Reviews for கோபல்ல கிராமம்
30 reviews total
user_5233
★ 5/5 Feb 02, 2026கி.ராவின் கோபல்ல கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு நாயக்கரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என்னை நினைக்க வைத்த கதாபாத்திரம் அக்கையா தான்.
கி.ராவுக்கே உரிய வட்டார வழக்கில் கதை அழகாக நகர்கிறது.
user_5232
★ 5/5 Feb 02, 2026கட்டபொம்மன் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடிகிளம்பி வந்து, தமிழ்நாட்டில் குருமலை சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல்.
கதையின் தொடக்கத்தில் இளம் கர்ப்பிணியானவள், அவளின் நகைக்காகக் கள்வன் ஒருவனால் நீரில் அழுத்தப்பட்டு இறக்கிறாள். அவன் சிக்கிபிடிக்கப்பட்டு கழுவேற்றப்படுகிறான். இந்தச் சம்பவங்களுக்கு நடுவே தான் மங்கத்தாயார் என்னும் பூட்டி, அவர்கள் புலம்பெயர்ந்த கதையைக் கூறுகிறாள்.
ஆந்திர தேசத்துத் தெலுங்கு கம்மவார்கள், சுல்தான் ஒருவன் அவர்கள் வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால், அவனிடமிருந்து தப்பித்து தெற்குநோக்கிப் புறப்படுகிறார்கள். பசி, பஞ்சம், நோய், காடு, கள்வர்கள் தொல்லை எனப் பல இன்னல்களுக்கு இடையே பயணிக்கிறார்கள்.
ஒன்பது வயதுப் பெண் குழந்தையாக இருந்த மங்கம்மா, 137 வயது பூட்டியான பின் தனது சந்ததியினருக்குத் தங்களது வரலாற்றைக் கூறுகிறாள். கோவிந்தப்ப நாயக்கர், ஊர்குடும்பன் அக்கையா, மங்கத்தாயார் என முதன்மை கதாமாந்தர்கள் கதை நெடுகிலும் பரவலாகப் பயணிக்கின்றனர்.
நாட்டுப் பண்பாட்டை பரிபூரணமாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்பிலக்கியம் இந்நூல். புலம்பெயர்தல், நாட்டார் வழக்கு, வாழ்வியல் போன்ற அரிய தகவல்களை சுவாரசியமாகச் சொல்லியபடி செல்கிறது.
user_5231
★ 4/5 Feb 02, 2026காலத்தின் பின்னோக்கியப் பயணம். ஒரு கிராமத்தின் வரலாற்றை நாட்டுப்புறக் கதைசொல்லல் பாணியில் அழகாக அழைத்துச் செல்லும் நாவல்.
user_5230
★ 5/5 Feb 02, 2026நல்ல புத்தகம். கி.ராவின் கரிசல் இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒன்று. எளிமையான கிராம வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கும் நாவல்.
user_5229
★ 5/5 Feb 02, 2026கோபல்ல கிராமம் — இது சாதாரண நாவல் அல்ல. படிக்கும்போதே காதல் வந்துவிட்டது. மாலை எட்டு மணிக்குப் படிக்கத் தொடங்கி, அவ்வளவு ஈர்க்கப்பட்டேன், இரவு பத்து மணிக்கு முடித்தேன், அப்புறம் தான் சாப்பிட்டேன். இது போன்ற கதைகள் கொண்ட நாவல்கள் அரிது.
user_5228
★ 4/5 Feb 02, 2026கி.ரா அவர்கள் கதை அமைத்த விதம் அக்காலகட்டத்தில் வாழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. வேகமற்ற வாழ்க்கை, குறுகிய வட்டமாயினும் நெருங்கிய வட்டமாய் வளரும் சூழல் — கிராமத்தில் இருக்கும் பழக்கவழக்கங்களுக்கு, சொலவடைகளுக்கு மூலம் இவை தான் எனக் காட்டியது ரசிக்கும் விதமாய் உள்ளது.
user_5227
★ 4/5 Feb 02, 2026அருமையான நாவல். இந்த நாவலின் வெளிப்பாட்டு மொழியும் வடிவமும் நாட்டார் தன்மையுடன், வட்டார வழக்குகளுடன் கூடியது. ஆனால் இந்த நாவல் தெளிவான வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பு. அந்த வகையில் தமிழில் முன்னோடிப் படைப்புகளில் ஒன்று என்றே கருதலாம்.
இஸ்லாமியப் படையெடுப்பினால் இந்தியாவின் தெற்கு நோக்கி இடையறாது புலம்பெயர்தல் பல நூற்றாண்டுகளுக்கு நடந்துகொண்டே இருந்திருக்கிறது — சௌராஷ்டிரர்கள், ராஜபுத்திரர்கள், நாயக்கர்கள் என்று பல சமூகங்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளன. அந்தச் சித்திரத்தின் ஒரு துளி இந்த நாவலின் முற்பகுதியில் கிடைக்கிறது.
புதிய இடத்தில் அந்தச் சமூகம் தங்களை மீள்கட்டமைத்துக்கொள்வது, அதன் திட்டவட்டமான ஆசாரங்கள், அதே சமயம் அவற்றில் அவர்களே செய்துகொள்ளும் சமரசங்கள் அனைத்தையும் சிற்சில கோடுகள் கொண்ட நவீன கோட்டோவியம் போன்று சித்தரித்துக் காட்டும் படைப்பு இது. இறுதியில் சுருக்கமாகக் கூறப்படும் விட்டில் பூச்சிகள் வயலை அழிக்கும் படலம் ஆழ்ந்த குறியீட்டுத் தன்மை கொண்டது.
user_5226
★ 3/5 Feb 02, 2026புத்தகம் ஒரு கிராமத்தின் பாழடைந்த பெரிய வீட்டிலிருந்து தொடங்கி, கும்பினி காலத்திற்கும் பின்னோக்கி முகலாயர் காலத்திற்கும் பயணிக்கிறது. அந்தப் பெரிய வீடு ஏன் பாழடைந்தது என்பதை இறுதிவரை புத்தகம் சொல்வதில்லை.
நடுவில் ஊரின் மரியாதைக்குரிய மனிதர்களைப் பற்றியும், வழிப்போக்கன் கொலையுண்டதும் கொலையாளிக்கான தண்டனையும், கிராமத்தில் நடந்த திருட்டும் கலவையாக வருவதால் வாசகர் கதையின் போக்கைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமாகிறது.
ஆனால் இந்தக் குறைபாடுகளுக்கு இடையிலும், கதை சொல்லப்படும் விதம், பயன்படுத்தப்படும் வார்த்தைகளும் சொற்றொடர்களும், எழுத்தாளர் கதையின் மனநிலையை புத்தகத்தில் கொண்டுவரும் திறன் ஆகியவை மிகச் சிறந்த எழுத்தாளரின் அடையாளங்கள். காடு மெல்ல மெல்லக் கிராமமாக மாறுவதும், கடினமான காலங்களை மக்கள் எதிர்கொள்வதும், இயற்கை அவர்களுக்கு உதவுவதும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
user_5225
★ 4/5 Feb 02, 2026ரொம்ப நாளாக அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம். நீண்ட முன்னுரை படித்ததிலிருந்து, இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற பிம்பம் மனதில் உருவாகியிருந்தது.
ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் ஆரம்பத்தில் சற்றுத் தடுமாற வைத்தது. முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் — சிள் வண்டு, கூகை, கரிச்சான், ஊருணி, மர நாய்கள், புல்லாக்கு, மேழி என பட்டியல் நீள்கிறது. ஆனால் போகப்போக வாசிப்பு ரெக்கை கட்டிப் பறந்தது.
கதாபாத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னே வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா. நாம் அறியாமல் புன்னகை சிந்தும் இடமும் உண்டு, கண்களைக் கசங்க வைக்கும் இடமும் உண்டு. நல்ல நாவல், வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் படிக்கவும்.
user_5224
★ 4/5 Feb 02, 2026போற போக்கிலே அப்படியே ஒரு வெளியூர்காரனிடம் பேசிக்கொண்டே அந்த ஊரைப் பற்றி அவர் சொல்றதைக் கேட்டுக்கொண்டே ஒரு பயணம் போனது மாதிரி ஒரு உணர்வைக் கொடுத்திருக்காரு கி.ரா. இதில் சொல்லப்பட்ட நிறைய கதைகள் அநேகமா நிறைய ஊர்ல பேச்சுவாக்கில் கேட்ட கதைகள் தான்.
துலுக்க ராஜாவுக்குப் பயந்து ஓடிவரும் தெலுங்கு தேச மக்கள், நாளாக நாளாகத் தமிழ்நாட்டின் ஒரு தென்கோடியில் ஒரு கரிசல் நிலத்தைப் பிடித்து, ஊராக மாற்றுவதும் அங்கே அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் தான் மொத்தக் கதை.
நல்லாயிருந்தவை: மொத்த ஊரும் ஒன்றா சேர்ந்து உழைப்பது, நுணுக்கமான விவசாய யுக்திகள், ஒரு பெரிய குடும்பமாக இருந்து வேலையைப் பங்கு போட்டு நிறைய சொத்தும் நல்ல பெரும் சம்பாதிப்பது, கிராமத்துக்கே உரிய நக்கல் நையாண்டி, கதையின் ஓட்டம் ரிலே ரேஸில் ஓடுவர்கள் கையில் இருக்கும் குச்சி மாதிரி ஆள் மாறி மாறி போவது.
ஆக மொத்தம் பொறுமையாகவும் கிராம வாழ்க்கையை விரும்புவோர்கள், கிராம பாஷைகள் புரிந்தோர்கள் கண்டிப்பா இந்த நாவலைப் படிக்கணும்.