மனைவி மீது அதீத காதலோடும், அன்போடும் வாழ்ந்த தேவேஷ் (நாயகன்) மனைவியின் மறைவிற்கு பின்னே அதீத வேதனையில் இருக்கிறான்.
இந்த நிலையில் என்னைத்தான் மணந்தாக வேண்டும் என்று நிர்பந்தம் செய்யும் மங்கையர்கரசியை (நாயகி) நாயகனால் ஏன் மறுக்க முடியவில்லை?
மங்கையர்கரசியை மறுமணம் செய்யும் தேவேஷ் திருமண வாழ்வு எவ்விதம் தொடங்கியது என்பதை அறிந்துகொள்ள “சிறைபட்டேன் சின்னவளே” வாசியுங்கள் தோழமைகளே.
கதையிலிருந்து சில துளிகள்…
தேவேஷ் வந்ததை அறியாத கற்பகம் மகனின் எதிர்கால வாழ்க்கையின் வேதனையிலிருக்க, கற்பகத்தின் கூற்றை ஏற்க முடியாத மங்கைக்கும் தேவேஷ் வந்தது தெரியாமல் போக, “உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வச்சா, உங்க பேரன் உங்களோட இருக்கமாட்டான் ஆன்ட்டி” என்றாள் திடமாக.
“என்ன மங்கை சொல்ற?” என கற்பகம் பேரதிர்ச்சியை காட்ட, “ஆமாம் ஆன்ட்டி. உண்மையைதான் சொல்றேன். உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வச்சா, உங்க பேரன் அவனோட அம்மாகிட்ட போய்டுவான்” என்றாள்.
“ஏய்” என்றபடி உள்ளே வந்த தேவேஷ் மங்கையை முறைத்தான் அதீத கோபத்தோடு.
மங்கை “இல்ல… குழந்தை மேல எனக்கும் ரைட்ஸ் இருக்கு” என்றாள் வரவழைத்த தைரியத்தோடு.
இவள்தான் டோனர் என தற்போது தெள்ளத்தெளிவாகேவே, “ஓகே. உனக்கு ரைட்ஸ் இருக்குனே வச்சிப்போம், குழந்தையை என்கிட்டயிருந்து வாங்கிட்டு நீ கல்யாணம் செய்துகிட்டா, உன் புருசன் என் குழந்தையை பார்ப்பானானு உன்னைப்போல எனக்கும் யோசிக்க ரைட்ஸ் இருக்குல்ல?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
“உன் பிடிவாதத்துக்கு உங்க வீட்டுல உனக்கு கல்யாணம் செய்து வைக்காம இருந்தாலும், அக்கம் பக்கம் இருக்கவங்களும், உங்க சொந்த பந்தமும், குழந்தைக்கு அப்பா யாருன்னு கேட்டா, ஒவ்வொருத்தருக்கும் இவன் எப்படி பிறந்தானு விளக்கிட்டிருப்பியா?
நீ விளக்கினாலும், கல்யாணமாகாத பொண்ணு ஒரு குழந்தைக்கு அம்மாவானு வேற மாதிரி யோசிச்சாங்கனா அது உனக்கும் அசிங்கம், எனக்கும் அசிங்கம். குழந்தை வளர்ந்த பின்ன அவனுக்கும் அசிங்கம். நான் சொல்றது புரியுதா?” என்றான் கோபத்தோடே.
மங்கை “இன்னொரு கல்யாணம் நீங்க செய்துக்கமாட்டிங்கனு உங்கம்மாவை சொல்ல சொல்லுங்க” என்றாள் கற்பகத்தை பார்த்தவாறு.
மங்கையின் வேதனை புரியாத கற்பகம், “என் மகனுக்கு கல்யாணம் செய்யக்கூடாதுனு சொல்ல நீ யாரு? இனி என் குடும்ப விசயத்துல தலையிட்ட அசிங்கமாகிடும் பார்த்துக்க. இவளோட உனக்கென்ன பேச்சு? நீ வா தேவா” என்றார் கோபமாக.
தேவேஷ், “ப்ச் ம்மா. நீ போ நான் பேசிட்டு வரேன்” என மீண்டும் அன்னையையே விரட்டினான்.
பின்விளைவுகளைப் பற்றி சற்றுமுன் தேவேஷ் விளக்கியது அனைத்தும் நினைத்துப் பார்த்து, “உங்க மருமகளா வர என்னை செலக்ட் செய்விங்களா ஆன்ட்டி?” என்றாள்.
“ஏய்… மங்கை” என கற்பகம் பேரதிர்ச்சிக்கு உள்ளாக, “லூசா நீ. அப்படியே அறைஞ்சேனா” என அதீத கோபத்தோடு கையை உயர்த்தினான் தேவேஷ்.