Reviews for கள்ளிக்காட்டு இதிகாசம்

30 reviews total

user_5063

★ 5/5 Feb 02, 2026

கள்ளிப்பட்டியில் வாழ்ந்துவிட்டு வந்தது போன்ற உணர்ச்சிப் பெருக்கோடு இந்த நூலைப் படித்து முடித்தேன். மனது பாரமாகி கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. எப்பேர்ப்பட்ட படைப்பு!

user_5062

★ 5/5 Feb 02, 2026

ஒவ்வொரு வரியிலும் கிராமத்தில் நாமே வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அற்புதமான நாவல். வைரமுத்துவின் எழுத்து நம்மை கள்ளிக்காட்டிற்கே அழைத்துச் செல்கிறது.

user_5061

★ 5/5 Feb 02, 2026

"இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டோ? இது ஒரு குடியானவனின் இதிகாசம்."

மண் மணம் வீசும் இக்கதை, அனைவரது மனதையும் மிக இலகுவாகத் தொட்டுவிடும் பண்பு கொண்டது. தமிழ் தெரிந்த அனைவரும் பயில வேண்டிய இதிகாசம்.

user_5060

★ 5/5 Feb 02, 2026

காதலனாக, கணவனாக, தந்தையாக, பிறந்த மண்ணின் மீது பக்தி கொண்டவனாக, கடின உழைப்பாளியாக, காவலனாக, விடாமுயற்சியின் சின்னமாக — பேயத்தேவரின் கதாபாத்திரம் மிகவும் ஊக்கமளிக்கிறது.

படித்து முடிக்கும்போது மனநிறைவை அளிக்கும் இன்னொரு புத்தகம் இது.

user_5059

★ 5/5 Feb 02, 2026

நாம் பார்க்கும் நகரத்துக் கட்டிடங்களும் அணைகளும் பல அழிந்த கிராமங்களின் கதைகளைத் தாங்கியே நிற்கின்றன. அப்படி வைகை அணையின் அடியில் மறைந்திருக்கும் கிராமத்தின் கதையாகவே அமைகிறது கள்ளிக்காட்டு இதிகாசம்.

கதையின் நாயகனான பேயத்தேவன் வாழ்வில் கண நேரம் கூட இன்பம் எட்டிப் பார்க்காமல் வஞ்சிக்கிறது. அவன் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வெறும் கதை என்று கடந்து செல்ல முடியவில்லை — மனதிற்குச் சில நேரம் ஆறுதல் கூறிய பின்னே வாசிப்பைத் தொடர முடிகிறது.

வாழ்ந்தால் பேயத்தேவன் போல் வைராக்கியம் கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணமும் எழுகிறது!

user_5058

★ 5/5 Feb 02, 2026

1958-ல் வைகை நதிக்கு அணைக்கட்டு கட்டியபோது சுமார் 12 முதல் 14 கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்ட சூழலே கதையின் மையம். பிறந்து வளர்ந்த மண்ணோடு கொண்ட பிரிக்க முடியாத உறவை அனிவாரியமாகக் கிழித்துக்கொண்டு, எங்கு போவதென்று தெரியாமல் புறப்பட்ட மக்களின் தாரணமான நிலையைச் சித்திரிக்கும் கதை.

user_5057

★ 4/5 Feb 02, 2026

"இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டோ? இது ஒரு குடியானவனின் இதிகாசம்."

கள்ளிக்காட்டின் உழுதுண்டு வாழும் விவசாயிகளின் வாழ்வும் உழைப்பும் வறுமையும், அதிலும் செழித்து வாழும் நட்பும் காதலும் அன்பும் அறமும்தான் கள்ளிக்காட்டு இதிகாசம்.

1958-ல் வைகை அணைக் கட்டுமானத்திற்காக நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த சிற்றூர்கள் அப்புறப்படுத்தப்பட்ட துயரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

வாழ்நாள் முழுதும் துன்பமும் துயரமுமாய் துரத்தப்பட்டு, எப்படியேனும் மீண்டு வரத் துடிக்கிற பேயத்தேவர் என்கிற மகத்தான மனிதனின் தீராத வாழ்க்கைப் போராட்டம். படித்து முடித்ததும் நம்மைத் தொத்துகிற இனம் புரியாத சோகம் இரண்டு மூன்று நாட்களாவது நம்மைச் சும்மா விடாது.

கள்ளிக்காட்டின் வறட்சியும் வெம்மையும், அங்கே ஊரித் திரியும் ஓணான்களும், பொத்தக் கள்ளியும் நெருஞ்சியும், முருகாயியின் கானப்பயிறு துவையலின் ருசியும், அழகம்மாவின் கோழிச்சாரின் கைப்பக்குவமும் — இவையெல்லாம் இன்னும் என்னை விட்டு நீங்காதபோது, அவர்களின் துயரம் மட்டும் அவ்வளவு எளிதாக நீங்கிடுமா என்ன.

அழகம்மா தனக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லி அழுது புலம்பி கலங்கி நிற்கிற இடம் ஏற்படுத்துகிற வலியும் வேதனையும் மனதில் ஆறாத வடுவாக மாறி நின்றுவிட்டது.

சாதி மதங்களைக் கடந்து, யாரையும் அதிகம் புண்படுத்தாமல் இப்படி ஒரு இதிகாசத்தைச் சொல்ல இவர் எத்தனை காலம் தவமிருந்தாரோ!

user_5056

★ 5/5 Feb 02, 2026

இது மனிதர்களாலும் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட ஒரு நாகரிகத்தின் கதை. தனக்கென எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாத சமூகம் ஒன்றின் நிதர்சனக் குறிப்பு.

இந்த நாவலின் பல இடங்களில் இன்னதெனப் புரியாத ஒரு மென்சோகம் தொண்டையில் அடைக்கும். நாவலின் முதல் அத்தியாயத்தில் பேயத்தேவர் பசுவிற்குப் பிரசவம் பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்தக் கதை, இறுதியில் பேயத்தேவரின் இறப்போடு முடியும்போது எப்பேர்ப்பட்டவனும் கலங்கித்தான் போவான்.

நட்பு, கோபம், பாசம், துக்கம், வலி — இத்துடன் ஒற்றை முருங்கை மரமும் ஒரு ஓட்டு வீடுமாய் இருக்கிற பேயத்தேவரின் வாழ்க்கை இது. அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

user_5055

★ 5/5 Feb 02, 2026

கள்ளிக்காட்டு இதிகாசம்! கண நேரம் கூட சந்தோஷம் என்று ஒன்று எட்டிப் பார்க்காத ஒரு மாமனிதரின் கதை! என்னுள் மீள முடியாத ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்.

கதையில் பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லை. அரிவாளோடு திரியும் வில்லன் இல்லை. ஆனாலும் படிப்பவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் படைப்பு.

பேயத்தேவர் — விதி இவரின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சதி செய்கிறது என்பதுதான் கதைக்களம். அழகம்மாள் இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் கலங்கிவிட்டேன். மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது.

இறுதி அத்தியாயத்தைப் படித்தபோது என்னை அறியாமல் கண்களில் நீர். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார்! புத்தகம் படித்தது போன்ற உணர்வே இல்லை — கள்ளிக்காட்டில் வாழ்ந்தது போன்று இருந்தது!

user_5054

★ 4/5 Feb 02, 2026

ஆண்டவனும் அரசாங்கமும் கைவிட்ட காட்டில் உழைப்பையும் வைராக்கியத்தையும் நம்பி வாழ்கிற ஒரு பெரிய மனிதனின் கதை. பெற்றவர்களுக்காக உழைத்தே வற்றலாய்ப் போன பேயத்தேவர் பற்றிய கதை. வாழ்க்கையின் கடைசி காலம் வரை மண்ணோடும் மனிதர்களோடும் முட்டி முட்டி மூக்குரிந்து போனவரின் கதை. இதைப் படிக்கும்போதும் முடிக்கும்போதும் கண்ணீருடனும் கனத்த மனதுடனும் தவித்தேன். மிகப்பிடித்த வசனங்களில் ஒன்று: "அரசாங்கத்துக்கு வாய்தான் இருக்கு, காது இல்ல."