கதையிலிருந்து சில துளிகள்…
“உனக்கு கல்யாணம் ஆனாதான் என்னால நிம்மதியா கல்யாணம் செய்துக்க முடியும்” என்றான்.
“இப்போ கொஞ்சம் டிப்ரஸன்ல இருக்கேன். அது சரியாகவும் பண்ணிக்கிறேன். நீங்க பண்ணிக்கோங்க” என்றாள் நலிந்த குரலில்.
சிவப்ரியாவின் குரலில் இதுவரை இருந்த திடம் காணாமல் போயிருக்க, வந்ததிலிருந்து தனது முகத்தை பாராமல் பேசிக்கொண்டிருந்தவளை ஊன்றிப்பார்த்தான் அருட்செல்வன்.
“எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு, ஆனா உன்னால கல்யாணம் செய்ய முடியாம இருக்கேன்” என்று அவளை ஆழம் பார்க்க, அது வேலை செய்தது போல. சிவப்ரியாவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலவில்லை அவளால்.
“வா பார்த்திண்ணா போலாம்” என காற்று பாதி வார்த்தை பாதியாக சொல்லி வெளியேற எத்தனிக்க, “நில்லு” என அதிகாரத்தோடு சொன்னவன், அவள் வெளியேறாத வகையில் எதிரே நின்றான் அதிர்வோடு.
ம் அதிர்வோடுதான் நின்றான். அன்று உணர்வுகளை கொன்று, சுயத்தை இழந்து என தன் தந்தையிடம் பிதற்றியது, அன்று அவளின் வீட்டில் அத்தைக்காக அத்தனை பேசியவள், அவளின் ஊருக்கு சென்றபோது தன் அன்னையை காண வராதது, ஜீவிதா வளைகாப்பிற்கு வராதது என அனைத்தும் நினைத்தவனிற்கு தன்னை விரும்புகிறாளோ என்ற சந்தேகம் ஊள்ளூர இருந்ததுதான்.
ஆனால் தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை கூட சகிக்க முடியாத அளவிற்கு தன்னை காதலிப்பாள் என சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை அருட்செல்வன்.
இவன் குறுக்கே நின்ற கோபத்தில், “எதோ ஒருநாள் அப்படி சொல்லிட்டேன். அதுவும் என் அத்தைக்கு எப்படியாவது சொத்து கொடுக்கனும்ன்ற எண்ணத்துல சொல்லிட்டேன். அதுக்காக அன்னைக்கு எங்க வீட்டுல வச்சி சாரி கேட்டுட்டேன்தான? திரும்ப திரும்ப எதுக்கு அதையே சொல்றிங்க?
அன்னைக்கப்புறம் சொத்து வாங்கிக்கிறதை பத்தி நான் பேசறதில்லைதான? அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் செய்துக்க சொல்லி மொத்த குடும்பமும் டார்ச்சர் பண்றிங்க?
நான் கல்யாணம் செய்யிறேன், இல்ல கருமாதி பண்ணிக்கிறேன். அது என் விருப்பம்” என வெடித்து வெளியேற, மீண்டும் இழுத்து உள்ளே வந்தவன், அவளின் கையை விடாமல் நின்றிருந்தான் அவளையே பார்த்தவாறு.
பார்த்திபனிடம் “சொத்திருந்தா பொண்ணை கொடுத்துடுவோமா?” என்றான் முறைப்போடு.
“அச்சோ, என்கிட்ட ஏதுங்க சொத்து? பூர்வீக சொத்தை என்னோடதுனு சொல்லி பெருமைப்படுற ஆள் நானில்லைங்க. நானே பாவப்பட்ட வாத்தியார். அதுவும் ப்ரைவேட் ஸ்கூல் வாத்தியார். வருமானம் பத்தாம டியூசன் எடுத்திட்டிருக்கேன்” என்றான் பாவமாக.
தினந்தோறும் டியூசன் என்றெல்லாம் இல்லை, ஏழை மாணவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச பயிற்சி கொடுக்கிறான் என்றும் பள்ளியிலும் மாணவ மாணவிகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் என்றும் ராகவன் மூலம் அறிந்திருந்தான் அருட்செல்வன்.
தற்போது இலவசப் பயிற்சி எடுப்பதை வருமானத்திற்கு என்று பவ்யாவிற்காக பொய் சொல்வதை உள்ளுக்குள் ரசித்தவன், “இவ்வளோ பஞ்ச பாட்டு பாடுறவனுக்கு லவ் ஒரு கேடா?” என்றான் முறைப்போடு.
“அதான் பாருங்க… இந்த காதலுக்கு வறுமை, வசதி, ஜாதி, மதம், ரோசம், மானம்னு எதுவுமே இருக்கமாட்டேங்குது” என்று ஆச்சர்ய பாவனையில் சொல்லி, “என் அப்பா, சித்தப்பா, சிவா, இப்போ நானு, எங்க குடும்பமே இப்படித்தான் போல” என்றான் சிரிப்போடு.
தன்னை அனைவர் முன்னும் போட்டுக்கொடுத்த அண்ணனை சிவப்ரியா முறைக்க, “ஆனா எங்க குடும்பத்தை விட உங்க குடும்பம் சூப்பர்ங்க, கல்யாணத்துக்கப்புறம்தான் காதல்னாலும் சும்மா கன்னாபின்னானு காதலிக்கிறிங்க” என்று அருட்செல்வனோடு சேர்த்து சங்கரையும் பார்த்தவாறு பெருமையோடு சொன்னான்.
“டேய்…” என சங்கர் சிறு நாணத்தோடு சிரிக்க, வயது பாராமல் தந்தையை வம்பிளுப்பவனை அருட்செல்வன் முறைக்க, “உண்மையை சொன்னா கூட முறைக்கிறிங்க” என்றான் பாவமாக.
“பார்த்திபனுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகும், சீக்கிரம் செய்து சாப்பிட வச்சி அனுப்பி வை” என்றான் அன்னையிடம்.
“ஏங்க எனக்கு சோறெல்லாம் வேணாம்ங்க, மனசு நிறையற மாதிரி ஒரு பதிலை சொல்லுங்க” என்றான் பார்த்திபன்.
“என்ன சொல்லனும்? உனக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
“அவசரம்லாம் இல்லைங்க, எனக்கு தேவையானது பவ்யா வருங்காலத்துல பவ்யா பாத்திபன்தானான்றதுதான்” என்றான் ஆவலாக.
“எது?” என அருட்செல்வன் முறைக்க, “சரிங்க கோபப்படாதிங்க, பவ்யா பின்னாடி அவங்கப்பா பேரே இருக்கட்டும்” என விட்டுக்கொடுத்து, “பார்த்திபன் பவ்யா… இதாவது ஓகேங்களா?” என்றான்.
சிவப்ரியா அருள்செல்வன் காதலையும், பவ்யா பார்த்திபனின் காதலையும் மேலும் அறிந்துகொள்ள மலர்ந்தும் நாணமேனடா வாசியுங்கள் தோழமைகளே.