‘விடிய விடியப் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாம தனியாகவே வண்டியை ஓட்டிட்டு வந்துட்டானா?’ என எண்ணிப் பார்க்கவே அவளுக்கு மலைப்பாக இருந்தது. அயர்ந்து உறங்குபவனை எழுப்பக் கொஞ்சமும் மனம் வரவில்லை.
தன் மீதிருந்த போர்வையை அப்பொழுதே கவனித்தவள் யோசனையாக அதனையும் அவனையும் மாறி மாறி பார்க்க, அந்த வயதுக்குரிய சிலிர்ப்பு அவளுள்! மனம் மலர் சேர்ந்த பட்டாம்பூச்சியின் படபடப்பைத் தத்தெடுத்துக் கொள்ள, இதழ்களை வேகமாக தன் பற்களால் சிறைபிடித்துக் கொண்டாள்.
சில நொடிகளில் தன்னை மீட்டு அவசரமாகப் போர்வையை மடித்து பின் சீட்டில் போடப் போனவள், அதைப் போடாமல் நிறுத்தி மீண்டுமொருமுறை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள். உடலும் மனதும் அடைமழையில் நனைந்தது போல சிலிர்த்தது. அவன் கதகதப்பும் அரவணைப்பும் உரிமையாகக் கிடைக்குமாயின் எப்படியிருக்கும் என்ற எண்ணம் எழ ஒரு மாதிரி மனம் நடுங்குகிறது. ஏன் இப்படி யோசிக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. தலையை உலுக்கி விட்டு போர்வையை பின் சீட்டில் போட்டவள், அவனை எழுப்ப அருகே போனாள்.
அவன் அருகில் நெருங்கி அமர்ந்ததும் மனம் இன்னும் தடுமாறியது. அவன் அவளுக்காக என்று செய்த யாவும் மிகவும் பெரிய விஷயங்கள்! அவளுக்கென்று யாருமே இல்லை என்று மருகி நிற்பவளுக்கு ஆபத்பாந்தவனாய் வந்து தன் உறக்கத்தையும் தியாகம் செய்து உதவி செய்திருக்கிறான். என்ன மாதிரியான மனம் இவனுக்கு! சிறிது நேரம் முன்பு நன்றி பெருக்கோடு நோக்கியவள் இப்பொழுது ஆசையாக நோக்கினாள்.
அவளின் உள்ளேயிருந்து அனாமத்தாய் ஒரு குரல், ‘அவன் உன்னோட கிரஷ் மட்டும் தான்!’ என்று ஒலித்துக் கொண்டிருக்க அதை காதில் வாங்கும் நிலையில் அவள் இல்லை!
விடிய விடிய வாகனம் ஓட்டிவிட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பவே மனம் வராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் முகத்தில் ஊசலாடும் முடியை தன் தளிர் விரல்களால் ஆசையாக ஒதுக்கி விட்டாள். அது அடங்க மறுத்து மீண்டும் அவன் முகத்திலும் அவள் விரல்களிலுமே தவழ்ந்தது.
மிக மெதுவான குரலில், “என்னோட கஷ்டத்தைக் கேட்டு ஆறுதலா இருந்ததுக்கு தேங்க்ஸ்” என்று தெலுங்கில் சொல்லி அவன் நெற்றியில் மெலிதாக முத்தம் வைத்தாள். அசைவில்லை அவனிடம்!
“என்னை தனியா விடாததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றுவிட்டு கன்னத்தில் முத்தம் பதித்தாள். இப்பொழுதும் அசையாமல் தான் படுத்திருந்தான், கும்பகர்ணனின் வம்சம் போல!
“என்னை பத்திரமா ஊருக்கு கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் எல்லாம் இல்லை லவ் யூ” என்று சிவந்த கன்னங்களுடன் ஆசையாகச் சொன்னவள் அவன் இதழை நெருங்கி அங்கே முத்தம் பதிக்க எண்ணிவிட்டு, பிறகு கொடுக்காமலேயே நிறுத்திவிட்டாள். என்னவோ அதற்குத் தைரியம் வர மறுக்க மீண்டும் கன்னத்திலேயே வெட்கத்துடன் முத்தமிட்டு விலகிக் கொண்டாள்.
இரண்டாம் முறை கன்னத்தில் முத்தம் பதிக்கையில் அவன் தாடி ரோமங்கள் அவளின் இதழ்களை உரசிய குறுகுறுப்பு இன்னும் அகல மறுத்தது. தன் இதழ்களை வெட்கத்தோடு தடவிப் பார்த்துக் கொண்டாள்.
மனதிற்குப் பிடித்த ஒருவன் கண்ணெதிரில் இருக்கிறான். பெற்றவர்கள் இருந்திருந்தால் உரிமையாக அவளால் சொல்லியிருக்க முடியும்! அவர்கள் மறுத்திருப்பார்கள் என்று கொஞ்சம் கூட பயம் வரவில்லை. ஏனென்றால் ஒருநாளும் அவளின் விருப்பத்திற்கு அவர்கள் முட்டுக்கட்டை போட்டதில்லை. அத்தனை செல்லம்! இப்பொழுது கடவுளாகி போய்விட்டவர்களிடம், ‘நீங்க கூட இருந்திருந்தா எனக்கு இவனை பிடிச்சிருக்குமா தெரியலைப்பா. ஆனா, இப்ப எனக்கு இவனை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன்கிட்ட சொல்லற தைரியம் எல்லாம் இல்லை. அதுதான் உங்ககிட்ட சொல்லறேன்’ என்றாள் மானசீகமாக.
ஒரு சில நொடிகள் தான் அமைதியாகக் கரைந்திருக்கும். அர்ஜுனன் உறக்கத்திலேயே அழகாக புன்னகைத்தான். பிறகு மென்குரலில், “கனவுல கூட ஏன்டி தெலுங்குல பேசற ராட்சசி” என்றான் புன்னகை வாடாமல். அவன் பேசியதில் தெலுங்கு என்பதைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் புரியவில்லை.
என்னவோ சொல்லறானே என்றபடி அவனையே கவனித்திருக்க, “ஆனா சும்மா சொல்லக்கூடாது... ஹப்பாபா...” என சுகமாக உடலை நெளித்து உளறியவன், “உன்னோட உதடு அவ்வளவு சாப்ட்...” என்று கிறக்கமாக சொல்ல, இப்பொழுதும் சாப்ட் என்பதைத்தவிர ஒன்றும் விளங்கவில்லை.
கூகிள் செய்யலாம் என்று போனை தேடி எடுத்தால் அவன் பேசியதெல்லாம் இப்பொழுது நினைவிற்கு வேறு வர மறுத்தது! உணர்வுகளின் வெளிப்பாடு எப்பொழுதுமே தாய் மொழி தானே! அவன் அவள் நெருக்கத்தைக் கனவென்று நினைத்துக் கொண்டு உறக்கத்தில் உளறிக் கொண்டிருக்க, பெண்ணவளுக்கு அவன் என்ன சொன்னான் என்று புரியாமல் இங்கே மண்டை காய்ந்தது.
சுந்தர தெலுங்குகாரிக்கு இப்படியொரு சோதனை வந்து சேரும் என்று அவளென்ன கனவா கண்டாள்?