வீடு கல்யாண பரபரப்பில் களைகட்டி விட்டது! கடந்த ஆறு மாதங்களாக சகல ஏற்பாடுகளும் நடக்கிறது! பட்டாபிக்கு எதை செய்தாலும் அதை திருந்த செய்ய வேண்டும்! செலவை பற்றி கவலைப்படாத மனிதன்! எதை வாங்கினாலும் அது முதல் தரமாக இருக்க வேண்டும்! ஒரு அப்பழுக்கு இருக்கக்கூடாது! கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் பட்டாபி! படிப்பு என்னவோ வெறும் பள்ளிக்கூட படிப்புதான்! சின்ன வயதில் அப்பா இறந்து ஒரு விதவை தாயார், இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகளுடன் குடும்ப பாரம் தலையில் ஏற, பட்டாபி கலங்கவேயில்லை! நண்பர் மூலம் மும்பை வந்து அங்கே பலரிடம் அடிபட்டு, மிதிபட்டு, துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தன்னை பொருத்திக்கொண்டு, பத்து வருஷங்களில் இருபத்தி நாலு மணி நேரமும் உழைத்து தன் முப்பதாவது வயதில் தலை நிமிர்ந்து விட்டார்! அடுத்தடுத்து தன் தம்பி தங்கைகளை ஆளாக்க நிறைய செலவழித்தார்! லட்சங்களில் புரளத்தொடங்கி விட்டார்! மும்பை மகாலஷ்மி இவருக்கு அருளையும் பொருளையும் வாரி வழங்க, சுலபமாக கோடீஸ்வர அந்தஸ்த்தை எட்டி விட்டார்! முப்பத்தி இரண்டு வயதில் நன்றாக படித்த, தன் செயலாளராக வேலைக்கு சேர்ந்த ஜெயந்தியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்! பங்களா, கார், நிலபுலன்கள், சொத்துக்கள் என நிறைய சேர்த்து விட்டார்!
அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள், பிறந்து விட்டன! ஜெயந்திக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டுமென்ற ஆசை! மூன்று குழந்தைகள் வேண்டாம் என உறுதியாக சொல்லி அதற்கான அறுவை சிகிச்சைகளையும். முடித்து விட்டார் பட்டாபி! எதையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து, அதை நிறைவேற்றுவதில் திடமாக இருப்பார்!
தன் உடன் பிறப்புகளுக்காக லட்சங்களில் செலவழித்தார்! அவர்களை அவர்கள் காலில் நிற்க வைத்த பின் கதவுகளை மூடி விட்டார்!
இரண்டு தங்கைகளையும் நன்றாக படிக்க வைத்து, வேலை வாங்கி தந்து நல்ல இடத்தில் கல்யாணம், தலா இரண்டு பிரசவங்கள், என எல்லாம் நடத்தினார்! அதன் பிறகு அவர்கள் வீடு கட்ட பணம் கேட்க, கடுப்பாகி விட்டார்!
“நீ நிறைய சம்பாதிக்கறே! அண்ணன்னு உரிமைல கேக்கறாங்க! குடுத்தா என்ன?”
அம்மா கேட்க, ஆவேசமானார் பட்டாபி!
“இதுக்கு மேல நீ பேசினா நான் அம்மானு கூட பார்க்க மாட்டேன்! காலம் முழுக்க நீ பெத்த புள்ளைகளுக்கு நான் செஞ்சுகிட்டே இருக்கணுமா? எனக்குனு ஒரு குடும்பம் இல்லையா? என் தம்பிகள், தங்கைகளுக்கு எத்தனை லட்சங்கள் செலவழிச்சிருக்கேன்னு இந்த டயரியை பாரு! அவங்க நாலு பேரையும் ஆளாக்கின பிறகு தான், நான் வீடு, வாசல், சொத்து சுகங்களை சேர்த்திருக்கேன்! என் பொண்டாட்டி புள்ளைங்களும் வாழணும் இல்லையா? ஏன்மா, அம்மாக்கள் திருந்தவே மாட்டீங்களா?”
தம்பிகளுக்கும் இதே நீதி தான்! பந்தபாசம் எப்போதும் உண்டு! வரலாம், போகலாம்! இன்றும் ஒரு தீபாவளி நாள் என்றால் ஒன்று கூடலாம்! எல்லாருக்கும் துணி மணிகளை எடுத்து அத்தனை செலவுகளையும் செய்வார்! இது தான் பட்டாபி!
அவரது மூத்த மகள் அபிநயா! அவள் என்ஜினியரிங் முடித்து விட்டாள்! நல்ல படிப்பாளி! படிப்பு தவிர வேறெதிலும் கவனம் செலுத்தமாட்டாள்! கோல்ட் மெடலிஸ்ட், கல்லூரியில்! கல்லூரி வளாகத்தில், நேர்முகத்தில் மூன்று கம்பெனிகளில் தேர்வாகி, பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்!
“என்னங்க! நம்ம கம்பெனி இருக்கும் போது அபி எதுக்கு வெளில வேலை பாக்கணும்? நம்ம பிசினஸை இம்ப்ரூவ் பண்ணலாம் இல்லையா?''
அம்மா ஜெயந்தி கேட்க,
“இல்லைம்மா! நான் என் கால்ல நிக்க ஆசைப்படறேன்!”
“அவளை அவ போக்குல விட்ரு ஜெயந்தி! அவரவருக்கு ஒரு லட்சியம் இருக்கும்! நம்ம புள்ளைங்களா இருந்தாலும் நாம அதுல குறுக்கே நிற்கக்கூடாது!”
இரண்டு பெண்களும் பிறந்ததுமே ஜெயந்தி கம்பெனி வேலைக்கு வர வேண்டாம் என தடுத்து விட்டார் பட்டாபி!
“ரெண்டும் பெண் குழந்தைகள்! கவனமா வளர்க்கணும்! அது உன்னால மட்டும் தான் முடியும் ஜெயந்தி! நான் இருபத்தி நாலு மணி நேரமும் றெக்கை கட்டி பறந்து கிட்டு இருப்பேன்! நீதான் குழந்தைகள் மேல கவனம் செலுத்த முடியும்! குடும்பம், பிசினஸ் ரெண்டுலேயும் நிச்சயமா முக்கியமான முடிவுகளை உன்னை கேட்டுத்தான் எடுப்பேன்!”
அது தான் நடந்தது! மூத்த மகள் அபி, இரண்டாவது மகள் அர்ச்சனா இருவரையும் ஜெயந்தி தான் கண்ணுக்குள் வைத்து ஆளாக்கினாள்!