச்சாரமாகச் சொல்லாமல் கலையாக வெளிப்படுத்திய நாவல் வெக்கை.

"சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்கத் திட்டமிட்டிருந்தான்" என்ற முதல் வரியிலேயே ஒரு பதட்டத்தைக் கொடுத்து கதைக்குள் இழுத்துச் செல்கிறார் ஆசிரியர்.

அண்ணனைக் கொன்றவனை ஒரு பதினைந்து வயது சிறுவன் கொன்றுவிடுகிறான். பின்னர் தந்தையுடன் சேர்ந்து காடு, மலை என தலைமறைவாகச் சுற்றித் திரிகிறான். அந்த அலைக்கழிப்பின் வழியே தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பதன் வழியாகக் கதை சொல்லப்படுகிறது.

ஒரு பெரும் நிலத்தைக் கட்டி ஆளும் வடக்கூரான், அவன் நிலத்தை ஒட்டிய சிறிய நிலத்தை விலைக்குக் கேட்கிறான். அதனைத் தர மறுத்ததால் அவரது மூத்த மகனைக் கொன்றுவிடுகிறான். அது வெறும் நிலத்தகராறு மட்டுமல்ல. உழைக்கும் மக்களுக்கு நிலம் என்பது வாழ்வாதாரம். ஆனால் பணக்காரனுக்கோ அது அதிகாரம்.

உழைக்கும் வர்க்கம் வன்முறையைக் கையில் எடுக்கிறது. ஒரு கொலையைச் செய்த பின்னும் அந்தச் சிறுவனுக்கு ஒரு சின்னக் குற்றவுணர்வு கூட வருவதில்லை. பதிலாக, தன்னுடைய நாய்க்குட்டியைப் பற்றியும் தன் தங்கையைப் பற்றியும் மட்டுமே யோசிக்கிறான்.

நிலத்தை விற்றுவிட்ட ஒரு மனிதன் எப்படித் திருடன் ஆகிறான் என்பதற்கு முத்தையா என்கிற கதாபாத்திரம் வருகிறது. முத்தையா மிகவும் நல்லவன், ஒரு நீதிமான் — ஆனால் திருடன். காரணம் நிலமின்மை. அதற்குக் காரணம் தனி மனிதன் ஒருவனின் பேராசை.

தீவிரமான அரசியல், வன்முறை என்று பேசிக்கொண்டே போனாலும், வெயிலேறிப்போன கரிசல் நிலத்தில் ஆடு மேய்த்துவிட்டு மதியக் கஞ்சி குடித்துவிட்டு மரத்தடியில் கண்ணயரும் போது வருகிற ஏகாந்தத்தை தருகிற இடத்தில் இந்த நாவல் ஒரு கலையாக மாறுகிறது.

user_5484

★ 5/5 Feb 02, 2026

நாம் படித்த நாவலை படமாக்கும்போது நாவலோடு ஒப்பிடத் தோன்றுவதுபோல, படமாகப் பார்த்துவிட்டு நாவலைப் படிக்கும்போது படத்தின் நடிகர்கள், கதைக்களனே நாவலை வாசிக்கும்போதும் நினைவுக்கு வருகிறது.

தன் நிலத்தை விட்டுக்கொடுக்காத, பணத்திற்கும் அதிகாரத்திற்கும் பணியாத ஒரு குடும்பம் — அவர்களின் உறவுகள், சக மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அளவற்ற அன்பு, கஷ்டத்திலும் அவர்கள் இழக்காத நேர்மை, அவர்களின் இயல்புகள் ஆகியவற்றை வைத்து ஓர் நல்ல கிராமத்து அனுபவத்தை தந்திருக்கிறார் பூமணி அவர்கள்.

அண்ணனின் கொலைக்குப் பழிவாங்கக் கையை வெட்ட முயற்சித்து கொலையில் முடிய, சிதம்பரமும் அவனது அய்யாவும் காடு, மலை, வரப்பு என்று அலைந்து இறுதியில் சரணடைய முடிவு செய்வதே கதை. வடக்கூரானும் ஜின்னிங் பேக்டரி முதலாளியும் கொலைகள் செய்தாலும் தைரியமாக வெளியில் திரிய முடிகிறது — ஆனால் எளியவர்களுக்கு அது ஆகாத காரியம். சட்டமும் போலீஸும் பணம் உள்ளவர்களுக்குத்தான் என்பதைக் காட்சிகள் மூலமாகப் புரியவைக்கிறார் பூமணி.

அக்காலத்தில் கிராமங்களில் நிலக்கிழார்கள் எளிய மனிதர்கள் மீது காட்டிய அதிகாரமாக, பணக்காரர்கள் ஏழைகள் மீது காட்டும் ஆணவமாக, மேல்சாதிக்காரர்கள் கீழ்ச்சாதிக்காரர்களிடம் காட்டும் அடக்குமுறையாக வடக்கூரானின் செயலைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கதையின் வழியே நாமும் அவர்களோடு காடுகளில் பயணம் செய்கிறோம், உணவு தயாரித்து உண்கிறோம், கொலைக்கான அவர்கள் சொல்லும் நியாயத்தைக் கேட்கிறோம், இறந்துபோன சிதம்பரத்தின் அண்ணனுக்காக வருந்துகிறோம், வடக்கூரான் மீது கோபம் கொள்கிறோம், கோர்ட்டில் ஆஜராக அவர்களைப் பஸ் ஏற்றி விடுகிறோம்.

படத்திற்காக நிறைய மாறுதல்கள் செய்து திரைக்கதையாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். இரண்டையும் ஒப்பிடாமல் படித்தால், பார்த்தால் நாவல், படம் இரண்டுமே தரமான படைப்புத்தான்.

user_5483

★ 3/5 Feb 02, 2026

நான் பக்கச்சார்பாக இருக்கலாம், ஆனால் இது நான் ரசித்து வாசித்த புத்தகம் அல்ல. அசுரன் திரைப்படம் இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரியாது. சுமார் 25 பக்கங்கள் படித்தபின் (அதை ரசித்தேன்) திரைப்படத்தின் ஒற்றுமைகளை உணர்ந்தேன். படத்தை விரும்பாத நான் உடனே புத்தகத்தின் மீதும் ஆர்வம் இழந்துவிட்டேன். உண்மையில் முடிப்பதற்காக மட்டுமே படித்தேன்.

பணமும் அதிகாரமும் சமூகத்தில் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய பேசுகிறது. நீதி கூட சமநிலையற்றது — செல்வாக்கு இருந்தால்தான் நியாயம் கிடைக்கும் என்ற கருத்து வலுவாக இருக்கிறது. நல்ல வாசிப்பு, ஆனால் என் ரசனைக்கு ஒத்துவரவில்லை.